திடீரென இருக்கையிலிருந்து எழுந்த சிவபெருமான் வேகவேகமாக எங்கோ கிளம்ப முற்படவும், சக்தி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“என்ன விசேஷம், எங்கே பயணம்?..” சற்று பவ்யமாக வினவினாள்.
‘சிவத்தைப் பார்க்க அனைவரும் இங்கு வந்து தவமிருக்க, இவர் வேறு எங்கோ செல்கிறாரே, என்னவாக இருக்கும்’ என்பது தான் உமையின் மனத்தில் இருந்த கேள்வி.
“பூவுலகம் தான் வேறென்ன!” சிவம் பதிலளித்தது.
“அய்யோ! அங்கேயா?” அச்சத்துடன் வெளிப்பட்டது பார்வதியின் குரல்.
“ஆமாம்! ஏன்?”
“ஏற்கனவே பட்ட பாடு போதாதா? மறுபடியுமா?”
“இல்லை! இப்பொழுது உலகம் ரொம்ப மாறி விட்டது. நீ நினைக்கின்ற மாதிரி இல்லை. பூவுலகம்”
“நிஜமாகவா?! அப்படியானால் சரி! நானும் வருகிறேன்!”
“வேண்டாம்! வேண்டாம்!”
“இல்லை! நான் வரத்தான் போகிறேன்”
“வேண்டாம் சக்தி! நான் சொல்வதைக் கேள்! தேவைப்பட்டால் நானே உன்னை அழைக்கிறேன்”
“சர ! தாங்கள் அழைக்கும் பொழுதோ அல்லது என் உதவி தேவைப்படும் பொழுதோ நான் அவசியம் அங்கு வருவேன்”
“நல்லது”
புறப்பட்ட சிவன் நேராக வந்து இறங்கியது சென்னையில் உள்ள ஒரு பழங்காலக் கோயில். உடனே தனது ரூபத்தை ஒரு வயதான மனிதர் போல் மாற்றிக் கொண்டவர், மெல்ல கோயில் குருக்களை அணுகிப் பேச்சுக் கொடுக்கலானார்.
“என்ன சுவாமின்! சௌக்கியம் தானே!”
“ம்ம் சௌக்யத்துக்கென்ன குறை! கண்ணு தான் வர வர சரியாத்தெரியலை! நீங்க யாருன்னு சரியாப் பிடிபடலையே!”
“நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருக்காரோன்னோ அவரோட மச்சினன் நான்”
“ஒஹோ! அவரா! நன்னாத் தெரியுமே நேக்கு! பாவம் ரொம்ப நல்ல மனுஷன்! அதான் சீக்கிரம் போய்ச் சேர்ந்துட்டார். இந்த லோகத்துல நல்லவாளுக்கே காலம் இல்லன்னா!”
“ஆமா! ஆமா! சரியாச் சொன்னேள்! அப்புறம் என்ன விசேஷம்! கோயில்ல எல்லாம் பாதி புதுசா பெயிண்ட அடிச்ச மாதிரி இருக்கே! ஈரமே இன்னும் காயலையே!, அங்க அங்க குப்பைக் கூளம், மஞ்சள், கும்பம், சொம்பு, என்ன விசேஷம்?”
“ஆமா! அந்தக் கொடுமையை ஏன் சாமி கேக்கெறேள்! கிட்ட வாங்கோ! செத்தக் காதைக் கொடுங்கோ சொல்றேன்”
“……………..”
“என்னது! அடக் கடவுளே! இதென்ன அக்கிரமமா இருக்கு, கேள்வி கேட்பாரே இல்லையா?”
“……………..”
“யார் சுவாமின் கேட்கறது? அந்த பகவானே பார்த்துண்டு சும்மா தானே இருக்கான்”
“அப்படிச் சொல்லாதீங்கோ! நல்லது, பொல்லாது எல்லாத்துக்கும் கைமேல பலன்! நான் சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்கோ”
“ஔஹோ, நீர் சும்மா விட மாட்டீரா, நீர் என்ன பெரிய பிராக்கியனா? போங்காணும், அவனவன் அஸ்தில புடிச்சுண்டு உட்காந்திருக்கான், இதுல நீர் வேற வந்து வெறுப்பேத்தறேள்”
“இல்லங்காணும், பகவான் பாத்துண்டு சும்மா இருக்க மாட்டான். நிச்சயம் தட்டிக் கேப்பான்னு சொல்ல வந்தேன்”
“ஆமா! நீங்க தான் மெச்சிக்கனும்! இங்க ஒரு பய வாயைத் திறக்கறது இல்ல தெரியுமோ! எல்லாருக்கும் பயம். எல்லாத்துக்கும் பயம்”
“அப்படியா?”
