உண்மையைத் தேடி…

வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி ஓர் புனிதப் பயணம்

இசைச் சங்கமம் – சென்னையில் திருவையாறு

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 27, 2008

திருவையாற்றில் நடைபெறும் இசைவிழாவைப் போல சென்னையிலும் வருடா வருடம் தொடர்ந்து நடைபெறும் இசைவிழா ‘சென்னையில் திருவையாறு’. கலாலயா யூ.எஸ்.ஏ. நாடக அகாடமி, ராஜ் டிவி, லஷ்மண் ஸ்ருதி மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விழா வழக்கம் போல இந்த முறையும் மிகக் கோலாகலமாக ஆரம்பித்தது. ‘எல்லோராலும் திருவையாற்றிற்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது ஆகவே, இங்கிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் சென்னையில் இவ்விழாவை வருடா வருடம் நடத்தி வருகிறோம் என்றார் விழாவின் அமைப்பாளர் லஷ்மண்(ஸ்ருதி).

இவ்வருட இசை விழா 21-12-2007 அன்று சென்னை காமராஜர் அரங்கில் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக பி.எஸ் நாராயணசாமி தலைமையில் பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடினர். பின்னர் தொடர்ந்து ராஜேஷ் வைத்யாவின் வீணை, ஹரிசரனின் வாய்ப்பாட்டு, ஸ்ரீகலா பரத்தின் பரதநாட்டியம், நித்யஸ்ரீயின் கச்சேரி, பிரசன்னாவின் கிடார் என முதல் நாளே நிகழ்ச்சி களை கட்டியது. அரங்குகள் நிரம்பி நல்ல கூட்டமும் காணப்பட்டது என்றாலும் வழக்கம் போல இளைய தலைமுறையினர்கள் அதிகம் தென்படவில்லை என்பது ஒரு குறைதான். தொடர்ந்து கன்யாகுமரி வயலின், சைந்தவியின் வாய்ப்பாட்டு, லலிதா நந்தினியின் வாய்ப்பாட்டு, விஜய் சிவாவின் கச்சேரி என நிகழ்ச்சி மறுநாளும் (22-12-2007) களை கட்டியது. அன்றைய நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஆராவமுதாச்சாரியாரின் ‘ஹரிகதா’ அமைந்திருந்தது. தனக்கே உரிய ஏற்ற இறக்கமான குரலாலும், அழகான விளக்கங்களாலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டார் ஆச்சாரியார்.

Dr. kadam kaarthik 

23-01-2007 அன்று HEART BEAT ENSEMBLE கடம் கார்த்திக்கின் FUSION-னுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சைலண்ட் வயலின் எம்பார் எஸ்.கண்ணன் வெகு அற்புதமாக வாசித்தார். பக்கவாத்தியமாக யு.பி.ராஜூ மாண்டலினில் அநாயசமாக புகுந்து விளையாடினார். குறிப்பாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மீதான, ஆதிதாளம்- புஜங்கணி ராகத்தில் அமைந்த ஸ்ரீ குருராயா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த கமலாலயம் தந்த மும்மணிகள் என்னும் ஸ்ரீ ராகத்தில் அமைந்த மும்மூர்த்திகள் பேரிலான பாடல் எந்தரோ மகானுபாவுலுவை ஞாபகப்படுத்தியது. கடம் வாசிப்பது மட்டுமில்லாமல் மிக அற்புதமாக, அநாயசமாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார் கடம் கார்த்திக். தொடர்ந்து வந்த ‘ஓம் சரவணபவா’ என்னும் திருப்புகழ் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. கடம், வயலின், மாண்டலின், மிருதங்கம், கஞ்சிரா என மாற்றி மாற்றி தனிஆவர்த்தனம் செய்ததில் ரசிகர்கள் கிறங்கித்தான் போயினர். குறிப்பாக எம்பார் கண்ணன் மிக அற்புதமாக ஆவர்த்தனம் செய்தார். வழக்கம் போல கடத்தைத் தூக்கிப் போட்டு விளையாடவும் செய்தார் கார்த்திக். பக்கவாத்தியமாக பூங்குளம் சுப்ரமண்யத்தின் மிருதங்கமும், சுந்தர் குமாரின் கஞ்சிராவும், ஏ.எஸ்.கிருஷ்ணனின் மோர்சிங்கும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து ராகங்களையும் மாறி மாறி வாசித்தது முத்தாய்ப்பாக இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான கச்சேரி.

தொடர்ந்து கே.காயத்ரி, மஹதி, உன்னிகிருஷ்ணன் என கச்சேரி தொடர்ந்தது. இறுதியில் ஷஷாங்கின் புல்லாங்குழலுடன் அன்றைய நாள் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. சில நிகழ்ச்சிகளில் அமர்வதற்கு இடமில்லாமல் பார்வையாளர்கள் நின்று கொண்டே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

24-12-2007 அன்றைக்கான நிகழ்ச்சிகள் கர்நாடிகா பிரதர்ஸின் கச்சேரியுடன் துவங்கியது. தொடர்ந்து சத்யநாராயணாவின் கீ போர்டு மனதிற்கு நிறைவைத் தந்தது அவர் அநாயசமாக அதை வாசித்த விதம் அருமை. அடுத்து வந்த முரளிதரன் குழுவினரின் பரதநாட்டியம், ரஞ்சனி காயத்ரியின் வாய்ப்பாட்டு, குமரேஷ்-கணேஷின் வயலின் என நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையாக இருந்தன.

நிறைவு நாளான 25-12-2007 அன்று கத்ரிகோபால்நாத்தின் இனிமையான சாக்ஸபோனோடு நிகழ்ச்சி துவங்கியது. கன்யாகுமரி, ஹரித்வாரமங்கலம் பழனிவேல் என தனது குழுவினருடன் வழக்கம் போல அழகாக வாசித்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றார் கத்ரி. தொடர்ந்து சியாட்டில் ராமனின் வாய்ப்பாட்டுக் கச்சேரி. ராமனுக்கு நல்ல குரல்வளம், சுத்தமான உச்சரிப்பு என நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். அத்துடன் அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக, அடக்கமாகப் பாடியதையும் சேர்த்துக் கொள்ளலாம். மன நிறைவைத் தந்த கச்சேரி.

 Sikkil Gurusaran

தொடர்ந்து பாட வந்தவர் சிக்கில் குருசரண். புகழ்பெற்ற சிக்கில் சகோதரிகள் லீலா-குஞ்சுமணியினரில் லீலாவின் பேரன். இன்றைய இளைய தலைமுறைப் பாடகர்களின் இவருக்குத்தான் அதிகக் கூட்டம் கூடுகிறது என்பது உண்மை. அவர் ‘நீயே கதி’ என்று பாட ஆரம்பித்த சற்று நேரத்தில் கூட்டம் அதிகமாகி நாற்காலிகள் நிரம்பின. தொடர்ந்து ஸ்ரீ மஹா கணபதே, ஓ ராமா பாடல்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. தொடர்ந்து பாடிய ‘சதா மதி’ என்ற கம்பீரவாணி ராகப் பாடலும் அதற்கான பக்கவாத்தியமும் மிக அருமை. ‘ஸ்ரீ வல்லி தேவசேனாபதே’ பாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. அந்தப்பாடலுக்கு கணேஷ் பிரசாத் வயலினில் தனி ராஜபாட்டையே நடத்தி விட்டார் என்று சொல்லலாம். புருஷோத்தமின் கஞ்சிராவும், நெய்வேலி நாராயணனின் மிருதங்கமும் போட்டி போட்டுக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தவிதம் அருமை. இறுதியாக ‘சின்னஞ்சிறு பெண் போலே’ பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் குருசரண். அந்தப்பாடலுக்கு ரசிகர்கள் கூட்டமும் அவரோடு சேர்ந்தே பாடியது குறிப்பிடத்தக்கது.

 sowmyaa

 தொடர்ந்து வந்த சௌம்யா தனது வழக்கமான டிரேட் மார்க் புன்சிரிப்புடன் ‘ஆடிக் கொண்டார்’ பாடலை அழகாக ஆலாபனை செய்தார். தொடர்ந்து தியாகராஜரின் புகழ்பெற்ற கிருதியான ‘மனவியாக லின் சரா டதே’ பாடலை உருகும் விதத்தில் பாட, ரசிகர்கள் பலர் எழுந்து நின்று கைதட்டினர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, அருளவேண்டும் தாயே, உன்னையல்லால்.., நின்னையே ரதியென்று.. என்று பல பாடல்களை உச்சரிப்பு சுத்தத்துடன் அழகாக ஆலாபனை செய்த விதம் அருமை. இறுதியாக அண்ணாமலை ரெட்டியாரின் ‘சென்னி குள நகர் பாலன்’ காவடிச் சிந்தை ஏனோ சற்று அவசரமாகவே பாடி நிறைவு செய்தார். ராமதாஸின் வயலினும், கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தது.

 Sudha Ragunathan

அடுத்து சுதா ரகுநாதன் பாட வரும்போது அரங்கு முற்றிலுமாக நிறைந்து விட்டது. நாற்காலியில் அமர இடமில்லாததால் ரசிகர்கள் பலர் முணுமுணுப்புடன் தரையில் அமர்ந்து கொண்டே நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர். அரங்கில் நிற்கவும் இடமில்லாததால் பல ரசிகர்கள் மேடையில் ஏறி, கச்சேரி செய்பவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு விட்டனர். வழக்கமான முறையில் அற்புதமாகப் பாடி தனது கச்சேரியை நிறைவு செய்தார் சுதா ரகுநாதன். அவர் சென்றவுடனேயே அரங்கத்திலிருந்து பலரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். இறுதியாக ஸ்ரீ ராம் பரசுராம்-அனுராதா ஸ்ரீராமின் ஹிந்துஸ்தானி-கர்நாடிக் ஜூகல்பந்தியுடன் கச்சேரி நிறைவுற்றது.

‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி சென்னை ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் என்றாலும் நிகழ்ச்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும், ரசிகர்கள் ஒழுங்காக அமர்வதற்கு சரியான சிட்டிங் வசதி செய்யப்படவில்லை என்பது போன்று குற்றச்சாட்டுக்களை அரங்கில் கேட்க முடிந்தது. அடுத்த ஆண்டு கச்சேரியில் இது போன்று குறைகள் நேராது என்று நம்புவோமாக.

.... இங்கே பதியப்பட்டது இசை | Leave a Comment »

எல்லாமே இலவசம் தான்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 19, 2008

காட்சி 1
இடம் கைலாயம்
(பாத்திரங்கள் : சிவன், உமை, நாரதர்)

கைலாயமே ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. “ஓம் நமசிவாய” கோஷங்கள் இல்லை. முனிவர்கள் இல்லை. பூத கணங்களும் இல்லை. சிவனும் பார்வதியும் தனித்தனியாக ஏகாந்தத்தில் வீற்றிருக்கின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் என அனைத்தையுமே பூவுலகத்தில் மானிடர்கள் தாங்களே முனைப்புடன் செய்துவருவதால் இருவருக்கும் செய்வதற்கு எந்த வேலையுமே இல்லை. ‘நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே, இனி என்ன செய்வது, எங்கு போவது’ என சிந்தித்து சிந்தித்து, விவாதித்து, விவாதித்து, பேசிப் பேசி இருவருக்குமே போரடித்து விட்டதால், பேசாமல் மௌனமாய் அமர்ந்து ஏதோ யோசித்தவாறு இருக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்கள் என அனைவரின் நிலைமையும் இதே தான்.

அப்போது.. அங்கே நாரதர் வருகிறார். அவர் கையில் தம்புரா இல்லை. கர்லாக் கட்டை இல்லை. மாறாக ஏதோ ஓர் பார்சல். இனி……

நாரதர்:  நாராயண…… நாராயண……

சிவன்:   அடடே! நீங்களா!? வாருங்கள் வாருங்கள். ஆமாம். கேஸ் எல்லாம் என்ன ஆயிற்று? உங்களை விடுதலை செய்து விட்டார்களா என்ன?.
நாரதர்:  (திடுக்கிட்டவராய்) சிவபெருமானே! என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் என்னென்னவோ சொல்லி உளறுகிறீர்கள்? சித்தபிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்ன? நான் நாரதர் வந்திருக்கிறேன்! அது கூடத் தெரியவில்லையா உங்களுக்கு?

