ராமச்சந்திரன். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கணக்கு மட்டும் சரியாக வரவில்லை. மற்றப் பாடங்களில் நன்கு மதிப்பெண் பெற்றார். ஆயினும் கணக்கில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
பள்ளிக்கு எதிரே ஒரு சத்திரம் இருந்தது. அங்கே சில சமயம் சேஷாத்ரி சுவாமிகள் வந்து உட்கார்ந்து கொள்வதுண்டு. அவரிடம் மாணவர்கள் சென்று தாங்கள் ‘பாஸா’ ‘பெயிலா’ என்று கேட்பது வழக்கம். அவரும் சிலரிடம் ‘பாஸ்’ என்பார். சிலரை ‘பெயில்’ என்று சொல்வார். இது அவருக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர் சொன்னபடியேதான் எப்பொழுதும் நடக்கும் என்பதால் அவர் அங்கு வந்தால், அவரைச் சுற்றி எப்பொழுதும் மாணவர்கள் கூட்டம் இருக்கும்.
ஒருநாள் மகான் அங்கே உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார் ராமச்சந்திரன். அவர் அருகே சென்று வணங்கினார்.
“எனக்கு கணக்கு சரியாக வரவில்லை. மகான்தான் அருள் புரிய வேண்டும்” என்று மகானை வணங்கிக் கண்ணீர் சிந்தினார்.
“போ.போ எல்லாம் நன்னா வரும்” முதுகில் தட்டிக் கொடுத்த மகான் போய் விட்டார்.
அதன்படியே ராமச்சந்திரன் அந்த ஆண்டு கணக்கில் முதன்மையாகத் தேறினார். பிற்காலத்தில் அரசில் உயர்பதவியும் வகித்தார்.
இப்படி பலருக்கு அவர்களது வருங்காலம் குறித்து உரைத்திருக்கிறார் மகான் சேஷாத்ரி.
முக்காலமும் அறிந்தவர் அவர்!!
ஸத்குருவே சரணம்!!!