உண்மையைத் தேடி…

வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி ஓர் புனிதப் பயணம்

இசைச் சங்கமம் - சென்னையில் திருவையாறு

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 27, 2008

திருவையாற்றில் நடைபெறும் இசைவிழாவைப் போல சென்னையிலும் வருடா வருடம் தொடர்ந்து நடைபெறும் இசைவிழா ‘சென்னையில் திருவையாறு’. கலாலயா யூ.எஸ்.ஏ. நாடக அகாடமி, ராஜ் டிவி, லஷ்மண் ஸ்ருதி மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விழா வழக்கம் போல இந்த முறையும் மிகக் கோலாகலமாக ஆரம்பித்தது. ‘எல்லோராலும் திருவையாற்றிற்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது ஆகவே, இங்கிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் சென்னையில் இவ்விழாவை வருடா வருடம் நடத்தி வருகிறோம் என்றார் விழாவின் அமைப்பாளர் லஷ்மண்(ஸ்ருதி).

இவ்வருட இசை விழா 21-12-2007 அன்று சென்னை காமராஜர் அரங்கில் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக பி.எஸ் நாராயணசாமி தலைமையில் பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடினர். பின்னர் தொடர்ந்து ராஜேஷ் வைத்யாவின் வீணை, ஹரிசரனின் வாய்ப்பாட்டு, ஸ்ரீகலா பரத்தின் பரதநாட்டியம், நித்யஸ்ரீயின் கச்சேரி, பிரசன்னாவின் கிடார் என முதல் நாளே நிகழ்ச்சி களை கட்டியது. அரங்குகள் நிரம்பி நல்ல கூட்டமும் காணப்பட்டது என்றாலும் வழக்கம் போல இளைய தலைமுறையினர்கள் அதிகம் தென்படவில்லை என்பது ஒரு குறைதான். தொடர்ந்து கன்யாகுமரி வயலின், சைந்தவியின் வாய்ப்பாட்டு, லலிதா நந்தினியின் வாய்ப்பாட்டு, விஜய் சிவாவின் கச்சேரி என நிகழ்ச்சி மறுநாளும் (22-12-2007) களை கட்டியது. அன்றைய நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஆராவமுதாச்சாரியாரின் ‘ஹரிகதா’ அமைந்திருந்தது. தனக்கே உரிய ஏற்ற இறக்கமான குரலாலும், அழகான விளக்கங்களாலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டார் ஆச்சாரியார்.

Dr. kadam kaarthik 

23-01-2007 அன்று HEART BEAT ENSEMBLE கடம் கார்த்திக்கின் FUSION-னுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சைலண்ட் வயலின் எம்பார் எஸ்.கண்ணன் வெகு அற்புதமாக வாசித்தார். பக்கவாத்தியமாக யு.பி.ராஜூ மாண்டலினில் அநாயசமாக புகுந்து விளையாடினார். குறிப்பாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மீதான, ஆதிதாளம்- புஜங்கணி ராகத்தில் அமைந்த ஸ்ரீ குருராயா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த கமலாலயம் தந்த மும்மணிகள் என்னும் ஸ்ரீ ராகத்தில் அமைந்த மும்மூர்த்திகள் பேரிலான பாடல் எந்தரோ மகானுபாவுலுவை ஞாபகப்படுத்தியது. கடம் வாசிப்பது மட்டுமில்லாமல் மிக அற்புதமாக, அநாயசமாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார் கடம் கார்த்திக். தொடர்ந்து வந்த ‘ஓம் சரவணபவா’ என்னும் திருப்புகழ் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. கடம், வயலின், மாண்டலின், மிருதங்கம், கஞ்சிரா என மாற்றி மாற்றி தனிஆவர்த்தனம் செய்ததில் ரசிகர்கள் கிறங்கித்தான் போயினர். குறிப்பாக எம்பார் கண்ணன் மிக அற்புதமாக ஆவர்த்தனம் செய்தார். வழக்கம் போல கடத்தைத் தூக்கிப் போட்டு விளையாடவும் செய்தார் கார்த்திக். பக்கவாத்தியமாக பூங்குளம் சுப்ரமண்யத்தின் மிருதங்கமும், சுந்தர் குமாரின் கஞ்சிராவும், ஏ.எஸ்.கிருஷ்ணனின் மோர்சிங்கும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து ராகங்களையும் மாறி மாறி வாசித்தது முத்தாய்ப்பாக இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான கச்சேரி.

தொடர்ந்து கே.காயத்ரி, மஹதி, உன்னிகிருஷ்ணன் என கச்சேரி தொடர்ந்தது. இறுதியில் ஷஷாங்கின் புல்லாங்குழலுடன் அன்றைய நாள் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. சில நிகழ்ச்சிகளில் அமர்வதற்கு இடமில்லாமல் பார்வையாளர்கள் நின்று கொண்டே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

24-12-2007 அன்றைக்கான நிகழ்ச்சிகள் கர்நாடிகா பிரதர்ஸின் கச்சேரியுடன் துவங்கியது. தொடர்ந்து சத்யநாராயணாவின் கீ போர்டு மனதிற்கு நிறைவைத் தந்தது அவர் அநாயசமாக அதை வாசித்த விதம் அருமை. அடுத்து வந்த முரளிதரன் குழுவினரின் பரதநாட்டியம், ரஞ்சனி காயத்ரியின் வாய்ப்பாட்டு, குமரேஷ்-கணேஷின் வயலின் என நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையாக இருந்தன.

நிறைவு நாளான 25-12-2007 அன்று கத்ரிகோபால்நாத்தின் இனிமையான சாக்ஸபோனோடு நிகழ்ச்சி துவங்கியது. கன்யாகுமரி, ஹரித்வாரமங்கலம் பழனிவேல் என தனது குழுவினருடன் வழக்கம் போல அழகாக வாசித்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றார் கத்ரி. தொடர்ந்து சியாட்டில் ராமனின் வாய்ப்பாட்டுக் கச்சேரி. ராமனுக்கு நல்ல குரல்வளம், சுத்தமான உச்சரிப்பு என நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். அத்துடன் அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக, அடக்கமாகப் பாடியதையும் சேர்த்துக் கொள்ளலாம். மன நிறைவைத் தந்த கச்சேரி.