சிவன்: ஓகோ நாரத முனிவரா, வரவேண்டும். வரவேண்டும். பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டதல்லவா? அதுதான் ஆளே அடையாளம் தெரியவில்லை! அதனால் தான் சிறு குழப்பம். ‘நாராயண நாராயண’, என்று வேறு சொல்லி விட்டீர்களா, எனக்கு புத்தி சற்றே தடுமாற்றமாகி விட்டது. வேறு யாரோ என்று நினைத்து விட்டேன். மற்றபடி ஒன்றுமில்லை. ஆமாம், எங்கே உம்மை வெகுநாட்களாக ஆளையே காணோம்? ஏதாவது சம்மர் டூர் போய் விட்டீர்களா என்ன?
நாரதர்:  அட நீங்கள் வேறு! சம்மராவது. டூராவது. ஒரு சேஞ்சுக்காக பூவுலகம் சென்றிருந்தேன். இப்பொழுது தான் வந்தேன். வந்தவுடன் உங்கள் ஞாபகம் வந்து விட்டது. உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது அதான் ஓடோடி வந்தேன்.
உமை:  ! அப்படியா, சரி தான், பூவுலகம் எப்படி இருக்கிறது? மக்கள் எல்லாரும் சௌக்யம் தானே, ஆமாம், எங்களுக்காக என்ன வாங்கிக் கொண்டு வந்தீர்கள்?
(உடன் நாரதர் கையை பின்னால் இழுத்துக் கொண்டு, பார்சலை மறைக்கப் பார்க்கிறார்.)
சிவன்: நாரதரே! என்ன இது, உமது கையில் கானம் மீட்டும் வீணையைக் காணோமே! என்னமோ பார்சல் மாதிரி வைத்திருக்கிறீரே என்ன அது? மாம்பழங்களா? இல்லை வெகு நாட்கள் கழித்து பார்க்க வந்திருப்பதால் ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கி வந்திருக்கிறீரா என்ன?
நாரதர்: மாம்பழமா? அய்யகோ, அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு தங்களிடம் வர எனக்கு என்ன பைத்தியமா? ஒருமுறை பட்ட பாடு போதாதா என்ன? முருகன் என்னை யாருக்கும் தெரியாமல் தனியாகக் கூப்பிட்டு துரத்தி துரத்தி அடித்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?
உமை: அதை விடு நாரதா! அதெல்லாம் பழங்கதை! பார்சலில் என்ன வைத்திருக்கிறாய்? கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகா? நானும் ரொம்ப நாளாக இவரிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், வாங்கித் தர மாட்டேன் என்கிறார். ஏன் கேட்கிறாய், பூவுலகத்திற்குப் போகவே பயப்படுகிறார். நான் துணைக்கு வருகிறேன் என்று சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார், ஆனாலும் இப்படி பயப்படக்கூடாது இவர். ஏன் என்று கேட்டால், “யாராவது அடித்து விடுவார்கள், சிறையில் தள்ளி விடுவார்கள், பைத்தியம் என்று கல்லால் அடிப்பார்கள்” என்றெல்லாம் புலம்புகிறார். இவருக்கு வாழக்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன், ஒரு பட்டுப்புடைவை உண்டா, நகை நட்டு உண்டா, ஏன் ஒரு சினிமா டிராமான்னு கூட்டிக்கிட்டு போகப்படாதா? ஒண்ணுக்கும் லாயக்கில்லே. தின்னு தின்னுப்புட்டு சும்மா சுவத்தை வெறிச்சு வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்காரு. என்னமோ போ!, எல்லாம் என் தலையெழுத்து.
 (சொல்லி விட்டு உமை, கண்ணைக் கசக்கி, மூக்கையும் புடைவையில் சிந்தி துடைத்துக் கொள்கிறாள்)
நாரதர்: அம்மையே! இனி நீங்கள் கவலையே படவேண்டாம். சினிமா, டிராமா என்ன, இனிமேல் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பார்க்கலாம். அதற்கான முன்னேற்பாட்டோடு தான் வந்திருக்கிறேன்.
சிவன்: அப்படியா நாரதா!  நிஜமாத் தான் சொல்றியா நீ? என்ன ஏற்பாடு அது?
உமை:  நாரதா, நீ மிகவும் நல்லவன். நீ வாழ்க, வாழ்க.
நாரதர்: போதும் அம்மையே என்னைப் புகழ்ந்தது. நான் பூவுலகம் சென்றிருந்தேன் அல்லவா, அங்கே ஒரு மா. செ. எனக்கு நண்பரானார்.
சிவன்: மா.செ வா?  மாசேதுங்கைச் சொல்கிறாயோ நீ?
நாரதர்: சம்போ மகாதேவ! மாசேதுங் அல்ல ஈசுவரனே, மா.செ. அதாவது மாவட்டச் செயலாளர். அவர் ஓர் அரசியல்வாதி
உமை: , சரி, சரி மேலே சொல்.
நாரதர்: நண்பர் மா.செவுடன் எனக்கு மிகவும்  நெருக்கமான தொடர்பு ஏற்பட்டு விட்டது.
சிவன்:  (சந்தேகத்துடன்) மிகவும் நெருக்கமான தொடர்பு என்றால்…… புரியவில்லையே?!
நாரதர்:  அய்யகோ, ஈசனே, உமது புத்தி ஏன் இப்படிப் போகிறது. அவரோடு நல்ல நட்புக் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதன் மூலம் எனக்கு ஒரு அதிசய பரிசும் கிடைத்தது. அதனை தங்களுக்குக் கொடுக்கலாம் எனக் கொண்டு வந்தேன். என்னைப் போய் ஏதேதோ நினைத்து சந்தேகப்படுகிறீர்களே?
உமை: அதை விடு நாரதா! சந்தேகப்படுவது என்பது அவரோடு கூடவே பிறந்த குணம். அதை யாராலும் மாற்ற முடியாது.  ஆமாம், நீ கொண்டு வந்திருக்கிறாயே பரிசு.. என்ன அது?
நாரதர்: அது வேறொன்றும் இல்லை அம்மையே, பூவுலகில் பாவம் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், நிம்மதியே இல்லை. சதா ஏதாவது மனக்கவலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்வதற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் அரசாங்கம் ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சிவன்: ஆகா, பலே பலே! பேஷ், பேஷ்! ஆமாம், அப்படி என்ன திட்டம் அது?
நாரதர்: அதுதான் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் ஈசுவரா!. உலகத்திலே எங்குமே இல்லாத புதுமைத் திட்டம். அத்திட்டத்தின் மூலம் மக்களில் பலருக்கும் அரசாங்கமே இலவசமாக கலர் டி.வி. வழங்குகிறது. அவர்கள் அனுதினமும் அதனைப் பார்த்து இன்புற்று மகிழ்கிறார்கள். ஆகா, அதை எப்படிச் சொல்வேன், என்னென்று சொல்வேன், அதனை நீங்கள் அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். அதே இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்று எனக்கு ஆவல்.. அதனால் தான் தங்களுக்கு மட்டுமே என்று தனியாக இதனைக் கொண்டு வந்தேன்.
சிவன்: மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால் இலவசமாக அரிசி போடுவார்கள், இலவசமாக கோதுமை போடுவார்கள். இலவசமாக துணிமணி கொடுப்பார்கள். இலவசமாக டி.வியே கொடுப்பதென்றால்.. எனக்கு ஒன்றும் புரியவில்லையே..
உமை: இவர் கிடக்கிறார் நாரதா! விட்டுத் தள்ளு. ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது தான் இவருக்கு வேலை. உண்மையில் இவருக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. மக்கள் மகிழ்ச்சியே மகேசன் மகிழ்ச்சி என்று கூடத் தெரியாத ஞான சூன்யம். என்னை நினைவில் வைத்துக் கொண்டு, இதனை நீ கொண்டு வந்தது உண்மையிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். மிகவும் பெருமையாக இருக்கிறது. நீ நீடுழி வாழ்க. அப்புறம் இப்போதே சொல்லிவிட்டேன். மறுமுறை நீ பூலோகம் சென்று விட்டு வரும் பொழுது வேறெதாவது ஒன்று இதைப் போலே கொண்டுவர வேண்டும். என்ன புரிகிறதா?
சிவன்:  சரி நாரதா, அதனைப் போட்டுக் காண்பி. உடனடியாக நான் பார்க்க வேண்டும்.அப்படி என்ன தான் இருகிறது இந்த டி.வியில் என்று பார்த்து விடுவோம்..
நாரதர்: இந்தாருங்கள்.. (பார்சலைப் பிரித்து டிவியையும், ரிமோட்டையும் கொடுக்கிறார்.)

அப்புறம் ஒரு விஷயம், இதை நான்தான் தங்களிடம் கொடுத்தேன் என்று வேறு யாருக்கும் சொல்லி விடாதீர்கள். அப்புறம் எல்லாரும் ‘எனக்கு, உனக்கு’ என்று என்னை மொய்த்துக் கொள்வார்கள். என்னால் தாங்க முடியாது. சரியா, நான் வருகிறேன்.

(நாரதர் செல்கிறார்)

**************************************
 இதே போன்று பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள் என அனைவருக்கும் மற்றவருக்குத் தெரியவே கூடாது என்று கூறி ஒரு டி.வியைக் கொடுத்து விட்டு பூலோகம் சென்று விடுகிறார் நாரதர்.

*********************

காட்சி 2
இடம்: கைலாயம்
பாத்திரங்கள்: சிவன், உமை, முருகன், லட்சுமி.

உமை: சீக்கிரம் கனெக்ஷன் கொடுங்கள் சுவாமி, எனக்கு கை, கால் எல்லாம் ‘பர பர’ வென்கிறது.
சிவன்: கொஞ்சம் பொறுமையாகத் தான் இரேன் சக்தி. அப்படி என்ன அவசரம். லைன் கிடைக்க வேண்டாமா?
 (சிவன் தன்னுடைய சூலாயுதத்தின் பவர் மூலம் சாட்டிலைட்டிலிருந்து டைரக்ட் கனெக்ஷன் கொடுக்கிறார்.)
சிவன்: சக்தி.. இந்தா ரிமோட்.. உன் கையால் டி.வி.யை ஆன் பண்ணு. மங்களகரமாக இருக்கட்டும்.

(சக்தி மிகுந்த ஆர்வத்துடன் ரிமோட்டை வாங்கி டி.வி.யை ஆன் பண்ணுகிறாள்.)

டி.வியில்……. 
“ரெண்டுல தான் ஒண்ணத் தொட வார்றியா.. நீ ரெண்டுல தான் ஒண்ணத் தொட வார்றியா” என்று ஒரு பெண் ஆடிக் கொண்டிருக்கிறாள். கூடவே 40, 50 பேரும் கோரஸாக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
உமை: (அதிர்ச்சியுடன்) சுவாமி என்ன இது? என்ன அர்த்தம் இந்தப் பாடலுக்கு?  ஏன் இவர்கள் எல்லாம் இப்படி அரையும் குறையுமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்?
சிவன்:  புரியவில்லை.. ஹா ஹா ஹா. சக்தி என்னை நன்றாக உற்றுப் பார்.
உமை: ஐயோ! சே, சரியான மாங்காவாக இருக்கிறீர்களே, நான் இங்கே சீரியசாகப் பேசிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என்னடாவென்றால்… திருவிளையாடல் வசனத்தைப் போய் பேசிக் கொண்டு..
சிவன்: சாரி உமா! சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். என்னவென்று சொல்..
உமை: அதான் இரண்டிலே ஒன்று என்றால்..??
சிவன்: இரண்டிலே ஒன்று என்றால் – இரண்டிலே ஒன்று.
உமை: (சிவனை சற்று கடுமையாக முறைத்துப் பார்க்கிறாள்)
சிவன்: சரி, சரி, கோபித்துக் கொள்ளாதே, இரண்டிலே ஒன்று என்றால்.. இரண்டில் ஒன்றைத் தொடு என்றும் அர்த்தம். அதாவது.. அதாவது.. இரண்டு கைகளில் ஒன்றைத் தொடு என்று அர்த்தம்.
உமை: (சிவனை வெறுப்புடன் பார்க்கிறாள்)
சிவன்: என்னை முறைத்தோ கோபித்தோ ஒரு பயனுமில்லை உமா! இப்படித்தான் பூவுலகில் பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் இது மாதிரித்தான் விளக்கம் சொல்வார்கள். இல்லாவிட்டால் நம்மை ‘ரசனை கெட்ட ஜன்மம்’ என்று திட்டுவார்கள். இது போன்ற பாடல்களுக்காக, ‘சிறந்த கவிஞர்’ என்று விருதுகளும் வேறு நிறைய கிடைக்கிறதாம். என்ன செய்வது சொல். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தமிழை வளர்க்கிறார்கள் பார்த்தாயா?
உமை: சே! வெட்கக்கேடு. இந்த மாதிரி தொழில் செய்து வாழ்வதற்கு பேசாமல் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவலாம். (ஆத்திரத்துடன் சேனலை மாற்றுகிறாள்)

அடுத்த சேனலில்..
“ஏய், கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா!” என்ற பாடலுக்கு ஆண்களும் பெண்களுமாய் அரைகுறை ஆடையுடன் ஆடிக் கொண்டிருக்கின்றனர். சிவன் வைத்த கண் வாங்காமல்  உற்று உற்றுப் பார்ப்பதைக் கவனித்த சக்தி உடனடியாகச் சேனலை மாற்றுகிறாள்.

அடுத்த சேனலில்..

(ஒரு பெண் தாலியைக் கழற்றி கணவனின் முகத்தில் விட்டெறிகிறாள். பின் கணவனை நோக்கி..) எனக்கு உன் கூட வாழப் பிடிக்கல.. உன் தம்பிய தான் எனக்குப் பிடிச்சிருக்கு. நான் அவன் கூடத் தான் வாழப் போறேன்.. நீ எக்கேடோ கெட்டு ஒழி, இல்ல அவன் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு ஓடிப் போ.. (சொல்லி விட்டு வேகமாக சூட்கேசுடன் வெளியேறுகிறாள். அவள் குழந்தை அம்மா.. அம்மா.. என்று அழுது கொண்டே பின்னால் வருகிறது.  பின்னணியில் ஆ ஆ ஆ ஆ. என்று கோரஸ் குரல் ஒலிக்கிறது)
சிவன்: (கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் உமையை சற்று பயத்துடன் ஓரக்கண்ணால் பார்த்தவாறே சேனலை மாற்றுகிறார்.)

அடுத்த சேனலில்…

 (ஒரு பெரியவர் உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.)

 ஆகவே நீங்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கு முன்னால் எதற்காகச் சிந்திக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். சிந்தனை மிகவும் முக்கியமானது. அதே சமயம் அந்தச் சிந்தனை மற்றவரையும் சிந்திக்கத் தூண்டுவதாய் அமைந்திருக்க வேண்டும்..சிந்திக்க சிந்திக்கத் தான் சிந்தனையில் தெளிவு பிறக்கும். சிந்தனையில் தெளிவு பிறந்தால்…”

உமை: அய்யோ, என்னால் தாங்க முடியவில்லை. (ரிமோட்டை சிவனின் கையில் இருந்து பிடுங்கி சேனலை மாற்றுகிறாள்.)
அடுத்து.. 
 ஒரு சேனலில் செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 “பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் வெற்றி. பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பந்துக்கு மக்கள் முழு ஆதரவு.”
 (பின்னணியில் காட்சிகள் காட்டப்படுகின்றன. அதில் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. மக்களில் ஒரு சிலரும் பந்துக்கு ஆதரவாகப் பேட்டியளிக்கின்றனர்)

சிவன்: அப்பாடா, இந்த மாதிரி விஷயத்திலயாவது மக்கள் ஒத்துமையா இருக்காங்களே!
உமை: சரி, சரி வேற சானல் மாத்துவோம். ( சேனல் மாற்றுகிறாள்)

அந்தச் சேனலிலும்…
 செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

 “பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் இன்று எதிர் கட்சிகள் நடத்திய பந்த் மாபெரும் தோல்வியில் முடிந்தது. பந்துக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் ஓடின.
 (இதிலும் பின்னணியில் காட்சிகள் காட்டப்படுகின்றது. அதில் சாலைகளில் பேருந்துகள் விரைந்த வண்ணம் இருக்கின்றன. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. மக்களில் ஒரு சிலர், இந்த பந்த் தேவையற்றது என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமானது, தவிர்க்க முடியாதது  , இந்த உயர்வு தேவை தான் என்றும் பேட்டியளித்தனர். முந்தைய சானலில் தாடி, மீசையோடு பந்த்துக்கு ஆதரவு தெரிவித்த அதே நபர், இந்தச் சேனல் செய்தியில் அதனை ஷேவ் செய்து கொண்டு வந்து விட்டு பந்த்தை எதிர்த்துப் பேட்டியளித்தார்.)

