காட்சி 1
இடம் கைலாயம்
(பாத்திரங்கள் : சிவன், உமை, நாரதர்)
கைலாயமே ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. “ஓம் நமசிவாய” கோஷங்கள் இல்லை. முனிவர்கள் இல்லை. பூத கணங்களும் இல்லை. சிவனும் பார்வதியும் தனித்தனியாக ஏகாந்தத்தில் வீற்றிருக்கின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் என அனைத்தையுமே பூவுலகத்தில் மானிடர்கள் தாங்களே முனைப்புடன் செய்துவருவதால் இருவருக்கும் செய்வதற்கு எந்த வேலையுமே இல்லை. ‘நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே, இனி என்ன செய்வது, எங்கு போவது’ என சிந்தித்து சிந்தித்து, விவாதித்து, விவாதித்து, பேசிப் பேசி இருவருக்குமே போரடித்து விட்டதால், பேசாமல் மௌனமாய் அமர்ந்து ஏதோ யோசித்தவாறு இருக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்கள் என அனைவரின் நிலைமையும் இதே தான்.
அப்போது.. அங்கே நாரதர் வருகிறார். அவர் கையில் தம்புரா இல்லை. கர்லாக் கட்டை இல்லை. மாறாக ஏதோ ஓர் பார்சல். இனி……
நாரதர்: நாராயண…… நாராயண……
சிவன்: அடடே! நீங்களா!? வாருங்கள் வாருங்கள். ஆமாம். கேஸ் எல்லாம் என்ன ஆயிற்று? உங்களை விடுதலை செய்து விட்டார்களா என்ன?.
நாரதர்: (திடுக்கிட்டவராய்) சிவபெருமானே! என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் என்னென்னவோ சொல்லி உளறுகிறீர்கள்? சித்தபிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்ன? நான் நாரதர் வந்திருக்கிறேன்! அது கூடத் தெரியவில்லையா உங்களுக்கு?
சிவன்: ஓகோ நாரத முனிவரா, வரவேண்டும். வரவேண்டும். பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டதல்லவா? அதுதான் ஆளே அடையாளம் தெரியவில்லை! அதனால் தான் சிறு குழப்பம். ‘நாராயண நாராயண’, என்று வேறு சொல்லி விட்டீர்களா, எனக்கு புத்தி சற்றே தடுமாற்றமாகி விட்டது. வேறு யாரோ என்று நினைத்து விட்டேன். மற்றபடி ஒன்றுமில்லை. ஆமாம், எங்கே உம்மை வெகுநாட்களாக ஆளையே காணோம்? ஏதாவது சம்மர் டூர் போய் விட்டீர்களா என்ன?
நாரதர்: அட நீங்கள் வேறு! சம்மராவது. டூராவது. ஒரு சேஞ்சுக்காக பூவுலகம் சென்றிருந்தேன். இப்பொழுது தான் வந்தேன். வந்தவுடன் உங்கள் ஞாபகம் வந்து விட்டது. உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது அதான் ஓடோடி வந்தேன்.
உமை: ! அப்படியா, சரி தான், பூவுலகம் எப்படி இருக்கிறது? மக்கள் எல்லாரும் சௌக்யம் தானே, ஆமாம், எங்களுக்காக என்ன வாங்கிக் கொண்டு வந்தீர்கள்?
(உடன் நாரதர் கையை பின்னால் இழுத்துக் கொண்டு, பார்சலை மறைக்கப் பார்க்கிறார்.)
சிவன்: நாரதரே! என்ன இது, உமது கையில் கானம் மீட்டும் வீணையைக் காணோமே! என்னமோ பார்சல் மாதிரி வைத்திருக்கிறீரே என்ன அது? மாம்பழங்களா? இல்லை வெகு நாட்கள் கழித்து பார்க்க வந்திருப்பதால் ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கி வந்திருக்கிறீரா என்ன?
நாரதர்: மாம்பழமா? அய்யகோ, அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு தங்களிடம் வர எனக்கு என்ன பைத்தியமா? ஒருமுறை பட்ட பாடு போதாதா என்ன? முருகன் என்னை யாருக்கும் தெரியாமல் தனியாகக் கூப்பிட்டு துரத்தி துரத்தி அடித்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?
