இசை கேட்டு எழுந்தோடி…

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்களில் பல நம் மனத்திற்கும் நினைவிற்கும் என்றும் இனிமையைத் தரக்கூடியவை. அன்று முதல் இன்று வரை எத்தனையோ இசையமைப்பாளர்கள், எவ்வளவோ இனிமையான பல பாடல்களைத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அவற்றிலிருந்து சில நினைவுகள்.

ஜி.ராமநாதன்
இவர் தன் இசையமைப்பில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர். பல பிரபலமான பாடகர்களை இசையுலகிற்கு அறிமுகம் செய்தவர். பல்வேறு இசைக் கோர்வைகளை இணைத்து புதிய பல ராகங்களைப் படைத்தவர். அவர் இசையமத்த படங்களுள் ஒன்றுதான் மந்திரிகுமாரி. திருச்சி லோகநாதனும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் மிகவும் சூப்பர் ஹிட்.

பாடல் ….. உலவும் தென்றல் காற்றினிலே
படம் …… மந்திரிகுமாரி
பாடியவர்கள் ……. திருச்சி லோகநாதன் – ஜிக்கி
இசைமயைத்தவர் ….. ஜி. ராமநாதன்.

இது என்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்றல்லவா?

சி.ஆர். சுப்பராமன்
பழங்கால இசையமைப்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றிருந்தவர் இசை மேதை சி.ஆர். சுப்பராமன். மிகவும் எளிமையான இவர், அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர். அவர் இசையமைத்த தேவதாஸ் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். கதைக்காக மட்டுமல்லாமல் பாடலுக்காகவும் ஓடிய படம் என்று தேவதாஸைச் சொல்லலாம். அதுவும் இந்தப் பாடலை நாம் என்றுமே மறக்க முடியாது.

பாடல் — துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே…
படம் — தேவதாஸ்
பாடியவர் — கண்டசாலா
இசையமைப்பு — சி.ஆர்.சுப்பராமன்

மடப்பள்ளி ராமராவ்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்து வந்தும் பல இசையமைப்பாளர்கள் இங்கு கொடிகட்டிப் பறந்தார்கள். தங்களது இனிய இசையமைப்பாலும், தேர்ந்தெடுத்த குரல்களாலும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் காலத்தால் அழியாது நிற்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களில் இதோ ஒன்று. இதற்கு இசையமைத்தவர் மடப்பள்ளி ராமராவ்.

பாடல் — கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
படம் — தாய் உள்ளம்
பாடியவர் — எம். எல்.வசந்தகுமாரி
இசையமைப்பு — மடப்பள்ளி ராமராவ்.

ராஜேஸ்வரராவ்
பல இசையமைப்பாளர்கள் தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி அருமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். பாடலாசிரியர்களும், தங்கள் பாங்கிற்கு சிறப்பாக பாடல்களை இயற்றித் தர, பல அற்புதமான இசைப் பொக்கிஷங்களை இவர்களால் உருவாக்க முடிந்தது. முக்கியமாக ராஜேஸ்வரராவ் பல இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர். அவர் இசையமைத்த பல பாடல்கள் அழகான கர்நாடக ராகத்தின் சாயலில் அமைந்தும், கேட்பவர்களைப் பரவசப்படுத்தும்படியாகவும் இருக்கும். இதோ அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று…

பாடல்… மாயமே நானறியேன்
படம் ….. மிஸ்ஸியம்மா
பாடியவர் ….. பி.லீலா
இசை …. ராஜேஸ்வர ராவ்

எஸ்.வி.வெங்கட்ராமன்
எஸ்.வி.வெங்கட்ராமன். கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் பாடல்கள் அமைக்கப்பெறும் பொழுது, அதில் உள்ள சங்கதிகள் எனப்படும் ஒலிக்கோர்வைகள் மிக முக்கியமானவை. ஸ்வரம் தவறாமல் பாடுவதும், அதற்கேற்ப இசையமைத்தும் மிக மிக முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்தி, பல ஜாம்பவான்களை தனது இசையில் பாட வைத்த பெருமைக்குரியவர் எஸ்.வி.வெங்கட்ராமன். அதிலும் சகுந்தலை படத்தில் பிரபல கர்நாடக இசைப் பாடகர்களான ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி குரல்களில் ஒலித்த இந்தப் பாடல், அந்தக் காலத்தின் சிறந்த டூயட் பாடல்களில் ஒன்று.