 Sikkil Gurusaran

தொடர்ந்து பாட வந்தவர் சிக்கில் குருசரண். புகழ்பெற்ற சிக்கில் சகோதரிகள் லீலா-குஞ்சுமணியினரில் லீலாவின் பேரன். இன்றைய இளைய தலைமுறைப் பாடகர்களின் இவருக்குத்தான் அதிகக் கூட்டம் கூடுகிறது என்பது உண்மை. அவர் ‘நீயே கதி’ என்று பாட ஆரம்பித்த சற்று நேரத்தில் கூட்டம் அதிகமாகி நாற்காலிகள் நிரம்பின. தொடர்ந்து ஸ்ரீ மஹா கணபதே, ஓ ராமா பாடல்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. தொடர்ந்து பாடிய ‘சதா மதி’ என்ற கம்பீரவாணி ராகப் பாடலும் அதற்கான பக்கவாத்தியமும் மிக அருமை. ‘ஸ்ரீ வல்லி தேவசேனாபதே’ பாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. அந்தப்பாடலுக்கு கணேஷ் பிரசாத் வயலினில் தனி ராஜபாட்டையே நடத்தி விட்டார் என்று சொல்லலாம். புருஷோத்தமின் கஞ்சிராவும், நெய்வேலி நாராயணனின் மிருதங்கமும் போட்டி போட்டுக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தவிதம் அருமை. இறுதியாக ‘சின்னஞ்சிறு பெண் போலே’ பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் குருசரண். அந்தப்பாடலுக்கு ரசிகர்கள் கூட்டமும் அவரோடு சேர்ந்தே பாடியது குறிப்பிடத்தக்கது.

 sowmyaa

 தொடர்ந்து வந்த சௌம்யா தனது வழக்கமான டிரேட் மார்க் புன்சிரிப்புடன் ‘ஆடிக் கொண்டார்’ பாடலை அழகாக ஆலாபனை செய்தார். தொடர்ந்து தியாகராஜரின் புகழ்பெற்ற கிருதியான ‘மனவியாக லின் சரா டதே’ பாடலை உருகும் விதத்தில் பாட, ரசிகர்கள் பலர் எழுந்து நின்று கைதட்டினர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, அருளவேண்டும் தாயே, உன்னையல்லால்.., நின்னையே ரதியென்று.. என்று பல பாடல்களை உச்சரிப்பு சுத்தத்துடன் அழகாக ஆலாபனை செய்த விதம் அருமை. இறுதியாக அண்ணாமலை ரெட்டியாரின் ‘சென்னி குள நகர் பாலன்’ காவடிச் சிந்தை ஏனோ சற்று அவசரமாகவே பாடி நிறைவு செய்தார். ராமதாஸின் வயலினும், கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தது.

 Sudha Ragunathan

அடுத்து சுதா ரகுநாதன் பாட வரும்போது அரங்கு முற்றிலுமாக நிறைந்து விட்டது. நாற்காலியில் அமர இடமில்லாததால் ரசிகர்கள் பலர் முணுமுணுப்புடன் தரையில் அமர்ந்து கொண்டே நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர். அரங்கில் நிற்கவும் இடமில்லாததால் பல ரசிகர்கள் மேடையில் ஏறி, கச்சேரி செய்பவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு விட்டனர். வழக்கமான முறையில் அற்புதமாகப் பாடி தனது கச்சேரியை நிறைவு செய்தார் சுதா ரகுநாதன். அவர் சென்றவுடனேயே அரங்கத்திலிருந்து பலரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். இறுதியாக ஸ்ரீ ராம் பரசுராம்-அனுராதா ஸ்ரீராமின் ஹிந்துஸ்தானி-கர்நாடிக் ஜூகல்பந்தியுடன் கச்சேரி நிறைவுற்றது.

‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி சென்னை ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் என்றாலும் நிகழ்ச்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும், ரசிகர்கள் ஒழுங்காக அமர்வதற்கு சரியான சிட்டிங் வசதி செய்யப்படவில்லை என்பது போன்று குற்றச்சாட்டுக்களை அரங்கில் கேட்க முடிந்தது. அடுத்த ஆண்டு கச்சேரியில் இது போன்று குறைகள் நேராது என்று நம்புவோமாக.

.... இங்கே பதியப்பட்டது இசை | மறுமொழி இல்லை »

எல்லாமே இலவசம் தான்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 19, 2008

காட்சி 1
இடம் கைலாயம்
(பாத்திரங்கள் : சிவன், உமை, நாரதர்)

கைலாயமே ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. “ஓம் நமசிவாய” கோஷங்கள் இல்லை. முனிவர்கள் இல்லை. பூத கணங்களும் இல்லை. சிவனும் பார்வதியும் தனித்தனியாக ஏகாந்தத்தில் வீற்றிருக்கின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் என அனைத்தையுமே பூவுலகத்தில் மானிடர்கள் தாங்களே முனைப்புடன் செய்துவருவதால் இருவருக்கும் செய்வதற்கு எந்த வேலையுமே இல்லை. ‘நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே, இனி என்ன செய்வது, எங்கு போவது’ என சிந்தித்து சிந்தித்து, விவாதித்து, விவாதித்து, பேசிப் பேசி இருவருக்குமே போரடித்து விட்டதால், பேசாமல் மௌனமாய் அமர்ந்து ஏதோ யோசித்தவாறு இருக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்கள் என அனைவரின் நிலைமையும் இதே தான்.

அப்போது.. அங்கே நாரதர் வருகிறார். அவர் கையில் தம்புரா இல்லை. கர்லாக் கட்டை இல்லை. மாறாக ஏதோ ஓர் பார்சல். இனி……

நாரதர்:  நாராயண…… நாராயண……

சிவன்:   அடடே! நீங்களா!? வாருங்கள் வாருங்கள். ஆமாம். கேஸ் எல்லாம் என்ன ஆயிற்று? உங்களை விடுதலை செய்து விட்டார்களா என்ன?.
நாரதர்:  (திடுக்கிட்டவராய்) சிவபெருமானே! என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் என்னென்னவோ சொல்லி உளறுகிறீர்கள்? சித்தபிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்ன? நான் நாரதர் வந்திருக்கிறேன்! அது கூடத் தெரியவில்லையா உங்களுக்கு?

