இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்களில் பல நம் மனத்திற்கும் நினைவிற்கும் என்றும் இனிமையைத் தரக்கூடியவை. அன்று முதல் இன்று வரை எத்தனையோ இசையமைப்பாளர்கள், எவ்வளவோ இனிமையான பல பாடல்களைத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அவற்றிலிருந்து சில நினைவுகள்.
ஜி.ராமநாதன்
இவர் தன் இசையமைப்பில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர். பல பிரபலமான பாடகர்களை இசையுலகிற்கு அறிமுகம் செய்தவர். பல்வேறு இசைக் கோர்வைகளை இணைத்து புதிய பல ராகங்களைப் படைத்தவர். அவர் இசையமத்த படங்களுள் ஒன்றுதான் மந்திரிகுமாரி. திருச்சி லோகநாதனும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் மிகவும் சூப்பர் ஹிட்.
பாடல் ….. உலவும் தென்றல் காற்றினிலே
படம் …… மந்திரிகுமாரி
பாடியவர்கள் ……. திருச்சி லோகநாதன் – ஜிக்கி
இசைமயைத்தவர் ….. ஜி. ராமநாதன்.
இது என்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்றல்லவா?
சி.ஆர். சுப்பராமன்
பழங்கால இசையமைப்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றிருந்தவர் இசை மேதை சி.ஆர். சுப்பராமன். மிகவும் எளிமையான இவர், அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர். அவர் இசையமைத்த தேவதாஸ் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். கதைக்காக மட்டுமல்லாமல் பாடலுக்காகவும் ஓடிய படம் என்று தேவதாஸைச் சொல்லலாம். அதுவும் இந்தப் பாடலை நாம் என்றுமே மறக்க முடியாது.
பாடல் — துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே…
படம் — தேவதாஸ்
பாடியவர் — கண்டசாலா
இசையமைப்பு — சி.ஆர்.சுப்பராமன்
மடப்பள்ளி ராமராவ்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்து வந்தும் பல இசையமைப்பாளர்கள் இங்கு கொடிகட்டிப் பறந்தார்கள். தங்களது இனிய இசையமைப்பாலும், தேர்ந்தெடுத்த குரல்களாலும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் காலத்தால் அழியாது நிற்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களில் இதோ ஒன்று. இதற்கு இசையமைத்தவர் மடப்பள்ளி ராமராவ்.
பாடல் — கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
படம் — தாய் உள்ளம்
பாடியவர் — எம். எல்.வசந்தகுமாரி
இசையமைப்பு — மடப்பள்ளி ராமராவ்.
ராஜேஸ்வரராவ்
பல இசையமைப்பாளர்கள் தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி அருமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். பாடலாசிரியர்களும், தங்கள் பாங்கிற்கு சிறப்பாக பாடல்களை இயற்றித் தர, பல அற்புதமான இசைப் பொக்கிஷங்களை இவர்களால் உருவாக்க முடிந்தது. முக்கியமாக ராஜேஸ்வரராவ் பல இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர். அவர் இசையமைத்த பல பாடல்கள் அழகான கர்நாடக ராகத்தின் சாயலில் அமைந்தும், கேட்பவர்களைப் பரவசப்படுத்தும்படியாகவும் இருக்கும். இதோ அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று…
பாடல்… மாயமே நானறியேன்
படம் ….. மிஸ்ஸியம்மா
பாடியவர் ….. பி.லீலா
இசை …. ராஜேஸ்வர ராவ்
எஸ்.வி.வெங்கட்ராமன்
எஸ்.வி.வெங்கட்ராமன். கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் பாடல்கள் அமைக்கப்பெறும் பொழுது, அதில் உள்ள சங்கதிகள் எனப்படும் ஒலிக்கோர்வைகள் மிக முக்கியமானவை. ஸ்வரம் தவறாமல் பாடுவதும், அதற்கேற்ப இசையமைத்தும் மிக மிக முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்தி, பல ஜாம்பவான்களை தனது இசையில் பாட வைத்த பெருமைக்குரியவர் எஸ்.வி.வெங்கட்ராமன். அதிலும் சகுந்தலை படத்தில் பிரபல கர்நாடக இசைப் பாடகர்களான ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி குரல்களில் ஒலித்த இந்தப் பாடல், அந்தக் காலத்தின் சிறந்த டூயட் பாடல்களில் ஒன்று.
பாடல் — பிரேமையில்…
படம் — சகுந்தலை
பாடிவர் — ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி
இசை — எஸ்.வி.வெங்கட்ராமன்
கண்டசாலா.
கண்டசாலா, சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல; மிகச் சிறந்த இசையமைப்பாளரும் கூட. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல சிறந்த பாடல்களை இவர் அளித்திருக்கிறார். கள்வனின் காதலி படத்திற்கு இவர் M.R. கோவிந்தராஜுலு நாயுடுவுடன் இணைந்து இசை அமைத்த பாடல்கள் அக்காலத்தில் சூப்பர் ஹிட். இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்… வெயில்கேற்ற நிழல் உண்டு..