உமை: அதை விடு நாரதா! அதெல்லாம் பழங்கதை! பார்சலில் என்ன வைத்திருக்கிறாய்? கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகா? நானும் ரொம்ப நாளாக இவரிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், வாங்கித் தர மாட்டேன் என்கிறார். ஏன் கேட்கிறாய், பூவுலகத்திற்குப் போகவே பயப்படுகிறார். நான் துணைக்கு வருகிறேன் என்று சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார், ஆனாலும் இப்படி பயப்படக்கூடாது இவர். ஏன் என்று கேட்டால், “யாராவது அடித்து விடுவார்கள், சிறையில் தள்ளி விடுவார்கள், பைத்தியம் என்று கல்லால் அடிப்பார்கள்” என்றெல்லாம் புலம்புகிறார். இவருக்கு வாழக்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன், ஒரு பட்டுப்புடைவை உண்டா, நகை நட்டு உண்டா, ஏன் ஒரு சினிமா டிராமான்னு கூட்டிக்கிட்டு போகப்படாதா? ஒண்ணுக்கும் லாயக்கில்லே. தின்னு தின்னுப்புட்டு சும்மா சுவத்தை வெறிச்சு வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்காரு. என்னமோ போ!, எல்லாம் என் தலையெழுத்து.
(சொல்லி விட்டு உமை, கண்ணைக் கசக்கி, மூக்கையும் புடைவையில் சிந்தி துடைத்துக் கொள்கிறாள்)
நாரதர்: அம்மையே! இனி நீங்கள் கவலையே படவேண்டாம். சினிமா, டிராமா என்ன, இனிமேல் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பார்க்கலாம். அதற்கான முன்னேற்பாட்டோடு தான் வந்திருக்கிறேன்.
சிவன்: அப்படியா நாரதா! நிஜமாத் தான் சொல்றியா நீ? என்ன ஏற்பாடு அது?
உமை: நாரதா, நீ மிகவும் நல்லவன். நீ வாழ்க, வாழ்க.
நாரதர்: போதும் அம்மையே என்னைப் புகழ்ந்தது. நான் பூவுலகம் சென்றிருந்தேன் அல்லவா, அங்கே ஒரு மா. செ. எனக்கு நண்பரானார்.
சிவன்: மா.செ வா? மாசேதுங்கைச் சொல்கிறாயோ நீ?
நாரதர்: சம்போ மகாதேவ! மாசேதுங் அல்ல ஈசுவரனே, மா.செ. அதாவது மாவட்டச் செயலாளர். அவர் ஓர் அரசியல்வாதி
உமை: , சரி, சரி மேலே சொல்.
நாரதர்: நண்பர் மா.செவுடன் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டு விட்டது.
சிவன்: (சந்தேகத்துடன்) மிகவும் நெருக்கமான தொடர்பு என்றால்…… புரியவில்லையே?!
நாரதர்: அய்யகோ, ஈசனே, உமது புத்தி ஏன் இப்படிப் போகிறது. அவரோடு நல்ல நட்புக் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதன் மூலம் எனக்கு ஒரு அதிசய பரிசும் கிடைத்தது. அதனை தங்களுக்குக் கொடுக்கலாம் எனக் கொண்டு வந்தேன். என்னைப் போய் ஏதேதோ நினைத்து சந்தேகப்படுகிறீர்களே?
உமை: அதை விடு நாரதா! சந்தேகப்படுவது என்பது அவரோடு கூடவே பிறந்த குணம். அதை யாராலும் மாற்ற முடியாது. ஆமாம், நீ கொண்டு வந்திருக்கிறாயே பரிசு.. என்ன அது?
நாரதர்: அது வேறொன்றும் இல்லை அம்மையே, பூவுலகில் பாவம் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், நிம்மதியே இல்லை. சதா ஏதாவது மனக்கவலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்வதற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் அரசாங்கம் ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சிவன்: ஆகா, பலே பலே! பேஷ், பேஷ்! ஆமாம், அப்படி என்ன திட்டம் அது?