சிவன்: ஓகோ நாரத முனிவரா, வரவேண்டும். வரவேண்டும். பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டதல்லவா? அதுதான் ஆளே அடையாளம் தெரியவில்லை! அதனால் தான் சிறு குழப்பம். ‘நாராயண நாராயண’, என்று வேறு சொல்லி விட்டீர்களா, எனக்கு புத்தி சற்றே தடுமாற்றமாகி விட்டது. வேறு யாரோ என்று நினைத்து விட்டேன். மற்றபடி ஒன்றுமில்லை. ஆமாம், எங்கே உம்மை வெகுநாட்களாக ஆளையே காணோம்? ஏதாவது சம்மர் டூர் போய் விட்டீர்களா என்ன?
நாரதர்:  அட நீங்கள் வேறு! சம்மராவது. டூராவது. ஒரு சேஞ்சுக்காக பூவுலகம் சென்றிருந்தேன். இப்பொழுது தான் வந்தேன். வந்தவுடன் உங்கள் ஞாபகம் வந்து விட்டது. உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது அதான் ஓடோடி வந்தேன்.
உமை:  ! அப்படியா, சரி தான், பூவுலகம் எப்படி இருக்கிறது? மக்கள் எல்லாரும் சௌக்யம் தானே, ஆமாம், எங்களுக்காக என்ன வாங்கிக் கொண்டு வந்தீர்கள்?
(உடன் நாரதர் கையை பின்னால் இழுத்துக் கொண்டு, பார்சலை மறைக்கப் பார்க்கிறார்.)
சிவன்: நாரதரே! என்ன இது, உமது கையில் கானம் மீட்டும் வீணையைக் காணோமே! என்னமோ பார்சல் மாதிரி வைத்திருக்கிறீரே என்ன அது? மாம்பழங்களா? இல்லை வெகு நாட்கள் கழித்து பார்க்க வந்திருப்பதால் ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கி வந்திருக்கிறீரா என்ன?
நாரதர்: மாம்பழமா? அய்யகோ, அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு தங்களிடம் வர எனக்கு என்ன பைத்தியமா? ஒருமுறை பட்ட பாடு போதாதா என்ன? முருகன் என்னை யாருக்கும் தெரியாமல் தனியாகக் கூப்பிட்டு துரத்தி துரத்தி அடித்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?
உமை: அதை விடு நாரதா! அதெல்லாம் பழங்கதை! பார்சலில் என்ன வைத்திருக்கிறாய்? கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகா? நானும் ரொம்ப நாளாக இவரிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், வாங்கித் தர மாட்டேன் என்கிறார். ஏன் கேட்கிறாய், பூவுலகத்திற்குப் போகவே பயப்படுகிறார். நான் துணைக்கு வருகிறேன் என்று சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார், ஆனாலும் இப்படி பயப்படக்கூடாது இவர். ஏன் என்று கேட்டால், “யாராவது அடித்து விடுவார்கள், சிறையில் தள்ளி விடுவார்கள், பைத்தியம் என்று கல்லால் அடிப்பார்கள்” என்றெல்லாம் புலம்புகிறார். இவருக்கு வாழக்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன், ஒரு பட்டுப்புடைவை உண்டா, நகை நட்டு உண்டா, ஏன் ஒரு சினிமா டிராமான்னு கூட்டிக்கிட்டு போகப்படாதா? ஒண்ணுக்கும் லாயக்கில்லே. தின்னு தின்னுப்புட்டு சும்மா சுவத்தை வெறிச்சு வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்காரு. என்னமோ போ!, எல்லாம் என் தலையெழுத்து.
 (சொல்லி விட்டு உமை, கண்ணைக் கசக்கி, மூக்கையும் புடைவையில் சிந்தி துடைத்துக் கொள்கிறாள்)
நாரதர்: அம்மையே! இனி நீங்கள் கவலையே படவேண்டாம். சினிமா, டிராமா என்ன, இனிமேல் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பார்க்கலாம். அதற்கான முன்னேற்பாட்டோடு தான் வந்திருக்கிறேன்.
சிவன்: அப்படியா நாரதா!  நிஜமாத் தான் சொல்றியா நீ? என்ன ஏற்பாடு அது?
உமை:  நாரதா, நீ மிகவும் நல்லவன். நீ வாழ்க, வாழ்க.
நாரதர்: போதும் அம்மையே என்னைப் புகழ்ந்தது. நான் பூவுலகம் சென்றிருந்தேன் அல்லவா, அங்கே ஒரு மா. செ. எனக்கு நண்பரானார்.
சிவன்: மா.செ வா?  மாசேதுங்கைச் சொல்கிறாயோ நீ?
நாரதர்: சம்போ மகாதேவ! மாசேதுங் அல்ல ஈசுவரனே, மா.செ. அதாவது மாவட்டச் செயலாளர். அவர் ஓர் அரசியல்வாதி
உமை: , சரி, சரி மேலே சொல்.
நாரதர்: நண்பர் மா.செவுடன் எனக்கு மிகவும்  நெருக்கமான தொடர்பு ஏற்பட்டு விட்டது.
சிவன்:  (சந்தேகத்துடன்) மிகவும் நெருக்கமான தொடர்பு என்றால்…… புரியவில்லையே?!
நாரதர்:  அய்யகோ, ஈசனே, உமது புத்தி ஏன் இப்படிப் போகிறது. அவரோடு நல்ல நட்புக் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதன் மூலம் எனக்கு ஒரு அதிசய பரிசும் கிடைத்தது. அதனை தங்களுக்குக் கொடுக்கலாம் எனக் கொண்டு வந்தேன். என்னைப் போய் ஏதேதோ நினைத்து சந்தேகப்படுகிறீர்களே?
உமை: அதை விடு நாரதா! சந்தேகப்படுவது என்பது அவரோடு கூடவே பிறந்த குணம். அதை யாராலும் மாற்ற முடியாது.  ஆமாம், நீ கொண்டு வந்திருக்கிறாயே பரிசு.. என்ன அது?
நாரதர்: அது வேறொன்றும் இல்லை அம்மையே, பூவுலகில் பாவம் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், நிம்மதியே இல்லை. சதா ஏதாவது மனக்கவலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்வதற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் அரசாங்கம் ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சிவன்: ஆகா, பலே பலே! பேஷ், பேஷ்! ஆமாம், அப்படி என்ன திட்டம் அது?
நாரதர்: அதுதான் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் ஈசுவரா!. உலகத்திலே எங்குமே இல்லாத புதுமைத் திட்டம். அத்திட்டத்தின் மூலம் மக்களில் பலருக்கும் அரசாங்கமே இலவசமாக கலர் டி.வி. வழங்குகிறது. அவர்கள் அனுதினமும் அதனைப் பார்த்து இன்புற்று மகிழ்கிறார்கள். ஆகா, அதை எப்படிச் சொல்வேன், என்னென்று சொல்வேன், அதனை நீங்கள் அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். அதே இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்று எனக்கு ஆவல்.. அதனால் தான் தங்களுக்கு மட்டுமே என்று தனியாக இதனைக் கொண்டு வந்தேன்.
சிவன்: மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால் இலவசமாக அரிசி போடுவார்கள், இலவசமாக கோதுமை போடுவார்கள். இலவசமாக துணிமணி கொடுப்பார்கள். இலவசமாக டி.வியே கொடுப்பதென்றால்.. எனக்கு ஒன்றும் புரியவில்லையே..
உமை: இவர் கிடக்கிறார் நாரதா! விட்டுத் தள்ளு. ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது தான் இவருக்கு வேலை. உண்மையில் இவருக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. மக்கள் மகிழ்ச்சியே மகேசன் மகிழ்ச்சி என்று கூடத் தெரியாத ஞான சூன்யம். என்னை நினைவில் வைத்துக் கொண்டு, இதனை நீ கொண்டு வந்தது உண்மையிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். மிகவும் பெருமையாக இருக்கிறது. நீ நீடுழி வாழ்க. அப்புறம் இப்போதே சொல்லிவிட்டேன். மறுமுறை நீ பூலோகம் சென்று விட்டு வரும் பொழுது வேறெதாவது ஒன்று இதைப் போலே கொண்டுவர வேண்டும். என்ன புரிகிறதா?
சிவன்:  சரி நாரதா, அதனைப் போட்டுக் காண்பி. உடனடியாக நான் பார்க்க வேண்டும்.அப்படி என்ன தான் இருகிறது இந்த டி.வியில் என்று பார்த்து விடுவோம்..
நாரதர்: இந்தாருங்கள்.. (பார்சலைப் பிரித்து டிவியையும், ரிமோட்டையும் கொடுக்கிறார்.)

