அய்யனார் யார்? – 4

வெள்ளை யானை

கயிலையில் சேரமான் இறைவனை கண்டு மகிழ்ந்து பாட அவர் பாடிய பாடல்களை சாஸ்தாவிடம் கொடுத்து  பூவுலகில் வெளியிடுமாறு சொல்லி, சேரமான் வந்த வெள்ளை நிறக் குதிரையில் பூமிக்கு இறைவன் அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில், வெள்ளானைச் சருக்கத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் ஆணையை ஏற்று சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்டார் அந்த நூல்தான் திருக்கயிலாய ஞான உலா. இது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.

இளங்குடி ஐயனார்

திருப்பிடவூர் என்று குறிப்பிடப்படும் அந்த ஊர் இன்றைய திருப்பட்டூர். இதற்கு திருப்படையூர் என்றும் பெயருண்டு. இன்றும் திருப்பட்டூரில் ஒரு மிகப் பெரிய ஆலயம் பராமரிப்பின்றி உள்ளது (நான் பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தைச் சொல்லவில்லை. அது செல்லும் வழியில் முன்னாலேயே உள்ளது. வாயிலில் மிகப் பெரிய கல் யானை வாகனமாகக் காணப்படுகிறது. அதை பெரியய்யா கோயில் என்றும் பெரிய சாமி கோயில், எழுத்தச்சன், அரங்கேற்றியான் கோயில், அரங்கேற்றிய ஐயன் கோயில் என்றும் கூறுகின்றனர். (இந்தக் கட்டுரை உருவாகவே அந்த ஆலயம் தான் காரணம்.)

தஞ்சை ஐயனார்

இந்த ஐயனார் ஆலயம் மிகப் பெரிய கற் கோயிலாக உள்ளது. பொதுவாக ஐயனார் ஆலயங்கள் கிராமத்தின் எல்லைப் புறத்தில் காடு, கண்மாய், ஏரிக் கரை ஓரத்தில், பெரும்பாலும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கும். ஆனால் இந்த ஐயனார் மிகப் பெரிய கற் கோயிலில் எழுந்தருளியுள்ளார். பெரிய புராணம் கூறிய வரலாற்றுக்குச் சான்றாக – இத்தலத்தில் உள்ள சாஸ்தா – ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். பூரண, புஷ்களா சமேதராக ஒரு காலை மடித்து மறுகையில் சுவடியும் ஐயனார் மிக அழகாகக் காட்சியளிக்கின்றார்.

பூரணை, புட்கலை பற்றி கச்சியப்பர்,

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்

பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்

பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்கிறார்.

இந்த ஊரைச் சேர்ந்தவரே சாத்தனார் என்ற புலவர் என்ற கருத்து உண்டு.

சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்

செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,

நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்

அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!

முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,

கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,

தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,

என்ற புறப்பாடல் வரிகள், (பாடல் தலைப்பு – அவிழ் நெல்லின் அரியல். பாடியவர்: மதுரை நக்கீரர். பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன். திணை: பாடாண். துறை: கடைநிலை – புறம். 394) இவ்வுண்மையைத் தெளிவாக்குகின்றன.

இன்றும் ஒவ்வொரு வருடமும் ஆடி சுவாதி தினத்தன்று திருக்கயிலாய ஞானஉலா விழா சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. அன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

 

மேற்கண்ட கருத்துகள் மூலம் அய்யனார் தமிழகத்து தொன்மைக் கடவுள் என்பதும். ஐயனார் சாஸ்தா வழிபாடு என்பது பண்டைத் தமிழர் வழிபாடு என்பதும் உறுதியாகிறது. ஆனாலும் சில சந்தேகங்கள் எழவும் செய்கின்றன.

கந்த புராணம் கூறும் சாஸ்தாவைப் பற்றிய தகவல்கள் இதனுடன் பொருந்தவில்லை.

சிலப்பதிகாரம் கூறும் சாத்தன் வரலாறு இதற்கு மாறானதாக இருக்கிறது.

ஐயப்பன் பற்றிய வரலாறு இதோடு தொடர்புடையதாய் இல்லை.