நாரதர்: அதுதான் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் ஈசுவரா!. உலகத்திலே எங்குமே இல்லாத புதுமைத் திட்டம். அத்திட்டத்தின் மூலம் மக்களில் பலருக்கும் அரசாங்கமே இலவசமாக கலர் டி.வி. வழங்குகிறது. அவர்கள் அனுதினமும் அதனைப் பார்த்து இன்புற்று மகிழ்கிறார்கள். ஆகா, அதை எப்படிச் சொல்வேன், என்னென்று சொல்வேன், அதனை நீங்கள் அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். அதே இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்று எனக்கு ஆவல்.. அதனால் தான் தங்களுக்கு மட்டுமே என்று தனியாக இதனைக் கொண்டு வந்தேன்.
சிவன்: மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால் இலவசமாக அரிசி போடுவார்கள், இலவசமாக கோதுமை போடுவார்கள். இலவசமாக துணிமணி கொடுப்பார்கள். இலவசமாக டி.வியே கொடுப்பதென்றால்.. எனக்கு ஒன்றும் புரியவில்லையே..
உமை: இவர் கிடக்கிறார் நாரதா! விட்டுத் தள்ளு. ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது தான் இவருக்கு வேலை. உண்மையில் இவருக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. மக்கள் மகிழ்ச்சியே மகேசன் மகிழ்ச்சி என்று கூடத் தெரியாத ஞான சூன்யம். என்னை நினைவில் வைத்துக் கொண்டு, இதனை நீ கொண்டு வந்தது உண்மையிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். மிகவும் பெருமையாக இருக்கிறது. நீ நீடுழி வாழ்க. அப்புறம் இப்போதே சொல்லிவிட்டேன். மறுமுறை நீ பூலோகம் சென்று விட்டு வரும் பொழுது வேறெதாவது ஒன்று இதைப் போலே கொண்டுவர வேண்டும். என்ன புரிகிறதா?
சிவன்: சரி நாரதா, அதனைப் போட்டுக் காண்பி. உடனடியாக நான் பார்க்க வேண்டும்.அப்படி என்ன தான் இருகிறது இந்த டி.வியில் என்று பார்த்து விடுவோம்..
நாரதர்: இந்தாருங்கள்.. (பார்சலைப் பிரித்து டிவியையும், ரிமோட்டையும் கொடுக்கிறார்.)
அப்புறம் ஒரு விஷயம், இதை நான்தான் தங்களிடம் கொடுத்தேன் என்று வேறு யாருக்கும் சொல்லி விடாதீர்கள். அப்புறம் எல்லாரும் ‘எனக்கு, உனக்கு’ என்று என்னை மொய்த்துக் கொள்வார்கள். என்னால் தாங்க முடியாது. சரியா, நான் வருகிறேன்.
(நாரதர் செல்கிறார்)
**************************************
இதே போன்று பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள் என அனைவருக்கும் மற்றவருக்குத் தெரியவே கூடாது என்று கூறி ஒரு டி.வியைக் கொடுத்து விட்டு பூலோகம் சென்று விடுகிறார் நாரதர்.
*********************
காட்சி 2
இடம்: கைலாயம்
பாத்திரங்கள்: சிவன், உமை, முருகன், லட்சுமி.
உமை: சீக்கிரம் கனெக்ஷன் கொடுங்கள் சுவாமி, எனக்கு கை, கால் எல்லாம் ‘பர பர’ வென்கிறது.
சிவன்: கொஞ்சம் பொறுமையாகத் தான் இரேன் சக்தி. அப்படி என்ன அவசரம். லைன் கிடைக்க வேண்டாமா?
(சிவன் தன்னுடைய சூலாயுதத்தின் பவர் மூலம் சாட்டிலைட்டிலிருந்து டைரக்ட் கனெக்ஷன் கொடுக்கிறார்.)
சிவன்: சக்தி.. இந்தா ரிமோட்.. உன் கையால் டி.வி.யை ஆன் பண்ணு. மங்களகரமாக இருக்கட்டும்.
(சக்தி மிகுந்த ஆர்வத்துடன் ரிமோட்டை வாங்கி டி.வி.யை ஆன் பண்ணுகிறாள்.)
டி.வியில்…….