“ஆமா, ஆமா! ஏதோ பாட்டு கூட அந்தக் காலத்துல வருமே! வாய்ச் சொல்லில் வீரரடின்னு அந்த மாதிர.¢ எல்லாம் வேஸ்ட்”
“சரி! இன்னும் எவ்ளோ இடத்துல இந்த மாதிரி! உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி தப்புத் தப்பா யார் சொல்லித் தறா ?”
“அதெல்லாம் எங்கிட்ட எதுவும் கேட்காதீங்கோ சுவாமின்! , நேக்கு எதுவும் தெரியாது. 108ன்னு கேள்வி, அதுவும் தமிழ் வருஷப் பிறப்புக்குள்ளயாம்”
“நடக்கட்டும்! நடக்கட்டும்! அப்புறம் அவா அவா பாடு”
“ஆமா நடை சாத்தலயா?”
“இதோ ஆச்சு, உச்சிக் காலம் ஆனதும் விநியோகம், அது முடிஞ்சவுடனே நடை அடைச்சுட்டுக் கிளம்ப வேண்டியது தான்”
“பிரசாதமா!” என்றார் கடவுள் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு.
“பிரசாதம் மாதிரி தான், ஆனா பிரசாதம் இல்லை, உங்களுக்கு வேணும்னா நீங்க அந்தக் கியூல போய் நின்னுண்டேள்னா கிடைக்கும்”
“சரி!சரி! நான் பார்த்துக்கறேன், நீர் உம்ம வேலையைக் கவனியும்” சொல்லி விட்டுக் கடவுள் பெரிய கியூவில், நடுவில் போய் நின்று கொண்டார்.
“யோவ், பாத்தா பெர்ய மன்சனாட்டம் கீறே, தபா, ஷோக்கா உள்ளார பூர்றியே நைனா, இன்னா, நாங்கள்லாம் நிக்கறது தெர்ல!” என்றான் கூட்டத்தில் ஒருவன்.
“என்ன சொல்ற நீ நேக்கு எதுவும் புரியலையே”
“ஆங்! எதுவும் புரியாமத் தான் சைடுல வார்ரீயா நைனா, போ, போ, அந்தாண்ட, கடைசில போய் நின்னுக்கோ, முன்சாமி அண்ணாத்தேக்கு வழி விடு”
கடவுள் தள்ளாத குறையாகத் தள்ளப்பட்டுக் கடைசியில் போய் நின்றார்.
“அடக் கடவுளே! என்னன்னா இது?” கணபதி சுப்ரமண்ய அய்யர் கவலையுடன் அருகில் வந்தார்.
“பரவால்லை, ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் கடைசியாவே நின்னுக்கறேன்” கடவுள் சோகமான குரலில் சொன்னார்.
“சரி நீங்க என்னோட வாங்கோ”
“அம்பி, டேய் அம்பி,” என அய்யர் குரல் கொடுக்க வேஷ்டி, துண்டு மட்டும் அணிந்து குடுமியில்லாத ஒரு வாலிபன், அருகில் வந்து “என்னப்பா?” என்றான்.
“இவர் நமக்குத் தெரிஞ்சவர், ஆத்துக்கு அழைச்சுண்டு போய் இலையைப் போடு, நான் செத்த நேரத்துல, நடையைச் சாத்திட்டு வரேன்”
“சரிப்பா” பையன் கடவுளுடன் புறப்பட்டான்.
மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்த கடவுள், சற்று பவ்யத்துடன், “அம்பி, செத்த மெதுவாப் போ, நேக்கு வண்டியில எல்லாம் போய்ப் பழக்கம் இல்லை” என்றார்.
“சைக்கிள்ல கூடவா போனதில்லை”, என்றான் அம்பி ஆச்சர்யத்துடன்.
