மகான் பூஜ்ய ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்

சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்றோர் வாழ்ந்த பெருமை மிக்க  இந்து ஞான மரபில் சதா பிரம்ம நிலையிலேயே இருந்து, அந்த இறைநிலையோடு ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்ம ஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப் பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி போன்ற அந்த அவதூத ஞானிகளின் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்.

சுவாமிகள் ஒரு மாபெரும் அவதார புருடர். ஆனால் ஒன்றுமே அறியாத பித்தர் போன்று காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரது முதுகில் மூன்று லிங்க வடிவிலான குழிகள் காணப்பட்டதால் பக்தர்கள் அவரை த்ரைலிங்க சுவாமிகள் என அழைத்தனர். குள்ளமான உருவம். நீண்ட கைகள். உருண்டையான முகம். பெரிய வயிறு என்று சுவாமிகளின் தோற்றம் மிக வித்தியாசமானதாக இருக்கும். சுவாமிகள் யாருடனும் எதுவும் பேச மாட்டார். உணவு உண்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான். பல நாட்கள் பட்டினியாக இருப்பார். சமயங்களில் அன்பர்கள் கொண்டு வரும் தயிர்ப்பானைகளை சளைக்காமல் குடம் குடமாகக் குடிப்பார். மணிகர்ணிகா படித்துறையில் உச்சி வெயிலில் சுடும் பாறை மீது அமர்ந்திருப்பார். அவதூதர் என்பதால் உடலில் ஒட்டுத் துணி இருக்காது. அதைப் பற்றி எந்த வித அக்கறையுமின்றி கடும் வெயிலில் அமர்ந்திருப்பார். தான், தனது, தன்னுடைய உடல்  என்ற உணர்வுகள் அற்றவராக அவர் இருந்தார். சமயங்களில் கடும் குளிரில் தண்ணீருக்குள் இறங்குவார். உள்ளேயே மூச்சடக்கி அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் தண்ணீரின் மீது சப்பணமிட்டு அமர்ந்து கொண்டோ அல்லது தண்ணீரில் படுத்த வாக்கில் மிதந்து கொண்டோ இருப்பார். சில சமயம் உச்சி வெயிலில் அவதூதராய் காசி மாநகரத்துத் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். காலத்தை, இயற்கை விதிகளை வென்ற மகாபுருடராக இம்மகான் விளங்கி வந்தார்.

இறையனுபூதி பெற்ற இம்மகானை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனம் செய்திருக்கிறார். காசி, பிருந்தாவனம் போன்ற பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்ட ராமகிருஷ்ணர், காசியில் ஒரு மடத்தில் தங்கியிருந்த த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். காசியில் ராமகிருஷ்ணர் தரிசித்த ஞானிகளில் மகான் த்ரைலிங்க சுவாமிகள் ஒருவரே பிரம்ம ஞானியாக விளங்கியவர். இதனை சுவாமி விவேகானந்தரிடம், ’ஒரு மிகப் பெரிய மகானைச் சந்தித்தேன்’ என்று சொல்லி விளக்கிக் கூறியிருக்கிறார் பரமஹம்சர். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் மகான் த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். மஹா அவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ ஸ்ரீ லாஹரி மஹா சாயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவராவார்.

லாஹரி மஹா சாயர் (1828-1895), ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886), விவேகானந்தர் (1863-1902) என பல காலகட்டத்தைச் சேர்ந்தவர்களும் சுவாமிகளை தரிசித்துச் சென்றிருக்கின்றனர். பரமஹம்ச யோகானந்தர் தனது ’ஒரு யோகியின் சுயசரிதம்’ நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

மிகச் சிறந்த தவயோகியாகத் திகழ்ந்த இம்மகான் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

அவதூதர் என்பதால் எப்போதும் சுவாமிகள் நிர்வாணமாகவே இருப்பார். ஆனால் சுவாமிகள் இவ்வாறு நிர்வாணமாகச் சுற்றி வருவது காவல்துறையினருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் சுவாமிகளைப் பிடித்து சிறையில் அடைத்துப் பூட்டி விட்டனர். ஆனால் சற்று நேரத்தில் சுவாமிகள் வழக்கம் போல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்.

பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க, சுவாமிகள் எவ்வாறு வெளியேறினார் என்பது தெரியாமல் காவலர்கள் திகைத்தனர். அதனால் சீற்றமுற்ற அவர்கள், மீண்டும் சுவாமிகளைப் பிடித்து வந்து கதவை பலமாகப் பூட்டி, காவலுக்கு என்று தனி ஆளையும் நியமித்தனர். ஆனால் சுவாமிகளோ சற்று நேரத்தில் சிறையிலிருந்து மாயமாய் மறைந்து, அதன் மாடிப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார். இதனால் சலிப்புற்ற காவலர்கள் சுவாமிகளைச் சிறையில் அடைப்பதை நிறுத்தினர். சுவாமிகளும் காசி மாநகரத்தின் தெருக்களில் வழக்கம் போலச் சுற்றி வர ஆரம்பித்தார்.

******

காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்காரர் அப்போது சப்கலெக்டராக இருந்தார். ஆடையின்றி அவதூத கோலத்தில் காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த சுவாமிகளைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொங்கியது. தன்னிடமிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். ஆனால் அந்த அடி சுவாமிகளின் மேல் விழவில்லை. மாறாக அவர் மனைவி மீது விழுந்து அவர் வலி தாளாமல் அலறினார். அதனால் சுவாமிகளை ஒரு மாயாவி என்று நினைத்த பிராம்லி, தன் வீட்டிற்கு அவரை இழுத்துச் செல்லுமாறு தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் வீட்டிலும் உறவினர்கள் அனைவரது உடலில் இருந்தும் சாட்டையடி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது கண்டு மிகவும் சீற்றமுற்ற பிராம்லி துரை ‘இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்’ என்று தனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அந்த அறையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொண்டார். பணி நிமித்தமாக மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார்.

சற்று நேரத்தில் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. சுவாமிகள் வழக்கம் போல் அவதூதராய் அவர் முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் சுவாமிகளைப் பற்றி விசாரித்தார் கலெக்டர். அப்போது தான் மகானின் மகிமை பற்றி அவருக்குத் தெரிய வந்தது. சுவாமிகளைப் பணிந்து வணங்கிய பிராம்லி, தான் செய்த அவச்செயலுக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சுவாமிகளும் அவரை மன்னித்தார். தனது அஞ்ஞானம் நீங்கிய அன்றைய தினத்தன்று வருடம் தோறும் சுவாமிகளுக்கு ஆராதனை நடத்திக் கொண்டாட ஒரு கட்டளையையும் பிராம்லி ஏற்படுத்தினார். அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரில் இன்றறளவும் காசியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வெகுகாலம் வாழ்ந்து காசியில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இம்மகான் பின் நேபாளத்தில் பசுபதிநாத் அருகில் ஜீவசமாதி அடைந்தார்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!

ஸ்ரீ அன்னை

I have a sweet little Mother
Who lives in my heart
We are so happy together
We shall never depart.”  
                          – The Mother

ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

அகில உலகுக்கும் தாயாகப் போற்றப்படுபவர் ஸ்ரீ அன்னை. அவர் கூறிய சில அறிவுரைகள் இங்கே…

‘நமக்கு ஒன்றுமே தெரியாது’ என நாம் உணர்வதே, ஞானத்தை அடைவதற்கான முதல் படி.

முழு தன்னம்பிக்கையுடனும் உண்மையான நேர்மையுடனும் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம்  நல்ல பலனுண்டு.

கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி  இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்.

இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத்  தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.

‘பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை  முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி.