“ரெண்டுல தான் ஒண்ணத் தொட வார்றியா.. நீ ரெண்டுல தான் ஒண்ணத் தொட வார்றியா” என்று ஒரு பெண் ஆடிக் கொண்டிருக்கிறாள். கூடவே 40, 50 பேரும் கோரஸாக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
உமை: (அதிர்ச்சியுடன்) சுவாமி என்ன இது? என்ன அர்த்தம் இந்தப் பாடலுக்கு? ஏன் இவர்கள் எல்லாம் இப்படி அரையும் குறையுமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்?
சிவன்: புரியவில்லை.. ஹா ஹா ஹா. சக்தி என்னை நன்றாக உற்றுப் பார்.
உமை: ஐயோ! சே, சரியான மாங்காவாக இருக்கிறீர்களே, நான் இங்கே சீரியசாகப் பேசிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என்னடாவென்றால்… திருவிளையாடல் வசனத்தைப் போய் பேசிக் கொண்டு..
சிவன்: சாரி உமா! சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். என்னவென்று சொல்..
உமை: அதான் இரண்டிலே ஒன்று என்றால்..??
சிவன்: இரண்டிலே ஒன்று என்றால் - இரண்டிலே ஒன்று.
உமை: (சிவனை சற்று கடுமையாக முறைத்துப் பார்க்கிறாள்)
சிவன்: சரி, சரி, கோபித்துக் கொள்ளாதே, இரண்டிலே ஒன்று என்றால்.. இரண்டில் ஒன்றைத் தொடு என்றும் அர்த்தம். அதாவது.. அதாவது.. இரண்டு கைகளில் ஒன்றைத் தொடு என்று அர்த்தம்.
உமை: (சிவனை வெறுப்புடன் பார்க்கிறாள்)
சிவன்: என்னை முறைத்தோ கோபித்தோ ஒரு பயனுமில்லை உமா! இப்படித்தான் பூவுலகில் பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் இது மாதிரித்தான் விளக்கம் சொல்வார்கள். இல்லாவிட்டால் நம்மை ‘ரசனை கெட்ட ஜன்மம்’ என்று திட்டுவார்கள். இது போன்ற பாடல்களுக்காக, ‘சிறந்த கவிஞர்’ என்று விருதுகளும் வேறு நிறைய கிடைக்கிறதாம். என்ன செய்வது சொல். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தமிழை வளர்க்கிறார்கள் பார்த்தாயா?
உமை: சே! வெட்கக்கேடு. இந்த மாதிரி தொழில் செய்து வாழ்வதற்கு பேசாமல் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவலாம். (ஆத்திரத்துடன் சேனலை மாற்றுகிறாள்)
அடுத்த சேனலில்..
“ஏய், கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா!” என்ற பாடலுக்கு ஆண்களும் பெண்களுமாய் அரைகுறை ஆடையுடன் ஆடிக் கொண்டிருக்கின்றனர். சிவன் வைத்த கண் வாங்காமல் உற்று உற்றுப் பார்ப்பதைக் கவனித்த சக்தி உடனடியாகச் சேனலை மாற்றுகிறாள்.
அடுத்த சேனலில்..
(ஒரு பெண் தாலியைக் கழற்றி கணவனின் முகத்தில் விட்டெறிகிறாள். பின் கணவனை நோக்கி..) எனக்கு உன் கூட வாழப் பிடிக்கல.. உன் தம்பிய தான் எனக்குப் பிடிச்சிருக்கு. நான் அவன் கூடத் தான் வாழப் போறேன்.. நீ எக்கேடோ கெட்டு ஒழி, இல்ல அவன் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு ஓடிப் போ.. (சொல்லி விட்டு வேகமாக சூட்கேசுடன் வெளியேறுகிறாள். அவள் குழந்தை அம்மா.. அம்மா.. என்று அழுது கொண்டே பின்னால் வருகிறது. பின்னணியில் ஆ ஆ ஆ ஆ. என்று கோரஸ் குரல் ஒலிக்கிறது)
சிவன்: (கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் உமையை சற்று பயத்துடன் ஓரக்கண்ணால் பார்த்தவாறே சேனலை மாற்றுகிறார்.)