பாடல் — பிரேமையில்…
படம் — சகுந்தலை
பாடிவர் — ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி
இசை — எஸ்.வி.வெங்கட்ராமன்

கண்டசாலா.
கண்டசாலா, சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல; மிகச் சிறந்த இசையமைப்பாளரும் கூட. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல சிறந்த பாடல்களை இவர் அளித்திருக்கிறார். கள்வனின் காதலி படத்திற்கு இவர் M.R. கோவிந்தராஜுலு நாயுடுவுடன் இணைந்து இசை அமைத்த பாடல்கள் அக்காலத்தில் சூப்பர் ஹிட். இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்… வெயில்கேற்ற நிழல் உண்டு..
படம் … கள்வனின் காதலி
பாடியவர் …. கண்டசாலா-பானுமதி
இசை ….. கண்டசாலா – M.R. கோவிந்தராஜுலு நாயுடு

விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்வதர்களுள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி என்றும் ஒலித்து கேட்பவர்களை பரவசத்துக்குள்ளாக்கியது. அதுவும் மாலையிட்ட மங்கை படத்துக்கு அவர்கள் இசை அமைத்த பாடல்கள், நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசச் செய்தது. எத்தனையோ பாடல்கள், எத்தனையோ சாதனைகள்…

பாடல்… செந்தமிழ் தேன் மொழியாள்..
படம் – மாலையிட்ட மங்கை
பாடியவர்.. டி.ஆர்.மகாலிங்கம்
இசை… விஸ்வநாதன்-ராமமூர்த்தி

டி. ஆர். பாப்பா
டி. ஆர். பாப்பா. பெயரில் தான் இவர் பாப்பா. ஆனால் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நீங்காத நினைவலைகளைத் தோற்றுவிப்பதாய் இருந்தன. அதுவும் டவுன்பஸ் படத்திற்காக கவி காமுஷெரீப்பின் பாடலிற்கு அவர் இசை அமைத்திருந்த விதம் மிகவும் சிறப்புற அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தப் பாடல் கேட்பவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்வதாய் இருக்கிறதல்லவா?

பாடல் — பொன்னான வாழ்வே
படம் — டவுன்பஸ்
பாடியவர்கள் — திருச்சி லோகநாதன், M.S. ராஜேஸ்வரி.
இசை — டி.ஆர். பாப்பா

கே.வி.மகாதேவன்
கே.வி.மகாதேவன். திரை இசைத் திலகம் என்று போற்றப்பட்டவர். இசைக்கும், ராகத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை அமைத்தவர். பாடல்களில் பழைமையையும் புதுமையையும் சரிவிகத்தில் கலந்து புதியதொரு பாணிக்கு அடித்தளமிட்டவர். அதுவும் பக்திப் பாடல்களுக்கு அவர் இசை அமைத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவர் இசையமைத்த பாடல்களுள் இந்தப் பாடல் என்றும் இசை ரசிகர்களின் காதில் மறக்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். காரணம் பாடலைப் பாடியவர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று முப்பெரும் மேதைகளும் இணைந்து பணியாற்றியது தான். அந்தப் பாடல்….

பாடல்.. அமுதும் தேனும் எதற்கு…
படம் — தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர் — சீர்காழி கோவிந்தராஜன்
இசை — கே.வி.மகாதேவன்.

ஏ. எம். ராஜா
கல்யாண பரிசு. அந்தக் காலத்தில் வெளி வந்து வெள்ளி விழாக் கண்ட படம். இயக்குநர் ஸ்ரீதருக்கு மிகுந்த பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த படம். ஜெமினி கணேசனின் மறக்க முடியாத நடிப்பும், சரோஜாதேவி வெளிப்படுத்திய முக பாவங்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவை. பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல், இசையும் அமைத்து தான் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் , ஏ. எம். ராஜா அவர்கள். அதுவும் இந்தப் பாடல் காதலில் தோல்வியுற்றவர்களின் உள்ளத்தை உருக்கச் செய்யும் சோக ரசப்பாடல்.