ஏனென்றால் சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன். பந்தள மகராஜனது மகவாகத் தோன்றி இவர் செய்த அற்புதங்கள் தமிழகத்து பண்டைய ஐயனார் வழிபாட்டோடு ஒத்து வரவில்லை. இருவருக்கும் பெயர் வடிவில் ஒற்றுமை இருந்தாலும் அவதார வடிவில் ஒப்புமை இல்லை. மேலும் ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதும், யோக நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பவர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஐயனார் பெரும்பாலும் பூரணா, புஷ்கலா சமேத தம்பதியராகக் கணப்படுகிறார். சில இடங்களில் தனது பரிவார தெய்வங்களுடன் தனித்தும் இருக்கிறார். எங்கு இருந்தாலும் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அவர் அமர்ந்திருக்கிறார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.

சாஸ்தா

ஆக, மேற்கண்ட ஆய்வுகளின் படி அய்யனார் என்ற தெய்வம் வேறு அய்யப்பன் என்ற தெய்வம் வேறு என்ற முடிவிற்கே வர முடிகிறது. இது பற்றிய ஆய்வுகள் இன்னமும் விரிவான அளவில் மேற்கொண்டால் இன்னும் புதிய பற்பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்பதே இந்த ஆய்வின் இறுதி முடிவு.

ஐயனார்

 

இதுவரை இத்தொடரைப் பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி


(முற்றும்)

படங்கள் நன்றி : கூகிள் இமேஜஸ்.

8 thoughts on “அய்யனார் யார்? – 4

  1. அய்யனார் ஐயப்பன் சாஸ்தா எல்லாம் ஒன்றுதான்…

    ஐயப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது..
    தம்பதியாக காட்சி தரும் ஆர்யங்காவ் சாஸ்தா கோவிலில் பெண்கள் தம்பதியராக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்..

    தமிழகத்தில் இவரைத்தான் அய்யனார், சாஸ்தா என்று வழிபாடு செய்கிறார்கள்

  2. ஐய்யனார் ஐய்யப்பன் சாத்தன் சாஸ்தா வேறுவேறு அல்ல – நேற்று எழுந்ததூம் என்ன செய்தோம் என்ன நெனச்சோம் என்பது நேற்றைய சாயும் அந்திப்பொழுதே நெனவு விட்டு நீங்கறப்ப இறைவனைப் பற்றிய ஆய்வு எப்படி ? நீங்க சொன்ன இந்த ஊருக்கு திருப்பட்டூர் -:ஒரு பழைய பெயர் உண்டு. ஐய்யனாரை மனசில் இருத்திக்கேட்டால் சொல்லும். உணர்ந்தால் அதை உரையுங்க.

  3. எழுத்து திருட்டு இணையத்தில் மட்டுமல்ல !

    எனது புத்தகத்தை அப்படியே அச்செடுத்து தெலுங்கில் வெளியிட்டு ஒரு “குருசாமி”, ஒரு புத்தகம் ௨௦௦௦ ருபாய் விலைக்கு விற்கிறார்.

  4. உங்கள் ஆராய்ச்சி கட்டுரை அருமையாக இருந்தது …. நீங்கள் எழுப்பியிருக்கும் பல கேள்விகளுக்கு நான் என்னுடைய நூலில் பதிலளித்திருக்கிறேன்.

    சாஸ்தா குறித்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து “மஹா சாஸ்தா விஜயம்” என்ற என்னுடைய நூல் வெளிவந்து தற்போது இரண்டாம் பதிப்பும் வந்து விட்டது.

    புத்தகத்தை குறித்து அறிய:
    http://shanmatha.blogspot.in/2011/04/shri-maha-sastha-vijayam.html

    THE HINDUவுக்கு எனது பேட்டி :
    http://www.hindu.com/2009/01/25/stories/2009012558470200.htm

    நன்றி
    ஸ்வாமி சரணம்
    அரவிந்த் சுப்ரமண்யம்
    shanmatha.blogspot.com
    http://www.aravindsastha.com
    Ph: (0)99946 41801

    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் தளம் விஷய ஞானம் உள்ளதாக உள்ளது. நற்பணி தொடர, மேலும் பல நூல்கள் எழுத ஐயன் அருள் புரியட்டும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.