அடுத்த சேனலில்…
(ஒரு பெரியவர் உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.)
ஆகவே நீங்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கு முன்னால் எதற்காகச் சிந்திக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். சிந்தனை மிகவும் முக்கியமானது. அதே சமயம் அந்தச் சிந்தனை மற்றவரையும் சிந்திக்கத் தூண்டுவதாய் அமைந்திருக்க வேண்டும்..சிந்திக்க சிந்திக்கத் தான் சிந்தனையில் தெளிவு பிறக்கும். சிந்தனையில் தெளிவு பிறந்தால்…”
உமை: அய்யோ, என்னால் தாங்க முடியவில்லை. (ரிமோட்டை சிவனின் கையில் இருந்து பிடுங்கி சேனலை மாற்றுகிறாள்.)
அடுத்து..
ஒரு சேனலில் செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
“பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் வெற்றி. பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பந்துக்கு மக்கள் முழு ஆதரவு.”
(பின்னணியில் காட்சிகள் காட்டப்படுகின்றன. அதில் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. மக்களில் ஒரு சிலரும் பந்துக்கு ஆதரவாகப் பேட்டியளிக்கின்றனர்)
சிவன்: அப்பாடா, இந்த மாதிரி விஷயத்திலயாவது மக்கள் ஒத்துமையா இருக்காங்களே!
உமை: சரி, சரி வேற சானல் மாத்துவோம். ( சேனல் மாற்றுகிறாள்)
அந்தச் சேனலிலும்…
செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
“பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் இன்று எதிர் கட்சிகள் நடத்திய பந்த் மாபெரும் தோல்வியில் முடிந்தது. பந்துக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் ஓடின.
(இதிலும் பின்னணியில் காட்சிகள் காட்டப்படுகின்றது. அதில் சாலைகளில் பேருந்துகள் விரைந்த வண்ணம் இருக்கின்றன. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. மக்களில் ஒரு சிலர், இந்த பந்த் தேவையற்றது என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமானது, தவிர்க்க முடியாதது , இந்த உயர்வு தேவை தான் என்றும் பேட்டியளித்தனர். முந்தைய சானலில் தாடி, மீசையோடு பந்த்துக்கு ஆதரவு தெரிவித்த அதே நபர், இந்தச் சேனல் செய்தியில் அதனை ஷேவ் செய்து கொண்டு வந்து விட்டு பந்த்தை எதிர்த்துப் பேட்டியளித்தார்.)
சிவன்: (டி.வி.யைப் பார்த்த அதிர்ச்சியில்) , ஐயோ, உமா, எனக்கு தலையைச் சுற்றுகிறதே, மூளை குழம்புகிறதே என்ன செய்வேன்!
அய்யோ..அய்யோ. முதலில் இந்த டிவியை நிறுத்து..
சக்தி அதை சட்டை செய்யாமல் சேனலை வேக வேகமாக மாற்றிக் கொண்டே இருக்கிறாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என குரல்கள் மாறி மாறி ஒலிகின்றன. எல்லாவற்றிலும் யாராவது பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆடிக் கொண்டேயிருக்கின்றனர். இல்லாவிட்டால் தாலியை, புடைவையை அல்லது செருப்பைக் கழற்றி இன்னொருவர் மேல் வீசிக் கொண்டே இருக்கின்றனர். விடாமல் அழுது கொண்டே இருக்கின்றனர்.
சிவன்: (விடாமல் டி.வி. பார்த்துக் கொண்டே இருக்கும் சிவன்) .. அய்யோ… அம்மா.. ( திடீரென மயக்கம் போட்டுக் கீழே விழுகிறார்)
உமை: (பதட்டத்துடன்) , அய்யோ நாதா, பிராணநாதா, என்ன ஆயிற்று தங்களுக்கு.. அய்யகோ நான் என்ன செய்வேன்.. அய்யோ, எல்லாம் அந்தப் பாவி நாரதனால் வந்த வினை. மகா பாவி நாரதா.. இப்படிச் செய்து விட்டாயே!
(தனது டெலிபோனை எடுத்து டயல் செய்கிறாள்.)