“ஆமா, ஆமா”
“அப்புறம் எப்படி, வெளில எங்கேயாவது போகணும்னா என்ன பண்ணுவேள்?, நடந்தேவா போவேள்?”
“இல்லை, இல்லை, எல்லாம் நந்தி தான், வாகனம் தான்”
“என்னது உளர்றேள்! நந்தி, வாகனம்னுண்டு”
“இல்ல, இல்லை, நடை தான், வாகனம் தாங்கிறதைத் தப்பாச் சொல்லிட்டேன்”
“சரி சரி, ஆம் வந்தாச்சு இறங்குங்கோ”
“ஆஹா, பேஷா, ஆமா, நீ என்ன கோவில்ல தான் இருக்கியா?”
“கோவில்ல சுவாமிதான இருக்கும்!, நீங்க என்ன கேட்க வர்றேள்னு நேக்குப் புரியலையே! அம்மா, அம்மா,..”
” என்னாடா?”
” இவர் அப்பாக்குத் தெரிஞ்சவராம், இலையைப் போடச் சொன்னார், செத்த நாழில வரேன்னார்”
“சரி சரி! வாங்கோ மாமா, உள்ற வாங்கோ, பாத்து, தலையைக் குனிஞ்சு வாங்கோ, நிலை இடிச்சுடப் போறது”
“ம், ம்ம், சொந்த ஆமா, ரொம்பச் சின்னதா இருக்கே!” என்றார் கடவுள்.
“சொந்தமா, எங்களுக்கு ஏது சொந்தம், எல்லாம் வாடகை தான்! நீங்க உட்காருங்கோ, தீர்த்தம் சாப்பிடறேளா!”
“ஆஹா, பேஷா”
“என்னது தண்ணி கசக்கற மாதிரி இருக்கே”
“இது பரவால்லை, சில சமயம் உப்பு வேற கரிக்கும், வாய் எல்லாம் புண்ணாப் போய் எரியும். சில சமயம் சாக்கடைத் தண்ணி எல்லாம் கலந்து வேற வரும். என்ன பண்றது தலை எழுத்து, குடிச்சு தானே தீரணும். காலம் காலமா இதைத் தான் சாப்பிட்டுண்டு வரோம் நாங்க, ஆமா, நீங்க என்ன மெட்ராசுக்குப் புதிசா?”
“ஆமா, ஆமா, நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருந்தாரோன்னோ, அவரோட சொந்த மச்சினன் நான், ஆமா, நீங்க எப்படிக் கண்டு பிடிச்சேள் நான் மெட்ராசுக்குப் புதுசுன்னு?”
“இல்லை, எல்லாத்தையும் ரொம்ப ஆச்சரியமாப் பார்க்கறேளே அதான் கேட்டேன்”
“ஆமா, ஆமா, ஹி..ஹி..” கடவுள் அசடு வழிந்தார்.
“அந்தக் காத்தாடியை வேணாப் போடட்டுமா, செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, அவர் வந்ததும் இலையைப் போட்டுடலாம், சரியா,”
“ஆஹா”
கடவுள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, நவீன காற்றாடியின் குளுமையான காற்றில், சற்றே தன்னை மறந்தார்.
“அய்யோ! அய்யோ… அய்யய்யோ!”
…. சத்தம் கேட்டதும், “ஔவ்வ்! ஒவ்” என்று உளறிக் கொண்டே திடுக்கிட்டு எழுந்த கடவுளுக்கு, தாம் எங்கிருக்கிறோம், என்ன நடந்தது என்பதே முதலில் புரியவில்லை. சில நிமிடம் வரை என்னது! என்னது! எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிய வந்தது, குடுமி இல்லாத அம்பி, தனது குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல், டி.வி யை, வேண்டும் என்றே அலற வைத்திருக்கிறான் என்பது.
டி.வியில் ஏதோ ஒரு பாடல் காட்சி ஔடிக் கொண்டிருந்தது, ஆணும் பெண்ணுமாய் கன்னா பின்னாவென்று குதித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கடவுளுக்கு மேலும் ஆத்திரமாய் வந்தது.
“இந்த எழவுக்குத் தான் அப்போவே மன்மதனை எரிச்சுத் தொலைச்சேன், ஆனா என்ன பிரயோசனம்! எல்லாம் ரதியால கெட்டது” என்றார்.
