மயான க்ஷேத்திரம் – காசி

காசியின் மறுகரையில்...

”புயலார் பொழிற்காசிப் பூங்கோயின் மேய

கயலார் தடங்கணாள் காந்தன் – செயலாவி

உய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்

வையத் துதியார் மறுத்து”

என்கிறார் குமரகுருபரர், தனது காசிக்கலம்பகத்தில். அந்த அளவுக்கு பெருமை மிக்க தலம் காசி.

“தர்ஸனாத் அப்ரஸதசி

ஜனனாத் கமலாலயே

காச்யாந்கி மரணான் முக்த்தி

ஸ்மரணாத் அருணாசலே:”

– என்பது ஸ்லோகம். “கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்பது இதன் பொருள். காசி தலத்தில் மரணமடைந்தவர்களை அன்னை விசாலாட்சி தன் மடியில் தாங்கிக் கொள்ள, ஈஸ்வரன் அம்மரணமுற்றவர்களின் காதுகளில் ராம நாமத்தை ஓதி, முக்தி அளிப்பதாக ஐதீகம். இங்குள்ள இறைவன் மணிகர்னேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். இறப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டங்கள் தரையில் படுவதால் இங்கு இறைவனுக்கு இப்பெயர். (மணி – குண்டலம்; கர்ணிகா – காது). இங்கு வந்து மரணமடைய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்து தமது இறுதி நாட்களைக் கழிப்பவர்கள் பலர்.

மணிகர்ணிகா காட், காசி

ஒவ்வொரு இந்துவும், குறிப்பாக தமிழர்கள் ஒவ்வொருவரும் காசி யாத்திரை மேற்கொள்ள வேண்டுவது அவசியம். காரணம், மனிதன் வாழ்வின் பூரணத்துவத்தை எய்துவது காசி திருத்தலத்தைக் கண்ட பிறகுதான். புனிதம் என்று நினைத்த பலவற்றிற்கு அர்த்தமில்லாமல் போவதும், ’தீட்டு’ என்று கருதி விலக்கப்பட்டவற்றிற்கு பொருள் இல்லாமல் போவதும் காசியில்தான். காசி ஒரு மயான க்ஷேத்திரம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். இதற்காகவே காசியில் அமைந்துள்ள இடம்தான் மணிகர்ணிகா காட். இந்த இடத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன்கள் செய்வது மிக மிக விசேஷமானது. பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த்து அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் ஹரிச்சந்திரா காட். இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

எரியும் உடலம், ஹரிச்சந்திரா காட்

“காசியில் இறப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் பிராம்மணனாயினும் சரி, வேசியாயினும் சரி  பரமசிவனாக ஆகிறார்கள்.” என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ”காசி தெய்விக உணர்வுமயமான இடம். இங்கு உயிர் விடுபவர் யாரானாலும் பக்தன், பக்தன் அல்லாதவன், வேற்று மதத்தினன், புழு, பூச்சி யாராக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும்.” என்று கூறியிருக்கிறார் அன்னை ஸ்ரீ சாரதாதேவி. இதிலிருந்தே காசியில் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

 

மணிகர்ணிகையில் ஒரு அகோரி…

 

எரியும் உடல், மணிகர்ணிகா

”கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே சந்நிதம் குரு” என்பது புனித கங்கைக்கான துதி. காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும்.

அவர் ஆத்திகரோ, நாத்திகரோ காசி நகரம்,  ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம் என்பதில் ஐயமில்லை.

***************

காசியின் பெருமைகள்

காசி இந்துக்களின் புனிதத் தலம். மிகப் புராதனமான நகரம். ஆதிசங்கரர், ராமானுஜர், குமரகுருபரர், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் என பலரது வருகையால் பொலிவுற்ற புண்ணிய பூமி. கிறித்துவர்களின் ஜெருசலேம் யாத்திரை, இஸ்லாமியர்களின் மெக்கா யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது காசி யாத்திரை. காசி நகரத்தின் வடக்கிலிருந்து வாரண் நதியும், தெற்கில் அஸ்ஸி நதியும் க்ங்கை நதியில் கலக்கின்ற காரணத்தால் வாரணாசி என்ற பெயரும் இந்த நகருக்கு உண்டு.

காசி விஸ்வநாதர் ஆலயம்

முத்தித் தரும் தலங்கள் ஏழனுள் காசியும் ஒன்று. இந்தியாவின் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம். இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையாக கோயில் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம். காலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் இவ்வாலயத்தின் வழிபாடு சிறப்புமிக்கது. குறிப்பாக இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது. வழிபாட்டிற்கான பூசை பொருட்கள் காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில் அகில உலகத்தும் உணவளிக்கும் அன்னை அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள். காசி விஸ்வநாதரை நம் கையால் தொட்டு வணங்கலாம் என்பதும், அபிஷேகம் செய்யலாம் என்பது மற்றொரு சிறப்பு.

காசி கடைத்தெரு…

அன்னபூரணி ஆலயம்

காசியில் அவசியம் தரிசக்க வேண்டிய முக்கியமான ஆலயம் இது. இவ்வாலயம் வட இந்தியச் சிற்பக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் சர்தார் சந்திரசூட் அவர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளியிருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

காசி விசாலாட்சி ஆலயம்

காசி விசாலாட்சி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் வேறு பகுதியில் உள்ளது. தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். காசி நகர் முழுதும் இந்த அன்னையின் ஆட்சிதான். இக்கோயில் நகரத்தாரின் பொறுப்பில் உள்ளது. அர்த்தஜாம வழிபாடும் அவர்களாலேயே நடத்தப்பெறுகின்றது. இது அன்னையின் 52 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

காசியில் ஒரு மாலை நடை…

கால பைரவர் ஆலயம்

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தின் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார். 

கங்கையும் காசியும்

கங்கை

கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 80க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. இவற்றில் குளிப்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் கரையில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நடக்கும் ”கங்கா ஆரத்தி” மிகச் சிறப்பானது. இந்தியாவில் ஓடும் நதிகளிலேயே மிகப் புனிதமான நதி கங்கை.

”காசம்” என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி என்பது பொருள். அதுபோல ”காசி” என்பதற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தரும் என்பதற்கு குமரகுருபரர், சுப்ரமண்ய பாரதியார் தொடங்கி எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. 

ஆத்திகரோ, நாத்திகரோ அவசியம் வந்து செல்ல வேண்டிய இடம் காசி