சிவன்: (டி.வி.யைப் பார்த்த அதிர்ச்சியில்) , ஐயோ, உமா, எனக்கு தலையைச் சுற்றுகிறதே, மூளை குழம்புகிறதே என்ன செய்வேன்!

அய்யோ..அய்யோ. முதலில் இந்த டிவியை நிறுத்து..

சக்தி அதை சட்டை செய்யாமல் சேனலை வேக வேகமாக மாற்றிக் கொண்டே இருக்கிறாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என குரல்கள் மாறி மாறி ஒலிகின்றன. எல்லாவற்றிலும் யாராவது பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆடிக் கொண்டேயிருக்கின்றனர். இல்லாவிட்டால் தாலியை, புடைவையை அல்லது செருப்பைக் கழற்றி இன்னொருவர் மேல் வீசிக் கொண்டே இருக்கின்றனர். விடாமல் அழுது கொண்டே இருக்கின்றனர்.
சிவன்:  (விடாமல் டி.வி. பார்த்துக் கொண்டே இருக்கும் சிவன்) .. அய்யோ… அம்மா.. ( திடீரென மயக்கம் போட்டுக் கீழே விழுகிறார்)
உமை: (பதட்டத்துடன்) , அய்யோ நாதா, பிராணநாதா, என்ன ஆயிற்று தங்களுக்கு..  அய்யகோ நான் என்ன செய்வேன்..  அய்யோ, எல்லாம் அந்தப் பாவி நாரதனால் வந்த வினை. மகா பாவி நாரதா.. இப்படிச் செய்து விட்டாயே!

(தனது டெலிபோனை எடுத்து டயல் செய்கிறாள்.)

உமை: ஹலோ.. யாரு லஷ்மியா, நாந்தான் பார்வதி பேசறேன், அவரு திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார். என்னன்னு தெரியலை. கொஞ்சம் அவசரமா புறப்பட்டு  அண்ணனை உடனே வரச் சொல்றியா.. வரப்போ கொஞ்சம் ஆம்புலன்சையும் கூட்டிட்டு வரச் சொல்லு. எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கும்மா. என்ன பண்றதுன்னே தெரியலை.. ப்ளீஸ்
லஷ்மி: (மறுமுனையில்..) பதட்டப்படாதீங்கம்மா.. தைரியமா இருங்க. வாழக்கைன்னா பிரச்சனை இருக்கத் தான் செய்யும். நாம தான் தைரியமா போராடி எதிர்த்து நிண்ணு ஜெயிக்கணும். சரியா!, நம்ம நிலையத்துக்கு வாங்க மனம் விட்டு பேசுங்க. ஓகேவா.. (பின்னணியில்.. அச்சமில்லை.. அச்சமில்லை..குரல் ஒலிக்கிறது)
உமை: சே, எல்லாம் இன்னிக்குன்னு பார்த்து ராங் நம்பரா போவுதே, என்ன செய்யறது.. ம்ம் டேய் முருகா இங்க வா!
முருகன்: (வேகமாக வருகிறான்) என்னம்மா! என்ன, என்ன??
உமை: இந்த பாரு உங்க அப்பா டி.வி பார்த்துகிட்டே இருந்தவர், திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார். என்ன ஏதுன்னு தெரியலை, எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. உடனே நீ போய் நம்ம டாக்டர் அய்யாவைக் கூட்டிக்கிட்டு வர்றியா?
முருகன்:  அப்படியா, மயக்கம் போட்டு விழுந்துட்டாரா? ஒருவேளை தெரியாம  F.TV எதுவும் பார்த்துட்டாரோ என்னமோ, சரி சரி, நான் போய் டாக்டர் அய்யாவைக் கூட்டிக்கிட்டு வர்ரேன். நீ பயப்படாம தைரியமா இரும்மா..
(முருகன் மயில் மீது ஏறி விரைகிறான்.)

*****************
காட்சி 3
உமா, டாக்டர், முருகன், சிவன், நாரதர்

(முருகன் டாக்டருடன் வருகிறார்)

உமை:  முருகா யார் இவர்? டாக்டர் அய்யா எங்கே?
முருகன்: இவர் தாம்மா அவர்!
உமை: டேய், டேய்.. வேண்டாம். மறுபடியும் ஆரம்பிக்காத. நான் கூட்டிக் கிட்டு வரச்சொன்னது டாக்டர் அய்யாவ. இவர் யாரு..
முருகன்: அட என்னம்மா நீ, இவரு தாம்மா அவருங்கறேன் நம்ப மாட்டென்கறிய, அய்யா, என்னய்யா பார்த்துக்கிட்டு பேசாம இருக்கிறீங்க, சொல்லுங்கய்யா..  சொல்லுங்க.. நீங்க யாருன்னு. சொல்லுங்க அம்மாவுக்கு.. உங்க பவரைக் காட்டுங்க…
டாக்டர்: தமிழ்நாடு குப்பைத் தொட்டியாகிக் கொண்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் பிரச்னைகள். அராஜகம். ரவுடிகள் ராஜ்யம். பெண்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. இது சரியில்லை.  ஆகவே…
 (அதற்குள் போன் ஒன்று வருகிறது. பேசுகிறார். பின் முகமலர்ச்சியுடன்..)
தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். ரவுடிகள் கொட்டம் ஒடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.
(மீண்டும் போன் வருகிறது..பேசுகிறார் பின்..)

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் எல்லோரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விட வேண்டும். எட்டு மணிக்கு மேல் யாராவது வெளியே தலைகாட்டினால் அவர்களை சவுக்கால் அடிக்க வேண்டும். இளைஞர்கள் எட்டு மணிக்கு மேல் வெளியில் சுற்றினால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே காவல்துறையினரைக் கைது செய்ய வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். ஆகவே…
உமை: சே!போதும் நிறுத்துங்கள்! உங்களுக்கே இதுபைத்தியக்காரத்தனமாகத் தெரியவில்லை! டேய்! முருகா, நீ இந்த அளவுக்கு உங்க அப்பா மாதிரி புத்திசாலியா இருப்பேன்னு எனக்கு தெரியாமப் போச்சே! நான் கூட்டிக்கிட்டு வரச் சொன்னது நம்ம டாக்டர் தன்வந்திரி அய்யாவ!  ஆனா, நீ கூட்டிக்கிட்டு வந்ததோ இந்த மருத்துவர் அய்யாவை சீ, முதல்ல இவரை இங்கேர்ந்து வெளிய கூட்டிக்கிட்டு போ. ஒரு மனுஷன் மயக்கம் போட்டு விழுந்து கிடக்குறாரு. அதைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை இல்லாம என்னெனவோ உளறிக்கிட்டு, வெட்கக் கேடு!
மருத்துவர்: டேய், தம்பி, என்னவோ அவசரம்னு சொன்னதாலதாயும், சீட்டு நிறைய கிடைக்குனும்னும் நினைச்சு.. சாரி.. பீஸ் நிறைய கிடைக்குனும் நினைச்சு..நம்பி தான்  இங்க வந்தேன். நீங்க என்னடான்னா வேஷ்டி, துண்டு மட்டும் இல்லாம சட்டையையும் உருவிடுவீங்க போல இருக்கே, இருக்கட்டும். இருக்கட்டும். எனக்கும் நேரம் வரும். எங்கிட்டயும் நீங்க கெஞ்ச வேண்டி வரும். அப்போ வச்சுக்கறேன். சே.  துரோகம்.. துரோகம்.. பச்சைத் துரோகம்.
 (திட்டிக் கொண்டே வெளியே செல்கிறார்)  
முருகன்: சாரி மம்மி, நீ டாக்டர் அய்யான்னு சொன்னதால சட்டுனு நான் குழம்பிப் போய் இவரை இட்டாந்துட்டேன். அயாம் ரியலி வெரி சாரி மம்மி.
உமை; உன்னைச் சொல்லிக் குத்தமில்லடா, யாருக்கும் இங்க்லீஷ் சரியா பேச வரலைன்னு இன்ஸ்டிட்யூட்ல சொல்லி இங்க ஒரு பிராஞ்சு ஓபன் பண்ணச் சொன்னேன் பாரு அது தான் என் தப்பு. போட்டிக்கு உங்க அப்பா, யாரையோ கூட்டிக் கிட்டு வந்து தமிழ் தமிழ்னு லூட்டி அடிச்சதால வந்த வினை தான் இது.

 (இப்பொழுது சிவன் மெல்ல அசைகிறார். ம்.. ம்.. என்று முனகுகிறார்)

முருகன்: ஐ! அம்மா, அப்பாக்கு ஞாபகம் வந்திடுச்சி, ஞாபகம் வந்திடுச்சி..ஞாபகம் வந்திடுச்சி..
உமை: சரிடா, சத்தம் போட்டுக் கத்தி ஏன் ஊரைக் கூட்டுறே! வேறெதாவது வந்திடுச்சின்னு யாராவது நினைச்சுக்கப் போறாங்க!
சிவன்: நான் யாரு… எங்க இருக்கேன்.
உமை: அய்யகோ சுவாமி! என்ன ஆயிற்று தங்களுக்கு.. (அவரைப் போட்டு உலுக்குகிறாள்)
முருகன்: அப்பா.. என்னாச்சுப்பா. என்னாச்சு. அம்மா அப்பாக்கு என்னாச்சும்மா? என்னாச்சு. அப்பா ஏந்திரி அப்பா ஏந்திரி. ஏந்திரி அப்பா! ஏந்திரி. ஏந்திரி அப்பா! ஏந்திரி
சிவன்: மே, ஈசுவரன் போல்ராவுங். தோடா உப்பர்வாலாக்கோ புலாயியே! ஹாஹங். ஈ மூட்டா அட்ட படி உண்ணி.. இல்லி நோடு.. இக்கடச் சூடு.. பூட்டா மாடு.. மொக்கி நோடு.. எந்தா அவிட சம்சயம்.. ஞான் ஏதும் அறிஞ்சிட்டான் பாடில்லா.. நை சாஹியே நை சாஹியே ஹா சாப்! யெஸ், யெஸ், ஷூட் ஹிம். ஹாங்.. அம்மாடி.. ஆத்தாடி.. என்னை உனக்குத் தர்ரீயாடி.. மோளே மோளே எவிட போயி! சண்டாளி உன் பாசத்தால…

உமை: அச்சச்சோ.. இவருக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுடா. கொஞ்ச நேரம் இந்த டி.வியப் பார்த்ததுல ஆண்டவனுக்கே பைத்தியம் பிடிச்சுடுச்சே. இந்த மக்கள் எப்படி சமாளிக்கப் போறாங்களோ, என்ன செய்யப் போறாங்களோ தெரியலையே!

(தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்கிறாள்)

 நாராயண.. நாராயண.. நாரதர் வருகிறார்.
உமை: அடேய் மகாபாவி..நாரதா! எல்லாம் உன்னால் வந்தது தான், அயோக்யா! 

நாரதர்: அம்மையே கவலை வேண்டாம். அனைத்தும் நாம் அறிவோம். உங்கள் துயர் தீர்க்கவே பூவுலகிலிருந்து இதனைக் கொண்டு வந்துள்ளோம்.
உமை: வேண்டாம்..வேண்டாம் போ இங்கிருந்து..
நாரதர்: தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. இது தங்கள் கணவருக்கு மட்டுமல்ல.. தாங்கள் உட்பட அனைவருக்கும் பயன்படும். பூவுலகில் முதலில் இலவசமாக டி.வி கொடுத்தார்கள் அல்லவா.  அடுத்து இப்பொழுது இதைத் தான் இலவசமாகக் கொடுக்க உத்தேசித்திருக்கிறார்களாம். நீங்கள் வேறு முன்பு என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள் அல்லவா.. ஏதாவது இலவசமாகக் கொண்டு வா என்று.. அது தான் கொண்டு வந்தேன்.. இந்தாருங்கள்.. ( பெரிய நீண்ட பார்சலை நீட்டுகிறார்)
முருகன்: என்ன அது?( பார்சலை வாங்கிப் பிரிக்கிறான்)
 உள்ளே.. பெரிய நீண்ட பாய் காணப்படுகின்றது.
நாரதர்: இதனை சிவனுக்காக பத்தமடையிலிருந்து ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கி வந்திருக்கிறேன்.  விரைவில் உங்கள் எல்லோருக்கும் கூட பயன்படும் வரட்டுமா? நான் அவசரமாக மகாவிஷ்ணுவைப் பார்க்கப் போக வேண்டும். அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம். மகால்ஷ்மி போன் செய்தார்கள், நான் அர்ஜென்ட்டாகச் செல்ல வேண்டும். வருகிறேன். பை, பை.
 (நாரதர் வேகமாகச் செல்கிறார்.)

  சக்தி திகைத்துப் போய் நின்றிருக்கிறாள்.

சிவன்: (சிவன் முருகன் கையில் இருக்கும்  பாயைப் பிடுங்கி.. அதில் படுத்துப் புரண்டு கொண்டே..)
மே.. குன்மோகன் சிங்..  போல் ராவுங்! மீரு எவரண்டி பாபுகாரு.. தோடா. கீச்சுடுவேன். சோமாரி.. போய் வரும்போ எந்து கொண்டு வரும்..  வாட் அ மார்வலஸ் ஷாட் பை சச்சின் டெண்டுல்கர்.. நாக்கு டமில் கொஞ்சம் கொஞ்சம் பேசும். தீப்பிடிக்க தீப்பிடிக்க.. என்னைத் தொடுடா.. உன் திமிரெல்லாம் அடங்கத் தான் என்னைக் கடிடா..

(எழுந்து நின்று ஆடிக் கொண்டே முருகனையும், சக்தியையும் கடிக்கப் போகிறார். அவர்கள் அலறிக் கொண்டு ஓட.. “இந்தா டிவி.. இந்தா பாய்.. இந்தா அடுப்பு.. இந்தா செருப்பு” கூறிக் கொண்டே விடாமல் துரத்துகிறார்)
(திரை)

.... இங்கே பதியப்பட்டது நாடகம் | Leave a Comment »

தேடல்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் மனையாளின் பசி…

காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..

பாலியல் பெண்
அறிந்திருப்பாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
கிழவனா
என்று..

விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்.
 

.... இங்கே பதியப்பட்டது கவிதை, புதுக்கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

வேதனை

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

அங்கும் இங்குமாய்
சிதறிக் கிடக்கும்
ரொட்டித் துண்டுகளைப் போல
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்!

பேப்பர் வெயிட்டையும் மீறி
காற்றில் படபடக்கும்
காகிதத்தைப் போல
என் மனது!