அப்புறம் ஒரு விஷயம், இதை நான்தான் தங்களிடம் கொடுத்தேன் என்று வேறு யாருக்கும் சொல்லி விடாதீர்கள். அப்புறம் எல்லாரும் ‘எனக்கு, உனக்கு’ என்று என்னை மொய்த்துக் கொள்வார்கள். என்னால் தாங்க முடியாது. சரியா, நான் வருகிறேன்.

(நாரதர் செல்கிறார்)

**************************************
 இதே போன்று பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள் என அனைவருக்கும் மற்றவருக்குத் தெரியவே கூடாது என்று கூறி ஒரு டி.வியைக் கொடுத்து விட்டு பூலோகம் சென்று விடுகிறார் நாரதர்.

*********************

காட்சி 2
இடம்: கைலாயம்
பாத்திரங்கள்: சிவன், உமை, முருகன், லட்சுமி.

உமை: சீக்கிரம் கனெக்ஷன் கொடுங்கள் சுவாமி, எனக்கு கை, கால் எல்லாம் ‘பர பர’ வென்கிறது.
சிவன்: கொஞ்சம் பொறுமையாகத் தான் இரேன் சக்தி. அப்படி என்ன அவசரம். லைன் கிடைக்க வேண்டாமா?
 (சிவன் தன்னுடைய சூலாயுதத்தின் பவர் மூலம் சாட்டிலைட்டிலிருந்து டைரக்ட் கனெக்ஷன் கொடுக்கிறார்.)
சிவன்: சக்தி.. இந்தா ரிமோட்.. உன் கையால் டி.வி.யை ஆன் பண்ணு. மங்களகரமாக இருக்கட்டும்.

(சக்தி மிகுந்த ஆர்வத்துடன் ரிமோட்டை வாங்கி டி.வி.யை ஆன் பண்ணுகிறாள்.)

டி.வியில்……. 
“ரெண்டுல தான் ஒண்ணத் தொட வார்றியா.. நீ ரெண்டுல தான் ஒண்ணத் தொட வார்றியா” என்று ஒரு பெண் ஆடிக் கொண்டிருக்கிறாள். கூடவே 40, 50 பேரும் கோரஸாக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
உமை: (அதிர்ச்சியுடன்) சுவாமி என்ன இது? என்ன அர்த்தம் இந்தப் பாடலுக்கு?  ஏன் இவர்கள் எல்லாம் இப்படி அரையும் குறையுமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்?
சிவன்:  புரியவில்லை.. ஹா ஹா ஹா. சக்தி என்னை நன்றாக உற்றுப் பார்.
உமை: ஐயோ! சே, சரியான மாங்காவாக இருக்கிறீர்களே, நான் இங்கே சீரியசாகப் பேசிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என்னடாவென்றால்… திருவிளையாடல் வசனத்தைப் போய் பேசிக் கொண்டு..
சிவன்: சாரி உமா! சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். என்னவென்று சொல்..
உமை: அதான் இரண்டிலே ஒன்று என்றால்..??
சிவன்: இரண்டிலே ஒன்று என்றால் - இரண்டிலே ஒன்று.
உமை: (சிவனை சற்று கடுமையாக முறைத்துப் பார்க்கிறாள்)
சிவன்: சரி, சரி, கோபித்துக் கொள்ளாதே, இரண்டிலே ஒன்று என்றால்.. இரண்டில் ஒன்றைத் தொடு என்றும் அர்த்தம். அதாவது.. அதாவது.. இரண்டு கைகளில் ஒன்றைத் தொடு என்று அர்த்தம்.
உமை: (சிவனை வெறுப்புடன் பார்க்கிறாள்)
சிவன்: என்னை முறைத்தோ கோபித்தோ ஒரு பயனுமில்லை உமா! இப்படித்தான் பூவுலகில் பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் இது மாதிரித்தான் விளக்கம் சொல்வார்கள். இல்லாவிட்டால் நம்மை ‘ரசனை கெட்ட ஜன்மம்’ என்று திட்டுவார்கள். இது போன்ற பாடல்களுக்காக, ‘சிறந்த கவிஞர்’ என்று விருதுகளும் வேறு நிறைய கிடைக்கிறதாம். என்ன செய்வது சொல். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தமிழை வளர்க்கிறார்கள் பார்த்தாயா?
உமை: சே! வெட்கக்கேடு. இந்த மாதிரி தொழில் செய்து வாழ்வதற்கு பேசாமல் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவலாம். (ஆத்திரத்துடன் சேனலை மாற்றுகிறாள்)

அடுத்த சேனலில்..
“ஏய், கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா!” என்ற பாடலுக்கு ஆண்களும் பெண்களுமாய் அரைகுறை ஆடையுடன் ஆடிக் கொண்டிருக்கின்றனர். சிவன் வைத்த கண் வாங்காமல்  உற்று உற்றுப் பார்ப்பதைக் கவனித்த சக்தி உடனடியாகச் சேனலை மாற்றுகிறாள்.

