தேடல்

விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் மனையாளின் பசி…

காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..

பாலியல் பெண்
அறிந்திருப்பாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
கிழவனா
என்று..

விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்.

வேதனை

அங்கும் இங்குமாய்
சிதறிக் கிடக்கும்
ரொட்டித் துண்டுகளைப் போல
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்!

பேப்பர் வெயிட்டையும் மீறி
காற்றில் படபடக்கும்
காகிதத்தைப் போல
என் மனது!

உத்தரவின்றி
உள்ளே வந்துவிட்டு
வெளியேறத் தவிக்கும்
தட்டாம் பூச்சியாய்
வார்த்தைகளின்றி
அலைந்து கொண்டிருக்கிறது
உள்ளுக்குள்ளேயே
ஒரு குரல்!

கனத்த மௌனத்தில்
நினைவின் நிசப்தத்தையும் மீறி
எங்கோ தூரத்தே ஒலிக்கிறது
ஒரு கூட்ஸ் ரயிலின் சப்தம்!

அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்
கேட்பாரற்று!

மோகம்

ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்

வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்

விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு

சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..

டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது

வலி

ஒரு கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
புது மணப்பெண்ணின்
மோகாவஸ்தைகளாய்
நீண்டு கொண்டே
போனது என்
வார்த்தைகள்

ஒரு நல்ல கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

தலைப்பிரசவப் பெண்ணின்
இடுப்பு வலி போல
கொஞ்சம் கொஞ்சமாய்
ரம்பித்து
முடிவில்
வெளிபோந்தது
என் கவிதை
குருதி தோய்ந்த
தொப்புள் கொடியோடு
உயிரின்றி..
உணர்வின்றி…

காதல் கவிதை

உத்தரவின்றி
உள்ளே வந்து விட்டு
உரிமையோடு
அலையும்
பூனைக்குட்டியைப் போல

அறைக்குள்
உலாவிக் கொண்டிருக்கிறது
அவளின் மூச்சு!

உறுப்புகளின் உரசல்களுக்கு
ஏங்கித் தவிக்கும்
பருவமாய்

ஏதேதோ நினைவுகள்
ஏங்கவைக்கும் கனவுகள்

கடமை!
கண்ணியம்!
கட்டுப்பாடு!

எங்கோ
எதற்கோ
யாரோ
கூவுகிறார்கள்!

உணர்ச்சிகளில்லாப்
புணர்ச்சிகள் போல்
நுகர்வோர்
இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
அவள் விட்டுச் சென்ற
மூச்சு!

கவிதை

உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!

வாழ்க்கை

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

அது
சிறு கவிதையோ
பெருங்கவிதையோ
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

சாலையைக் கடக்கும் பொழுதோ..
சோலையில் சுகிக்கும் பொழுதோ..

கடலலையின் சத்தத்திலோ..
காதலியின் முத்தத்திலோ..

சண்டையின் உச்சத்திலோ..
சாக்கடையின் பக்கத்திலோ..

மொட்டைமாடிப் புணர்ச்சியிலோ..
தொட்டணைத்த நெகிழ்ச்சியிலோ..

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

கட்டிலின் சத்தமும்
கவிதை தான்
தொட்டிலின் சிணுங்கலும்
கவிதை தான்
குமரியின் சிரிப்பும்
கவிதை தான்
குழந்தையின் அழுகையும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

நண்பனின் மரணமும்
கவிதை தான்
நடிகையின் துயரமும்
கவிதை தான்

நெருங்கியவர்களின் பிரிவும்
கவிதை தான்
பிரிந்தவர்களின் நெருக்கமும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்படி வேண்டுமானாலும்
உருவாகலாம்

நேசிப்பின் இழப்புகள்
கவிதையாவது
வாழ்வின்
அர்த்தமா?
அனர்த்தமா?