“அய்யோ மாமா! உளறாதீங்கோ, இது ‘மன்மதன்’ இல்ல, ரதி இதுல நடிக்கவும் இல்ல. இது ரவி நடிச்ச ‘எம்.குமரன், S/o மகாலக்ஷ்மி’ படம். ‘மன்மதன்’, ‘சிம்பு- ஜோதிகா’ நடிச்ச படம். நீங்க சினிமால்லாம் பாக்கவே மாட்டேளா” என்றான் அம்பி.
“வாழ்க்கையே ஒரு சினிமா தானேப்பா” என்றார் கடவுள்.
“ஆமா, ஆமா, அப்போ எல்லாம் நாடகம்னாங்க, இப்போ சினிமான்றாங்க அவ்வளவு தான் வித்தியாசம்”
“ஆமா, நீ என்ன படிக்கிறயா, வேலை பாக்கறயா?”
“இரண்டுமே செய்றேன்”
“ஆஹா, பேஷ், பேஷ், ஆமா என்ன படிக்கிறே?”
“பள்ளிக்கூடத்துல பாடமும் படிக்கறேன், ஆத்துல வேதமும் படிக்கறேன், நேரம் இருக்கறப்போ அப்பாவுக்கு ஒத்தசையா கோவில்ல வேலையும் செய்றேன். அதோ அந்த போட்டோல, என் கூட இருக்கிறது தான் எங்க அக்கா. பெங்களூர்ல இருக்கா. பெரிய கம்பெனில வேலை பார்க்கறா. அவ தான் மாசா மாசம் நான் நல்லா படிக்கப் பணம் அனுப்பறா. நான் கலெக்டருக்குப் படிக்கப் போறேன் மாமா!”
“சமத்து, குழந்தைகள்னா இப்படி இல்ல இருக்கனும்!”
“ஆமா, உங்க பசங்க என்ன பண்றாங்க மாமா!”
“அவாளைப் பத்திப் பேச்சே எடுக்காத, ஆமா, எனக்குக் கெட்ட கோபம் வரும். எல்லாம் தகப்பனுக்கு மீறினதுங்க!”
“ஒகோ, கோபத்துல நல்லது. கெட்டதுன்லாம் வேறே இருக்கோ”
“என்னடா இது, பெரியவாள் கிட்ட மட்டு மரியாதை இல்லாமப் பேசிண்டு” என்ற படியே உள்ளே நுழைந்தார் கணபதி சாஸ்திரிகள்.
“வாங்கோ, வாங்கோ, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா பொழுது போகப் பேசிண்டு இருந்தான் அம்பி. என்னடா நாழியாச்சே இன்னும் காணோமேன்னு பார்த்தேன். வந்துட்டேள்”. என்றார் கடவுள்.
“ஆமா, ஆமா, அம்மாடி செத்த இலையைப் போடு, சாயரக்ஷைல நிறைய வேலை இருக்கும் போல இருக்கு” தனக்குள் அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.
“என்ன ஒரு நூறு ரூபாயாவது வந்திருக்குமா வரும்படி உங்களுக்கு” மகிழ்ச்சியுடன் வினவினார் கடவுள்.
“அடக் கிரகச் சாரமே! நன்னாக் கேட்டேள் போங்கோ, இது ரொம்பப் பழங்கால, சாதாரண, சின்னக் கோயில் சுவாமின்! பெரும்பாலும் அக்கம் பக்கத்துல உள்ள ஏழை, பாழைகள் தான் வருவா. அவா கையில என்ன இருக்கோ, அதை அவா மனசுக்கு ஏத்த மாதிரி உண்டியல்லயோ, தட்டுலயோ போட்டுட்டுப் போவா! மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல. 5ம் வரும். 10 வரும். சில சமயம் ரொம்ப விசேஷ நாள்னா 50ம் வரும். என்னவோ போங்கோ, சிலரை ஆகா, ஔகோன்னு ஆகாசத்துக்குத் தூக்கற அந்தக் கடவுள், சிலரை அப்படியே கீழேயே தான் வச்சிருக்கான். என்ன காரணமோ யாருக்குத் தெரியும்? எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.” என்றார் கணபதியார்.
“எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும் சுவாமின், நமக்கு என்ன தெரியும்?” என்றார் கடவுள் புன்சிரிப்புடன்.