அடுத்த சேனலில்..

(ஒரு பெண் தாலியைக் கழற்றி கணவனின் முகத்தில் விட்டெறிகிறாள். பின் கணவனை நோக்கி..) எனக்கு உன் கூட வாழப் பிடிக்கல.. உன் தம்பிய தான் எனக்குப் பிடிச்சிருக்கு. நான் அவன் கூடத் தான் வாழப் போறேன்.. நீ எக்கேடோ கெட்டு ஒழி, இல்ல அவன் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு ஓடிப் போ.. (சொல்லி விட்டு வேகமாக சூட்கேசுடன் வெளியேறுகிறாள். அவள் குழந்தை அம்மா.. அம்மா.. என்று அழுது கொண்டே பின்னால் வருகிறது.  பின்னணியில் ஆ ஆ ஆ ஆ. என்று கோரஸ் குரல் ஒலிக்கிறது)
சிவன்: (கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் உமையை சற்று பயத்துடன் ஓரக்கண்ணால் பார்த்தவாறே சேனலை மாற்றுகிறார்.)

அடுத்த சேனலில்…

 (ஒரு பெரியவர் உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.)

 ஆகவே நீங்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கு முன்னால் எதற்காகச் சிந்திக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். சிந்தனை மிகவும் முக்கியமானது. அதே சமயம் அந்தச் சிந்தனை மற்றவரையும் சிந்திக்கத் தூண்டுவதாய் அமைந்திருக்க வேண்டும்..சிந்திக்க சிந்திக்கத் தான் சிந்தனையில் தெளிவு பிறக்கும். சிந்தனையில் தெளிவு பிறந்தால்…”

உமை: அய்யோ, என்னால் தாங்க முடியவில்லை. (ரிமோட்டை சிவனின் கையில் இருந்து பிடுங்கி சேனலை மாற்றுகிறாள்.)
அடுத்து.. 
 ஒரு சேனலில் செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 “பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் வெற்றி. பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பந்துக்கு மக்கள் முழு ஆதரவு.”
 (பின்னணியில் காட்சிகள் காட்டப்படுகின்றன. அதில் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. மக்களில் ஒரு சிலரும் பந்துக்கு ஆதரவாகப் பேட்டியளிக்கின்றனர்)

சிவன்: அப்பாடா, இந்த மாதிரி விஷயத்திலயாவது மக்கள் ஒத்துமையா இருக்காங்களே!
உமை: சரி, சரி வேற சானல் மாத்துவோம். ( சேனல் மாற்றுகிறாள்)

அந்தச் சேனலிலும்…
 செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

 “பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் இன்று எதிர் கட்சிகள் நடத்திய பந்த் மாபெரும் தோல்வியில் முடிந்தது. பந்துக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் ஓடின.
 (இதிலும் பின்னணியில் காட்சிகள் காட்டப்படுகின்றது. அதில் சாலைகளில் பேருந்துகள் விரைந்த வண்ணம் இருக்கின்றன. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. மக்களில் ஒரு சிலர், இந்த பந்த் தேவையற்றது என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமானது, தவிர்க்க முடியாதது  , இந்த உயர்வு தேவை தான் என்றும் பேட்டியளித்தனர். முந்தைய சானலில் தாடி, மீசையோடு பந்த்துக்கு ஆதரவு தெரிவித்த அதே நபர், இந்தச் சேனல் செய்தியில் அதனை ஷேவ் செய்து கொண்டு வந்து விட்டு பந்த்தை எதிர்த்துப் பேட்டியளித்தார்.)

சிவன்: (டி.வி.யைப் பார்த்த அதிர்ச்சியில்) , ஐயோ, உமா, எனக்கு தலையைச் சுற்றுகிறதே, மூளை குழம்புகிறதே என்ன செய்வேன்!

அய்யோ..அய்யோ. முதலில் இந்த டிவியை நிறுத்து..

சக்தி அதை சட்டை செய்யாமல் சேனலை வேக வேகமாக மாற்றிக் கொண்டே இருக்கிறாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என குரல்கள் மாறி மாறி ஒலிகின்றன. எல்லாவற்றிலும் யாராவது பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆடிக் கொண்டேயிருக்கின்றனர். இல்லாவிட்டால் தாலியை, புடைவையை அல்லது செருப்பைக் கழற்றி இன்னொருவர் மேல் வீசிக் கொண்டே இருக்கின்றனர். விடாமல் அழுது கொண்டே இருக்கின்றனர்.
சிவன்:  (விடாமல் டி.வி. பார்த்துக் கொண்டே இருக்கும் சிவன்) .. அய்யோ… அம்மா.. ( திடீரென மயக்கம் போட்டுக் கீழே விழுகிறார்)
உமை: (பதட்டத்துடன்) , அய்யோ நாதா, பிராணநாதா, என்ன ஆயிற்று தங்களுக்கு..  அய்யகோ நான் என்ன செய்வேன்..  அய்யோ, எல்லாம் அந்தப் பாவி நாரதனால் வந்த வினை. மகா பாவி நாரதா.. இப்படிச் செய்து விட்டாயே!

(தனது டெலிபோனை எடுத்து டயல் செய்கிறாள்.)

உமை: ஹலோ.. யாரு லஷ்மியா, நாந்தான் பார்வதி பேசறேன், அவரு திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார். என்னன்னு தெரியலை. கொஞ்சம் அவசரமா புறப்பட்டு  அண்ணனை உடனே வரச் சொல்றியா.. வரப்போ கொஞ்சம் ஆம்புலன்சையும் கூட்டிட்டு வரச் சொல்லு. எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கும்மா. என்ன பண்றதுன்னே தெரியலை.. ப்ளீஸ்
லஷ்மி: (மறுமுனையில்..) பதட்டப்படாதீங்கம்மா.. தைரியமா இருங்க. வாழக்கைன்னா பிரச்சனை இருக்கத் தான் செய்யும். நாம தான் தைரியமா போராடி எதிர்த்து நிண்ணு ஜெயிக்கணும். சரியா!, நம்ம நிலையத்துக்கு வாங்க மனம் விட்டு பேசுங்க. ஓகேவா.. (பின்னணியில்.. அச்சமில்லை.. அச்சமில்லை..குரல் ஒலிக்கிறது)
உமை: சே, எல்லாம் இன்னிக்குன்னு பார்த்து ராங் நம்பரா போவுதே, என்ன செய்யறது.. ம்ம் டேய் முருகா இங்க வா!
முருகன்: (வேகமாக வருகிறான்) என்னம்மா! என்ன, என்ன??
உமை: இந்த பாரு உங்க அப்பா டி.வி பார்த்துகிட்டே இருந்தவர், திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார். என்ன ஏதுன்னு தெரியலை, எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. உடனே நீ போய் நம்ம டாக்டர் அய்யாவைக் கூட்டிக்கிட்டு வர்றியா?
முருகன்:  அப்படியா, மயக்கம் போட்டு விழுந்துட்டாரா? ஒருவேளை தெரியாம  F.TV எதுவும் பார்த்துட்டாரோ என்னமோ, சரி சரி, நான் போய் டாக்டர் அய்யாவைக் கூட்டிக்கிட்டு வர்ரேன். நீ பயப்படாம தைரியமா இரும்மா..
(முருகன் மயில் மீது ஏறி விரைகிறான்.)