சிறிய காரியங்களில் வெற்றியடைவதை விட, மகத்தான பெரிய இலட்சியங்களில் தோல்வி அடைவது  எவ்வளவோ மேல்.

மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமும், அகந்தையுமே மிக முக்கிய காரணம் ஆகிறது.

இளம் வயதில் அன்னை

இளம் வயதில் அன்னை

ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும். ஆனால் நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால், பல மடங்கு அதிகம் முன்னேற முடியும்.

ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது  ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.

நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க  விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்.

அச்சமுற்றுக் கலக்கமுடன் உன் வருங்காலத்தை எதிர் நோக்காதே.

நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண  நம்பிக்கையே!

 

அன்னை

அன்னை

ஸ்ரீ அன்னையைப் பற்றி திரு. கங்கை அமரன் பாடிய மலர் போல மலர்கின்ற… பாடலைக் கேட்கக் கீழே சுட்டவும்.

http://www.hummaa.com/music/song/Malar+Pola/102668

http://www.hummaa.com/music/song/Malarpola+%28repeat%29/102679

http://www.hummaa.com/music/song/Malarpola+%28theme+Song%29/102127

பாடல் வரிகள் இங்கே….

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே (மலர் போல…)

அன்னையின் வருகை

அன்னையின் வருகை

ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
நதி காய நேராமல் நீருற்று தாயே!
நல் நிலம் பார்த்து தாயே!

எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே!
என் வளமான தாயே!

பசி தாகம்  காணாமல் பயிராக்கு தாயே!
ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே! (மலர் போல…)
 
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள
திரு குறையாமல் வாழ

அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்

பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை  ஒன்றாக்கு தாயே!
உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே! (மலர் போல…)

(நன்றி: கங்கை அமரன்)

மதர் சிம்பல்

மதர் சிம்பல்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மா… அம்மா… அம்மா.. அம்மா!

பாடலைக் கேட்க சுட்டவும்

http://www.hummaa.com/music/song/Ammaum+Neeyee/142306

அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்
அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி ஓம் ஸ்ரீ சைதன்யமயி ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

 

அம்மா சரணம்

அம்மா சரணம்

 

 

டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் முற்பிறவி – மறுபிறவி ஆராய்ச்சிகள்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன், கனடாவில் பிறந்தவர். அடிப்படையில் ஒரு உளவியல் நிபுணரான இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முற்பிறவி-மறுபிறவி பற்றிய விஷயங்களில் இவருக்கு ஆர்வம் ஏற்பட அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தார். உலகெங்கும் பயணம் மேற்கொண்டார். முற்பிறவி ஞாபகங்கள் வந்ததாகக் கூறப்படுபவர்களைச் சந்தித்தார். அவர்கள் கூறும் முற்பிறவிகள் பற்றியும், அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள் குறித்தும் ஆராய்ந்தார். பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். முடிவில் சிலருக்கு மட்டும் முற்பிறவி நினைவுகள் ஏற்படுவது உண்மையே என்றும் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றும் கூறி அது பற்றிய பட்டியல்களையும் வெளியிட்டார்.

முற்பிறவி, மறுபிறவி பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் ஸ்டீவன்சன் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தகுந்தது, ’Twenty Cases Suggestive of Reincarnation’ என்பதாகும். அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் டாக்டர் ஸ்டீவன்சனின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டதுடன், அவர் முறைப்படி ஆய்வு செய்து அவற்றை நீருபித்திருப்பதாகவும், இதில் ஐயப்பட ஏதுமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அவர் உருவாக்கிய முற்பிறவி – மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சித்துறை இன்றளவும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

பர்மாவில் டாக்டர் ஸ்டீவன்சன்

பர்மாவில் டாக்டர் ஸ்டீவன்சன்

தனது ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ஜப்பான், சீனா, பர்மா, இலங்கை என உலகின் பல பகுதிகளுக்கும் சென்றவர், இந்தியாவிற்கும் வந்து இச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ளார். தமிழகத்திற்கும் வருகை புரிந்துள்ளார்.

டாக்டர் இயான் ஸ்டீவன்சன் ஆராய்ச்சி செய்துள்ள சம்பவங்களிலிருந்து ஒன்றைப் பார்ப்போம்.

இப்ராஹிமின் மறுபிறவி
லெபனான் நாட்டில் உள்ள கோர்னெல் என்னும் வசித்து வந்தான் இமத் இலவர் எனும் சிறுவன். அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே சம்பந்தமில்லாத பல பெயர்களை உச்சரிக்கத் தொடங்கினான். பெற்றோர்கள் குழந்தை ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறது என பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் அவன் வளர வளர அவனது நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தன. ஜமீலா என்ற பெயரையும், மஹ்மூத் என்ற பெயரையும் அடிக்கடி உச்சரித்தான். ஒருமுறை தெருவில் ஒரு வயதான பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர் முற்பிறவியில் தனது வீட்டிற்கு அருகாமையில் வசித்தவர் என அடையாளம் கண்டு கொண்டு அவரைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான். பின்னர் வலுக்கட்டாயமாக அவனது குடும்பத்தாரால் வீட்டிற்குத் தூக்கி வரப்பட்டான்.

வயது ஆக ஆக தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் அவன் சொல்ல ஆரம்பித்தான். தனது பெயர் இப்ராஹிம் என்றும் தான் வசித்த நகரத்தின் பெயர் க்ரீபீ என்றும் கூறியவன், 1949 ஆம் ஆண்டு, டி.பி.நோயால் தான் இறந்து விட்டதாகவும், தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்க உடனே தன் கிராமத்துக்குப் போக வேண்டும் என்றும் அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

இந்தச் சம்பவங்கள் அவன் பெற்றோருக்கு மட்டுமல்லாது அவன் வசித்த கிராமத்துவாசிகளுக்கும் மிகுந்த வியப்பைத் தந்தது. தகவல், முற்பிறவி- மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் கவனத்துக்குச் சென்றது. அவர் உடன் புறப்பட்டு கோர்னெல் வந்து சேர்ந்தார். சிறுவனுடன் பேசி அவன் கூறும் தகவல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.அவர் மேலும் ஆய்வு செய்யத் தொடங்கிய போது அந்த ஊருக்கு சுமார் 25 மைல் தொலைவில் ’க்ரீபீ’ என்ற கிராமம் இருப்பதை அறிந்து கொண்டார். பின் தனது ஆய்வைத் தொடர்வதற்காக சிறுவன் மற்றும் அவன் பெற்றோருடன் ’க்ரீபீ’ கிராமத்தை நோக்கிக் காரில் புறப்பட்டார். வழியிலேயே மிக அதிகமாக முற்பிறவியின் தாக்கத்திற்கு உட்பட்ட சிறுவன் இமத், தான் வசித்த வீடுபற்றி, கெர்மில் என்ற பெயர் கொண்ட தனது மனைவி பற்றி, தன்  குழந்தைகள் பற்றி என ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் கூற ஆரம்பித்தான். கிராமத்தை அடைந்ததும் தன் வீட்டை சரியாக அடையாளம் காட்டியதுடன், வயதான தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அடையாளம் கண்டு கொண்டான். தன்னுடைய புகைப்படத்தையும், தன்னுடைய சகோதரன் புகைப்படத்தையும் மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான்.

தன்னோடு முற்பிறவியில் ராணுவத்தில் பணியாற்றிய நண்பரைச் சந்தித்து பழைய அனுபவங்களைப் பற்றிப் பேசினான். அது மட்டுமல்லாமல் தன்னுடைய முற்பிறவி மாமா, நண்பன் மஹ்மூத், தனக்கு மிகவும் விருப்பமான, நெருக்கமான தொடர்பில் இருந்த விலைமாது ஜமீலா என அனைவரையும் அவனால் அடையாளம் கண்டு கொண்டு பேச முடிந்தது.

