வானியல் சாஸ்திரத்தையும், நுணுக்கமான கணித முறைகளையும் அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம். அதை விஞ்ஞானப்படி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
ஏன்…? ஏன் என்றால்…
வானில் இருக்கும் 9 நவகிரகங்களின் சுழற்சியினைக் கொண்டு மனிதனின் நடைமுறை வாழ்வுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை, சாதக பாதகங்களைக் கூறுவதுதான் ஜோதிடம்.
அந்த ஜோதிடத்திற்கு அடிப்படை 9 ராசிகள். அவற்றுள் அடங்கியிருக்கும் 27 நட்சத்திரங்கள். அவை மொத்தமாக இடம் பெற்றிருக்கும் 12 வீடுகள். இவற்றில் கிரகங்களின் உச்ச வீடு உள்ளது; நீச வீடு உள்ளது. நட்பு உண்டு, பகை உண்டு. கேந்திரம் உண்டு. கோணம் உண்டு. சுப ஸ்தானம் உண்டு. சுபப் பார்வை உண்டு. நீச ஸ்தானம் உண்டு. நீசப் பார்வை உண்டு. சுபச் சேர்க்கை உண்டு. அசுபச் சேர்க்கை உண்டு. அப்புறம் யோகங்கள், தோஷங்கள். ஆதிபத்யம், பாதகாதிபதி, அஸ்தங்கதம், கிரஹ யுத்தம் என்று பலப்பல சமாசாரங்கள் உள்ளன.
இன்னும் பாவம், நவாம்சம், த்ரிம்சாம்சம், ஷோடசாம்சம் என்று இன்னும் நுணுக்கமாக கோள்களைப் பகுத்தாய்வதும், அவற்றின் பலத்தை அறிய உதவும் அஷ்டகவர்க்கமும், ஏகாதிபத்திய, திரிகோண சோதனைகளும் உள்ளன. அதுபோக தசாபுக்தி, அதன் பலன்கள், கிரகங்கள் தற்போதைய நிலையில் சஞ்சரிக்கும் கோசார பலன் என்று பல கணிதமுறைகள் இருக்கின்றன.
இப்படி இருக்கும் போது இதுதான் விதி என்று ஒன்றை மையமாக வைத்து, அதனை அடிப்படையாகக் கொண்டு ஜோதிடத்தை நிரூபிக்க இயலாது.
உதாரணமாக குரு ஒருவருக்கு லக்னத்துக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் என்று கொள்வோம். அது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம். ஆகவே குரு நல்லது செய்வார். புண்ணிய பலன் அதிகம் இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால் இது எல்லோருக்கும், எப்போதும் பொருந்தாது. மற்ற காரணிகளையும் வைத்துத்தான் பலன் சொல்ல முடியும்.
விளக்கமாகச் சொன்னால் குரு லக்னத்துக்கு ஐந்தில் இருந்தாலும் அது உச்ச வீடா, நட்பு வீடா, பகை வீடா, நீச வீடா, பகை கிரகங்களின் பார்வை ஏதேனும் உள்ளதா, சுபர் பார்வை இருக்கிறதா? வேறு ஏதேனும் கிரகங்களுடன் குரு இணைந்துள்ளதா? அந்த கிரகங்கள் குருவுக்கு நட்பா, பகையா? குரு எந்த நட்சத்திரத்தின் பாதசாரத்தில் இருக்கிறார், மூலமா, பூராடமா? அவற்றுக்கு அதிபதிகளான கிரகங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன, குருவின் பார்வை எந்தெந்த வீடுகளில் படுகிறது, அம்சத்தில் குரு எந்த நிலையில் இருக்கிறார், அஷ்டகவர்க்கத்தில் குருவுக்கு எத்தனை பரல்கள் உள்ளன – இப்படியெல்லாம் நிறைய விதிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பலன் கூறினால் தான் அவை சரியாக அமையும்.