எல்லாரும் உணவை உண்டுவிட்டு, களைப்பு தீரத் திண்ணையில் அமர்ந்தனர்.
“இந்தாங்கோ சுவாமின், கும்பகோணம் வெத்திலை! உங்களுக்கு வெத்திலை போடற பழக்கம் உண்டோன்னோ?”
“ஆகா, பேஷா, அதான் அர்ச்சனை பண்ணும் போதே, நைவேத்தியத்தும் போதே வச்சிடறாளே, அப்புறம் எப்படி சாப்பிடாம இருக்க முடியும்?”
“உண்ட மயக்கம், அதான் அர்ச்சனை, நைவேத்தியம்னு ஏதேதோ உளர்றேள், அது போகட்டும், ஏன் எப்போ பார்த்தாலும் கோவில், பிரசாதம், நைவேத்தியம் அப்படின்னே பேசிண்டு இருக்கேள்?”
“அது ஒண்ணுமில்லை! ஹி! ஹி!” என்றார் கடவுள்.
” சரி! சரி! செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, சாயந்திரம் காப்பி ஆனதும், நீங்க எங்க போணுமோ அங்க அம்பியை விட்டு, பஸ் ஏத்தி விடச் சொல்றேன். சரியா?”
“சரிதான்னா!” நீங்க சொல்லிட்டேள்னா சரி”, சொல்லிவிட்டு அப்படியே திண்ணையில் சாய்ந்து, மீண்டும் மெல்லத் தூக்கத்தில் ஆழ்ந்தார் கடவுள்.
************************************
“என்ன சுவாமி நல்ல தூக்கம் போல இருக்கே” சாஸ்திரியார் எழுப்பவும் கடவுள் எழுந்து கொண்டார்.
“ஆமாம்! ஆமாம்! உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டே”
“ஆமா, ஆமா, குண்டருக்கும் கூட தான் உண்டு. அடேய் அம்பி, போய் பாலை வாங்கிண்டு வா சீக்கிரம்!” சாஸ்திரியார் விரட்டினார்.
” என்னன்னா! உங்காத்துல மாடு, கன்னு எல்லாம் இல்லயா, பாலைப் போய் வெளில எங்கேயோ வாங்கிண்டு வரச் சொல்றேளே” என்றார் கடவுள் ஆச்சரயத்துடன்.
” நான் தான் மாடு!, இதோ இந்த அம்பி தான் கன்னுக் குட்டி, நீங்க வேற செத்த சும்மா இருக்கேளா, காலம் இருக்கற இருப்புல!. ஆமா, மெட்ராஸ் என்ன உங்க ஊர்னு நினைச்சேளோ. மாடு, கன்னுன்னு இஷ்டம் போல இருக்கறத்துக்கு, இது மாநிலத் தலைநகர் சுவாமி, மாநிலத் தலைநகர்!”
“என்ன நகரோ, ஆனா நான் பார்க்கறவரைக்கும் எதுவுமே சரியில்லையே, வழியெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு. எங்கே பார்த்தாலும் ஒரே சாக்கடை. குப்பை, கூளம். கோயில் கிட்டயே, கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாம அசிங்கம் பண்ணி வச்சிருக்காளே! கிராமமே தேவலாம் போல இருக்கே!
“ஏன், உங்க கண்ணுல நல்லதே படாதோ, எப்போ பார்த்தாலும் தீவீர சிந்தனையா இருக்கேளே!”
“ஆமா, ஆமா… இல்லை, இல்லை,…. குரங்கு கைப் பூமாலையாப் போய்டுத்து இந்த பூமி, அதான்!”
“ஆமாமா அச்சரிதான்! அத்தை விடுங்கோன்னா, நீங்க எங்கே போகனும்னு சொன்னால் பையன் கொண்டு போய் விட்டுடுவான். காபி சாப்பிட்டவுடனே கிளம்பத் தோதா இருக்கும்”
“நான் வந்து … இங்க ஏதோ பாற்கடல் இருக்காமே, அதைத் தான் பார்க்கனும்னு ஆசையா இருக்கு”
“ஔகோ! நீங்க பீச்சைத் தான் சொல்றேள்னு நினைக்கிறேன். அது பாற்கடல் இல்லை சுவாமி, நாற்கடல், ஒரு பெரிய சாக்கடையே அதுல கலக்கறது தெரியுமோன்னோ”
“அது என்னவோன்னா, ஒரு தடவை பார்த்துட்டேன்னா, நன்னா இருக்கும்”
“ஆகா, பேஷா, அம்பி இவரைக் காப்பி சாப்பிட்டதும், அங்க கூட்டிக் கொண்டு போய் விடு. இல்லை பஸ்ல ஏத்தி விட்டாலும் சரி”
“சரிப்பா”
காபி ஆனதும் கடவுளிடமிருந்து ஒரு ஏப்பம் வெளிப்பட்டது. கடவுள் மனதிற்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது.