இவ்வாறு சிறுவன் இமத் தனது முற்பிறவி பற்றிக் கூறிய  57 கருத்துக்களில் 51 கருத்துக்கள் மிக மிகச் சரியாக இருந்தது என்றும், மீதி ஆறும் அவன் சிறுவன் என்பதால் அவனால் சரியாக விளக்கிச் சொல்ல முடியாமல் ஏற்பட்ட கருத்துப் பிழைகளே என்றும் கூறுகிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன். இரண்டு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் அது வரை சந்தித்ததில்லை, ஒருவரைப் பற்றி மற்றொருவர் கேள்விப்பட்டதுமில்லை. அப்படியிருக்க சிறுவன் இமத், இப்ராஹிமாகிய தனது முற்பிறவியைப் பற்றி விளக்கிக் கூறி, தெள்ளத் தெளிவாகத் தான் தான், அவனது மறுபிறவி என்பதை நிரூபித்திருக்கிறான் என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன்.

இந்தியாவில் ஸ்டீவன்சன்

இந்தியாவில் ஸ்டீவன்சன்

வெளிநாடுகளில் மட்டும் தான் என்பதல்ல; இந்தியாவிலும் பல்வேறு மறுபிறவிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முற்பிறவி-மறுபிறவிகள் பற்றி ஆராய்வதற்காக, இந்தியாவில், பரிதாபாத் நகரத்தில் Reincarnation Research Foundation என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள National Institute of Mental Health & Neurosciences (NIMHANS) அமைப்பும் முற்பிறவி-மறுபிறவி உண்மைகள் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது. அது பற்றி விரிவான பல ஆய்வுகளை மேற் கொண்டிருக்கிறது. டாக்டர் இயான் ஸ்டீவன்சனும் இந்தியாவிற்கு வருகை தந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து நிம்ஹான்ஸின் (NIMHANS) Clinical Psychology துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா அவர்களும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பின்னர் பார்ப்போம்.

 

வள்ளலாரின் வாழ்வில்…

vallalaarஇன்று வள்ளலாரின் அவதார தினம்.
                                   
     “அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
      தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”

என்ற மகா மந்திரத்தை உலகம் உய்ய அருளிய மாண்பாளரின் மகா அவதார தினம். கருவிலே திருவுடையவராய்த் தோன்றிய இந்த மகாபுருஷர் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக ஆக்கிக் கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்தவர்.

சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப் பிள்ளை – சின்னம்மை தம்பதியினருக்கு 5-10-1823ல் மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ ராமலிங்க அடிகள். தந்தை இளம் வயதில் இறந்ததால் சகோதரர் சபாபதிப் பிள்ளையின் ஆதரவில் சென்னையில் வந்து வசித்தார். இளமையிலேயே கருவிலே திருவுடையவராக விளங்கிய குழந்தை வளர வளர தெய்வக் குழந்தையாக பரிணமித்தது. தெய்வத்தின் அருள் பெற்றதாக வளர்ந்தது. பள்ளி செல்லும் வருவத்திலேயே அவருக்கு ஞானம் முகிழ்த்தது. ஓதாது அனைத்தையும் உணர்ந்து கொண்ட மெய்ஞ் ஞானக் குழந்தையாய் வளர்ந்தது.

வள்ளலார்

வள்ளலார்

இளம் வயதில் ஆசிரியர் ’ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் செல்ல வேண்டாம்’ என உலக நீதிப் பாடலைப் பாட, அதைக் கேட்ட சிறுவன் இராமலிங்கம், அங்ஙனம் எதிர்மறையாக எண்ணங்களை பிஞ்சு எண்ணங்களில் பதியச் செய்வது தவறு என்று கூறிப் பாடிய பாடல் அவர் ஒரு ஞானக் குழந்தை என்பதை உலகுக்கு அறிவித்தது.

 

  ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
  பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
  பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
  மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
   நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
  தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
   தலமோங்கு கந்த வேளே
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
   சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

என்ற பாடலை ஆசிரியர் மெச்சினாலும், ராமலிங்கர் படிப்பில் ஆர்வம் இல்லாது இருப்பதும், அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருப்பதையும் கண்டு அண்ணன் சபாபதிப் பிள்ளையிடம் முறையிட்டார். அண்ணன் தம்பியைக் கண்டித்தார். வீட்டில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்தார். மாடியறையில் தனியிடம் ஒதுக்கிக் கொடுத்தார்.

அவ்வறையில் தினம்தோறும் படிப்பதற்குப் பதிலாக தியானம் எய்து கொண்டிருந்த ராமலிங்கருக்கு ஒருநாள் முருகனின் அருட்காட்சி கிடைத்தது.

“சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!” என்று அந் நிகழ்வைப் பாடினார்.

அண்ணன் தம்பியை ஒரு சாதாரணக் குழந்தையாகவே எண்ணியிருந்தார். ஆனால் ஒரு சொற்பொழிவுக்கு தமக்குப் பதிலாக அவர் செல்ல நேர்ந்ததையும், அது கேட்டு மக்கள் புகழ்வதையும் எண்ணி தம்பியின் திறம் கண்டு மகிழ்ந்தார். ஒருநாள் ராமலிங்கரின் சொற்பொழிவையும் அவர் கேட்க நேர்ந்தது. அவர் தெய்வக் குழந்தை என்பதையும், ஒரு அவதார புருடர் என்பதையும் உணர்ந்து கொண்டார். வள்ளலை வாயாரப் போற்றினார்.

வள்ளலாரின் வாழ்க்கையில் இறையருளால் பல்வேறு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. ஒருநாள் பசித்திருந்த போழ்து அன்னை வடிவாம்பிகையே அவருக்கு அக்காள் உருவத்தில் வந்து அமுதூட்டினார்.

சத்ய ஞான சபை

சத்ய ஞான சபை

சென்னையின் பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது ’திருவருட்பா’ என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சமரச சன்மார்க்கச் சங்கத்தையும், சத்தியத் தருமச் சாலையையும் நிறுவினார்.

”வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
 மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
 இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ?”

என்றெல்லாம் ஏழைகளின் நிலை கண்டு இரங்கினார். எல்லா மக்களையும் சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து உய்யுமாறு அழைத்தார்.

சித்தி வளாக மாளிகை

சித்தி வளாக மாளிகை

தாம் உருவாக்கிய சித்தி வளாகத் திருமாளிகையில் பல்வேறு அற்புதங்களைப் புரிந்தார்.

ஒரு நாள்…  மறுநாள் சமைப்பதற்கான அரிசி முதலிய பொருட்கள் இல்லாமல் போய் விட்டன. வரும் அதிதிகளுக்கு எங்ஙனம் பசியாற்றுவது என பணியாளர்கள் அஞ்சினர். பின்னர் தயக்கத்துடன்  அடிகளாரிடம் தகவல் தெரிவித்தனர். அதனைக் கேட்ட  அடிகளார் தனியறைக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்தார். பின் சிறிது நேரம் சென்று திரும்பி வந்தவர், பணியாளர்களை நோக்கி “கவலை வேண்டாம். தேவையான பொருட்கள் அனைத்தும் நாளையே வந்து சேரும்” என்று கூறினார்.