உமை: ஹலோ.. யாரு லஷ்மியா, நாந்தான் பார்வதி பேசறேன், அவரு திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார். என்னன்னு தெரியலை. கொஞ்சம் அவசரமா புறப்பட்டு அண்ணனை உடனே வரச் சொல்றியா.. வரப்போ கொஞ்சம் ஆம்புலன்சையும் கூட்டிட்டு வரச் சொல்லு. எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கும்மா. என்ன பண்றதுன்னே தெரியலை.. ப்ளீஸ்
லஷ்மி: (மறுமுனையில்..) பதட்டப்படாதீங்கம்மா.. தைரியமா இருங்க. வாழக்கைன்னா பிரச்சனை இருக்கத் தான் செய்யும். நாம தான் தைரியமா போராடி எதிர்த்து நிண்ணு ஜெயிக்கணும். சரியா!, நம்ம நிலையத்துக்கு வாங்க மனம் விட்டு பேசுங்க. ஓகேவா.. (பின்னணியில்.. அச்சமில்லை.. அச்சமில்லை..குரல் ஒலிக்கிறது)
உமை: சே, எல்லாம் இன்னிக்குன்னு பார்த்து ராங் நம்பரா போவுதே, என்ன செய்யறது.. ம்ம் டேய் முருகா இங்க வா!
முருகன்: (வேகமாக வருகிறான்) என்னம்மா! என்ன, என்ன??
உமை: இந்த பாரு உங்க அப்பா டி.வி பார்த்துகிட்டே இருந்தவர், திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார். என்ன ஏதுன்னு தெரியலை, எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. உடனே நீ போய் நம்ம டாக்டர் அய்யாவைக் கூட்டிக்கிட்டு வர்றியா?
முருகன்: அப்படியா, மயக்கம் போட்டு விழுந்துட்டாரா? ஒருவேளை தெரியாம F.TV எதுவும் பார்த்துட்டாரோ என்னமோ, சரி சரி, நான் போய் டாக்டர் அய்யாவைக் கூட்டிக்கிட்டு வர்ரேன். நீ பயப்படாம தைரியமா இரும்மா..
(முருகன் மயில் மீது ஏறி விரைகிறான்.)
*****************
காட்சி 3
உமா, டாக்டர், முருகன், சிவன், நாரதர்
(முருகன் டாக்டருடன் வருகிறார்)
உமை: முருகா யார் இவர்? டாக்டர் அய்யா எங்கே?
முருகன்: இவர் தாம்மா அவர்!
உமை: டேய், டேய்.. வேண்டாம். மறுபடியும் ஆரம்பிக்காத. நான் கூட்டிக் கிட்டு வரச்சொன்னது டாக்டர் அய்யாவ. இவர் யாரு..
முருகன்: அட என்னம்மா நீ, இவரு தாம்மா அவருங்கறேன் நம்ப மாட்டென்கறிய, அய்யா, என்னய்யா பார்த்துக்கிட்டு பேசாம இருக்கிறீங்க, சொல்லுங்கய்யா.. சொல்லுங்க.. நீங்க யாருன்னு. சொல்லுங்க அம்மாவுக்கு.. உங்க பவரைக் காட்டுங்க…
டாக்டர்: தமிழ்நாடு குப்பைத் தொட்டியாகிக் கொண்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் பிரச்னைகள். அராஜகம். ரவுடிகள் ராஜ்யம். பெண்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. இது சரியில்லை. ஆகவே…
(அதற்குள் போன் ஒன்று வருகிறது. பேசுகிறார். பின் முகமலர்ச்சியுடன்..)
தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். ரவுடிகள் கொட்டம் ஒடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.
(மீண்டும் போன் வருகிறது..பேசுகிறார் பின்..)