உத்தரவின்றி
உள்ளே வந்துவிட்டு
வெளியேறத் தவிக்கும்
தட்டாம் பூச்சியாய்
வார்த்தைகளின்றி
அலைந்து கொண்டிருக்கிறது
உள்ளுக்குள்ளேயே
ஒரு குரல்!

கனத்த மௌனத்தில்
நினைவின் நிசப்தத்தையும் மீறி
எங்கோ தூரத்தே ஒலிக்கிறது
ஒரு கூட்ஸ் ரயிலின் சப்தம்!

அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்
கேட்பாரற்று!

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

மோகம்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்

வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்

விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு

சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..

டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

வலி

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

ஒரு கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
புது மணப்பெண்ணின்
மோகாவஸ்தைகளாய்
நீண்டு கொண்டே
போனது என்
வார்த்தைகள்

ஒரு நல்ல கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

தலைப்பிரசவப் பெண்ணின்
இடுப்பு வலி போல
கொஞ்சம் கொஞ்சமாய்
ரம்பித்து
முடிவில்
வெளிபோந்தது
என் கவிதை
குருதி தோய்ந்த
தொப்புள் கொடியோடு
உயிரின்றி..
உணர்வின்றி…

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

காதல் கவிதை

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

உத்தரவின்றி
உள்ளே வந்து விட்டு
உரிமையோடு
அலையும்
பூனைக்குட்டியைப் போல

அறைக்குள்
உலாவிக் கொண்டிருக்கிறது
அவளின் மூச்சு!

உறுப்புகளின் உரசல்களுக்கு
ஏங்கித் தவிக்கும்
பருவமாய்

ஏதேதோ நினைவுகள்
ஏங்கவைக்கும் கனவுகள்

கடமை!
கண்ணியம்!
கட்டுப்பாடு!

எங்கோ
எதற்கோ
யாரோ
கூவுகிறார்கள்!

உணர்ச்சிகளில்லாப்
புணர்ச்சிகள் போல்
நுகர்வோர்
இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
அவள் விட்டுச் சென்ற
மூச்சு!
 

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!
 

.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

வாழ்க்கை

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

அது
சிறு கவிதையோ
பெருங்கவிதையோ
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

சாலையைக் கடக்கும் பொழுதோ..
சோலையில் சுகிக்கும் பொழுதோ..

கடலலையின் சத்தத்திலோ..
காதலியின் முத்தத்திலோ..

சண்டையின் உச்சத்திலோ..
சாக்கடையின் பக்கத்திலோ..

மொட்டைமாடிப் புணர்ச்சியிலோ..
தொட்டணைத்த நெகிழ்ச்சியிலோ..

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

கட்டிலின் சத்தமும்
கவிதை தான்
தொட்டிலின் சிணுங்கலும்
கவிதை தான்
குமரியின் சிரிப்பும்
கவிதை தான்
குழந்தையின் அழுகையும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

நண்பனின் மரணமும்
கவிதை தான்
நடிகையின் துயரமும்
கவிதை தான்

நெருங்கியவர்களின் பிரிவும்
கவிதை தான்
பிரிந்தவர்களின் நெருக்கமும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்படி வேண்டுமானாலும்
உருவாகலாம்

நேசிப்பின் இழப்புகள்
கவிதையாவது
வாழ்வின்
அர்த்தமா?
அனர்த்தமா?

.... இங்கே பதியப்பட்டது கவிதை | Leave a Comment »

வீரத்துறவி

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

 ஜனவரி 12. 1863-ம் ண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?

 ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.

 கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.

  யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில்   உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

 உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.

 உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். கவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.

 சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம். கவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.  

 நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.

 இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. னால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.

  துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். கவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.   

 எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது. 

 மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.

********

.... இங்கே பதியப்பட்டது ஆன்மிகம் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

மனித நேய மாண்பாளர் வள்ளலார்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

                                    
     “அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி 
      தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”

உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். சித்தர், முனிவர், யோகி, மகான், துறவி என்று எந்த நிலைகளுக்குள்ளும் அகப்படாத, அதே சமயம் இப்படி எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும்  துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!

  ”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
  வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
  நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
  ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.

 “வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
   மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
   ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
   இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
   மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
   மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
   கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
   கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!

-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.
     
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.

வள்ளலார் வெறும் ன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உலக நீதிப் பாடலான “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்” என்ற ‘வேண்டாம்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கச் சகியாது,
   
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
   உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்”

- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.

 சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.

    ”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே!”

- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

    ”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..

என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக

    ”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை?”

என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.

சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.

எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!

“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” – என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.

“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” – என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.

************

.... இங்கே பதியப்பட்டது வள்ளலார் | Leave a Comment »

புதியவன்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

              
வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நான் அதில் கடைசி  ஆளாக நின்று கொண்டிருந்தேன். பலர் வருவதும் போவதுமாக அந்த இடமே சற்று பரபரப்பாகத் தான் இருந்தது. ஆனாலும் அமைதி. ஒரே அமைதி. ஒரு வித ரம்மியமான சூழ்நிலை அங்கே நிலவியது. மனதிற்கு இதம் தரும் ஒரு மணம் எங்கும் பரவி இருந்தது.

 வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு விதமான பாவனை. சிலர் மகிழ்ச்சியோடு மற்றவருடன் பேசிக் கொண்டிருந்தனர். சிலர்  சற்றே கலங்கிய விழிகளுடன்  ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர். நானும் எதுவும் புரியாமல் சுற்று முற்றும் பார்த்தேன்.

 ”ம் ம்  சீக்கிரம் போங்க… நேரமாகுதுல்ல..” வாட்ச்மேன் போன்று இருந்த ஒருவர் கத்தினார். வரிசை சற்றே வேகமாகியது. எனக்கு ஏனோ அழுகையாக வந்தது. பெற்றோரையும் குடும்பத்தாரையும் இது நாள் வரை பிரிந்தே இராத எனக்கு, மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மனம் ஏனோ பழைய நினைவுகளை அசை போட்டது.

 கிராமத்துப் பள்ளிக்கூடம், ஆங்கிலம் அழகாகக் கற்பித்த அருளாந்து வாத்தியார், நண்பன் பாண்டியன், சுந்தரம், மண் தரை டூரிங் டாக்கீஸ், மந்தையம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா, ராத்திரியில் நடக்கும் அரிச்சந்திர மயான காண்டம்.. அம்மா பண்ணும் பணியாரம், அப்பா வாங்கி வரும் கடலை மிட்டாய்.. என்று ஏதேதோ நினைவுகள் ஒவ்வொன்றாய் வந்து மனத்தை ஆக்ரமித்தன. கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்து, படித்ததால் வெளி உலகம் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. இதோ இப்பொழுது தான் முதன் முறையாக எல்லோரையும் விட்டுப் பிரிந்து வந்திருக்கிறேன். அதுதான் ஒருவிதக் கலக்கம். அச்சம். “யாரேனும் நண்பர்கள் இருந்தால் எப்படி இருக்கும்?,” எண்னியது மனது. வரிசையை உற்றுப் பார்த்தேன். எல்லாம் பெரும்பாலும் என் வயதொத்த இளைஞர்கள். பல்வேறு மொழிகள் காதில் கேட்டன. வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் எனத் தெளிவாகத் தெரிந்தது.

 ”டாங்.. டாங்” மணி அடித்தது. “ம்,ம் சீக்கிரம் போங்க. நேரமாகுது” காவலாளி போன்ற அந்த மனிதன் மீண்டும் கத்தினான். வரிசை, ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரண்டாகப் பிரிந்து, பெரிய வெண்மை நிறக் கட்டடத்தை நோக்கி  வேகமாக நகர்ந்தது. எனக்குப் பின்னாலும் கூட்டம் மெல்ல மெல்லச் சேர்ந்தது. தெரிந்த முகம் ஏதாவது தெரிகிறதா என்று  உற்று உற்றுப் பார்த்தேன். ம்ஹ¤ம்.

 இப்பொழுது மணி வேறு விதமாக ஒலிக்கத் தொடங்கியது. கூட்டம் அப்படியே தேங்கி நின்றது. ‘முதல்ல ·பர்ஸ்ட் பேட்ஜ்க்கு கவுன்சிலிங். அதுக்கு அப்புறம் தான்பா இவங்களுக்கு’ வாட்ச்மேன் போன்ற மனிதர் இன்னொரு உயரமான மனிதரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

 ”ம். இன்னும் எவ்வளவு நேரமாகுமோ தெரியலை. சீக்கிரம் எல்லாம் முடிஞ்சு ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சா நிம்மதியா இருக்கும்.” முன்னாள் நின்று கொண்டிருந்த நபர் என்னிடம் சொன்னார். நானும்  ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டினேன்.

 இதுவோ புதிய இடம். புதிய மனிதர்கள். புதிய சூழ்நிலை. வருங்காலம் எப்படி இருக்குமோ? மனது சற்றே அச்சப்பட்டது. பார்க்கலாம். பாட்டி அடிக்கடி சொல்வது போல் நடப்பது எல்லாம் நன்மைக்கே! எனக்கு நானே  ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

 அந்த உயரமான ஒரு மனிதர் வந்து, ஒவ்வொருவரிடமும் பெயர் முதலியனவற்றை விசாரித்து, தனது பதிவேடு போன்ற ஒன்றில் குறித்துக் கொண்டு போனார்.

 சிறிது நேரம் கழிந்தது. முதல் வரிசை  ஆட்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். பலர் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சிலரிடம் இனம் புரியாத சோகமும் இருந்தது. மறுபடியும் அந்த இடம் பரபரப்பானது. வரிசை மறுபடியும் முன்னேறத் தொடங்கியது.

 ’ஏய்! காந்தன் சௌக்யமா?  இங்க எப்படி?’ குரல் கேட்டுத் திரும்பினேன். முத்து நின்று கொண்டிருந்தான். என் சிறுவர் பருவத்து நண்பன். என்னுடன் கிராமத்தில் ஒன்றாகப் படித்தவன். அவன் அப்பாவுக்கு மாற்றல் ஆனதால் சிறுவயதிலேயே மதுரைக்குச் சென்று விட்டான். அதற்கப்புறம் தொடர்பு விட்டுப்போனது. அவனை நான் அங்கே எதிர்பார்க்கவேயில்லை. ஒரு துணை கிடைத்து விட்டது என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ‘ஏய், நீ எங்க இங்கே?’ என்று ஆச்சர்யத்துடன் வினவினேன்.

 ’நான் இங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இது தான் எனக்கு ·பைனல் இயர்னு வச்சுக்கயேன்.’ என்றான் முத்து.

 ”அப்பாடா, உன் துணையாவது கிடைச்சுதே! அப்போ நான் இனிமே உன்கூடவே தங்கிக்கலாம் இல்லையா!, தனியா என்ன பண்றதுன்னு புரியாம முழிச்சிகிட்டு இருந்தேன். உன் துணை கிடைச்சுது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!. ஆமா வீட்ல எல்லாரும் சௌக்யமா?” என்றேன்.

 ”ம். எல்லாரும் சௌக்யம் தான், ஆனா என்னால தான் அவங்க கூட ரொம்ப நாள் இருக்க முடியாமப் போச்சு. ஸ்கூல் முடிச்சவுடனேயே இங்க வந்துட்டேன். இது தான் லாஸ்ட் இயர். ஆனா நாம ஒண்ணாத் தங்க முடியாது காந்தன். நீ ஜூனியர்  இல்லையா?. அதுனால நீ வேற செக்ஷன், நான் வேற செக்ஷன். பட் நாம அடிக்கடி மீட் பண்ணிப் பேசலாம். பழகலாம். ஒண்ணும் கவலைப் படாதே! நாங்கள்லாம் இருக்கோம்ல. பார்த்துக்கறோம்.” என்றான் முத்து.

 ”சரிப்பா, ரொம்ப நன்றி! ஆனா இந்த வீட்டுக் கவலைதான் எனக்கு. நான் சின்ன வயசுலேர்ந்து வீட்டைப் பிரிஞ்சதே இல்லையே. அது தான் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்றேன் நான் மன வருத்தத்துடன்.

 ”ம். ·பர்ஸ்ட் அப்படித் தான் இருக்கும். அப்புறம் எல்லாம் போகப் போக சரியாயிடும். டோண்ட் வொர்ரி. அதுவும் இங்க வந்துட்டல்ல. புதுப் புது விஷயம். புதுப் புது ·ப்ரெண்ட்ஸ்னு நிறைய என்ஜாயபிளா இருக்கும். சொல்லப் போனா கொஞ்ச நாள்ல வீட்டையே மறந்துடுவன்னா பார்த்துக்கயேன்” என்றான் முத்து.

 ”ம். பார்க்கலாம்” என்றேன் அரைகுறை மனதுடன். மனதுக்குள் இருந்த இனம் புரியாத கவலை இன்னும் அதிகமானதே தவிரக் குறையவில்லை.

 ”காந்தன். ரொம்ப பயப்படாதே, வீட்டுக்குப் போகணும்னு  ஆசைப்பட்டா, அனுமதி வாங்கிட்டுப் போய் பார்த்துட்டு வரலாம். அது தவிர அதுக்குன்னு இங்க நிறைய சலுகை, டைம்லாம் தருவாங்க, மாசம் ஒருமுறை கண்டிப்பா உன் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வரலாம். சோ, யூ டோண்ட் வொர்ரி” என்றான்.

 ”இவங்க எல்லாம் என் ·ப்ரெண்ட்ஸ்”- சிலரை அறிமுகப்படுத்தினான். பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டோம். எல்லாரும் என்னைப் போன்றே இளைஞர்கள். துடிப்பாக இருந்தார்கள். என் தோளைத் தட்டி  ஆறுதல் கூறினார்கள்.

 ”சரிப்பா, எங்களுக்கு லேட்டாகுது, பிரேயர் ஹாலுக்குப் போகணும். சரியான நேரத்துக்குப் போகல்லேன்னா விசாரணை, தண்டனைனு நிறைய ·பார்மாலிட்டிஸ் இருக்கு. நாங்க வரோம். அப்புறம் பார்க்கலாம்.” சொல்லி விட்டு, முத்து தன் நண்பர் குழாமுடன் சென்று விட மீண்டும் நான் தனிமையானேன்.

 வரிசை நகர்ந்து நகர்ந்து, இப்பொழுது நான், நுழைவாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அடுத்தது நான் தான் உள்ளே போக வேண்டும். குறிப்பேடு போன்ற ஒன்றில் என் பெயர் முதலிய விவரங்கள் மீண்டும் அந்த உயரமான மனிதரால் சரிபார்க்கப்பட்டன.