பணியாளர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. “எப்படி வரும், எங்கிருந்து வரும், யார் மூலம் வரும்?” என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

வள்ளலார் மறைந்த அறை

வள்ளலார் மறைந்த அறை

 மறு நாள் பொழுது புலர்ந்து, பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த பொழுது  மூன்று வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அதில் முழுவதும் மூட்டை மூட்டையாய் அரிசிகள், இன்ன பிற உணவுச் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பணியாளர்கள் ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்தவரிடம் கேட்ட பொழுது, அவர், தான் பக்கத்தில் உள்ள திருத்துறையூரில் இருந்து வருதாகவும்,  முந்தைய நாள், அடிகளார் தன் கனவில் வந்து அரிசி முதலிய உணவுப் பொருட்கள் வேண்டுமென்று கேட்டதாகவும், அவ்வாறே அவர் கனவில் இட்ட கட்டளைப்படியே தான் அங்கு அந்தப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பதாகவும் பணிவுடன் தெரிவித்தார்.

அடிகளாரின் அற்புத ஆற்றலை எண்ணி ஆச்சரியப்பட்டனர் பணியாளர்கள்.

ஜோதி தரிசனம்

ஜோதி தரிசனம்

ஒருமுறை சில பக்தர்கள் ஒரு  புகைப்படக்காரரை சென்னையிலிருந்து  அழைத்துவந்தனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது வள்ளலாரைப் புகைப்படம் பிடித்து, அதனைத் தாங்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதே. வள்ளலார் இதற்கு உடன்படாத பொழுதும் அவர்கள் தங்கள் முயற்சியில் தளராது,  அவரைப் பல முறை படம் பிடித்தனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் வள்ளலாரின் வெண்மையான ஆடை மட்டுமே விழுந்திருந்தது. வள்ளலாரின் உருவம் விழவில்லை. பல முறை முயற்சி செய்தும் இதே நிலை தான். இறுதியில் அன்பர்கள் வள்ளலாரைப் புகைப்படம் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.  அந்த அளவிற்கு ஒளியுடல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்.

இவ்வாறு உலக உயிர்களுக்காக இரங்கி, வாடிய பயிர்களுக்காக வாடி தன்னலம் கருதாது தொண்டு புரிந்து வந்தார் அடிகளார். ஆனால் மக்கள் யாரும் இவர் தம் பெருமையை முழுமையாக உணரவில்லை. அவர் தம் கொள்கைகளையும் சரியாகப் பின்பற்றவில்லை. அது கண்டு வள்ளலார் வருந்தினார். ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்’ என்று அந்த வருத்தம் வாக்காக வெளிப்பட்டது.

ஸ்ரீ முக ஆண்டு. (1874) தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பனிரெண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார்.  “நான் உள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்” என்று  அறிவித்தார். பின்…
” பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையே
அச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!”

- என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக் கொண்டார். அதன் பின் அன்பர்கள் அனைவரும் அடிகளாரின் உத்தரவுப்படி அறைக் கதவைச் சில நாட்கள் திறக்காமலே இருந்தனர்.  பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி  மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல் துறைத் தலைவர் ஆகியோர் பூட்டியிருந்த கதவைத் திறக்க ஏற்பாடு செய்தனர். உள்ளே வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டிய படி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டார்.

வள்ளலார் தமது உடலை ‘ஞான தேகம்’ ஆக்கிக் கொண்டு காற்றோடு காற்றாய், இயற்கையோடு இயற்கையாய்க் கலந்து விட்டார். தன் உடலை ஒளியுடல் ஆக்கிக் கொண்டு, எல்லாம் வல்ல பேரருள் ஒளியொடு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு, ஒன்றோடு, ஒன்றாகக் கலந்து விட்டார்.

வள்ளலார் மறைந்திருக்கலாம். ஆனால் அவரது சமரச சன்மார்க்க, சமத்துவ, சமுதாயக் கொள்கைகள் மறைந்துவிடவில்லை. அவை இன்னமும் தனது கருத்தினை, சீர்திருத்தக் கொள்கைகளை இந்த உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

எளியோரை வாழ்விக்க வந்த வள்ளலின் பாதம் பணிவோம். வளம் பல பெறுவோம்.

 

மகாத்மாவின் மறுபிறவி?

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். இன்றோடு அவர் பிறந்து 140 வருடங்கள் ஆகின்றன. எளிய மக்களின் வாழ்க்கை உயர்விற்காகவே தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர், கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டு 61 வருடங்கள் ஆகி விட்டது. காந்தியையும் அவரது கொள்கையையும் இன்று பலர் மறந்து விட்டாலும் இந்தியாவுடனான அவரது பிணைப்பும் உறவும் நேசிப்பும் அஹிம்சை என்னும் உறுதியும் என்றும் நினைவுகூரத் தக்கது.

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களாக மட்டுமே காந்திஜி அறிமுகமாகியிருக்கிறார். நவநாகரிக யுக இளைஞர்களுக்கோ அவர் ஒரு பிற்போக்குவாதி, மதவாதி, புதுமைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த பிடிவாதக்காரர். அரசியல்வாதிகளுக்கோ, கேட்கவே வேண்டாம் காந்திஜி என்ற பெயர் ஊறுகாய் மாதிரி. அவ்வப்போது தொட்டுக் கொள்வார்கள்.

அவர் செய்த தியாகங்களும், அனுபவித்த கொடுமைகளும், பின்பற்றிய தத்துவங்களும், மேற்கொண்ட எளிமையான வாழ்க்கை முறையும் எல்லோராலும் என்றும் எண்ணிப் பார்க்கத் தக்கவை. அதனால் தான் ஒபாமாவால் கூட காந்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் அவர் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.

டாக்டர் வால்டர்

டாக்டர் வால்டர்

மகாத்மாவின் வாழ்க்கையை, அவர் போராட்டத்தை, அவர் தத்துவத்தை, அவரது கொள்கைகளை உலகெங்கிலும் உள்ள பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர். இன்னமும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்களுள் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு அதிரடியான ஒரு முடிவைத் தந்திருப்பவர் வால்டர் செமிகேவ்.

அவர் சொல்வது இதைத்தான். “மகாத்மா காந்தி மீண்டும் மறுபிறவி எடுத்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்திருக்கும் அவர், இப்பிறவியிலும் சமூக சேவை, மனித நலத்திலேயே ஆர்வம் காட்டி வருகிறார்”

வால்டர் செமிகேவ் ஒரு வித்தியாசமான மனிதர். தனது இளமைப் பருவத்தில் கிட்டத்தட்ட நாத்திகராக வாழ்ந்த அவருக்கு அதிசயமான வகையில் முற்பிறவி நினைவுகள் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற் கொண்ட அவர், முற்பிறவியில் தான் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வாழ்ந்த ஜான் ஆடம்ஸ் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். தனது வாழ்க்கைச் சம்பவங்களும், குணாதிசயங்களும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் ஆடம்ஸூடன் பெருமளவு ஒத்துப்போவதைக் கண்ட அவர் மேலும் தீவிரமாக தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

சென்னையில் வால்டர்

சென்னையில் வால்டர்

சிகாகோவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வால்டர், தொடர்ந்து டென்வரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1996ல் இருந்தே இது போன்ற முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் தனித்து ஈடுபட்டு வந்த இவருக்கு, பின்னர் கெவின் ரியர்ஸன் என்ற புகழ்பெற்ற மீடியமுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தலைமை மருத்துவராக வாழ்ந்த ’அதுன் ரே’ என்ற மதகுருவின் ஆவியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த ’மகா ஆவி’ யையே தனது வழிகாட்டும் ஆவியாகக் கொண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு விடை கண்டறிந்து வருகிறார் டாக்டர் வால்டர்.