படம் … கள்வனின் காதலி
பாடியவர் …. கண்டசாலா-பானுமதி
இசை ….. கண்டசாலா – M.R. கோவிந்தராஜுலு நாயுடு
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்வதர்களுள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி என்றும் ஒலித்து கேட்பவர்களை பரவசத்துக்குள்ளாக்கியது. அதுவும் மாலையிட்ட மங்கை படத்துக்கு அவர்கள் இசை அமைத்த பாடல்கள், நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசச் செய்தது. எத்தனையோ பாடல்கள், எத்தனையோ சாதனைகள்…
பாடல்… செந்தமிழ் தேன் மொழியாள்..
படம் – மாலையிட்ட மங்கை
பாடியவர்.. டி.ஆர்.மகாலிங்கம்
இசை… விஸ்வநாதன்-ராமமூர்த்தி
டி. ஆர். பாப்பா
டி. ஆர். பாப்பா. பெயரில் தான் இவர் பாப்பா. ஆனால் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நீங்காத நினைவலைகளைத் தோற்றுவிப்பதாய் இருந்தன. அதுவும் டவுன்பஸ் படத்திற்காக கவி காமுஷெரீப்பின் பாடலிற்கு அவர் இசை அமைத்திருந்த விதம் மிகவும் சிறப்புற அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தப் பாடல் கேட்பவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்வதாய் இருக்கிறதல்லவா?
பாடல் — பொன்னான வாழ்வே
படம் — டவுன்பஸ்
பாடியவர்கள் — திருச்சி லோகநாதன், M.S. ராஜேஸ்வரி.
இசை — டி.ஆர். பாப்பா
கே.வி.மகாதேவன்
கே.வி.மகாதேவன். திரை இசைத் திலகம் என்று போற்றப்பட்டவர். இசைக்கும், ராகத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை அமைத்தவர். பாடல்களில் பழைமையையும் புதுமையையும் சரிவிகத்தில் கலந்து புதியதொரு பாணிக்கு அடித்தளமிட்டவர். அதுவும் பக்திப் பாடல்களுக்கு அவர் இசை அமைத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவர் இசையமைத்த பாடல்களுள் இந்தப் பாடல் என்றும் இசை ரசிகர்களின் காதில் மறக்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். காரணம் பாடலைப் பாடியவர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று முப்பெரும் மேதைகளும் இணைந்து பணியாற்றியது தான். அந்தப் பாடல்….
பாடல்.. அமுதும் தேனும் எதற்கு…
படம் — தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர் — சீர்காழி கோவிந்தராஜன்
இசை — கே.வி.மகாதேவன்.
ஏ. எம். ராஜா
கல்யாண பரிசு. அந்தக் காலத்தில் வெளி வந்து வெள்ளி விழாக் கண்ட படம். இயக்குநர் ஸ்ரீதருக்கு மிகுந்த பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த படம். ஜெமினி கணேசனின் மறக்க முடியாத நடிப்பும், சரோஜாதேவி வெளிப்படுத்திய முக பாவங்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவை. பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல், இசையும் அமைத்து தான் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் , ஏ. எம். ராஜா அவர்கள். அதுவும் இந்தப் பாடல் காதலில் தோல்வியுற்றவர்களின் உள்ளத்தை உருக்கச் செய்யும் சோக ரசப்பாடல்.
பாடல் — காதலிலே தோல்வியுற்றான்…
படம் — கல்யாண பரிசு
பாடியவர் — ஏ. எம். ராஜாஇசை — ஏ. எம். ராஜா
ஆதி நாராயண ராவ்
ஆதி நாராயண ராவ். குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளரான இவர், தனது பாடல்களில் ‘மெலோடி’க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். இரைச்சலூட்டும் அதிக வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தாமல், மென்மையான பாடல்களை அமைதியான நல்ல இசையின் மூலம் தந்தவர். இதோ இந்தப் பாடல் அவர் நினைவை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறதே!
பாடல் — அழைக்காதே…
படம் —- மணாளனே மங்கையின் பாக்கியம்
பாடியவர் — சுசீலா குழுவினர்
இசை — ஆதி நாராயண ராவ்.
S.M. சுப்பையா நாயுடு
S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். பல அற்புதமான பாடல்களை வெள்ளித் திரைக்குத் தந்தவர். அதுவும் மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது. வெற்றிப் பாடல்களைத் தந்தது. அந்தப் பாடல்…
பாடல் — எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
படம் — மலைக்கள்ளன்
பாடியவர் — பானுமதி – டி.எம். எஸ்
இசை — S.M. சுப்பையா நாயுடு
தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி. தமிழ் திரைப்படத்தின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளர்களுள் இவரும் ஒருவர். சதா இசை பற்றிய சிந்தனையிலே இருந்த இவர், தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவை காலத்தால் மறக்க முடியாதவை. இதோ அவற்றிலிருந்து ஒன்று…
பாடல் — மாசிலா உண்மைக் காதலே….
படம் — அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
பாடியவர் — ஏ. எம். ராஜா
இசை — தக்ஷிணாமூர்த்தி.
இதுவரை பெரிய தேன் குடத்திலிருந்து சில துளிகள் மட்டும் பருகினோம். தொடர்ந்து மீண்டும் சுவைப்போம்.