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் எல்லோரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விட வேண்டும். எட்டு மணிக்கு மேல் யாராவது வெளியே தலைகாட்டினால் அவர்களை சவுக்கால் அடிக்க வேண்டும். இளைஞர்கள் எட்டு மணிக்கு மேல் வெளியில் சுற்றினால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே காவல்துறையினரைக் கைது செய்ய வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். ஆகவே…
உமை: சே!போதும் நிறுத்துங்கள்! உங்களுக்கே இதுபைத்தியக்காரத்தனமாகத் தெரியவில்லை! டேய்! முருகா, நீ இந்த அளவுக்கு உங்க அப்பா மாதிரி புத்திசாலியா இருப்பேன்னு எனக்கு தெரியாமப் போச்சே! நான் கூட்டிக்கிட்டு வரச் சொன்னது நம்ம டாக்டர் தன்வந்திரி அய்யாவ! ஆனா, நீ கூட்டிக்கிட்டு வந்ததோ இந்த மருத்துவர் அய்யாவை சீ, முதல்ல இவரை இங்கேர்ந்து வெளிய கூட்டிக்கிட்டு போ. ஒரு மனுஷன் மயக்கம் போட்டு விழுந்து கிடக்குறாரு. அதைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை இல்லாம என்னெனவோ உளறிக்கிட்டு, வெட்கக் கேடு!
மருத்துவர்: டேய், தம்பி, என்னவோ அவசரம்னு சொன்னதாலதாயும், சீட்டு நிறைய கிடைக்குனும்னும் நினைச்சு.. சாரி.. பீஸ் நிறைய கிடைக்குனும் நினைச்சு..நம்பி தான் இங்க வந்தேன். நீங்க என்னடான்னா வேஷ்டி, துண்டு மட்டும் இல்லாம சட்டையையும் உருவிடுவீங்க போல இருக்கே, இருக்கட்டும். இருக்கட்டும். எனக்கும் நேரம் வரும். எங்கிட்டயும் நீங்க கெஞ்ச வேண்டி வரும். அப்போ வச்சுக்கறேன். சே. துரோகம்.. துரோகம்.. பச்சைத் துரோகம்.
(திட்டிக் கொண்டே வெளியே செல்கிறார்)
முருகன்: சாரி மம்மி, நீ டாக்டர் அய்யான்னு சொன்னதால சட்டுனு நான் குழம்பிப் போய் இவரை இட்டாந்துட்டேன். அயாம் ரியலி வெரி சாரி மம்மி.
உமை; உன்னைச் சொல்லிக் குத்தமில்லடா, யாருக்கும் இங்க்லீஷ் சரியா பேச வரலைன்னு இன்ஸ்டிட்யூட்ல சொல்லி இங்க ஒரு பிராஞ்சு ஓபன் பண்ணச் சொன்னேன் பாரு அது தான் என் தப்பு. போட்டிக்கு உங்க அப்பா, யாரையோ கூட்டிக் கிட்டு வந்து தமிழ் தமிழ்னு லூட்டி அடிச்சதால வந்த வினை தான் இது.
(இப்பொழுது சிவன் மெல்ல அசைகிறார். ம்.. ம்.. என்று முனகுகிறார்)
முருகன்: ஐ! அம்மா, அப்பாக்கு ஞாபகம் வந்திடுச்சி, ஞாபகம் வந்திடுச்சி..ஞாபகம் வந்திடுச்சி..
உமை: சரிடா, சத்தம் போட்டுக் கத்தி ஏன் ஊரைக் கூட்டுறே! வேறெதாவது வந்திடுச்சின்னு யாராவது நினைச்சுக்கப் போறாங்க!
சிவன்: நான் யாரு… எங்க இருக்கேன்.
உமை: அய்யகோ சுவாமி! என்ன ஆயிற்று தங்களுக்கு.. (அவரைப் போட்டு உலுக்குகிறாள்)
முருகன்: அப்பா.. என்னாச்சுப்பா. என்னாச்சு. அம்மா அப்பாக்கு என்னாச்சும்மா? என்னாச்சு. அப்பா ஏந்திரி அப்பா ஏந்திரி. ஏந்திரி அப்பா! ஏந்திரி. ஏந்திரி அப்பா! ஏந்திரி
சிவன்: மே, ஈசுவரன் போல்ராவுங். தோடா உப்பர்வாலாக்கோ புலாயியே! ஹாஹங். ஈ மூட்டா அட்ட படி உண்ணி.. இல்லி நோடு.. இக்கடச் சூடு.. பூட்டா மாடு.. மொக்கி நோடு.. எந்தா அவிட சம்சயம்.. ஞான் ஏதும் அறிஞ்சிட்டான் பாடில்லா.. நை சாஹியே நை சாஹியே ஹா சாப்! யெஸ், யெஸ், ஷூட் ஹிம். ஹாங்.. அம்மாடி.. ஆத்தாடி.. என்னை உனக்குத் தர்ரீயாடி.. மோளே மோளே எவிட போயி! சண்டாளி உன் பாசத்தால…
உமை: அச்சச்சோ.. இவருக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுடா. கொஞ்ச நேரம் இந்த டி.வியப் பார்த்ததுல ஆண்டவனுக்கே பைத்தியம் பிடிச்சுடுச்சே. இந்த மக்கள் எப்படி சமாளிக்கப் போறாங்களோ, என்ன செய்யப் போறாங்களோ தெரியலையே!
(தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்கிறாள்)
நாராயண.. நாராயண.. நாரதர் வருகிறார்.
உமை: அடேய் மகாபாவி..நாரதா! எல்லாம் உன்னால் வந்தது தான், அயோக்யா!
நாரதர்: அம்மையே கவலை வேண்டாம். அனைத்தும் நாம் அறிவோம். உங்கள் துயர் தீர்க்கவே பூவுலகிலிருந்து இதனைக் கொண்டு வந்துள்ளோம்.
உமை: வேண்டாம்..வேண்டாம் போ இங்கிருந்து..
நாரதர்: தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. இது தங்கள் கணவருக்கு மட்டுமல்ல.. தாங்கள் உட்பட அனைவருக்கும் பயன்படும். பூவுலகில் முதலில் இலவசமாக டி.வி கொடுத்தார்கள் அல்லவா. அடுத்து இப்பொழுது இதைத் தான் இலவசமாகக் கொடுக்க உத்தேசித்திருக்கிறார்களாம். நீங்கள் வேறு முன்பு என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள் அல்லவா.. ஏதாவது இலவசமாகக் கொண்டு வா என்று.. அது தான் கொண்டு வந்தேன்.. இந்தாருங்கள்.. ( பெரிய நீண்ட பார்சலை நீட்டுகிறார்)
முருகன்: என்ன அது?( பார்சலை வாங்கிப் பிரிக்கிறான்)
உள்ளே.. பெரிய நீண்ட பாய் காணப்படுகின்றது.
நாரதர்: இதனை சிவனுக்காக பத்தமடையிலிருந்து ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கி வந்திருக்கிறேன். விரைவில் உங்கள் எல்லோருக்கும் கூட பயன்படும் வரட்டுமா? நான் அவசரமாக மகாவிஷ்ணுவைப் பார்க்கப் போக வேண்டும். அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம். மகால்ஷ்மி போன் செய்தார்கள், நான் அர்ஜென்ட்டாகச் செல்ல வேண்டும். வருகிறேன். பை, பை.
(நாரதர் வேகமாகச் செல்கிறார்.)
சக்தி திகைத்துப் போய் நின்றிருக்கிறாள்.
சிவன்: (சிவன் முருகன் கையில் இருக்கும் பாயைப் பிடுங்கி.. அதில் படுத்துப் புரண்டு கொண்டே..)
மே.. குன்மோகன் சிங்.. போல் ராவுங்! மீரு எவரண்டி பாபுகாரு.. தோடா. கீச்சுடுவேன். சோமாரி.. போய் வரும்போ எந்து கொண்டு வரும்.. வாட் அ மார்வலஸ் ஷாட் பை சச்சின் டெண்டுல்கர்.. நாக்கு டமில் கொஞ்சம் கொஞ்சம் பேசும். தீப்பிடிக்க தீப்பிடிக்க.. என்னைத் தொடுடா.. உன் திமிரெல்லாம் அடங்கத் தான் என்னைக் கடிடா..
(எழுந்து நின்று ஆடிக் கொண்டே முருகனையும், சக்தியையும் கடிக்கப் போகிறார். அவர்கள் அலறிக் கொண்டு ஓட.. “இந்தா டிவி.. இந்தா பாய்.. இந்தா அடுப்பு.. இந்தா செருப்பு” கூறிக் கொண்டே விடாமல் துரத்துகிறார்)
(திரை)