காந்தி

காந்தி

டாக்டரின் ஆராய்ச்சி தனித்துவமானது. முதலில் முற்பிறவியில் வாழ்ந்த மனிதரைப் பற்றிய தரவுகளைத் திரட்டுவார். அவர் வாழ்க்கை முறை, குணாதிசயம், உருவ அமைப்பு, நடை, உடை, பாவனைகள், தனிப்பட்ட செய்கைகள், முக்கியமான வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவற்றைக் குறித்துக் கொள்வார். பின்னர் அவரது மறுபிறவியாகக் கருதப்படும் நபரின் வாழ்க்கையையும் அதே போன்று ஆய்வுக்குள்ளாக்குவார். அவருடன் பேட்டி காண்பார். இரண்டு நபர்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திப்பார். பல தகவல்களைத் திரட்டுவார். பின்னர் இரண்டையும் ஒப்பிட்டு சோதனைக்குள்ளாக்குவார். அப்படியும் தனக்குச் சந்தேகம் தோறும் போது வழிகாட்டி ஆவியான ’அதுன் ரே’விடம் பேசி, உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டு ஆய்வு முடிவுகளை உலகுக்கு அறிவிப்பார். சமயங்களில் ’அதுன் ரே’வே சில பிரபலமான மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி வால்டரிடம் கூறி ஆய்வுகள் மேற் கொள்ளச் சொல்வதும் உண்டு.

வான் ஜோன்ஸ்

வான் ஜோன்ஸ்

இம்மாதிரி ஆய்வு செய்து அவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் டாக்டர் வால்டர் செமிகேவின் நூல்களுக்கு முக்கிய இடமுண்டு.

இந்தியாவில் வாழும் பிரபல மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கும் டாக்டர் வால்டர் மகாத்மா காந்திஜியின் மறுபிறவியாகக் குறிப்பிட்டிருப்பது அமெரிக்காவில் வாழும் சமூக ஆர்வலரான வான் ஜோன்ஸ் என்பவரை. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலராக விளங்கும் ஜோன்ஸ் சமீபத்தில் தான் புகழ்பெற்ற டைம் பத்திரிகையால் ‘சுற்றுச்சூழல் நாயகன்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

ஜோன்ஸின் நடை, உடை, பாவனை, உடல் மொழிகள், முக அமைப்பு என அனைத்தும் காந்தியை ஒத்திருப்பதாகக் கூறும் வால்டர், காந்திஜி 1930ல் தென் ஆப்பிரிக்காவில் எதுபோன்ற பணிகளை மேற்கொண்டாரோ அதே போன்ற பணிகளைத் தான் இன்று ஜோன்ஸ் செய்து வருவதாகக் கூறுகிறார். காந்திஜி 1930ல் எப்படி இதே ’டைம்’ பத்திரிகையால் அந்த ஆண்டின் ’மிக முக்கியமான மனிதர்’ என்று போற்றப்பட்டாரோ அதே போன்று இன்று ஜோன்ஸூம் போற்றப்படுகிறார் என்று கூறுகிறார்.

காந்தி-ஜோன்ஸ்

காந்தி-ஜோன்ஸ்

இது போன்ற சம்பவங்களையும், இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகளையும் தனது “Born Again”  நூலில் தெரிவித்திருக்கும் வால்டர், சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது தமிழ் நாட்டிற்கும் வருகை தந்திருந்த அவர், முற்பிறவி-மறுபிறவி பற்றிய தனது புதிய நூலான “Origin of the Soul: And the Purpose of Reincarnation”-ஐ லேண்ட் மார்க் புத்தக கடையில் வெளியிட்டார்.

இந்த நூல்களில் காந்திஜியின் மறுபிறவியைப் பற்றி மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ரேகா, ஜெயா பச்சன், ஷாருக்கான், அப்துல்கலாம், மேனகா காந்தி, ஜவஹர்லால் நேரு, விக்ரம் சாராபாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலரது முற்பிறவிகளைப் பற்றி ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள லேண்ட மார்க் கடைகள் அனைத்திலும் இந்த நூல்கள் கிடைக்கும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
   (கடவுள் வாழ்த்து, திருக்குறள்)

“பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே”
    (இரண்டாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்)

 

 

மகான்களும் விஜயதசமியும்- 2

மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூட. அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.
ஸ்ரீ குழந்தையானந்தர்
ஸ்ரீ குழந்தையானந்தர்

மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற்கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது. ஆண்டுகள் பல கடந்தும் பலனில்லாததால் அவர்களுடைய மனக்கவலை அதிகரித்தது. அதனால் தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதை மீனாட்சிக்கே அர்ப்பணித்து விடுவதாக வேண்டிக் கொணடனர். அவர்கள் பிரார்த்தனை பலித்தது. திரிபுரசுந்தரி அம்மாள் கருத்தரித்தார். இரண்டு குழந்தைகளை ஈன்றார். ராமன், லட்சுமணன் என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டனர். அதில் மூத்த குழந்தை ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும், காலில் சங்கு, சக்கரத்துடனும் மிக அழகாக இருந்தது. ஆனால் அழவில்லை. தாய்ப்பால் குடிக்கவில்லை.

மாதங்கள் கடந்தன. ஆயினும் அக்குழந்தையின் நிலையில் மாற்றமில்லை. தெய்வக் குற்றமோ என பெற்றோர் அஞ்சினர். ஆலய அர்ச்சகரிடம் ஆலோசனை கேட்டனர். பின்னர் தான் இருவருக்கும் குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தையை அர்ப்பணிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சகருக்கு அருள் வந்து, காலில் சங்கு சக்கரம் உள்ள குழந்தையை விட்டுச் செல்லுமாறு ஆணை வந்தது. அதன்படி குழந்தை ’ராமன்’ ஆலயத்தில் தனித்து விடப்பட்டான். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.

ஜீவ சமாதி

ஜீவ சமாதி

ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன். புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.

பின் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. ‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படுவது.

புனித மரம்
புனித மரம்

ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார். 

சுவாமிகள் பிளாட்பாரத்தில் அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.

சமாதி ஆலயம்

சமாதி ஆலயம்

உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.

ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.

இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.

 

மகான்களும் விஜயதசமியும் -1

விஜயதசமி
அன்னை ஸ்ரீ துர்கா
அன்னை ஸ்ரீ துர்கா

தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ துர்கா தேவி
ஸ்ரீ துர்கா தேவி

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.

அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!

 இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந் நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்புப் பெற்றதாகிறது. ஆம், இந் நன்னாளில் தான் மகா அவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகா சமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி கொண்ட தினமும் இதுவே!

ஸ்ரீ ஷிர்டி பாபாவின் வரலாறு
ஸ்ரீ சாயிபாபா

ஸ்ரீ சாயிபாபா

எங்கு, எப்போது தோன்றினார் என்பதை வரையறுக்க இயலாமல் சுயம்பு மூர்த்தமாய் அவதாரம் செய்தவர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா. இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதார புருடர். பல்வேறு லீலைகள் செய்தவர். பல மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்தவர். இன்றும் ஷிர்டி தலத்திற்கு தம்மை நாடி வருவோரின் பிரச்சனைகளை சுட்சுமமாக இருந்து தீர்த்துக் கொண்டிருப்பவர்.

 இந்து-இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் ’உரூஸ்’ ஊர்வலத்தையும்  அவர் நடத்தி வந்தார். அவர் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ ‘அல்லா மாலிக்’ என்ற அல்லாஹின் திரு நாமத்தை. இந்துக்களும் அவரது பக்தர்களாக இருந்தார்கள். இஸ்லாமியர்களும் அவர் பக்தர்களாக இருந்தார்கள். அவர் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் அவர் ’பாபா’. பாபா என்ற சொல்லுக்கு தந்தை என்பது பொருள்.
பாபா சமாதி (ஷிர்டி)
பாபா சமாதி (ஷிர்டி)

ஷீர்டியில் சாயி பாபா முதன்முதலில் பதினாறு வயது இளைஞனாகக் காட்சி கொடுத்த இடம், புனிதமான ஒரு வேப்பமரத்தடி ஆகும். அதுதான் குருஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மரத்தடிக்கு அருகில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஓர் அறையில்தான், தன் குரு வாழ்ந்து வந்ததாக பாபா கூறியுள்ளார். அங்கு எப்போதும் அணையா விளக்கு எரிய வேண்டும் என்பது அவரது ஆக்ஞை.