 ”உள்ளே போனதும், பயப்படாம, தைரியமா, கேட்குற கேள்விங்களுக்கு பதில் சொல்லுங்க. நீங்க சொல்லப் போற பதில வச்சுத்தான் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.  என்னிக்குமே நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும்.” என்றார் அந்த மனிதர்.

 ”சரி, சரி” என்று தலையாட்டினேன். எனக்கு உள்ளூர ஆவலாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தது. ‘உள்ளே என்ன கேள்வி கேட்பார்கள், யார் கேட்பார்கள், எப்படி பதில் சொல்வது,’ என்றெல்லாம் மனதுக்குள் சிந்தனைகள் ஓடியது.

இப்பொழுது மணி மீண்டும் ஒலித்தது.

“தயாரா இருங்க” என்றார் காவலாளி.

 ’ம்’ என்றேன். உள்ளே ஒரு விதப் பதட்டம்  ஔடியது.  மீண்டும் “அம்மா பண்ணிய மோர்க் குழம்பு, அப்பா கூட்டிக் கொண்டு போன சினிமாப் படம், தம்பியோடு போட்ட சண்டை, எதிர் வீட்டு லலிதா” என எல்லாம் நினைவுக்கு வந்து மனதை வாட்டியது. அழுகை அழுகையாக வந்தது. ‘அம்மா இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பாள், அப்பா வயலுக்குப் போய் விட்டிருப்பாரா, தம்பி பள்ளிக்கூடம் போய் விட்டிருப்பானா, லலிதா என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா?’ மனதிற்குள் பல சிந்தனைகள் வந்து போக, என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கின.

‘ம், இப்போ நீங்க உள்ளே போகலாம்’ என்றார் அந்த உயரமான நபர்.

உள்ளே நுழைவதற்கு முன் சற்றே ஒரு முறை குனிந்து கீ….ழே பார்த்தேன்.

“சே, நல்ல உத்யோகம்பா, பொழுது விடிஞ்சு பொழுது போனா இதே  பொழைப்பாப் போச்சு நமக்கு, ம், எல்லாம் நம்ம தலையெழுத்து. ம், ம், சீக்கிரம்  ஆகட்டும்பா” தொப்பியைக் கையில் வைத்துக் கொண்டு சலிப்புடன் ஒருவர் அவசரப்படுத்திக் கொண்டிருக்க, இரண்டுபேர் நொறுங்கிக் கிடந்த பைக்கை ஓரம் தள்ளிவிட்டு, ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்தனர்… உருக்குலைந்து போன என் உடலை!

      **************************************

.... இங்கே பதியப்பட்டது சிறுகதை | Leave a Comment »

ஸ்ரீ அன்னை அருள்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

          ஸ்ரீ அன்னை

குழந்தைகள் திடீரென்று தொடர்ந்து அழுவது ஏன்?

 நம் பார்வைக்குப் புலனாகாத பல விஷயங்கள் குழந்தைகளின் பார்வைக்குப் புலனாகின்றன. அவற்றைப் பார்த்ததும் அவை திகிலடைவதாலும், அவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லும் அறிவு குழந்தைகளுக்கு இல்லாததாலும், அவை அச்சத்தால் தொடர்ந்து அழுகின்றன.
ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ துர்க்கையும்:

  தன் முன் பிரசன்னமான ஸ்ரீ துர்க்கையிடம் ஸ்ரீ அன்னை: “மக்களின் வழிபாட்டுக்குள்ளாவதற்குப் பதிலாக நீ ஏன் பரம்பொருளை வழிபடக் கூடாது?”

 ஸ்ரீ துர்க்கை: “அப்படியே”

 ”நான் உங்கள் செயற்கருவியாக இயங்க இசைவளியுங்கள் பரம்பொருளே” என பரம்பொருளிடம் ஸ்ரீ துர்க்கை வேண்டினாள்.
பால் பிரண்டனும் ஸ்ரீ அன்னையும்:

 எப்பொழுதாவது, யாராவது ஒருவருடன் அமர்ந்து தியானம் செய்யும் நிலை ஏற்பட்டால், அவருக்கு உறுதுணையாக உள்ள சக்திகளைப் பற்றியும், தேவதைகள் பற்றியும்  கண்டுணர்வது ஸ்ரீ அன்னையின் வழக்கம்.

அது போன்று திரு. பால்பிரண்டன்  அவர்களுடன் தியானம் செய்யும் பொழுதும் ஏற்பட்டது. ஒரு சக்தி அவரைக் காத்து வருவதை ஸ்ரீ அன்னை உணர்ந்தார்.

ஸ்ரீ அன்னை அவரிடம் ‘எவ்வளவு காலமாக அச்சக்தி உடனிருக்கிறது’ என வினவினார். அதற்கு பிரண்டன் “பத்து வருடங்கள்” என பதிலளித்தார்.
ஸ்ரீ சாயிபாபாவும் ஸ்ரீ அன்னையும்

மேல் நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைத் தரிசித்து விட்டு ஸ்ரீ அன்னையின் ஆசி பெற வந்திருந்தார். பாபாவால் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு மணிமாலையை அன்னையிடம் காட்டி  அதன் தன்மை பற்றி விளக்கக் கோரினார். அன்னை அதனை தன் உள்ளங்கையில் வைத்திருந்து விட்டுப் பின்னர் கூறினார் ” இது மறைவியல் வித்தை மூலம் தருவிக்கப்பட்டது”. மேலும் அந்தப் பேராசிரியர் சாயிபாபாவைப் பற்றி அன்னையின் கருத்தைக் கேட்டதற்கு ஸ்ரீ அன்னை சொன்னார், ” ஒரு குரு மற்றொரு குருவை விமர்சிப்பதில்லை”
காவ்ய கண்ட கணபதி முனிவரும் ஸ்ரீ அன்னையும்

ஸ்ரீ ரமணரின் தலையாய சீடரான காவ்ய கண்ட கணபதி முனிவருடன் தியானம் செய்யும் பொழுது, அறையுள் இருந்த தீய சக்திகள் விலகி ஔடுவதையும், ஒரு சக்தி அவரைக் காத்து வருவதையும் ஸ்ரீ அன்னை உணர்ந்தார். தான் வேறு எவருடன் தியானம் செய்த பொழுதும் இவ்வளவு ஆழ்ந்த நிலைகளை எட்டியதில்லை என ஸ்ரீ அன்னை பின்னர் கூறினார்.

மற்றொரு முறை ஒரு சாதகருடன் தியானம் செய்யும் பொழுது அவர் தலையைச் சுற்றி ஐந்து தலை நாகம் படமெடுத்து நிற்பதை ஸ்ரீ அன்னை கண்டார். பின்னர் அவர் ஒரு கிருஷ்ண பக்தர் என்றும், தியானத்தில் உயர் நிலையை அடைந்தவர் என்பதையும் அன்னை கண்டறிந்தார்.
 

.... இங்கே பதியப்பட்டது ஸ்ரீ அன்னை | Leave a Comment »

கடவுளும் கணபதி சுப்ரமணிய அய்யரும்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

 திடீரென இருக்கையிலிருந்து எழுந்த சிவபெருமான் வேகவேகமாக எங்கோ கிளம்ப முற்படவும், சக்தி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“என்ன விசேஷம், எங்கே பயணம்?..” சற்று பவ்யமாக வினவினாள்.

‘சிவத்தைப் பார்க்க அனைவரும் இங்கு வந்து தவமிருக்க, இவர் வேறு எங்கோ செல்கிறாரே, என்னவாக இருக்கும்’ என்பது தான் உமையின் மனத்தில் இருந்த கேள்வி.

“பூவுலகம் தான் வேறென்ன!” சிவம் பதிலளித்தது.

“அய்யோ! அங்கேயா?” அச்சத்துடன் வெளிப்பட்டது பார்வதியின் குரல்.

“ஆமாம்! ஏன்?”

“ஏற்கனவே பட்ட பாடு போதாதா? மறுபடியுமா?”

“இல்லை! இப்பொழுது உலகம் ரொம்ப மாறி விட்டது. நீ நினைக்கின்ற மாதிரி இல்லை. பூவுலகம்”

“நிஜமாகவா?! அப்படியானால் சரி! நானும் வருகிறேன்!”

“வேண்டாம்! வேண்டாம்!”

“இல்லை! நான் வரத்தான் போகிறேன்”

“வேண்டாம் சக்தி! நான் சொல்வதைக் கேள்! தேவைப்பட்டால் நானே உன்னை அழைக்கிறேன்”

“சர ! தாங்கள் அழைக்கும் பொழுதோ அல்லது என் உதவி தேவைப்படும் பொழுதோ நான் அவசியம் அங்கு வருவேன்”

“நல்லது”

புறப்பட்ட சிவன் நேராக வந்து இறங்கியது சென்னையில் உள்ள ஒரு பழங்காலக் கோயில். உடனே தனது ரூபத்தை ஒரு வயதான மனிதர் போல் மாற்றிக் கொண்டவர், மெல்ல கோயில் குருக்களை அணுகிப் பேச்சுக் கொடுக்கலானார்.

“என்ன சுவாமின்! சௌக்கியம் தானே!”

“ம்ம் சௌக்யத்துக்கென்ன குறை! கண்ணு தான் வர வர சரியாத்தெரியலை! நீங்க யாருன்னு சரியாப் பிடிபடலையே!”

“நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருக்காரோன்னோ அவரோட மச்சினன் நான்”

“ஒஹோ! அவரா! நன்னாத் தெரியுமே நேக்கு! பாவம் ரொம்ப நல்ல மனுஷன்! அதான் சீக்கிரம் போய்ச் சேர்ந்துட்டார். இந்த லோகத்துல நல்லவாளுக்கே காலம் இல்லன்னா!”

“ஆமா! ஆமா! சரியாச் சொன்னேள்! அப்புறம் என்ன விசேஷம்! கோயில்ல எல்லாம் பாதி புதுசா பெயிண்ட அடிச்ச மாதிரி இருக்கே! ஈரமே இன்னும் காயலையே!, அங்க அங்க குப்பைக் கூளம், மஞ்சள், கும்பம், சொம்பு, என்ன விசேஷம்?”

“ஆமா! அந்தக் கொடுமையை ஏன் சாமி கேக்கெறேள்! கிட்ட வாங்கோ! செத்தக் காதைக் கொடுங்கோ சொல்றேன்”

“……………..”

“என்னது! அடக் கடவுளே! இதென்ன அக்கிரமமா இருக்கு, கேள்வி கேட்பாரே இல்லையா?”

“……………..”

“யார் சுவாமின் கேட்கறது? அந்த பகவானே பார்த்துண்டு சும்மா தானே இருக்கான்”

“அப்படிச் சொல்லாதீங்கோ! நல்லது, பொல்லாது எல்லாத்துக்கும் கைமேல பலன்! நான் சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்கோ”

“ஔஹோ, நீர் சும்மா விட மாட்டீரா, நீர் என்ன பெரிய பிராக்கியனா? போங்காணும், அவனவன் அஸ்தில புடிச்சுண்டு உட்காந்திருக்கான், இதுல நீர் வேற வந்து வெறுப்பேத்தறேள்”

“இல்லங்காணும், பகவான் பாத்துண்டு சும்மா இருக்க மாட்டான். நிச்சயம் தட்டிக் கேப்பான்னு சொல்ல வந்தேன்”

“ஆமா! நீங்க தான் மெச்சிக்கனும்! இங்க ஒரு பய வாயைத் திறக்கறது இல்ல தெரியுமோ! எல்லாருக்கும்  பயம். எல்லாத்துக்கும் பயம்”

“அப்படியா?”

“ஆமா, ஆமா! ஏதோ பாட்டு கூட அந்தக் காலத்துல வருமே! வாய்ச் சொல்லில் வீரரடின்னு அந்த மாதிர.¢ எல்லாம் வேஸ்ட்”

“சரி! இன்னும் எவ்ளோ இடத்துல இந்த மாதிரி! உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி தப்புத் தப்பா  யார் சொல்லித் தறா ?”

“அதெல்லாம் எங்கிட்ட எதுவும் கேட்காதீங்கோ சுவாமின்! , நேக்கு எதுவும் தெரியாது. 108ன்னு கேள்வி, அதுவும் தமிழ் வருஷப் பிறப்புக்குள்ளயாம்”

“நடக்கட்டும்! நடக்கட்டும்! அப்புறம் அவா அவா பாடு”

“ஆமா நடை சாத்தலயா?”

“இதோ ஆச்சு, உச்சிக் காலம் ஆனதும் விநியோகம், அது முடிஞ்சவுடனே நடை அடைச்சுட்டுக் கிளம்ப வேண்டியது தான்”

“பிரசாதமா!” என்றார் கடவுள் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு.

“பிரசாதம் மாதிரி தான், ஆனா பிரசாதம் இல்லை, உங்களுக்கு வேணும்னா நீங்க அந்தக் கியூல போய் நின்னுண்டேள்னா கிடைக்கும்”

“சரி!சரி! நான் பார்த்துக்கறேன், நீர் உம்ம வேலையைக் கவனியும்” சொல்லி விட்டுக் கடவுள் பெரிய கியூவில், நடுவில் போய் நின்று கொண்டார்.

“யோவ், பாத்தா பெர்ய மன்சனாட்டம் கீறே, தபா, ஷோக்கா உள்ளார பூர்றியே நைனா, இன்னா, நாங்கள்லாம் நிக்கறது தெர்ல!” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“என்ன சொல்ற நீ நேக்கு எதுவும் புரியலையே”

“ஆங்! எதுவும் புரியாமத் தான் சைடுல வார்ரீயா நைனா, போ, போ, அந்தாண்ட, கடைசில போய் நின்னுக்கோ, முன்சாமி அண்ணாத்தேக்கு வழி விடு”

கடவுள் தள்ளாத குறையாகத் தள்ளப்பட்டுக் கடைசியில் போய் நின்றார்.

“அடக் கடவுளே! என்னன்னா இது?” கணபதி சுப்ரமண்ய அய்யர் கவலையுடன் அருகில் வந்தார்.

“பரவால்லை, ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் கடைசியாவே நின்னுக்கறேன்” கடவுள் சோகமான குரலில் சொன்னார்.

“சரி நீங்க என்னோட வாங்கோ”

“அம்பி, டேய் அம்பி,” என அய்யர் குரல் கொடுக்க  வேஷ்டி, துண்டு மட்டும் அணிந்து குடுமியில்லாத ஒரு வாலிபன், அருகில் வந்து “என்னப்பா?” என்றான்.