பாடல் — காதலிலே தோல்வியுற்றான்…
படம் — கல்யாண பரிசு
பாடியவர் — ஏ. எம். ராஜாஇசை — ஏ. எம். ராஜா

ஆதி நாராயண ராவ்
ஆதி நாராயண ராவ். குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளரான இவர், தனது பாடல்களில் ‘மெலோடி’க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். இரைச்சலூட்டும் அதிக வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தாமல், மென்மையான பாடல்களை அமைதியான நல்ல இசையின் மூலம் தந்தவர். இதோ இந்தப் பாடல் அவர் நினைவை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறதே!

பாடல் — அழைக்காதே…
படம் —- மணாளனே மங்கையின் பாக்கியம்
பாடியவர் — சுசீலா குழுவினர்
இசை — ஆதி நாராயண ராவ்.

S.M. சுப்பையா நாயுடு
S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். பல அற்புதமான பாடல்களை வெள்ளித் திரைக்குத் தந்தவர். அதுவும் மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது. வெற்றிப் பாடல்களைத் தந்தது. அந்தப் பாடல்…

பாடல் — எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
படம் — மலைக்கள்ளன்
பாடியவர் — பானுமதி – டி.எம். எஸ்
இசை — S.M. சுப்பையா நாயுடு

தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி. தமிழ் திரைப்படத்தின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளர்களுள் இவரும் ஒருவர். சதா இசை பற்றிய சிந்தனையிலே இருந்த இவர், தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவை காலத்தால் மறக்க முடியாதவை. இதோ அவற்றிலிருந்து ஒன்று…
பாடல் — மாசிலா உண்மைக் காதலே….
படம் — அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
பாடியவர் — ஏ. எம். ராஜா
இசை — தக்ஷிணாமூர்த்தி.

இதுவரை பெரிய தேன் குடத்திலிருந்து சில துளிகள் மட்டும் பருகினோம். தொடர்ந்து மீண்டும் சுவைப்போம்.

இசைச் சங்கமம் – சென்னையில் திருவையாறு

திருவையாற்றில் நடைபெறும் இசைவிழாவைப் போல சென்னையிலும் வருடா வருடம் தொடர்ந்து நடைபெறும் இசைவிழா ‘சென்னையில் திருவையாறு’. கலாலயா யூ.எஸ்.ஏ. நாடக அகாடமி, ராஜ் டிவி, லஷ்மண் ஸ்ருதி மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விழா வழக்கம் போல இந்த முறையும் மிகக் கோலாகலமாக ஆரம்பித்தது. ‘எல்லோராலும் திருவையாற்றிற்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது ஆகவே, இங்கிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் சென்னையில் இவ்விழாவை வருடா வருடம் நடத்தி வருகிறோம் என்றார் விழாவின் அமைப்பாளர் லஷ்மண்(ஸ்ருதி).

இவ்வருட இசை விழா 21-12-2007 அன்று சென்னை காமராஜர் அரங்கில் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக பி.எஸ் நாராயணசாமி தலைமையில் பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடினர். பின்னர் தொடர்ந்து ராஜேஷ் வைத்யாவின் வீணை, ஹரிசரனின் வாய்ப்பாட்டு, ஸ்ரீகலா பரத்தின் பரதநாட்டியம், நித்யஸ்ரீயின் கச்சேரி, பிரசன்னாவின் கிடார் என முதல் நாளே நிகழ்ச்சி களை கட்டியது. அரங்குகள் நிரம்பி நல்ல கூட்டமும் காணப்பட்டது என்றாலும் வழக்கம் போல இளைய தலைமுறையினர்கள் அதிகம் தென்படவில்லை என்பது ஒரு குறைதான். தொடர்ந்து கன்யாகுமரி வயலின், சைந்தவியின் வாய்ப்பாட்டு, லலிதா நந்தினியின் வாய்ப்பாட்டு, விஜய் சிவாவின் கச்சேரி என நிகழ்ச்சி மறுநாளும் (22-12-2007) களை கட்டியது. அன்றைய நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஆராவமுதாச்சாரியாரின் ‘ஹரிகதா’ அமைந்திருந்தது. தனக்கே உரிய ஏற்ற இறக்கமான குரலாலும், அழகான விளக்கங்களாலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டார் ஆச்சாரியார்.