தான் தங்கியிருந்த மசூதியிலிருந்து, தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வது அவரது வழக்கம். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீர்டி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா
ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா

துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.  அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.

எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.

என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.

எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.

எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.

கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.

இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்

இவை பகவான் பாபாவின் புனித வாக்குகளாகும்.

ஷிர்டி குருஸ்தான்
ஷிர்டி பாபா குருஸ்தான்

பாபா 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். வருடந்தோறும் அங்கு அப்புனித நன்னாளில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

பகவானின் ஆரத்தி உட்பட ஷிர்டி ஆலய வழிபாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் (live) காண…

http://www.shrisaibabasansthan.org/shirdilivedarshan1.htm

பகவானின் முழுமையான வரலாறைத் தமிழில் அறிந்து கொள்ள…

http://www.shrisaibabasansthan.org/allsaicharitra(digitalisation)/Main_Tamil/t/index.htm

பகவானின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.

(நாளை ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகளின் வரலாறும், அற்புதங்களும்)

 

பகுத்தறிவும் ஆன்மீகமும்

அன்பார்ந்த கோபி,

 நேற்றைய ஞான சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்  பதிவில் மறுமொழியாக வந்த உங்கள் கேள்வி இது….

அன்பார்ந்த ஐயா,

வணக்கம். அப்போ பூதம், தேவதைகள் எல்லாம் இருக்குன்னு நீங்க சொல்றீங்க இல்ல. சரி, மகான் கண்ணுக்குத் தெரியுற அவுங்க ஏன் சாதாரண மனுஷங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குறாங்க.. அப்படி என்ன அதுல பெரிய ரகசியம் இருக்கு. எனக்கு இதை நம்ப முடியலை.

இந்தப் பௌதிக உலகில் எந்த ஒன்றுமே ஏதேனும் ஒரு புலன்கள் வழியாக உணரப்பட்டே நம்மை அடைகின்றன. கண்,காது, வாய், மூக்கு, தோல் என்று இவற்றால் உணரவப்படுவது மட்டுமே நம்மால் அறிய முடிவது. இவற்றுக்கு அப்பாற்பட்டு ஏதாவது இருப்பதாகச் சொன்னால் அவற்றை மெய்ப்பிக்க விஞ்ஞான பூர்வ ஆதாரம் வேண்டும். இல்லாவிட்டால் அதனை உண்மை என்று ஏற்க முடியாது.

காற்றை நாம் கண்ணால் காண முடியாவிட்டாலும் இலைகள் அசைவின் மூலம் உணருகிறோம். மின்சாரத்தை நாம் நேரடியாகக் காண முடியாவிட்டாலும் விளக்கின் ஒளி, மின்விசிறி, கணிணி, குளிர்சாதனப் பெட்டி என்று பல விதங்களில் அதன் பயன்பாடுகளை உணருகிறோம்.

நீங்கள் குறிப்பிடும் பேய், பிசாசு, பூதங்கள், தேவதைகளை எப்படி உணர்வது?, அவை எங்கே இருக்கின்றன?, அவையும் நம்மைப் போலச் சாப்பிடுமா? தூங்குமா? குளிக்குமா? காதல், காமம் செய்யுமா? – அடப் போங்கண்ணே நிலவுல தண்ணீர் இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிச் சொல்லியிருக்காங்க.. நீங்க என்னடான்னா சந்திர லோகம், ஆவிகள் உலகம், பிதிரு உலகம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. நினைக்க நினைக்க எனக்கு ரொம்பச் சிரிப்புச் சிரிப்பா வருது. ஹி… ஹி…

என் பதில்….

பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலோருக்கு “தான்” என்கின்ற எண்ணமே முன் வந்து நிற்கிறது. “எதுவாக இருந்தாலும் நாங்கள் உணர்ந்தால் தான் நம்புவோம், நாங்கள் கண் கூடாகப் பார்த்தால் தான் நம்புவோம். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எதையுமே ஏற்க இயலாது” – இதுதான் பலரது உரத்த குரலாக இருக்கிறது.

சரி. எது பகுத்தறிவு? மனிதன் மட்டுமே பகுத்தறிவு படைத்தவன் என்று எந்த உறுதிப்பாட்டில் கூற முடியும்? மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியுமா?

ஒளி வட்டம்

ஒளி வட்டம்

மனிதன் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே ‘பகுத்தறிவு’ உள்ளது என்பதுதான் உண்மை. அந்தந்த உயிரினங்களின் பரிமாண வளர்ச்சிக்கு ஏற்றவாறு அந்த அறிவு அமைந்துள்ளது. ஒரு நாயைப் பார்த்து கல்லை விட்டு எறிந்தால் அது ஏன் ஓடுகிறது? நாம் அடிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்வதினால் தானே! அந்த உணர்வுக்குப் பெயர் என்ன? ‘அனிச்சைச் செயல்’ என்றா சொல்ல முடியும்? அதே போல் ஒரு காகத்தை விரட்டினாலும், குருவியை அதட்டினாலும் அவை பறந்து சென்று விடுகின்றனவே ஏன்? இவன் நம்மை விரட்டுகிறான், தாக்க வருகிறான் என்று அவற்றால் உணர முடிவதால் தானே, அந்த உணர்விற்குப் பெயர் என்ன? – பகுத்தறிவாகத் தானே இருக்க முடியும்? அவை வாழும் உணர்வு உலகத்திற்கேற்ப அந்தப் பகுத்தறிவானது செயல்படுகிறது. அவ்வளவுதான். அதே சமயம் அவற்றின் பகுத்தறிவை மனிதனின் பகுத்தறிவோடு ஒப்பிடுவது மதியீனம். ஏனென்றால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவன். அவன் அறிவை, அவனை விடக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட உயிரினங்களுடன் ஒப்பிட இயலாது. எப்படிக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட குழந்தையின் அறிவுடன், நன்கு வளர்ந்த இளைஞனின் அறிவை ஒப்பிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.

உண்மையைப் பார்க்கப் போனால் ஐம்புலன்களுக்குத் தான் ஐந்தறிவு. புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவான ஆறாம் அறிவைக் கொண்டவன்தான் மனிதன். ஆனால் அவற்றை உணராமல், அதைப் பயன்படுத்தத் தெரியாமல் ஐந்தறிவு படைத்த மிருகங்களைப் போலவே அவன் நடந்து கொள்கிறான். வாழ்கிறான்.

ஆவி

ஆவி

அறிய அறிய விரிவது தான் அறிவு. அறிந்து கொண்ட உண்மைகளை முன் தரவாக வைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் பற்றிப் பேசுவது தான் அறிவியல். அறியாத அல்லது அறிய இயலாத உண்மைகளைப் பற்றி அதனால் எப்போதும் முடிவு கூற இயலாது. அதனால் தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. ஆனால் ஒரு உண்மையை நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம். புத்தம் புதியதாக, இல்லாத ஒன்றை நாம் உருவாக்கி விடவில்லை. ஏற்கனவே வேறு ஒரு ரூபத்தில் இருந்ததை தற்போழுது வெளிக் கொணருகின்றோம், அவ்வளவுதான். We are not the Creators or Inventors. We are only the Discoverers.