“இவர் நமக்குத் தெரிஞ்சவர், ஆத்துக்கு அழைச்சுண்டு போய் இலையைப் போடு, நான் செத்த நேரத்துல, நடையைச் சாத்திட்டு வரேன்”

“சரிப்பா” பையன் கடவுளுடன் புறப்பட்டான்.

மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்த கடவுள், சற்று பவ்யத்துடன், “அம்பி, செத்த மெதுவாப் போ, நேக்கு வண்டியில எல்லாம் போய்ப் பழக்கம் இல்லை” என்றார்.

“சைக்கிள்ல கூடவா போனதில்லை”, என்றான் அம்பி ஆச்சர்யத்துடன்.

“ஆமா, ஆமா”

“அப்புறம் எப்படி, வெளில எங்கேயாவது போகணும்னா என்ன பண்ணுவேள்?, நடந்தேவா போவேள்?”

“இல்லை, இல்லை, எல்லாம் நந்தி தான், வாகனம் தான்”

“என்னது உளர்றேள்! நந்தி, வாகனம்னுண்டு”

“இல்ல, இல்லை, நடை தான், வாகனம் தாங்கிறதைத் தப்பாச் சொல்லிட்டேன்”

“சரி சரி, ஆம் வந்தாச்சு இறங்குங்கோ”

“ஆஹா, பேஷா, ஆமா, நீ என்ன கோவில்ல தான் இருக்கியா?”

“கோவில்ல சுவாமிதான இருக்கும்!, நீங்க என்ன கேட்க வர்றேள்னு நேக்குப் புரியலையே! அம்மா, அம்மா,..”

” என்னாடா?”

” இவர் அப்பாக்குத் தெரிஞ்சவராம், இலையைப் போடச் சொன்னார், செத்த நாழில வரேன்னார்”

“சரி சரி! வாங்கோ மாமா, உள்ற வாங்கோ, பாத்து, தலையைக் குனிஞ்சு வாங்கோ, நிலை இடிச்சுடப் போறது”

“ம், ம்ம், சொந்த ஆமா, ரொம்பச் சின்னதா இருக்கே!” என்றார் கடவுள்.

“சொந்தமா, எங்களுக்கு ஏது சொந்தம், எல்லாம் வாடகை தான்! நீங்க உட்காருங்கோ, தீர்த்தம் சாப்பிடறேளா!”

“ஆஹா, பேஷா”

“என்னது தண்ணி கசக்கற மாதிரி இருக்கே”

“இது பரவால்லை, சில சமயம் உப்பு வேற கரிக்கும், வாய் எல்லாம் புண்ணாப் போய் எரியும். சில சமயம் சாக்கடைத் தண்ணி எல்லாம் கலந்து வேற வரும். என்ன பண்றது தலை எழுத்து, குடிச்சு தானே தீரணும். காலம் காலமா இதைத் தான் சாப்பிட்டுண்டு வரோம் நாங்க, ஆமா, நீங்க என்ன மெட்ராசுக்குப் புதிசா?”

“ஆமா, ஆமா, நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருந்தாரோன்னோ, அவரோட சொந்த மச்சினன் நான், ஆமா, நீங்க எப்படிக் கண்டு பிடிச்சேள் நான் மெட்ராசுக்குப் புதுசுன்னு?”

“இல்லை, எல்லாத்தையும் ரொம்ப ஆச்சரியமாப் பார்க்கறேளே அதான் கேட்டேன்”

“ஆமா, ஆமா, ஹி..ஹி..” கடவுள் அசடு வழிந்தார்.

“அந்தக் காத்தாடியை வேணாப் போடட்டுமா, செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, அவர் வந்ததும் இலையைப் போட்டுடலாம், சரியா,”

“ஆஹா”

கடவுள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, நவீன காற்றாடியின் குளுமையான காற்றில், சற்றே தன்னை மறந்தார்.

“அய்யோ! அய்யோ… அய்யய்யோ!”

 …. சத்தம் கேட்டதும், “ஔவ்வ்! ஒவ்”  என்று உளறிக் கொண்டே திடுக்கிட்டு எழுந்த கடவுளுக்கு, தாம் எங்கிருக்கிறோம், என்ன நடந்தது என்பதே முதலில் புரியவில்லை. சில நிமிடம் வரை என்னது!  என்னது! எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிய வந்தது, குடுமி இல்லாத அம்பி, தனது குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல், டி.வி யை, வேண்டும் என்றே அலற வைத்திருக்கிறான் என்பது.

டி.வியில் ஏதோ ஒரு பாடல் காட்சி ஔடிக் கொண்டிருந்தது, ஆணும் பெண்ணுமாய் கன்னா பின்னாவென்று குதித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கடவுளுக்கு மேலும் ஆத்திரமாய் வந்தது.

“இந்த எழவுக்குத் தான் அப்போவே மன்மதனை எரிச்சுத் தொலைச்சேன், ஆனா என்ன பிரயோசனம்! எல்லாம் ரதியால கெட்டது” என்றார்.

“அய்யோ மாமா! உளறாதீங்கோ, இது ‘மன்மதன்’ இல்ல, ரதி இதுல நடிக்கவும் இல்ல. இது ரவி நடிச்ச ‘எம்.குமரன், S/o மகாலக்ஷ்மி’  படம். ‘மன்மதன்’, ‘சிம்பு- ஜோதிகா’ நடிச்ச படம்.  நீங்க சினிமால்லாம் பாக்கவே மாட்டேளா” என்றான் அம்பி.

“வாழ்க்கையே ஒரு சினிமா தானேப்பா” என்றார் கடவுள்.

“ஆமா, ஆமா, அப்போ எல்லாம் நாடகம்னாங்க, இப்போ சினிமான்றாங்க அவ்வளவு தான் வித்தியாசம்”

“ஆமா, நீ என்ன படிக்கிறயா, வேலை பாக்கறயா?”

“இரண்டுமே செய்றேன்”

“ஆஹா, பேஷ், பேஷ், ஆமா என்ன படிக்கிறே?”

“பள்ளிக்கூடத்துல பாடமும் படிக்கறேன், ஆத்துல வேதமும் படிக்கறேன், நேரம் இருக்கறப்போ அப்பாவுக்கு ஒத்தசையா கோவில்ல வேலையும் செய்றேன். அதோ அந்த போட்டோல, என் கூட இருக்கிறது தான் எங்க அக்கா. பெங்களூர்ல இருக்கா. பெரிய கம்பெனில வேலை பார்க்கறா. அவ தான் மாசா மாசம்  நான் நல்லா படிக்கப் பணம் அனுப்பறா. நான் கலெக்டருக்குப் படிக்கப் போறேன் மாமா!”

“சமத்து, குழந்தைகள்னா இப்படி இல்ல இருக்கனும்!”

“ஆமா, உங்க பசங்க என்ன பண்றாங்க மாமா!”

“அவாளைப் பத்திப் பேச்சே எடுக்காத, ஆமா, எனக்குக் கெட்ட கோபம் வரும். எல்லாம் தகப்பனுக்கு மீறினதுங்க!”

“ஒகோ, கோபத்துல நல்லது. கெட்டதுன்லாம் வேறே இருக்கோ”

“என்னடா இது, பெரியவாள் கிட்ட மட்டு மரியாதை இல்லாமப் பேசிண்டு” என்ற படியே உள்ளே நுழைந்தார் கணபதி சாஸ்திரிகள்.

“வாங்கோ, வாங்கோ, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா பொழுது போகப் பேசிண்டு இருந்தான் அம்பி. என்னடா நாழியாச்சே இன்னும் காணோமேன்னு பார்த்தேன். வந்துட்டேள்”. என்றார் கடவுள்.

“ஆமா, ஆமா, அம்மாடி செத்த இலையைப் போடு, சாயரக்ஷைல நிறைய வேலை இருக்கும் போல இருக்கு” தனக்குள் அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.

“என்ன ஒரு நூறு ரூபாயாவது வந்திருக்குமா வரும்படி உங்களுக்கு” மகிழ்ச்சியுடன் வினவினார் கடவுள்.

“அடக் கிரகச் சாரமே! நன்னாக் கேட்டேள் போங்கோ, இது ரொம்பப் பழங்கால, சாதாரண, சின்னக் கோயில் சுவாமின்! பெரும்பாலும் அக்கம் பக்கத்துல உள்ள ஏழை, பாழைகள் தான் வருவா. அவா கையில என்ன இருக்கோ, அதை அவா மனசுக்கு ஏத்த மாதிரி உண்டியல்லயோ, தட்டுலயோ போட்டுட்டுப் போவா! மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல. 5ம் வரும். 10 வரும். சில சமயம் ரொம்ப விசேஷ நாள்னா 50ம் வரும். என்னவோ போங்கோ, சிலரை ஆகா, ஔகோன்னு ஆகாசத்துக்குத் தூக்கற அந்தக் கடவுள், சிலரை அப்படியே கீழேயே தான் வச்சிருக்கான். என்ன காரணமோ யாருக்குத் தெரியும்? எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.” என்றார் கணபதியார்.

“எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும் சுவாமின், நமக்கு என்ன தெரியும்?” என்றார் கடவுள் புன்சிரிப்புடன்.

எல்லாரும் உணவை உண்டுவிட்டு, களைப்பு தீரத் திண்ணையில் அமர்ந்தனர்.

“இந்தாங்கோ சுவாமின், கும்பகோணம் வெத்திலை! உங்களுக்கு வெத்திலை போடற பழக்கம் உண்டோன்னோ?”

“ஆகா, பேஷா, அதான் அர்ச்சனை பண்ணும் போதே, நைவேத்தியத்தும் போதே வச்சிடறாளே, அப்புறம் எப்படி சாப்பிடாம இருக்க முடியும்?”

“உண்ட மயக்கம், அதான் அர்ச்சனை, நைவேத்தியம்னு ஏதேதோ உளர்றேள், அது போகட்டும், ஏன் எப்போ பார்த்தாலும் கோவில், பிரசாதம், நைவேத்தியம் அப்படின்னே பேசிண்டு இருக்கேள்?”

“அது ஒண்ணுமில்லை! ஹி! ஹி!” என்றார் கடவுள்.

” சரி! சரி! செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, சாயந்திரம் காப்பி ஆனதும், நீங்க எங்க போணுமோ அங்க அம்பியை விட்டு, பஸ் ஏத்தி விடச் சொல்றேன். சரியா?”

“சரிதான்னா!” நீங்க சொல்லிட்டேள்னா சரி”, சொல்லிவிட்டு அப்படியே திண்ணையில் சாய்ந்து, மீண்டும் மெல்லத் தூக்கத்தில் ஆழ்ந்தார் கடவுள்.

          ************************************

“என்ன சுவாமி நல்ல தூக்கம் போல இருக்கே” சாஸ்திரியார் எழுப்பவும் கடவுள் எழுந்து கொண்டார்.

“ஆமாம்! ஆமாம்! உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டே”

“ஆமா, ஆமா, குண்டருக்கும் கூட தான் உண்டு. அடேய் அம்பி, போய் பாலை வாங்கிண்டு வா சீக்கிரம்!” சாஸ்திரியார் விரட்டினார்.

” என்னன்னா! உங்காத்துல மாடு, கன்னு எல்லாம் இல்லயா, பாலைப் போய் வெளில எங்கேயோ வாங்கிண்டு வரச் சொல்றேளே” என்றார் கடவுள் ஆச்சரயத்துடன்.

” நான் தான் மாடு!, இதோ இந்த அம்பி தான் கன்னுக் குட்டி, நீங்க வேற செத்த சும்மா இருக்கேளா, காலம் இருக்கற இருப்புல!. ஆமா, மெட்ராஸ் என்ன உங்க ஊர்னு நினைச்சேளோ. மாடு, கன்னுன்னு இஷ்டம் போல இருக்கறத்துக்கு, இது மாநிலத் தலைநகர் சுவாமி,  மாநிலத் தலைநகர்!”

“என்ன நகரோ, ஆனா நான் பார்க்கறவரைக்கும் எதுவுமே சரியில்லையே, வழியெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு. எங்கே பார்த்தாலும் ஒரே சாக்கடை. குப்பை, கூளம். கோயில் கிட்டயே, கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாம அசிங்கம் பண்ணி வச்சிருக்காளே! கிராமமே தேவலாம் போல இருக்கே!

“ஏன், உங்க கண்ணுல நல்லதே படாதோ, எப்போ பார்த்தாலும் தீவீர சிந்தனையா இருக்கேளே!”

“ஆமா, ஆமா… இல்லை, இல்லை,…. குரங்கு கைப் பூமாலையாப் போய்டுத்து இந்த பூமி, அதான்!”

“ஆமாமா அச்சரிதான்! அத்தை விடுங்கோன்னா, நீங்க எங்கே போகனும்னு சொன்னால் பையன் கொண்டு போய் விட்டுடுவான். காபி சாப்பிட்டவுடனே கிளம்பத் தோதா இருக்கும்”

“நான் வந்து … இங்க ஏதோ பாற்கடல் இருக்காமே, அதைத் தான் பார்க்கனும்னு ஆசையா இருக்கு”

“ஔகோ! நீங்க பீச்சைத் தான் சொல்றேள்னு நினைக்கிறேன். அது பாற்கடல் இல்லை சுவாமி, நாற்கடல், ஒரு பெரிய சாக்கடையே அதுல கலக்கறது தெரியுமோன்னோ”

“அது என்னவோன்னா, ஒரு தடவை பார்த்துட்டேன்னா, நன்னா இருக்கும்”

“ஆகா, பேஷா, அம்பி இவரைக் காப்பி சாப்பிட்டதும், அங்க கூட்டிக் கொண்டு போய் விடு. இல்லை பஸ்ல ஏத்தி விட்டாலும் சரி”

“சரிப்பா”

காபி ஆனதும் கடவுளிடமிருந்து ஒரு ஏப்பம் வெளிப்பட்டது. கடவுள் மனதிற்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது.

“சரின்னா, நான் கிளம்பறேன், ஏதோ உங்களை மாதிரி உள்ளவாலாள தான் நாட்டுல மழையே பெய்றது, ஏதோ என்னாலான உதவி, மறுக்காம வாங்கிக்கணும்” சொன்ன கடவுள் கையைத் திறக்க அதில் ஒரு  நெல்லிக்காயளவு தங்க உருண்டை இருந்தது.