*****************
காட்சி 3
உமா, டாக்டர், முருகன், சிவன், நாரதர்

(முருகன் டாக்டருடன் வருகிறார்)

உமை:  முருகா யார் இவர்? டாக்டர் அய்யா எங்கே?
முருகன்: இவர் தாம்மா அவர்!
உமை: டேய், டேய்.. வேண்டாம். மறுபடியும் ஆரம்பிக்காத. நான் கூட்டிக் கிட்டு வரச்சொன்னது டாக்டர் அய்யாவ. இவர் யாரு..
முருகன்: அட என்னம்மா நீ, இவரு தாம்மா அவருங்கறேன் நம்ப மாட்டென்கறிய, அய்யா, என்னய்யா பார்த்துக்கிட்டு பேசாம இருக்கிறீங்க, சொல்லுங்கய்யா..  சொல்லுங்க.. நீங்க யாருன்னு. சொல்லுங்க அம்மாவுக்கு.. உங்க பவரைக் காட்டுங்க…
டாக்டர்: தமிழ்நாடு குப்பைத் தொட்டியாகிக் கொண்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் பிரச்னைகள். அராஜகம். ரவுடிகள் ராஜ்யம். பெண்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. இது சரியில்லை.  ஆகவே…
 (அதற்குள் போன் ஒன்று வருகிறது. பேசுகிறார். பின் முகமலர்ச்சியுடன்..)
தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். ரவுடிகள் கொட்டம் ஒடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.
(மீண்டும் போன் வருகிறது..பேசுகிறார் பின்..)

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் எல்லோரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விட வேண்டும். எட்டு மணிக்கு மேல் யாராவது வெளியே தலைகாட்டினால் அவர்களை சவுக்கால் அடிக்க வேண்டும். இளைஞர்கள் எட்டு மணிக்கு மேல் வெளியில் சுற்றினால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே காவல்துறையினரைக் கைது செய்ய வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். ஆகவே…
உமை: சே!போதும் நிறுத்துங்கள்! உங்களுக்கே இதுபைத்தியக்காரத்தனமாகத் தெரியவில்லை! டேய்! முருகா, நீ இந்த அளவுக்கு உங்க அப்பா மாதிரி புத்திசாலியா இருப்பேன்னு எனக்கு தெரியாமப் போச்சே! நான் கூட்டிக்கிட்டு வரச் சொன்னது நம்ம டாக்டர் தன்வந்திரி அய்யாவ!  ஆனா, நீ கூட்டிக்கிட்டு வந்ததோ இந்த மருத்துவர் அய்யாவை சீ, முதல்ல இவரை இங்கேர்ந்து வெளிய கூட்டிக்கிட்டு போ. ஒரு மனுஷன் மயக்கம் போட்டு விழுந்து கிடக்குறாரு. அதைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை இல்லாம என்னெனவோ உளறிக்கிட்டு, வெட்கக் கேடு!
மருத்துவர்: டேய், தம்பி, என்னவோ அவசரம்னு சொன்னதாலதாயும், சீட்டு நிறைய கிடைக்குனும்னும் நினைச்சு.. சாரி.. பீஸ் நிறைய கிடைக்குனும் நினைச்சு..நம்பி தான்  இங்க வந்தேன். நீங்க என்னடான்னா வேஷ்டி, துண்டு மட்டும் இல்லாம சட்டையையும் உருவிடுவீங்க போல இருக்கே, இருக்கட்டும். இருக்கட்டும். எனக்கும் நேரம் வரும். எங்கிட்டயும் நீங்க கெஞ்ச வேண்டி வரும். அப்போ வச்சுக்கறேன். சே.  துரோகம்.. துரோகம்.. பச்சைத் துரோகம்.
 (திட்டிக் கொண்டே வெளியே செல்கிறார்)  
முருகன்: சாரி மம்மி, நீ டாக்டர் அய்யான்னு சொன்னதால சட்டுனு நான் குழம்பிப் போய் இவரை இட்டாந்துட்டேன். அயாம் ரியலி வெரி சாரி மம்மி.
உமை; உன்னைச் சொல்லிக் குத்தமில்லடா, யாருக்கும் இங்க்லீஷ் சரியா பேச வரலைன்னு இன்ஸ்டிட்யூட்ல சொல்லி இங்க ஒரு பிராஞ்சு ஓபன் பண்ணச் சொன்னேன் பாரு அது தான் என் தப்பு. போட்டிக்கு உங்க அப்பா, யாரையோ கூட்டிக் கிட்டு வந்து தமிழ் தமிழ்னு லூட்டி அடிச்சதால வந்த வினை தான் இது.

 (இப்பொழுது சிவன் மெல்ல அசைகிறார். ம்.. ம்.. என்று முனகுகிறார்)