Dr. kadam kaarthik 

23-01-2007 அன்று HEART BEAT ENSEMBLE கடம் கார்த்திக்கின் FUSION-னுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சைலண்ட் வயலின் எம்பார் எஸ்.கண்ணன் வெகு அற்புதமாக வாசித்தார். பக்கவாத்தியமாக யு.பி.ராஜூ மாண்டலினில் அநாயசமாக புகுந்து விளையாடினார். குறிப்பாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மீதான, ஆதிதாளம்- புஜங்கணி ராகத்தில் அமைந்த ஸ்ரீ குருராயா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த கமலாலயம் தந்த மும்மணிகள் என்னும் ஸ்ரீ ராகத்தில் அமைந்த மும்மூர்த்திகள் பேரிலான பாடல் எந்தரோ மகானுபாவுலுவை ஞாபகப்படுத்தியது. கடம் வாசிப்பது மட்டுமில்லாமல் மிக அற்புதமாக, அநாயசமாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார் கடம் கார்த்திக். தொடர்ந்து வந்த ‘ஓம் சரவணபவா’ என்னும் திருப்புகழ் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. கடம், வயலின், மாண்டலின், மிருதங்கம், கஞ்சிரா என மாற்றி மாற்றி தனிஆவர்த்தனம் செய்ததில் ரசிகர்கள் கிறங்கித்தான் போயினர். குறிப்பாக எம்பார் கண்ணன் மிக அற்புதமாக ஆவர்த்தனம் செய்தார். வழக்கம் போல கடத்தைத் தூக்கிப் போட்டு விளையாடவும் செய்தார் கார்த்திக். பக்கவாத்தியமாக பூங்குளம் சுப்ரமண்யத்தின் மிருதங்கமும், சுந்தர் குமாரின் கஞ்சிராவும், ஏ.எஸ்.கிருஷ்ணனின் மோர்சிங்கும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து ராகங்களையும் மாறி மாறி வாசித்தது முத்தாய்ப்பாக இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான கச்சேரி.

தொடர்ந்து கே.காயத்ரி, மஹதி, உன்னிகிருஷ்ணன் என கச்சேரி தொடர்ந்தது. இறுதியில் ஷஷாங்கின் புல்லாங்குழலுடன் அன்றைய நாள் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. சில நிகழ்ச்சிகளில் அமர்வதற்கு இடமில்லாமல் பார்வையாளர்கள் நின்று கொண்டே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

24-12-2007 அன்றைக்கான நிகழ்ச்சிகள் கர்நாடிகா பிரதர்ஸின் கச்சேரியுடன் துவங்கியது. தொடர்ந்து சத்யநாராயணாவின் கீ போர்டு மனதிற்கு நிறைவைத் தந்தது அவர் அநாயசமாக அதை வாசித்த விதம் அருமை. அடுத்து வந்த முரளிதரன் குழுவினரின் பரதநாட்டியம், ரஞ்சனி காயத்ரியின் வாய்ப்பாட்டு, குமரேஷ்-கணேஷின் வயலின் என நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையாக இருந்தன.

நிறைவு நாளான 25-12-2007 அன்று கத்ரிகோபால்நாத்தின் இனிமையான சாக்ஸபோனோடு நிகழ்ச்சி துவங்கியது. கன்யாகுமரி, ஹரித்வாரமங்கலம் பழனிவேல் என தனது குழுவினருடன் வழக்கம் போல அழகாக வாசித்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றார் கத்ரி. தொடர்ந்து சியாட்டில் ராமனின் வாய்ப்பாட்டுக் கச்சேரி. ராமனுக்கு நல்ல குரல்வளம், சுத்தமான உச்சரிப்பு என நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். அத்துடன் அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக, அடக்கமாகப் பாடியதையும் சேர்த்துக் கொள்ளலாம். மன நிறைவைத் தந்த கச்சேரி.