“இயற்கைக்கு மாறாக எதுவுமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது  நிச்சயம் பொய். யாராவது நிரூபித்தால் நான் ஒரு இலட்சம் ரூபாய் தருகின்றேன்.” அறைகூவல் விடுத்தார் திரு. ஆபிரகாம். டி. கோவூர். ஆனால் அவரது அறைகூவலை யாரும் ஏற்கவில்லை. அவரும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பேய், பிசாசுகள் ஆவிகள் இல்லை, எல்லாம் மனநோயின் பல்வேறு வடிவங்களே என்று சிலவற்றை நிரூபிக்கவும் செய்தார். கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ஆத்மா என்ற ஒன்றெல்லாம் கிடையவே கிடையாது என்பது அவர் வாதம். ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்முடைய அளவிடும் திறன் என்ன? கடவுளைக் கண்ணால் காண முடியவில்லை. ‘ஆத்மா’ என்பதை உணர முடிவதில்லை. உடனே ‘எதுவுமே இல்லை’ என்று கூறிவிடுகின்றோம். நாம் பார்க்க முடியாததெல்லாம் உலகில் இல்லாத பொருள்களா என்ன?

மகான்கள் கண்ணுக்குத் தெரிகின்ற பூதம், பேய், தேவதைகள் எல்லாம் ஏன் ஒரு சாதாரண மானுடன் கண்ணிற்கு தெரிய மாட்டேன் என்கிறார்கள்.. அப்படி என்ன அதுல பெரிய ரகசியம் இருக்கு..? இது ஒருவரது கேள்வி.

சரி, ஒரு நாயின் கண்களுக்கு, ஒரு மாட்டின் கண்களுக்குத் தெரிவதை உங்களால் காண இயலுமா?( ஓ, மிருகங்களோடு ஒப்பிடக் கூடாது இல்லையா? மன்னியுங்கள். ஆனால் இங்கே வேறு வழியில்லை. அப்படிப் போய்த் தான் உண்மையை ஆராய வேண்டியுள்ளது.) சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமியின் போது பல இடங்களில் பறவைகளும், ஆடு, மாடுகளும் அதை முன்னரே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தம்மைக் காப்பாறிக் கொண்டன என்ற செய்தி நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. பறவைகளும், விலங்குகளும் அதை எப்படி முன்னரே உணர்ந்து கொண்டன? அந்த உணர்விற்குப் பெயர் என்ன? மிருகங்களை விட மிக உயர்ந்த “பகுத்தறிவு” படைத்த மனிதனால் ஏன் அதை முன்னரே உணர முடியவில்லை? உணர்ந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை?

சில சமயம் நாய் போன்றவைகள், காதினை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் குரைத்துக் கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படிச் செய்கின்றன, நமக்குத் தெரியாது. ஆனால் நம் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை. அது போன்றே மாடுகளும் சில சமயம் மிரளும். ஆனால் நம்மால் அதன் சரியான காரணத்தினை உணர இயலாது. அது ஏன்? இவ்வாறு சில மிருகங்களின் கண்ணுக்குத் தெரிவது, அவை கேட்பது, அவை உணருவது, மற்றும் சில பறவைகளின் கண்களுக்குத் தெரிவது, நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கேட்பதில்லை. நம்மால் உணர முடிவதில்லை. அது ஏன்? ஆராய்ச்சி செய்திருக்கிறோமா, இல்லை.

நாம் உயர்ந்த பகுத்தறிவு கொண்டவர்களாக இருந்தால் மிருகங்களை விட உயர்ந்த அறிவு நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மையானால் நம்மால் சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து ஏன் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது? மிருகங்களை விட நாம் மட்டமா? அல்லது நமது அறிவுத்திறனில் ஏதாவது குறைபாடு உள்ளதா?

ஆம். அதுதான் உண்மை. சில விஷயங்களில் நாம் ஐந்தறிவு உயிரினங்களை விட மிக மிக மேம்பட்ட நிலையில் இருந்தாலும், சில விஷயங்களில் அவற்றை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அதற்கு காரணமும் உள்ளது. முக்கிய காரணம் ஒருகாலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த நாம், காலச் சூழல் காரணமாக அதற்கு மாறான வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது தான்.

நம்முடைய கேட்கும் திறன் 20-20000 டெசிபல் தான். அதற்கு மேற்பட்ட ஒலியையோ, கீழான ஒலியையோ நம்மால் கேட்க இயலாது. [இப்போதுதான் EVP (Electronic Voice Phenomenon)  முறையில் இது போன்ற ஒலிகளைப் பதிவு செய்யும் முறையில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகிறார்கள்]. நுண்ணோக்கி இல்லாமல் சிலவற்றைப் பார்க்க முடியவில்லை. உடல் உறுப்புக்களைப் பார்க்க எக்ஸ்ரேயை, ஸ்கேனைப் பயன்படுத்துகின்றோம். இன்னும் தொலைநோக்கி, லேசர் என்று பல வகைகளைப் பயன்படுத்தித் தான் சிலவற்றைப் பார்த்து இன்னதென்று அடையாளம் கண்டுபிடிக்கின்றோம்.

இப்படி பார்வைத்திறனிலே குறைபாடு, கேட்கும் திறனிலே குறைபாடு என்று பலவற்றை நமக்குள் வைத்துக் கொண்டு, அமானுஷ்ய விஷயங்களை, கடவுள் போன்றவற்றை நாம் அளக்க முயன்றால் எப்படிச் சரியான விடை கிடைக்கும்? தவறான அளவு கோலால் அளக்கப்படுவது எதுவானாலும் தவறான முடிவினைத்தானே தரும்?.

ஒருகாலத்தில், இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்த காலத்தில் நமக்கு இத்தகைய திறமைகள் இயற்கையாகவே இருந்து, தற்போது பரிணாம வளர்ச்சியின் காரணமாக அவை நம்மை விட்டு நீங்கியிருந்தால்..?? இயற்கைக்கு மாறாக வாழ்ந்து நாம் அவற்றை இழந்திருந்தால்…. நம்மால் எதையும் சரிவர உணர முடியாது அல்லவா?

ஒரு வேளை கடவுள், ஆவிகள், தேவதைகள் போன்றவர்கள் காலம், இடம், பொருள் என்று எல்லாவற்றையும் கடந்த, வேறு பரிமாணத்தில் இருக்கின்றவர்களாக இருந்தால்! (அது தான் உண்மையும் கூட). நம் தவறான அளவுகோலால் எப்படிச் சரியான மதிப்பீடு பெற முடியும்? ஆகவே இதற்குத் தேவை நுண்ணிய ஆராய்ச்சி மட்டுமே. அதை விடுத்து அரை குறைக் கருவிகளை வைத்துக் கொண்டு அளப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

புருவ மத்தியில் மகான் கைவைத்தார். பக்தர் கண்களுக்கு பல உருவங்கள் தெரிந்தது. கையை எடுத்ததும் மறைந்து விட்டது. மகான் கண்களுக்கு மட்டும் சாதாரணமாகத் தெரியும் அவ்வுருவங்கள், பக்தருக்கு, அவரது புருவ மத்தியில் மகான் விரல் வைத்த பின் மட்டுமே ஏன் தெரிய வேண்டும். சாதாரணமாகவே பக்தரின் கண்களுக்கும் தெரிந்திருக்கலாமே, ஏன் தெரியவில்லை? – இது ஒரு சிந்தனையாளரின் கேள்வி.
நல்ல கேள்வி.

காட்சி நம் கண்ணால் காண முடியாத அளவிற்கு இருந்தால்…. அதாவது வேறு ஏதேனும் ஒரு கருவி      (தற்போது ஆவி உருவங்களைப் புகைப்படம் எடுக்கும் கேமராக்கள், வீடியோக்கள் வந்து விட்டன) மூலம் மட்டுமே காணக் கூடியதாய் இருந்தால்…..