முருகன்: ஐ! அம்மா, அப்பாக்கு ஞாபகம் வந்திடுச்சி, ஞாபகம் வந்திடுச்சி..ஞாபகம் வந்திடுச்சி..
உமை: சரிடா, சத்தம் போட்டுக் கத்தி ஏன் ஊரைக் கூட்டுறே! வேறெதாவது வந்திடுச்சின்னு யாராவது நினைச்சுக்கப் போறாங்க!
சிவன்: நான் யாரு… எங்க இருக்கேன்.
உமை: அய்யகோ சுவாமி! என்ன ஆயிற்று தங்களுக்கு.. (அவரைப் போட்டு உலுக்குகிறாள்)
முருகன்: அப்பா.. என்னாச்சுப்பா. என்னாச்சு. அம்மா அப்பாக்கு என்னாச்சும்மா? என்னாச்சு. அப்பா ஏந்திரி அப்பா ஏந்திரி. ஏந்திரி அப்பா! ஏந்திரி. ஏந்திரி அப்பா! ஏந்திரி
சிவன்: மே, ஈசுவரன் போல்ராவுங். தோடா உப்பர்வாலாக்கோ புலாயியே! ஹாஹங். ஈ மூட்டா அட்ட படி உண்ணி.. இல்லி நோடு.. இக்கடச் சூடு.. பூட்டா மாடு.. மொக்கி நோடு.. எந்தா அவிட சம்சயம்.. ஞான் ஏதும் அறிஞ்சிட்டான் பாடில்லா.. நை சாஹியே நை சாஹியே ஹா சாப்! யெஸ், யெஸ், ஷூட் ஹிம். ஹாங்.. அம்மாடி.. ஆத்தாடி.. என்னை உனக்குத் தர்ரீயாடி.. மோளே மோளே எவிட போயி! சண்டாளி உன் பாசத்தால…

உமை: அச்சச்சோ.. இவருக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுடா. கொஞ்ச நேரம் இந்த டி.வியப் பார்த்ததுல ஆண்டவனுக்கே பைத்தியம் பிடிச்சுடுச்சே. இந்த மக்கள் எப்படி சமாளிக்கப் போறாங்களோ, என்ன செய்யப் போறாங்களோ தெரியலையே!

(தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்கிறாள்)

 நாராயண.. நாராயண.. நாரதர் வருகிறார்.
உமை: அடேய் மகாபாவி..நாரதா! எல்லாம் உன்னால் வந்தது தான், அயோக்யா! 

நாரதர்: அம்மையே கவலை வேண்டாம். அனைத்தும் நாம் அறிவோம். உங்கள் துயர் தீர்க்கவே பூவுலகிலிருந்து இதனைக் கொண்டு வந்துள்ளோம்.
உமை: வேண்டாம்..வேண்டாம் போ இங்கிருந்து..
நாரதர்: தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. இது தங்கள் கணவருக்கு மட்டுமல்ல.. தாங்கள் உட்பட அனைவருக்கும் பயன்படும். பூவுலகில் முதலில் இலவசமாக டி.வி கொடுத்தார்கள் அல்லவா.  அடுத்து இப்பொழுது இதைத் தான் இலவசமாகக் கொடுக்க உத்தேசித்திருக்கிறார்களாம். நீங்கள் வேறு முன்பு என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள் அல்லவா.. ஏதாவது இலவசமாகக் கொண்டு வா என்று.. அது தான் கொண்டு வந்தேன்.. இந்தாருங்கள்.. ( பெரிய நீண்ட பார்சலை நீட்டுகிறார்)
முருகன்: என்ன அது?( பார்சலை வாங்கிப் பிரிக்கிறான்)
 உள்ளே.. பெரிய நீண்ட பாய் காணப்படுகின்றது.
நாரதர்: இதனை சிவனுக்காக பத்தமடையிலிருந்து ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கி வந்திருக்கிறேன்.  விரைவில் உங்கள் எல்லோருக்கும் கூட பயன்படும் வரட்டுமா? நான் அவசரமாக மகாவிஷ்ணுவைப் பார்க்கப் போக வேண்டும். அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம். மகால்ஷ்மி போன் செய்தார்கள், நான் அர்ஜென்ட்டாகச் செல்ல வேண்டும். வருகிறேன். பை, பை.
 (நாரதர் வேகமாகச் செல்கிறார்.)

  சக்தி திகைத்துப் போய் நின்றிருக்கிறாள்.

சிவன்: (சிவன் முருகன் கையில் இருக்கும்  பாயைப் பிடுங்கி.. அதில் படுத்துப் புரண்டு கொண்டே..)
மே.. குன்மோகன் சிங்..  போல் ராவுங்! மீரு எவரண்டி பாபுகாரு.. தோடா. கீச்சுடுவேன். சோமாரி.. போய் வரும்போ எந்து கொண்டு வரும்..  வாட் அ மார்வலஸ் ஷாட் பை சச்சின் டெண்டுல்கர்.. நாக்கு டமில் கொஞ்சம் கொஞ்சம் பேசும். தீப்பிடிக்க தீப்பிடிக்க.. என்னைத் தொடுடா.. உன் திமிரெல்லாம் அடங்கத் தான் என்னைக் கடிடா..

(எழுந்து நின்று ஆடிக் கொண்டே முருகனையும், சக்தியையும் கடிக்கப் போகிறார். அவர்கள் அலறிக் கொண்டு ஓட.. “இந்தா டிவி.. இந்தா பாய்.. இந்தா அடுப்பு.. இந்தா செருப்பு” கூறிக் கொண்டே விடாமல் துரத்துகிறார்)
(திரை)

.... இங்கே பதியப்பட்டது நாடகம் | மறுமொழி இல்லை »

தேடல்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் மனையாளின் பசி…

காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..

பாலியல் பெண்
அறிந்திருப்பாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
கிழவனா
என்று..

விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்.
 

.... இங்கே பதியப்பட்டது கவிதை, புதுக்கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | மறுமொழி இல்லை »

வேதனை

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

அங்கும் இங்குமாய்
சிதறிக் கிடக்கும்
ரொட்டித் துண்டுகளைப் போல
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்!

பேப்பர் வெயிட்டையும் மீறி
காற்றில் படபடக்கும்
காகிதத்தைப் போல
என் மனது!

உத்தரவின்றி
உள்ளே வந்துவிட்டு
வெளியேறத் தவிக்கும்
தட்டாம் பூச்சியாய்
வார்த்தைகளின்றி
அலைந்து கொண்டிருக்கிறது
உள்ளுக்குள்ளேயே
ஒரு குரல்!

கனத்த மௌனத்தில்
நினைவின் நிசப்தத்தையும் மீறி
எங்கோ தூரத்தே ஒலிக்கிறது
ஒரு கூட்ஸ் ரயிலின் சப்தம்!

அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்
கேட்பாரற்று!

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | மறுமொழி இல்லை »

மோகம்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்

வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்

விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு

சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..

டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | மறுமொழி இல்லை »

வலி

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

ஒரு கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
புது மணப்பெண்ணின்
மோகாவஸ்தைகளாய்
நீண்டு கொண்டே
போனது என்
வார்த்தைகள்

ஒரு நல்ல கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

தலைப்பிரசவப் பெண்ணின்
இடுப்பு வலி போல
கொஞ்சம் கொஞ்சமாய்
ரம்பித்து
முடிவில்
வெளிபோந்தது
என் கவிதை
குருதி தோய்ந்த
தொப்புள் கொடியோடு
உயிரின்றி..
உணர்வின்றி…

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | மறுமொழி இல்லை »

காதல் கவிதை

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

உத்தரவின்றி
உள்ளே வந்து விட்டு
உரிமையோடு
அலையும்
பூனைக்குட்டியைப் போல

அறைக்குள்
உலாவிக் கொண்டிருக்கிறது
அவளின் மூச்சு!

உறுப்புகளின் உரசல்களுக்கு
ஏங்கித் தவிக்கும்
பருவமாய்

ஏதேதோ நினைவுகள்
ஏங்கவைக்கும் கனவுகள்

கடமை!
கண்ணியம்!
கட்டுப்பாடு!

எங்கோ
எதற்கோ
யாரோ
கூவுகிறார்கள்!

உணர்ச்சிகளில்லாப்
புணர்ச்சிகள் போல்
நுகர்வோர்
இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
அவள் விட்டுச் சென்ற
மூச்சு!
 

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | மறுமொழி இல்லை »

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!
 

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | மறுமொழி இல்லை »

வாழ்க்கை

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

அது
சிறு கவிதையோ
பெருங்கவிதையோ
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

சாலையைக் கடக்கும் பொழுதோ..
சோலையில் சுகிக்கும் பொழுதோ..

கடலலையின் சத்தத்திலோ..
காதலியின் முத்தத்திலோ..

சண்டையின் உச்சத்திலோ..
சாக்கடையின் பக்கத்திலோ..

மொட்டைமாடிப் புணர்ச்சியிலோ..
தொட்டணைத்த நெகிழ்ச்சியிலோ..

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

கட்டிலின் சத்தமும்
கவிதை தான்
தொட்டிலின் சிணுங்கலும்
கவிதை தான்
குமரியின் சிரிப்பும்
கவிதை தான்
குழந்தையின் அழுகையும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

நண்பனின் மரணமும்
கவிதை தான்
நடிகையின் துயரமும்
கவிதை தான்

நெருங்கியவர்களின் பிரிவும்
கவிதை தான்
பிரிந்தவர்களின் நெருக்கமும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்படி வேண்டுமானாலும்
உருவாகலாம்

நேசிப்பின் இழப்புகள்
கவிதையாவது
வாழ்வின்
அர்த்தமா?
அனர்த்தமா?

.... இங்கே பதியப்பட்டது கவிதை | மறுமொழி இல்லை »

வீரத்துறவி

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

 ஜனவரி 12. 1863-ம் ண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?

 ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.

 கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.

  யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில்   உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

 உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.

 உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். கவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.

 சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம். கவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.  

 நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.

 இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. னால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.

  துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். கவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.   

 எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது. 

 மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.

********

.... இங்கே பதியப்பட்டது ஆன்மிகம் | குறிச்சொல்லிடப்பட்டது: | மறுமொழி இல்லை »

மனித நேய மாண்பாளர் வள்ளலார்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

                                    
     “அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி 
      தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”

உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். சித்தர், முனிவர், யோகி, மகான், துறவி என்று எந்த நிலைகளுக்குள்ளும் அகப்படாத, அதே சமயம் இப்படி எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும்  துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!

  ”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
  வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
  நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
  ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.

 “வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
   மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
   ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
   இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
   மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
   மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
   கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
   கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!

-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.
     
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.

வள்ளலார் வெறும் ன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உலக நீதிப் பாடலான “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்” என்ற ‘வேண்டாம்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கச் சகியாது,
   
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
   உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்”

- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.

 சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.

    ”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே!”

- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

    ”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..

என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக

    ”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை?”

என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.

சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.

எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!

“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” - என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.

“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” - என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.

************

.... இங்கே பதியப்பட்டது வள்ளலார் | மறுமொழி இல்லை »

புதியவன்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

              
வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நான் அதில் கடைசி  ஆளாக நின்று கொண்டிருந்தேன். பலர் வருவதும் போவதுமாக அந்த இடமே சற்று பரபரப்பாகத் தான் இருந்தது. ஆனாலும் அமைதி. ஒரே அமைதி. ஒரு வித ரம்மியமான சூழ்நிலை அங்கே நிலவியது. மனதிற்கு இதம் தரும் ஒரு மணம் எங்கும் பரவி இருந்தது.

 வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு விதமான பாவனை. சிலர் மகிழ்ச்சியோடு மற்றவருடன் பேசிக் கொண்டிருந்தனர். சிலர்  சற்றே கலங்கிய விழிகளுடன்  ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர். நானும் எதுவும் புரியாமல் சுற்று முற்றும் பார்த்தேன்.

 ”ம் ம்  சீக்கிரம் போங்க… நேரமாகுதுல்ல..” வாட்ச்மேன் போன்று இருந்த ஒருவர் கத்தினார். வரிசை சற்றே வேகமாகியது. எனக்கு ஏனோ அழுகையாக வந்தது. பெற்றோரையும் குடும்பத்தாரையும் இது நாள் வரை பிரிந்தே இராத எனக்கு, மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மனம் ஏனோ பழைய நினைவுகளை அசை போட்டது.

 கிராமத்துப் பள்ளிக்கூடம், ஆங்கிலம் அழகாகக் கற்பித்த அருளாந்து வாத்தியார், நண்பன் பாண்டியன், சுந்தரம், மண் தரை டூரிங் டாக்கீஸ், மந்தையம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா, ராத்திரியில் நடக்கும் அரிச்சந்திர மயான காண்டம்.. அம்மா பண்ணும் பணியாரம், அப்பா வாங்கி வரும் கடலை மிட்டாய்.. என்று ஏதேதோ நினைவுகள் ஒவ்வொன்றாய் வந்து மனத்தை ஆக்ரமித்தன. கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்து, படித்ததால் வெளி உலகம் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. இதோ இப்பொழுது தான் முதன் முறையாக எல்லோரையும் விட்டுப் பிரிந்து வந்திருக்கிறேன். அதுதான் ஒருவிதக் கலக்கம். அச்சம். “யாரேனும் நண்பர்கள் இருந்தால் எப்படி இருக்கும்?,” எண்னியது மனது. வரிசையை உற்றுப் பார்த்தேன். எல்லாம் பெரும்பாலும் என் வயதொத்த இளைஞர்கள். பல்வேறு மொழிகள் காதில் கேட்டன. வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருக்