கிருஷ்ணா… கிருஷ்ணா… – 3

குருஷேத்திரப் போர்

லீலா வினோத கிருஷ்ணன்

கோபிகைகளுடன் கிருஷ்ணன் நடத்திய லீலா வினோதங்கள் அளவிடற்கரியது. அது சாதாரண பக்தி அல்ல. நாயக, நாயகி பாவம் என்று சொல்லப்பட்டாலும் அது எல்லாவற்றையும் கடந்தது. கோபிகைகள் சொல்கிறார்கள், “பிருந்தாவனம் பொய்; வைகுந்தம் பொய். மோட்சம் பொய்; கண்ணன் மட்டுமே உண்மை. அவன் மட்டுமே சாஸ்வதம்”. அந்த அளவிற்கு கண்ணன் மீதான அவர்களது ப்ரேமை (அன்பு) இருந்தது.  உலகப்பொருள்கள் எதையும் வேண்டாத, சுவர்க்கத்தை விரும்பாத, மறுமையும் வேண்டாத அவர்களது அன்பு அளவிடற்கரியது. அது தெய்வீக அன்பு. அது வேண்டுதல் வேண்டாமை இல்லாதது.

ஜீவாத்மாவான கோபிகைகள் பரமாத்மாவான கிருஷ்ணனை உணர்ந்து அதைத் தவிர வேறொன்றும் மெய்யில்லை என்று உணர்ந்து தெளிந்து போற்றும் உன்னத மார்க்கம்தான் அந்த தெய்வீக அன்பு மார்க்கம். அதைத்தான் தனது கீத கோவிந்தத்தில் மிக அழகாகப் புனைந்துள்ளார் ஜயதேவர். புருஷோத்தமனாகிய கண்ணனே தலைவன், ஜீவாத்மாக்களாகிய பெண்களே கோபிகைகள் என பக்தியில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமான நாயக, நாயகி அம்சத்தை அதில் மிகச் சிறப்பாக விளக்குகிறார், அவர்.

கோபியருடன்

எதை அடைந்தால் எல்லாவற்றையும் அடைந்ததாகுமோ, எதை உணர்ந்தால் எல்லாவற்றையும் உணர்ந்ததாகுமோ எதைப் பிடித்தால் மீண்டும் வேறு எதையும் பற்றுக் கொள்ள வேண்டியதில்லையோ அந்த ஒன்று ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிதான். இதை கோபிகைகள் உணர்ந்ததால்தான் கண்ணனின் மீது தீராகக் காதலை உன்மத்த அன்பை வெளிப்படுத்தினர். கிருஷ்ணாவதாரம் கோபிகைகளுக்காகவும், அதே போன்ற உன்மத்த அன்பு பூண்ட அவனது பிற பக்தர்களுக்காகவும்தான் என்பதில் ஐயமேது?

கீதையின் பெருமை

 

கீதோபதேசம்

கிருஷ்ணர் கீதையை அர்ஜூனனுக்கு உபதேசித்தார். அது சரி அது அர்ஜூனனுக்காக மட்டுமா உபதேசிக்கப்பட்டது. அல்லவே அல்ல. அர்ஜூனன் ஒரு கருவி. அந்தக் கருவி மூலம் அப்படிப்பட்ட ஐயங்களை சாட்சாத் அந்தப் பரம்பொருளான நாராயணனே அவனுக்குள் தோற்றுவித்து, தானே அதற்கு பதிலும் அளிக்கிறார். எல்லா வேதங்களுக்கும் மூலப் பொருளான அந்தப் பகவானே கிருஷ்ணன் எனும் திருவுருவம் தாங்கி வந்து, அந்த வேதங்ளின் பொருளை விளக்கும் பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார் என்பதே பகவத் கீதையின் பெருமை.

நாம மகிமை

 

புரந்தரதாஸர்

பகவானை விட அவன் நாமம் பெரிது. அந்த நாமத்தை உச்சரிக்கும் அவன் அடியார்கள் பெரியவர்கள். ஞான மார்க்கத்தை விட உயர்ந்ததும் பல படிகள் எளியதுமாக இருப்பது பகவானின் நாமத்தை சதா உசரித்துக் கொண்டிருக்கும் பக்தி மார்க்கம்தான் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அதனையொட்டியே பஜன் சம்பிரதாயம் ஏற்பட்டது. துகாராம், நாமதேவர், மீரா பாய், சக்குபாய், புண்டரீகன், புரந்தரதாஸர் என பகவானின் நாமத்தைப் பாடிப் பாடிக் களித்தவர்கள் எத்தனை பேர்? நாம மகிமையை, பக்தர்கள் பெருமையைக் கூறும் சம்பவங்கள் தான் எத்தனை, எத்தனை?

பாடிக் களித்த பக்தர்கள்

இறைவனின் நாம சங்கீர்த்தனத்தை கீழே காணலாம்.

இறைவனின் நாமம் கூறித் துதிப்போம்.  அதுவே நமது பாவங்களைப் பொசுக்கும் நல் அக்னி. அது ஒன்றே நம் பிறவிக் கடல் நீந்த உதவும் தோணி. 

இது ஒரு மீள் பதிவு