“சரின்னா, நான் கிளம்பறேன், ஏதோ உங்களை மாதிரி உள்ளவாலாள தான் நாட்டுல மழையே பெய்றது, ஏதோ என்னாலான உதவி, மறுக்காம வாங்கிக்கணும்” சொன்ன கடவுள் கையைத் திறக்க அதில் ஒரு நெல்லிக்காயளவு தங்க உருண்டை இருந்தது.
“அய்யய்யோ, இது ஏதுடா வம்பா இருக்கு, நான் என்ன பண்ணிட்டேன்னு எனக்கு இதைத் தர வரேள். எனக்கு எதுவும் வேண்டாம்னா” மறுத்தார் சாஸ்திரியார்.
“சும்மா வாங்கிக்குங்கோ, கடவுள் கொடுக்கற மாதிரின்னு வச்சுக்கங்களேன்.”
“வேண்டவே வேண்டாம்னா. அப்புறம் யாராவது பார்த்துட்டு, கோயில் நகையை உருக்கி தங்கமா வச்சிருக்கான் அப்படிம்பா, இந்தக் கால் வயத்துக் கஞ்சியை மானத்தோட குடிக்கிறேனே அது போதும் நேக்கு, அந்த பகவான் ஒரு போதும் எங்களைக் கைவிட மாட்டான்.”
“ஆமா, நிச்சயமாக் கைவிட மாட்டான், நானும் கைவிட மாட்டேன். கவலைப் படாம இருங்கோ. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” நெகிழ்ச்சியுடன் சொன்ன கடவுளுக்குக் கண்கள் கலங்கி விட்டன. ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த திருப்தி அவர் மனதில் நிலவியது.
அனைவரிடமும் விடை பெற்ற கடவுள், மோட்டார் சைக்கிளில் உட்கார அம்பி, இப்போது பேண்ட், ஷர்டுக்கு மாறி, வேகமாக கடற்கரையை நோக்கி வண்டியைச் செலுத்தத் தொடங்கினான்.
*******************************
“இது தான் பீச்! நல்லா பார்த்துக்குங்கோ” என்றான் அம்பி
“ஆகா, ஆகா, ரொம்ப ஆனந்தமா இருக்கே, ஜனங்க எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்கா, எனக்கு சந்தோஷத்துல கூத்தாடனும் போல இருக்கே”
“அதெல்லாம் இங்க பண்ணப்படாது, பண்ணினா போலீசுல புடிச்சுண்டு போய்டுவா, கூத்தாடறதுக்கெல்லாம் இங்க தனி இடம் இருக்கு.”
“அப்படியா, நிஜமாவா, என்னை அங்க கூட்டிண்டு போறியா அம்பி. நான் நன்னா கூத்தாடுவேன் தெரியுமா நோக்கு?”
” சாரி மாமா, உங்களையும் என்னையும் அங்க உள்ள விட மாட்டா, எல்லாரும், ஆணும், பெண்ணுமா ஜோடி ஜோடியாத் தான் போகணும். அதுவும் இந்த மாதிரி டிரஸ் போட்டுண்டு போனேள்னா, வாசல்ல வச்சே அடிச்சுத் துரத்திடுவா.”
“அப்படியா, அய்யோ, திடீர்னு ஜோடிக்கு இப்போ நான் எங்கே போறது?” சோகமானார் கடவுள்.
“சக்தியை அழைத்தாள் வருவாளா?” யோசனையில் ஆழ்ந்தார்
“ஆமா ஏதோ கெட்ட வாடை வருதே காத்துல அது ஏன்” வினவினார் கடவுள் மூக்கைத் தேய்த்தவாறே!