 Sikkil Gurusaran

தொடர்ந்து பாட வந்தவர் சிக்கில் குருசரண். புகழ்பெற்ற சிக்கில் சகோதரிகள் லீலா-குஞ்சுமணியினரில் லீலாவின் பேரன். இன்றைய இளைய தலைமுறைப் பாடகர்களின் இவருக்குத்தான் அதிகக் கூட்டம் கூடுகிறது என்பது உண்மை. அவர் ‘நீயே கதி’ என்று பாட ஆரம்பித்த சற்று நேரத்தில் கூட்டம் அதிகமாகி நாற்காலிகள் நிரம்பின. தொடர்ந்து ஸ்ரீ மஹா கணபதே, ஓ ராமா பாடல்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. தொடர்ந்து பாடிய ‘சதா மதி’ என்ற கம்பீரவாணி ராகப் பாடலும் அதற்கான பக்கவாத்தியமும் மிக அருமை. ‘ஸ்ரீ வல்லி தேவசேனாபதே’ பாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. அந்தப்பாடலுக்கு கணேஷ் பிரசாத் வயலினில் தனி ராஜபாட்டையே நடத்தி விட்டார் என்று சொல்லலாம். புருஷோத்தமின் கஞ்சிராவும், நெய்வேலி நாராயணனின் மிருதங்கமும் போட்டி போட்டுக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தவிதம் அருமை. இறுதியாக ‘சின்னஞ்சிறு பெண் போலே’ பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் குருசரண். அந்தப்பாடலுக்கு ரசிகர்கள் கூட்டமும் அவரோடு சேர்ந்தே பாடியது குறிப்பிடத்தக்கது.

 sowmyaa

 தொடர்ந்து வந்த சௌம்யா தனது வழக்கமான டிரேட் மார்க் புன்சிரிப்புடன் ‘ஆடிக் கொண்டார்’ பாடலை அழகாக ஆலாபனை செய்தார். தொடர்ந்து தியாகராஜரின் புகழ்பெற்ற கிருதியான ‘மனவியாக லின் சரா டதே’ பாடலை உருகும் விதத்தில் பாட, ரசிகர்கள் பலர் எழுந்து நின்று கைதட்டினர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, அருளவேண்டும் தாயே, உன்னையல்லால்.., நின்னையே ரதியென்று.. என்று பல பாடல்களை உச்சரிப்பு சுத்தத்துடன் அழகாக ஆலாபனை செய்த விதம் அருமை. இறுதியாக அண்ணாமலை ரெட்டியாரின் ‘சென்னி குள நகர் பாலன்’ காவடிச் சிந்தை ஏனோ சற்று அவசரமாகவே பாடி நிறைவு செய்தார். ராமதாஸின் வயலினும், கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தது.

 Sudha Ragunathan

அடுத்து சுதா ரகுநாதன் பாட வரும்போது அரங்கு முற்றிலுமாக நிறைந்து விட்டது. நாற்காலியில் அமர இடமில்லாததால் ரசிகர்கள் பலர் முணுமுணுப்புடன் தரையில் அமர்ந்து கொண்டே நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர். அரங்கில் நிற்கவும் இடமில்லாததால் பல ரசிகர்கள் மேடையில் ஏறி, கச்சேரி செய்பவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு விட்டனர். வழக்கமான முறையில் அற்புதமாகப் பாடி தனது கச்சேரியை நிறைவு செய்தார் சுதா ரகுநாதன். அவர் சென்றவுடனேயே அரங்கத்திலிருந்து பலரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். இறுதியாக ஸ்ரீ ராம் பரசுராம்-அனுராதா ஸ்ரீராமின் ஹிந்துஸ்தானி-கர்நாடிக் ஜூகல்பந்தியுடன் கச்சேரி நிறைவுற்றது.

‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி சென்னை ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் என்றாலும் நிகழ்ச்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும், ரசிகர்கள் ஒழுங்காக அமர்வதற்கு சரியான சிட்டிங் வசதி செய்யப்படவில்லை என்பது போன்று குற்றச்சாட்டுக்களை அரங்கில் கேட்க முடிந்தது. அடுத்த ஆண்டு கச்சேரியில் இது போன்று குறைகள் நேராது என்று நம்புவோமாக.