படிக்கலாம், வாங்க…

புதிய மின்னூல் “படிக்கலாம் வாங்க”வை இங்கே வாசிக்கலாம்.

book

நூலின் முன்னுரையில் இருந்து…

புத்தக வாசிப்பு என்பது என் சிறுவயதிலேயே துவங்கி விட்டது. ஆனால் முதன் முதலில் படித்த புத்தகம் அம்புலிமாமாவோ, ரத்னபாலாவோ அல்ல. “குமுதம்”தான். முதன் முதலில் எனக்குப் படிக்கக் கிடைத்ததும், நான் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்ததும் குமுதம் தான். அப்போது இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்த காலம். ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் லீவு விட்டால் போதும், நேரடியாக நீலி வீராச்சாமி தெருவில் இருக்கும் மாமா வீட்டிற்குச் சென்று விடுவேன். காரணம், ’குமுதம்’.மாமா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உயர்பதவியில் இருந்தார். அவர்கள் வீட்டில் தவறாமல் வாங்கும் இதழ் “குமுதம்.” விடுமுறை நாளில் காலை உணவு (10 மணிச் சாப்பாடு என்று சொல்வார்கள்) உண்டதும் அடுத்த வேலை ஓட்டமாக ஓடி அங்கே சென்று விடுவதுதான். அவர் வீட்டின் படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே பழைய குமுதம் இதழ்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி வைத்திருப்பார்கள். அதை ஒவ்வொன்றாக எடுத்து படங்கள் பார்ப்பதும், எழுத்துக் கூட்டி வாசிப்பதும், ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பதும் அப்போது வெகு சுவாரஸ்யமாய் இருந்தது.

”டிராகுலா”, ”புரொபசர் மித்ரா”, ’மியாவ் மீனா’, ’டிராக் குள்ளன்’, ’ஆறு வித்தியாசங்கள்’ (கோயான் கோபுவோ அல்லது கோபனோ படம் வரைந்தவர் பெயர் சரியாக நினைவிலில்லை. ஆனால் அவை மிக அருமையாக இருக்கும். இப்படி அந்த இதழ்களிலிருந்து எதையாவது வாசித்துக் கொண்டிருப்பேன். நடுவில் வரும் சினிமா படங்களும், அதை ஒட்டி கீழே வந்திருக்கும் துணுக்குகளையும் படித்த ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அக்காலகட்டத்தில் மேற்கண்ட பெயர்களைத் தவிர வேறு எதுவும் என் நினைவில் இல்லை.

முதன்முதலில் படித்த சிறுவர் நூல் “அம்புலிமாமா.” அதில் “திருடி” என்ற கதையை எழுத்துக் கூட்டி வாசித்தது நன்கு நினைவில் இருக்கிறது. பெரிய கொண்டையோடு கூடிய ஒரு பெண்ணின் பென்சில் ஸ்கெட்ச் ஓவியன் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு ”பாலமித்ரா”, ”ரத்னபாலா”, ”கோகுலம்”, ”பி.கே. மூர்த்தி”, வாண்டுமாமாவின் மர்ம, மாயாஜாலக் கதைகள், ”இரும்புக்கை மாயாவி”, ”தலைவாங்கிக் குரங்கு”, ”லயன்” காமிக்ஸ், ”முத்து” காமிக்ஸ், ”விஜய்” காமிக்ஸ்” என வாசிப்புத் தொடர்ந்தது. அப்புறம் வளர வளர எனது வாசிப்பார்வங்கள் மாறிப் போயின. மலிவு விலையில் பாக்கெட் நாவல் வந்தது. முதல் இதழ் ”ஒரு தேவி என்னைத் தேடுகிறாள்” ராஜேந்திரகுமார் எழுதியது. தலைப்புச் சூட்டியது ராஜேஷ்குமார். தொடர்ந்து “இறப்பதற்கு நேரமில்லை”, ”நந்தினி 440 வோல்ட்ஸ்” (ராஜேஷ் குமார்) போன்ற க்ரைம் நாவல்களையும் “தேவை ஒரு பாவை”, ”ஒரு பெண்ணின் அனாடமி”, ”ஒரு கார், ஒரு ஸ்ட்ரா, ஒரு ப்ரா” (எல்லாமே புஷ்பா தங்கதுரை) போன்ற நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். (அப்போது எனக்கு பதின்ம வயது)

மேலும் வாசிக்க, பதிவிறக்க : இங்கே செல்லவும்.

நன்றி

***

இலக்கிய உலா

இலக்கிய உலா புதிய மின்னூலை இங்கே வாசிக்கலாம்.

நூலின் முன்னுரையில் இருந்து….

தமிழ் இலக்கியங்கள் மீது பள்ளிக் காலத்திலிருந்தே ஆர்வம் உண்டு. வளர வளர அந்த ஆர்வமும் தேடலும் அதிகமானது. தேடலில் அப்படிக் கிடைத்த சில விஷயங்களை இலக்கியக் கட்டுரைகளாக ‘அன்பு பாலம்’ என்ற இதழில் எழுதி வந்தேன். பின் https://ramanans.wordpress.com/ என்ற தளத்திலும் தொடர்ந்து எழுதி வந்தேன். அப்படி வெளியான சில கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த இலக்கிய உலா.

ilakkiya ula wrapper 1

இதனை வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்!

***