ஆக, இது இது இப்படித்தான், H2O = Water என்று சொல்வது போல நம்மால் ஜோதிடத்தை நம்மால் வரையறுக்க முடியாது. உதாரணமாக 100 கோடி பேர் இருந்தால் அந்த 100 கோடி பேரின் ஜாதகமும் ஒவ்வொரு விதமாகத் தான் இருக்கும். ஆகவேதான் அறிவியலின் அடிப்படை விதிகளைப் போல ஜோதிடத்தை அவ்வாறு ஆராய்ந்து அறிவியல் முறைப்படி நிரூபிக்க முடிவதில்லை.
ஆனாலும் மும்பை உயர்நீதி மன்றம் ஆய்வுகளின் அடிப்படையில் ஜோதிடம் ஓர் விஞ்ஞானம் தான் என்று ஏற்றுக் கொண்டுள்ளது.
******
கேள்வி – 2 : ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?
ஒன்றும் ஆகாது. அது அவரவர்களது தனிப்பட்ட நம்பிக்கை, தேர்வைப் பொருத்தது. பார்ப்பதும் பார்க்காததும் அவரவர்களது விருப்பம். பார்ப்பதனால் முழுக்க முழுக்க நன்மை நடந்து விட்டது என்றோ, பார்க்காததால் முற்றிலும் தீமையாகி விட்டது என்றோ சொல்ல இயலாது. நன்மையோ, தீமையோ நடப்பது என்பது அவரவர்களது ஊழ்வினையைப் பொருத்தது. ஆகவே இதில் ‘ஏன், எதற்கு’- என்று கேட்பதை விட ‘இவற்றால் பலன் அடைகிறோமா? இல்லையா?’- என்று மட்டுமே பார்க்க வேண்டும். விளக்கமாகச் சொல்வதானால், ஜோதிடம் ஒரு வழிகாட்டி. அவ்வளவே. நாம்தான் அது கூறும் வழிப்படி சரியாக நடக்க வேண்டும். தவறான வழியில் நாம் சென்றாலோ, அல்லது விதி வசத்தால் தவறான ஜோதிடரை நாம் அணுகி அவர் நமக்குத் தவறான வழியைக் காட்டி விட்டாலோ தீமைதான் விளையும்.
ஆகவே ஜோதிடம் பார்ப்பது நல்லது என்றோ, பார்க்காதது தீயது என்பதோ இதன் பொருளல்ல. சுருக்கமாகச் சொன்னால் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க தாங்களே அறிந்தவர்கள், அதற்கான வழிமுறை தெரிந்தவர்கள் ஜோதிடம் பார்க்க வேண்டியதில்லை. தங்களுக்குத் தெரிந்த வழிமுறையின்படி நடந்து நல்லதோ, கெட்டதோ அதன் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு வழி தெரியாதவர்கள், என்ன செய்தால் பிரச்சனை தீரும் என்ற மனக் குழப்பத்திலும் சிக்கல்களிலும் இருப்பவர்கள், தங்களுக்கு வழிகாட்டிய யாரேனும் இருந்து, அறிவுரை கூறினால் நலம் என எண்ணி ஜோதிடர்களை அணுகுகின்றனர். இங்கும் அவரவர்களது ஊழ்வினையைப் பொறுத்து நல்ல ஜோதிடரோ போலி ஜோதிடரோ அமைந்து, அறிவுறுத்தி (அல்லது தவறான வழிகாட்டி) அதன் படி நடக்கின்றனர். பலன்களும் அவ்வாறே அமைகின்றன.
ஜோதிடரை அணுகாமல் தங்கள் வழியே சென்று ஒருவருக்கு நல்லது நடந்திருக்கலாம். கெடுதலும் நடந்திருக்கலாம். அது போல ஜோதிடரைச் சந்தித்தும் ஒருவருக்கு நற்பலன்கள் மட்டுமல்லாமல் கெடு பலன்களும் நடந்திருக்கலாம். ’ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ – ஜோதிடம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும். மனோபலம் உள்ளவர்கள், தன்னம்பிக்கை அதிகமானவர்கள் ஜோதிடம் பார்க்க வேண்டிய தேவையில்லை என்பதுதான் எனது கருத்து.
(தொடர்கிறேன்)
ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்…?
”ஒன்றும் ஆகாது.”
நல்ல பதில், நடக்கட்டும்… நடக்கட்டும்…!!
உண்மைதான் இல்லையா? ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகி விடும்? ஒன்றும் ஆகாது.