உடலின் ஏழு சக்கரங்கள்

உடலின் ஏழு சக்கரங்கள்

மகான்கள் அந்தக் கருவிகள் ஏதும் இல்லாமலேயே பார்க்கும் அளவிற்கு பார்வைத் திறன் உடையவர்களாக இருந்தால்…..

இயற்கையோடு இயைந்த வாழ்வு, தியானம், யோகம், தவம் மூலம் அவர்கள அந்த ஆற்றலை (எல்லாவற்றையும் தெளிவாகக் காணும் பார்வைத் திறன் ஆற்றலை) வளர்த்துக் கொண்டிருந்தால்….

அவர்களால் அதை தெளிவாகக் காண இயலும் அல்லவா?

பரிணாம வளர்ச்சியின் காரணமாக, படிப்படியாக வால், உடலெங்கும் முடி, மிக நீண்ட கூரிய நகங்கள் போன்றவற்றை இழந்த நாம் இது போன்ற பல் வகை ஆற்றல்களையும் இழந்திருந்தால் நம்மால் எந்த விதக் கருவி, உபகரணம் ஏதும் இல்லாமல் எதையுமே தெளிவாகக் காண முடியாது அல்லவா?

சரி, மகான் புருவ மத்தியில் கை வைத்ததும் எப்படி அந்த உருவங்களைத் தெளிவாகக் காண முடிந்தது?

பொதுவாக நமது கண்களை ஊனக் கண் என்றும், மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண் திறப்பை ஞானக் கண் என்றும் யோகியர்கள் கூறுவர். புருவ மத்தியில் ’ஆக்ஞா சக்கரம்’ உள்ளது. குண்டலினி தவ யோகத்தின் மூலம் அதைத் தூண்ட முடியும். அல்லது ஆற்றல் பெற்ற மகான்கள், சித்தர்கள், யோகிகள் தம் தவ வலிமை மூலம் அவற்றைத் திறக்கவோ, மறைக்கவோ முடியும். அந்த ’ஆக்ஞா சக்கரம்’ திறக்கப்பட்டால் சாதாரண கண்களால் காண முடியாததைக் காணும் ஆற்றலும், சாதாரணமாகக் கேட்க முடியாததைக் கேட்கும் ஆற்றலும், பிறர் மனதில் நினைப்பதை அறியும் ஆற்றலும், தொலைவில் எங்கோ நிகழ்வதை அறியும் ஆற்றலும் – இது போன்று பல ஆற்றல்களும் – ஏற்படும்.

மகானும், பக்தரின் புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டி, தற்காலிமாக அதைச் செயல்பட வைத்து, இது போன்ற உருவங்களைக் காணும்படிச் செய்தார். இது ஒரு விதமான யோக சக்தி.

ஒருவன் இதைத் தானே உணர்ந்து தவ யோகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இவ்வகை ஆற்றலைப் பெற முடியும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை.

நிலவில் நீர் இருப்பதை இன்று தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய வானியல் சாத்திரத்தில் இதையெல்லாம் முன்பே சொல்ல்யிருக்கிறார்கள்.

ஆகவே, சாதாரண மானுடர்களால் ஒரு செயல் முடியாது என்றால் அது நிகழவே நிகழ முடியாது என்பது பொருளல்ல. நம் மூளையின் ஆற்றலை நாம் வெறும் 8% சதவிகிதம் கூட சரிவரப் பயன்படுத்துவதில்லை. மீதிப் பகுதியையும் நாம் உணர்ந்து, அறிந்து, தெளிந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நாம் கடவுளை அடையலாம். இல்லை… கடவுளாகவே ஆகி விடலாம்.

சர்வம் பிரம்ம மயம்.

அஹம் பிரம்மாஸ்மி.

 

 

ஞான சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

 

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.

வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த  பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.

மகானின் அற்புதம்
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.

ஞான சத்குரு

ஞான சத்குரு

ஒருமுறை மகான் மண்டப வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது பக்தர் ஒருவர், சுவாமிகளுக்கு உணவுப் பொட்டலம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து, உண்ணுமாறு வேண்டினார். சிறிது உண்ட சுவாமிகள் உணவை மேலும் கீழும் அள்ளி இறைத்தார்.

’உணவை உண்ணாமல் ஏன் இப்படி இறைக்கின்றீர்கள் சுவாமி’ என்று கேட்டார் பக்தர். 

’பூதங்கள் கேட்கின்றன, தேவதைகள் கேட்கின்றன’ என்று சொல்லிய சுவாமிகள், மேலும் மேலும் உணவை அள்ளிக் கீழே வீச ஆரம்பித்தார்.

தான் மெத்தப் படித்த மேதாவி என்ற எண்ணம் கொண்ட அந்த பக்தருக்கு சுவாமிகளின் செய்கை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதேசமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது.

’பூதமாவது, தேவதையாவது? என் கண்ணுக்கு எதுவும் தெரியலையே சாமி’ என்றார் கிண்டலாய்.

‘அப்படியா, சரி வா காட்டுகிறேன்’ என்ற சுவாமிகள், அந்த பக்தரின் புருவ மத்தியில் தனது கட்டை விரலை வைத்து அழுத்தினார். பின் ’இப்பொழுது பார்’ என்றார்.

அங்கே கோரைப் பல்லும், தொங்கிய நாக்கும், பரட்டைத் தலையுமாக மகாக் கோர உருவங்கள் பல நின்று கொண்டிருந்தன. அவை, சுவாமிகள் அள்ளி அள்ளி எறிந்த உணவை வேக வேகமாக உண்டு கொண்டிருந்தன. கிண்டலாகப் பேசிய பக்தரை அவை மிகவும் கோபத்துடன் பார்த்தன. அதைப் பார்த்த பக்தருக்கு மிகுந்த பயமாகி விட்டது. 

“அய்யோ சுவாமி, போதும், போதும். நான் தெரியாமல் கேட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறினார்.

சேஷாத்ரி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “இப்போ புரியுதா, இனிமே இப்படிச் சந்தேகப்பட மாட்டேல்ல…”என்று சொல்லிக் கையை எடுத்தார். உடனே அந்தக் கோர உருவங்கள் மறைந்து விட்டன. சுவாமிகளின் கால்களில் விழுந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டினார் அந்த பக்தர்.

அதற்கு சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு. போ போ. இந்த மலையை தினம் சுத்தி வா. உனக்கு நல்லது நடக்கும்.” என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.

மகா சமாதி

மகா சமாதி

இவ்வாறு தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்த இம் மகானின் குருபூஜை மார்கழி மாதத்து ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத ஹஸ்தத்தில் ஜெயந்தி விழா நடக்கிறது.

திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மகானின் சமாதிகளும் அமைந்துள்ளது.

மகான்களைத் தொழுவோம்; மனத் தெளிவு பெறுவோம்.

பிரும்மரிஷி மலை

மலை

மலை

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.

மலைப் பகுதி

மலைப் பகுதி

இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.

இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.

வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, ”ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!” என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர்  ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.

தலையாட்டிச் சித்தர்

தலையாட்டிச் சித்தர்

இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2010க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.

முன்பு பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த ராஜகுமார் என்பவர், தலையாட்டி சித்தரிடம் உபதேசம் பெற்று சீடராக மாறி, தற்போது மகா சித்தர்கள் டிரஸ்ட் என்ற அப்பீடத்தின் நிறுவனர், தலைவராக இருக்கிறார். ராஜ்குமார் சுவாமிகள் அன்னதானம், மருத்துவம், மருந்து, சூரணம், சித்த வைத்தியம் போன்ற ஆன்மீகப் பணிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்.

மேல் விவரங்களுக்கு — http://www.gatewaytopeace.org/

http://www.nandhi.com/

(தகவல் உதவி : சிவநெறிச் செல்வர் – சிங்கை கிருஷ்ணன்)

« பழைய வரவுகள்