“அய்யய்யோ, இது ஏதுடா வம்பா இருக்கு, நான் என்ன பண்ணிட்டேன்னு எனக்கு இதைத் தர வரேள். எனக்கு எதுவும் வேண்டாம்னா” மறுத்தார் சாஸ்திரியார்.

“சும்மா வாங்கிக்குங்கோ, கடவுள் கொடுக்கற மாதிரின்னு வச்சுக்கங்களேன்.”

“வேண்டவே வேண்டாம்னா. அப்புறம் யாராவது பார்த்துட்டு, கோயில் நகையை உருக்கி தங்கமா வச்சிருக்கான் அப்படிம்பா, இந்தக் கால் வயத்துக் கஞ்சியை மானத்தோட குடிக்கிறேனே அது போதும் நேக்கு, அந்த பகவான் ஒரு போதும் எங்களைக் கைவிட மாட்டான்.”

“ஆமா, நிச்சயமாக் கைவிட மாட்டான், நானும் கைவிட மாட்டேன். கவலைப் படாம இருங்கோ. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” நெகிழ்ச்சியுடன் சொன்ன கடவுளுக்குக் கண்கள் கலங்கி விட்டன. ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த திருப்தி அவர் மனதில் நிலவியது.

அனைவரிடமும் விடை பெற்ற கடவுள், மோட்டார் சைக்கிளில் உட்கார அம்பி, இப்போது பேண்ட், ஷர்டுக்கு மாறி, வேகமாக கடற்கரையை நோக்கி வண்டியைச் செலுத்தத் தொடங்கினான்.
 
                                  *******************************
“இது தான் பீச்! நல்லா பார்த்துக்குங்கோ” என்றான் அம்பி

“ஆகா, ஆகா, ரொம்ப ஆனந்தமா இருக்கே, ஜனங்க எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்கா, எனக்கு சந்தோஷத்துல  கூத்தாடனும் போல இருக்கே”

“அதெல்லாம் இங்க பண்ணப்படாது, பண்ணினா போலீசுல புடிச்சுண்டு போய்டுவா, கூத்தாடறதுக்கெல்லாம் இங்க தனி இடம் இருக்கு.”

“அப்படியா, நிஜமாவா, என்னை அங்க கூட்டிண்டு போறியா அம்பி. நான் நன்னா கூத்தாடுவேன் தெரியுமா நோக்கு?”

” சாரி மாமா, உங்களையும் என்னையும் அங்க உள்ள விட மாட்டா, எல்லாரும், ஆணும், பெண்ணுமா ஜோடி ஜோடியாத் தான் போகணும். அதுவும் இந்த மாதிரி டிரஸ் போட்டுண்டு போனேள்னா, வாசல்ல வச்சே அடிச்சுத் துரத்திடுவா.”

“அப்படியா, அய்யோ, திடீர்னு ஜோடிக்கு இப்போ நான் எங்கே போறது?” சோகமானார் கடவுள்.

“சக்தியை அழைத்தாள் வருவாளா?” யோசனையில் ஆழ்ந்தார்

“ஆமா ஏதோ கெட்ட வாடை வருதே காத்துல அது ஏன்” வினவினார் கடவுள் மூக்கைத் தேய்த்தவாறே!

“அதுவா, அதோ அங்க பாருங்கோ! எல்லாரும் மீன் பிடிச்சுட்டுக் காய வச்சிருக்காங்க, வலையெல்லாம் காயப் போட்டிருக்காங்க அது தான், மீன் வாசனை தான் எல்லாம்”

“எனக்கு என்னவோ வயத்தைக் குமட்டறதுடாப்பா.. “

“அடப் போங்க மாமா! இதுக்கே இப்படிச் சொல்றீங்களே! இங்க “காசிமேடு”ன்னு ஒரு இடம் இருக்கு. அங்க நீங்க கிட்ட போனாலே போறும். அவ்வளவு தான். ஒரு வழியாயிடுவீங்க”

“அப்படியா, ஏன்?”

“ஏன்னா, அங்க தான் மீன்பிடித் துறைமுகம் இருக்கு. அங்க தான் மீனைக் காயவச்சு கருவாடா மாத்தறாங்க. அதுக்கானா கோடௌன்லாம் அங்க தான் இருக்கு. அங்க இருக்கறவங்களும் மனுஷங்க தான! அவங்க எல்லாம் பொறுமையா இல்ல! உங்களால கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்க முடியலையா?. அவ்வளவு சுகவாசியா நீங்க”

“இல்லடா அம்பி! கோச்சுக்காதே, சந்தனம், சாம்பிராணி பன்னீர்னு ஒரே வாசனையோடே இருந்துட்டேனா அதான் ஒண்ணும் முடியலை” 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது…. இடையில் ஒரு குரல்..

“யோவ் பெரிசு, இன்னா, ………….ன்னா பத்து, ………..ன்னா இருவது சரியா! இன்னான்றே,?!” என்றது.

அதிர்ச்சியானார் கடவுள்.

“வாங்கோ மாமா, ஔடிடலாம். இவாள்லாம்… இவாள்லாம்…” பையன் கத்த ஆரம்பித்தான்.

புதிய நபரை முறைத்துப் பார்த்தார் கடவுள்.

அவருக்கு அந்நபர் மீது கோபம் வரவில்லை. மாறாகத் தான் உமையொரு பாகம் கொடுத்த தோற்றமும், படைப்புக் கடவுளான பிரம்மனின் மீது ஆத்திரமும் ஏற்பட்டது. மானிட உடல் எடுத்து வந்ததால், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய தனது இயலாமையை நினைத்தும் மனம் நொந்தார்.

“இந்தாங்கோ நீங்க கேட்ட பணம், தயவு செய்து இங்கேருந்து போயிடுங்கோ” என்றார் கடவுள் அந்நபரிடம் இரக்கத்துடன்.

” ஆமா, ஆமா, நம்பளை நைசாக் கழட்டி விடு, ஆனா, ஷோக்கா, சின்னப் புள்ளைய தள்ளிக்கினு வந்திருக்கியே, பெரிய ஆள்ப்பா நீ” சொன்ன நபர் அங்கிருந்து வேகமாக நகர…

முரட்டு மீசை மற்றும் உடுப்பு அணிந்த நபர் ஒருவர் அந்நபர் முன்னால் வந்து நின்று….

“ஏய் இன்னாம்மே, டெய்லி எஸ்கேப்பானா விட்டுருவோமா நாங்க, எடு ரூபாயை”  அந்த நபர் கதறக் கதற,  மொத்தக் காசையும் பறித்துக் கொண்டு போனார் மீசைக்காரர்.

” ஏய் அம்பி  என்னடா இதெல்லாம்!” என்றார் கடவுள் வருத்தத்துடன்

“பிச்சை எடுக்குமாம் பெருமாளு, அத்தைப் பிடுங்குமாம் அனுமாரு! இது தான் மாமா மெட்ராஸ், நீங்க பார்க்கணும்னு நினைச்ச பாற்கடல். எப்படி ஓ.கேவா”

“அய்யோ வேண்டாம்! வேண்டாம்! நான் எங்கேருந்து வந்தேனோ அங்கேயே போறேன்” சொன்ன கடவுள், “அம்பி! நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா, நான் தான் கடவுள்” என்றார்.

“ஹ! ஹ! இது மாதிரி சொல்லிக்கிட்டு நிறையப் பேரு திரியறாங்க மாமா!  ஏன், இங்க கூட  ஒருத்தர் கிரீடம் எல்லாம் வச்சுக்கிட்டு, டெய்லி டான்சு ஆடுறாரு, அதுவும் பொம்பளைங்க கூட, கேட்டா அவரு கிருஷ்ணன் அவதாரமாம். அவர் கைல சங்கு சக்கரம் எல்லாம் இருக்காம். இன்னொருத்தர்,  தன்னைப் பாக்க வர்ற எல்லார் மேலயும் எச்சிலைத் துப்பிட்டு,  ‘உன் பாவம் போச்சுங்கிறாரு’ ஆமா நீங்க எந்த மாதிரிக் கடவுள்?, எந்த மாதிரி அவதாரம்?” என்றான் அம்பி கிண்டலாய்.

“இல்லையப்பா! நான் தான்  நிஜமான கடவுள்”

” ஔகோ சரி!  அதை எப்படி நான் நம்புறது. ஏதாவது நம்பற மாதிரி செய்யுங்களேன் பார்க்கலாம்” கிண்டலாய்ச் சொன்னான் அம்பி.

“ம்! அற்புதம் அதிசயம் எல்லாம் பண்ணித் தான் கடவுள் தன்னை நிரூபிக்க வேண்டியுள்ளது.  எல்லாம் கலிகாலம்! என்ன அற்புதம் பண்ணட்டும், வாயில இருந்து லிங்கத்தை வரவழைக்கட்டுமா!. இல்லை வெறும் காத்துல இருந்து செயின் வரவழைக்கட்டுமா?”

“லிங்கமா, என் கூட படிக்கிற பையனே வாயில இருந்து லிங்கம் எடுக்கறான். செயின் வரவழைக்கறதெல்லாம் சும்மா ஔல்ட் டிரிக்! வேற ஏதாவது புதுசா..”

“சரி! சரி! இப்போ உன்னை உங்க ஆத்து மொட்டை மாடிக்கு அழைச்சுண்டு போறேன் சரியா, கண்ணை மூடிக்கோ, என் கையைப் பிடிச்சுக்கோ”

“நிஜம்மாவா! சரி மாமா” அம்பி அரை குறையாகக் கண்ணை மூடிக் கொண்டான்.

“விஷ்க்”

ஏதோ ஒரு சப்தம் கேட்டது.. அடுத்த கணம்…  அம்பியும் கடவுளும், அம்பி வீட்டு மொட்டை மாடியில் இருந்தனர்.

“என்ன அம்பி இப்போ நம்பறியா?”

“மாமா, மாமா நீங்க நிஜமாவே கடவுளா?. இல்லை. சித்தரா!.. மந்திரவாதியா? அய்யோ… என்னால நம்ப முடியலையே!” அய்யோ..நான் எப்படி.. எப்டி.. இவ்ளோ சீக்கிரம் இங்கே வந்தேன்.. ஆச்சர்யமா இருக்கே… என் வண்டி எங்கே…”

“கீழே பார்”

அம்பி எட்டிப் பார்த்தான் அவன் வண்டி வீட்டு வாசலில் பார்க்க செய்யப்பட்டிருந்தது.

“அய்யோ மாமா!  மாமா! என்னால நம்ப முடியலையே! நிஜமாவே கடவுள் இப்படி எல்லாம் வருவாரா என்ன? அய்யோ ரொம்ப ஆச்சர்யமா இருக்கே!”

“அம்பி! பரவாயில்லை நீ நம்ப வேண்டாம்! ஆச்சர்யப்படவும் வேண்டாம். எல்லாம் ஒரு கனவுன்னே வச்சுக்கோ. ஆமா, கடவுளை நீ நம்பவே வேண்டாம். உன்னை நீ முழுசா நம்பினாப் போறும். கடவுள் பேரைச் சொல்லி, நாட்டை ஏமாத்திக்கிட்டு இருக்கும் போலி சாமியார்களையும், வெத்து ஆன்மீகவாதிகளையும் விட, கடவுள் இல்லைன்னு சொல்ற ஒரு நாத்திகன் எவ்வளவோ மேல். நாத்திகனா இருக்கறதுல எந்த தப்பும் இல்ல. போலி ஆத்திகனா இருக்கறதை விட உண்மையான நாத்திகனா இரு.”

சொல்லி விட்டுக் கடவுள் மறைந்து போக…..

அம்பி அப்படியே திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்.

    **********************

.... இங்கே பதியப்பட்டது கதை | Leave a Comment »

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது

 இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:

  ”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
   ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
   அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
   ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
   மம தாரித்தர்ய வித்வேஷணாய
   ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

3.வடுக பைரவ மூல மந்த்ரம்:

  ”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்
   குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:

  ”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே                                     ஸ்வாந வாஹாய தீமஹி
   தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

  ”ஓம் திகம்பராய வித்மஹே                 தீர்கதிஷணாய தீமஹி                                              தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.

பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.

ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.

திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.

ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம் அல்லவா?

.... இங்கே பதியப்பட்டது வழிபாடு | Leave a Comment »

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரம்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

      ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:

   ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:

 ஸ்ரீ ஈச்வர உவாச:-

   வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
    விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
   நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
    விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

   ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
    ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
   நகாக்ரை: சகலீசக்ரே
    யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

   பதா வஷ்டப்த பாதாளம்
    மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
   புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
    மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

   ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
    ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
   ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
    தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

   ஸர்வேந்த்ரியை ரபி விநா
    ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
   யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
    தமஹம் ஸர்வதோமுகம்!

   நரவத் ஸிம்ஹவச்சைவ
    யஸ்ய ரூபம் மஹாத்மன:!
   மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
    தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

   யந்நாம ஸ்மரணாத் பீதா:
    பூத வேதாள ராக்ஷஸா:!
   ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
    பீஷணம் தம் நமாம்யஹம்!!

   ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
    ஸகலம் பத்ர மச்னுதே!
   ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட:
    யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!
 
   ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
    ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
   பக்தாநாம் நாசயேத் யஸ்து
    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!

   நமஸ்காராத்மகம் யஸ்மை
    விதாய ஆத்ம நிவேதனம்!
   த்யக்தது: கோகிலாந் காமாந்
    அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

   தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
    ஹ்யாத்மான: பரமாத்மன:!
   அதோஹமபி தே தாஸ:
    இதிமத்வா நமாம்யஹம்!!

   சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
    பதாநாம் தத்வ நிர்ணயம்!
   த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
    ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!

**********

மஹா நாராயண உபநிஷத்:
        அகோர மந்த்ரம்:

   அகோரேப்ப்மோஸத
   கோரேப்ப்யோ கோர கோர
   தரேப்ப்ய : | சர்வேப்ப்யஸ்

   சர்வ சர்வேப்ப்யோ நமஸ்தே
   அஸ்து ருத்ர ரூபேப்ப்ய: || 

இதை அனுதினமும் சொல்லி வர துஷ்ட, பேய், பிசாசுத் தொல்லைகள், ஏவல் செய்வினைகள், துன்பங்கள் நீங்கும்.

*******

.... இங்கே பதியப்பட்டது ஆன்மிகம் | Leave a Comment »

வசைக்கவியும் ஆசுகவியும்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

   தமிழுக்கு என்று ஒரு சிறப்புண்டு. அது தான் “சொல் பலிதம்”. ஒருவரை வாழ்த்தினாலும், தூற்றினாலும், உடன் பலித்துவிடும் ஆற்றல் வாய்ந்ததாகச் சில சொற்கள் மாறிவிடுகின்றன. இதற்கு, பாடும் பாடல் மட்டுமல்லாது அதைச் சொல்லும் நபரும் முக்கியமானவராக விளங்குகிறார்.