“அதுவா, அதோ அங்க பாருங்கோ! எல்லாரும் மீன் பிடிச்சுட்டுக் காய வச்சிருக்காங்க, வலையெல்லாம் காயப் போட்டிருக்காங்க அது தான், மீன் வாசனை தான் எல்லாம்”
“எனக்கு என்னவோ வயத்தைக் குமட்டறதுடாப்பா.. “
“அடப் போங்க மாமா! இதுக்கே இப்படிச் சொல்றீங்களே! இங்க “காசிமேடு”ன்னு ஒரு இடம் இருக்கு. அங்க நீங்க கிட்ட போனாலே போறும். அவ்வளவு தான். ஒரு வழியாயிடுவீங்க”
“அப்படியா, ஏன்?”
“ஏன்னா, அங்க தான் மீன்பிடித் துறைமுகம் இருக்கு. அங்க தான் மீனைக் காயவச்சு கருவாடா மாத்தறாங்க. அதுக்கானா கோடௌன்லாம் அங்க தான் இருக்கு. அங்க இருக்கறவங்களும் மனுஷங்க தான! அவங்க எல்லாம் பொறுமையா இல்ல! உங்களால கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்க முடியலையா?. அவ்வளவு சுகவாசியா நீங்க”
“இல்லடா அம்பி! கோச்சுக்காதே, சந்தனம், சாம்பிராணி பன்னீர்னு ஒரே வாசனையோடே இருந்துட்டேனா அதான் ஒண்ணும் முடியலை”
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது…. இடையில் ஒரு குரல்..
“யோவ் பெரிசு, இன்னா, ………….ன்னா பத்து, ………..ன்னா இருவது சரியா! இன்னான்றே,?!” என்றது.
அதிர்ச்சியானார் கடவுள்.
“வாங்கோ மாமா, ஔடிடலாம். இவாள்லாம்… இவாள்லாம்…” பையன் கத்த ஆரம்பித்தான்.
புதிய நபரை முறைத்துப் பார்த்தார் கடவுள்.
அவருக்கு அந்நபர் மீது கோபம் வரவில்லை. மாறாகத் தான் உமையொரு பாகம் கொடுத்த தோற்றமும், படைப்புக் கடவுளான பிரம்மனின் மீது ஆத்திரமும் ஏற்பட்டது. மானிட உடல் எடுத்து வந்ததால், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய தனது இயலாமையை நினைத்தும் மனம் நொந்தார்.
“இந்தாங்கோ நீங்க கேட்ட பணம், தயவு செய்து இங்கேருந்து போயிடுங்கோ” என்றார் கடவுள் அந்நபரிடம் இரக்கத்துடன்.
” ஆமா, ஆமா, நம்பளை நைசாக் கழட்டி விடு, ஆனா, ஷோக்கா, சின்னப் புள்ளைய தள்ளிக்கினு வந்திருக்கியே, பெரிய ஆள்ப்பா நீ” சொன்ன நபர் அங்கிருந்து வேகமாக நகர…
முரட்டு மீசை மற்றும் உடுப்பு அணிந்த நபர் ஒருவர் அந்நபர் முன்னால் வந்து நின்று….
“ஏய் இன்னாம்மே, டெய்லி எஸ்கேப்பானா விட்டுருவோமா நாங்க, எடு ரூபாயை” அந்த நபர் கதறக் கதற, மொத்தக் காசையும் பறித்துக் கொண்டு போனார் மீசைக்காரர்.
” ஏய் அம்பி என்னடா இதெல்லாம்!” என்றார் கடவுள் வருத்தத்துடன்
“பிச்சை எடுக்குமாம் பெருமாளு, அத்தைப் பிடுங்குமாம் அனுமாரு! இது தான் மாமா மெட்ராஸ், நீங்க பார்க்கணும்னு நினைச்ச பாற்கடல். எப்படி ஓ.கேவா”
“அய்யோ வேண்டாம்! வேண்டாம்! நான் எங்கேருந்து வந்தேனோ அங்கேயே போறேன்” சொன்ன கடவுள், “அம்பி! நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா, நான் தான் கடவுள்” என்றார்.
“ஹ! ஹ! இது மாதிரி சொல்லிக்கிட்டு நிறையப் பேரு திரியறாங்க மாமா! ஏன், இங்க கூட ஒருத்தர் கிரீடம் எல்லாம் வச்சுக்கிட்டு, டெய்லி டான்சு ஆடுறாரு, அதுவும் பொம்பளைங்க கூட, கேட்டா அவரு கிருஷ்ணன் அவதாரமாம். அவர் கைல சங்கு சக்கரம் எல்லாம் இருக்காம். இன்னொருத்தர், தன்னைப் பாக்க வர்ற எல்லார் மேலயும் எச்சிலைத் துப்பிட்டு, ‘உன் பாவம் போச்சுங்கிறாரு’ ஆமா நீங்க எந்த மாதிரிக் கடவுள்?, எந்த மாதிரி அவதாரம்?” என்றான் அம்பி கிண்டலாய்.
“இல்லையப்பா! நான் தான் நிஜமான கடவுள்”
” ஔகோ சரி! அதை எப்படி நான் நம்புறது. ஏதாவது நம்பற மாதிரி செய்யுங்களேன் பார்க்கலாம்” கிண்டலாய்ச் சொன்னான் அம்பி.
“ம்! அற்புதம் அதிசயம் எல்லாம் பண்ணித் தான் கடவுள் தன்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. எல்லாம் கலிகாலம்! என்ன அற்புதம் பண்ணட்டும், வாயில இருந்து லிங்கத்தை வரவழைக்கட்டுமா!. இல்லை வெறும் காத்துல இருந்து செயின் வரவழைக்கட்டுமா?”
“லிங்கமா, என் கூட படிக்கிற பையனே வாயில இருந்து லிங்கம் எடுக்கறான். செயின் வரவழைக்கறதெல்லாம் சும்மா ஔல்ட் டிரிக்! வேற ஏதாவது புதுசா..”
“சரி! சரி! இப்போ உன்னை உங்க ஆத்து மொட்டை மாடிக்கு அழைச்சுண்டு போறேன் சரியா, கண்ணை மூடிக்கோ, என் கையைப் பிடிச்சுக்கோ”
“நிஜம்மாவா! சரி மாமா” அம்பி அரை குறையாகக் கண்ணை மூடிக் கொண்டான்.
“விஷ்க்”
ஏதோ ஒரு சப்தம் கேட்டது.. அடுத்த கணம்… அம்பியும் கடவுளும், அம்பி வீட்டு மொட்டை மாடியில் இருந்தனர்.
“என்ன அம்பி இப்போ நம்பறியா?”
“மாமா, மாமா நீங்க நிஜமாவே கடவுளா?. இல்லை. சித்தரா!.. மந்திரவாதியா? அய்யோ… என்னால நம்ப முடியலையே!” அய்யோ..நான் எப்படி.. எப்டி.. இவ்ளோ சீக்கிரம் இங்கே வந்தேன்.. ஆச்சர்யமா இருக்கே… என் வண்டி எங்கே…”
“கீழே பார்”
அம்பி எட்டிப் பார்த்தான் அவன் வண்டி வீட்டு வாசலில் பார்க்க செய்யப்பட்டிருந்தது.
“அய்யோ மாமா! மாமா! என்னால நம்ப முடியலையே! நிஜமாவே கடவுள் இப்படி எல்லாம் வருவாரா என்ன? அய்யோ ரொம்ப ஆச்சர்யமா இருக்கே!”
“அம்பி! பரவாயில்லை நீ நம்ப வேண்டாம்! ஆச்சர்யப்படவும் வேண்டாம். எல்லாம் ஒரு கனவுன்னே வச்சுக்கோ. ஆமா, கடவுளை நீ நம்பவே வேண்டாம். உன்னை நீ முழுசா நம்பினாப் போறும். கடவுள் பேரைச் சொல்லி, நாட்டை ஏமாத்திக்கிட்டு இருக்கும் போலி சாமியார்களையும், வெத்து ஆன்மீகவாதிகளையும் விட, கடவுள் இல்லைன்னு சொல்ற ஒரு நாத்திகன் எவ்வளவோ மேல். நாத்திகனா இருக்கறதுல எந்த தப்பும் இல்ல. போலி ஆத்திகனா இருக்கறதை விட உண்மையான நாத்திகனா இரு.”
சொல்லி விட்டுக் கடவுள் மறைந்து போக…..
அம்பி அப்படியே திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்.
**********************