எத்தனையோ புலவர்கள், எத்தனையோ பாடல்கள்…. ஔவையாரிலிருந்து, கண்ணதாசன் வரை எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்.

வாழ்த்துதல், வைதல், புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல், தூற்றுதல், சபித்தல் எனப் பல படிநிலைகளாக, இவை காணப்படுகின்றன.

இறந்தவரை உயிர்ப்பித்தல், பட்ட மரத்தைத் துளிர்க்க வைத்தல், மண் மாரி பொழியவைத்தல், கோயில் கதவைத் திறக்க வைத்தல், கொல்ல வந்த யானையையும் பின் வாங்க வைத்தல், ஊர், கோயில், நாடு, நகரம் நாசமாகச் செய்தல், இறந்துபடச் செய்தல், முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக்குதல், கடவுளையே ஏவலாக வேலை கொள்ளல் எனப் பல அற்புதங்கள், பல நபர்களால் செய்யப்பட்டு இருக்கின்றன.

இவை எல்லாம் இறை ஆற்றலா, இல்லை சொல்லாற்றலா, இல்லை பாடும் நபரின் உள்ள உறுதியா? அல்லது தமிழின் வலிமையா? ஆராயப் புகுந்தோமானால் பல உண்மைகள் தெரியவரும்.

இறை ஆற்றல் என்பது சில இடங்களில் ஏற்குமாறு இல்லை. ஏனெனில், அந்த இறைவனின், ஆலயத்தையே, வழிபாடு இல்லாமல் தூர்ந்து போகுமாறு, கவி காளமேகம் பாடிச் சபித்துள்ளார். இன்னமும் அந்தக் கோயில் அந்த நிலையில் தான் உள்ளது. வழிபாடுகள் ஏதும் இல்லை. அதே சமயம், அந்த இறையையே, மோர் கொண்டு வரக் கம்பரும், திருமணம் பேச, காதல் தூது செல்ல, பொன், பொருள் தேவைக்கு எனச் சுந்தரரும், மயில் மீது ஆடுமாறு அருணகிரியும் எனப் பலரும், பலவாறாகப்  பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கும் பொழுது, இறை ஆற்றல் இல்லாமல் இவை நடந்திருக்குமா என்பதும் ஆராயப்பட வேண்டியதாகிறது.

‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என்று புகழ் பெற்றவர் காளமேகப் புலவர். வசைக்கொரு “காளமேகம்” என்றும் புகழப் பெற்றவர். மேகம் மழை பொழிவது போல் இவர் கவி மழை பொழிவதால் இப்பெயர் பெற்றுள்ளார். மேலும் “ஜவ்வாதுப் புலவரும்” வசைபாடுவதில் புகழ் பெற்றவரே. “வசைக் கவி ஆண்டான்” என ஒருவர் இருந்ததாகவும் தெரிய வருகின்றது. இன்னும் பலர்… இரட்டைப் புலவர்கள் முதல் பாடுவார் முத்தப்பர் வரை என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அறம் வைத்துப் பாடியதால், மூன்றாம் நந்திவர்மன் உயிர் துறந்த கதையையும் உண்டு

ஆக, தமிழுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. இக்காலத்திலும், இவ்வாறு வசை பாடுபவர்கள் உள்ளனரா என்பது பற்றித் தெரியவில்லை.

ஒரு கதை உண்டு. நாம் பேசும் போது நல்லதையே பேச வேண்டுமாம். நம்மைச் சுற்றி சில தேவதைகள் இருக்குமாம். அவை நாம் என்ன சொன்னாலும் “ததாஸ்து” சொல்லிவிடுமாம். (’அப்படியே ஆகட்டும்’ என்பது பொருள்). நாம் ஏதும் தீய வார்த்தைகளைப் பேசினாலோ, திட்டினாலோ, இந்தத் தேவதைகள், “ததாஸ்து” சொல்லிவிடுமாம். அதனால், அந்த வார்த்தைகள் பலித்து, அந்தத் தீய நிகழ்வுகள் உடனே நடந்துவிடுமாம். அதனால் தான் பெரியோர்கள் நல்லதையே பேச வேண்டும், நினைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் போலிருக்கின்றது.

இனி, வரலாற்றில் சில அற்புத நிகழ்வுகள், தமிழால் நடந்ததை, தமிழ் நடத்தியதை, அதன் மூலம் தமிழ் பெற்ற  சிறப்பை, பெருமையை சற்றே உற்று நோக்குவோமா?
1. நக்கீரர்

தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தமிழும், தமிழர் அறமும் போற்றப்பட்ட காலம். இந்நிலையில், ஆங்கே விஜயம் செய்தான் ஒரு வடமொழிப் புலவன். அவன், தமிழை, நீசர் பாஷை என்றும், தமிழ் தீயவர்கள் மொழி என்றும், தமிழ் சிறப்பிழந்த மொழி என்றும், வடமொழி அளவிற்குச் சொல்லாட்சி மிக்கது அல்ல என்றும் இழிவாகப் பேசி இருக்கிறான்.

நக்கீரர் பலவாறு அறிவுறுத்தியும் அவன் திருந்தவில்லை. மேலும் இழித்தும், பழித்தும் தூற்றியுள்ளான். அவ்வளவுதான்! நக்கீரருக்கு வந்தது கோபம். வெளிப்பட்டது பாடல் வசையாக!

    “ஆரிய நன்றுதமிழ்  தீதென  உரைத்த
     காரியத்தாற் காலக் கோட்பட்டானைச் – சீரிய
     அந்தண் பொதியில கத்தியனார் ஆணையாற்
     செந்தமிழே தீர்க்க ஸ்வா கா”

அவ்வளவுதான். அந்த வடமொழிப் புலவன் உடல், தீயிற் பட்டால் போல எரிய ஆரம்பித்து விட்டது. தான் இறக்கப் போவதை உணர்ந்த அச்சத்துடன், அவன், நக்கீரரை வணங்கித் தம் பிழை பொறுக்குமாறு வேண்ட, நக்கீரரும் மனம் இறங்கி, பாடலை மாற்றிப் பாடினார்.

அது…

   ”முரணில் பொதியன் முதற்புத்தேள் வாழி
    பரண கபிலரும் வாழி – மரணியல்
    ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்
    ஆனந்தஞ் சேர்க்க ஸ்வா கா!”
 

********

.... இங்கே பதியப்பட்டது இலக்கியம் | Leave a Comment »

Out of body experince

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

    Out of body experince

முதலில் இந்த Out of body experince என்றால் என்ன என்பது பற்றித்  தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது இறப்பிற்குப் பின் உயிரின் அனுபவத்தைக் குறிக்கிறதா என்றால்.. இல்லை. நாம் உயிரோடு இருக்கும் போதே, நம் உடலை விட்டு சற்று நீங்கிய நம் ஆத்மாவின் அனுபவம் அல்லது பயணமே Out of body experince என்று கருதலாம்.

சரி! உடலுக்கு வெளியே ஆத்மாவின் பயணங்களும் அனுபவங்களும் எங்ஙனம் சாத்தியம்? அப்பொழுது இந்த உடலின் நிலை என்ன?. நாம் இறந்து விடுகிறோமோ?… இல்லை… இயக்கமில்லாமல் இருக்கின்றோமா?. உயிர் வெளியேறுவது உண்மையா?. அப்பொழுது வேறு ஏதாவது உயிர் இந்த உடலை ஆக்ரமித்து விட்டால்….????

உண்மையில் இது நிஜமா? இல்லை.. கற்பனையா?… ஒரு வேளை வெறும் கனவா?

முனிவர்கள், ரிஷிகள் போன்றோருக்கு மட்டும் தான் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இந்த மாதிரி அனுபவங்கள் மனிதர்கள் எல்லோருக்கும் சாத்தியமா? உயிர்கள் என்றால் மிருகங்களும் தானே அவற்றில் அடக்கம். அவற்றுக்கும் இவ்வகை உணர்வுகள், அனுபவங்கள் ஏற்படுமா?…. கேள்விகள்… இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்.. நாம் முதலில் நம் உடலையும், உயிரையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

முதலில் நாம் உடல் என எண்ணும் இந்த சரீரம் வெறும் ஒரே உடல் மட்டுமன்று. இதனுள் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. சொல்லப் போனால் மூன்று வகை சரீரம் நமக்குள் உள்ளது என்பதே உண்மை.

அவை
1. தூல உடல் (அன்னமய கோசம்)
2. காரண உடல் (ஆனந்தமய கோசம்)
3. சூட்சும உடல்  (பிராணமய, விஞ்ஞானமய, மனோமயகோசம்) -என்பனவாகும்.

தூல உடலானது நம் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றாகும். நம் கண்ணால் மற்றவரின் தூல உடலைப் பார்க்க இயலும். ஆனால் சூட்சும உடலைக் காண இயலாது. இது நம்முள் ஒளிரூபமாக வியாபித்து இருக்கக் கூடிய ஒன்றாகும். சித்தர்கள், முனிவர்கள் போன்றோரால் இந்த சூட்சும உடலையும், அது வெளிப்படுத்தும் ஒளியை வைத்து, அந்த ஆத்மாவின் உண்மை பரிபக்குவ நிலையையும் அறிய இயலும்.

பொதுவாக, கர்மாவாலும், பாவச் சுமையாலும் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள் கருமை நிற ஒளியை வெளிப்படுத்தும். புண்ணிய ஆத்மாக்களின் உடலில் இருந்து வெண்மை நிற ஒளிவரும். கோள்களையும், வினைகளையும் வேரறுத்த, தேவ நிலை ஆன்மாக்கள் பொன்னிற ஒளியை வெளிப்படுத்தும் என்பதே உண்மை. இவற்றைச் சாதாரண மனிதர்களால் கண்டறிய இயலாது.

காரண உடல் என்பது காரண, காரியங்களுக்காக, நம்மை செயல்படத் தூண்டி, கர்ம வினைப் படி நம்மை வழிநடத்துவதாகும். காரண உடலே தூல உடலை செயல்படுத்துகிறது. அனைத்து வகைக் காரண காரியங்களுக்கும் காரணமாகிறது. இந்த காரண உடல் பற்றி மனிதன் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றாலும் இது பற்றி ஔரளவேனும் அவன் அறிந்திருக்கிறான் என்பது உண்மை.

ஆனால் சூட்சும உடலை ஒருவன் இந்தத் தூல, காரண உடல் நிலையைத் துறந்து அல்லது முற்றுமாக அவை பற்றி அறிந்த பின்னரே அறிய முடியும். இந்த சூட்சும சரீரத்தையும் துறப்பதே ஜீவன் முக்தி.

மேலும் இந்தத் தூல உடல் மூலம் தனது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் எஞ்சிய சூட்சும சரீரத்தால், சூட்சும உலகங்களில் சஞ்சரித்து பரிபக்குவ நிலை எய்திய பின்னரே ஜீவன் முக்தி எனப்படும் பிறவா நிலையை எய்த முடியும்.

விளக்கமாகச் சொல்லப் போனால், இந்த சூட்சும உடலே ஒருவனது அந்தராத்மா. அதற்கு எல்லாமும் தெரியும். இப்பிறப்பு, இதற்கு முற்பிறப்பு என அனைத்தையும் அறியும். ஆனால், சாதாரண நிலையில்  மனிதனால் இது பற்றி எதுவும் அறிய இயலாது. அது இவனுள் மறைந்து, அனைத்தையும் ஔர் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது. தூல மற்றும் காரண உடல்களின் செயல்பாட்டால் கர்மவினைகளுக்கும் காரணமாகிறது.

ஒருவன் பிரம்ம நிலையை அல்லது முற்றும்  துறந்த ஞான நிலையை அடையும் பொழுது தனது சூட்சும உடலைத் தானே காண்கிறான். இதற்கு நமது யோக முறைகளும் பெருமளவு உதவுகின்றன. தியாச·பிகல் கூறும் ஏழு உலகங்களுக்கும், ஏழு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மனிதருக்கும், யோக சாத்திரங்களின் ஏழு சக்கரங்களுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது என்பதே உண்மை.

பொதுவாக தூல உடல் அனுபவம் என்பது நனவு நிலையில் புலன்கள் மற்றும் எண்ண ஔட்டத்தினால் ஏற்படுவது. ஆனால் சூட்சும உடல் அனுபவம் என்பது கனவா இல்லை நனவும் கனவுமற்ற விழிப்பு நிலையில் ஏற்படுகிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை. ஒருவிதமான குழப்பம் நிலவுவதாலும், ஆழ்மனம் அதனைக் கனவு என நினைப்பதாலும், அவற்றின் படிமங்கள் நினைவில் இருந்து புறமாக இருப்பதாலும் மனிதனால் இது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை.

Out of body experince பற்றிய  ஒருவரின் அனுபவம்…

 ”நான் சிறு பெண்ணாயிருந்த போது (பதிமூன்று வயதிருக்கும்) ஒருவருட காலமாக, இரவு படுக்கச் சென்றவுடன், நான் உடலிலிருந்து வெளிப்படுவதாகத் தோன்றும். வெளிவந்தவுடன் வீட்டின் மேலும், பிறகு நகரத்தின் மேலும் மிக உயரத்தில் சென்று விடுவேன். அச்சமயங்களில் நான் ஒரு தூய பொன்னாடையை அணிந்தவளாகவும், மிக உயரமானவளாகவும் என்னைப் பார்ப்பேன். நான் உயரே போகப் போக, எனது ஆடையானது பெரிதாய் விரிந்து, வட்டமாகி என்னைச் சுற்றி விரிந்து, ஒரு கூரையைப் போல நகரைக் கவிந்து கொள்ளும். பிறகு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துயரமடைந்தோரும் எனப் பலரும் பல திசைகளிலிருந்தும் அந்த ஆடைகளின் எல்லைக்குள் வந்து, என்னிடம் தங்களது குறைகளை முறையிடுவதைக் கண்டேன். அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவ்வாடையானது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல், உயிர்ப்புடனும், துடிப்பனும் நீண்டு சாந்தி அளித்தது. அவர்களும் தங்கள் குறைகளும் துயரங்களும் நீங்கப் பெற்று, மனத் திருப்தியுடன் தத்தம் உடல்களுக்குத் திரும்புவதைக் கண்டேன்.”

The Mother                                                                           Prayers and Meditations
 
 
 

.... இங்கே பதியப்பட்டது அமானுஷ்யம் | Leave a Comment »