தொகுப்புகள்

ரசவாதம் – 2

வள்ளலாரின் வாழ்க்கைச் சம்பவம் மூலம் ’ரசவாதம்’ என்பது எல்லோருக்குமானதல்ல. தங்கத்தின் மீதான ஆசை ஒழித்தவருக்கே கை வரும் என்பது புலனாகிறது.

திருமந்திரத்தில் திருமூலரும்,

“செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்

செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்

செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்

செம்பு பொன்னான திருவம் பலமே”     

என்கிறார்

இந்தியாவில் மட்டுமல்ல; பழங்காலத்தில் கிரீஸ், சைனா, எகிப்து மற்றும் அரேபியா போன்ற நாடுகளில் இவ்வகை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றிக் கொண்டுள்ளனர் என்பது பழங்கால நூல் குறிப்புக்களிலிருந்து தெரிய வருகிறது. 1403 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி ரசவாதப் பயிற்சியை தடைசெய்தார். அப்பயிற்சிகளை மேற்கொண்டோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதேசமயம் இரண்டாம் ருடால்ஃப் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருவில் உள்ள தன்னுடைய அரண்மனையில் பல்வேறு ரசவாதிகளை வர வழைத்து, அவர்களை சோதனைகள் செய்ய வைத்து, அவர்களது பணிக்காக பல்வேறு பரிசுகளை அளித்து கௌரவித்திருக்கிறார்.

ரசவாதம் என்பது சாதாரண உலோகங்களை மதிப்புமிக்க தங்கமாக மாற்றச்செய்கின்ற ஒரு முயற்சி. ஆனால் அது பல்வேறு ஆபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால் உலகெங்கும் அது வெளிப்படையாக நிகழவில்லை.

விஞ்ஞானிகளும் எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களின் மூலக் கூறுகளின் அமைப்பை மாற்றியமைப்பதனால் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்பது உண்மைதான். ஆனால் இரும்பை அந்த முறையில் தங்கமாக மாற்றுதல் சாத்தியமில்லை என்கின்றனர். ஆனால் பாதரசம், காரீயம்,  பிலட்டினம்,  வெள்ளி ஆகியவற்றின் அணுத் தொகுப்பை, மூலக்கூறு அணுவை, அணுச்  சிதைவு மூலம் மாற்றியமைத்துத் தங்கமாக்கலாம் என்ற ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் அவை சாத்தியமில்லை. அவ்வாறு தங்கம் செய்வதற்கு பல ஆண்டுகால மனித உழைப்பு விரயமாவதுடன், பலகோடி டாலர்கள் செலவிட வேண்டிவரும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 அக்காலத்தில் பாதரசம் இந்தச் செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்ததாலேயே இக்கலையை தமிழில் ‘ரசவாதம்’ என்று அழைத்தனர். நீர்ம வடிவத்தில் இருக்கும் பாதரசத்தை திடப்பொருளாக்கும் கலையிலும் அக்காலச் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவற்றை லிங்க உருவாக்கி வழிபட்டனர். பல ஆலயங்களிலும் மக்கள் வழிபாட்டிற்காக ஸ்தாபித்தனர்.

இரும்பை முதலில் செம்பாக மாற்றுதல். பின்னர் செம்பை தங்கமாக மாற்றுதல் என்று இருகூறுகளை உடையதாக ரசவாதக் கலைப் பயிற்சிகள் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

வெள்ளியை தங்கமாக மாற்றும் முறைகளையும் ஆய்வு செய்திருந்தனர். ஆனால் அதற்கான வழிமுறைகளை அவர்கள் ரகசியமாகவே வைத்திருந்தனர். சித்தர்களின் பழங்கால ஓலைச்சுவடிகளிலும், பழங்கால வேதங்களிலும் ரசவாதம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

இந்த ஆற்றல்கள் பெற்ற சித்தர்களில் பல வகையான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களில் சிலர் செம்பைப் பொன்னாக்கினர் .சிலர் பாதரசத்தையும், வேறு சிலர் காரீயத்தையும் பொன்னாக்கினர். சிலர் மூலிகைச் சாறுகளையும் பயன்படுத்தினர். வேறு சிலரோ மந்திரங்களைப் பயன்படுத்தினர். 

இந்த ரகசியமான ரசவாத ஆய்வுகள் இன்னமும் ரகசியமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, என்றாவது ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல நூறு ஆண்டுகளாக.

****

 

ரசவாதம் – 1

ரசவாதம் என்னும் இரும்பைப் பொன்னாக்கும் வித்தை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதானா, விஞ்ஞானப்படி அவை சாத்தியம் தானா, சாத்தியம் என்றால் எப்படி என்பது ஆய்வுக்குரியது. ஆனால் நம் பாரம்பரிய இந்திய சித்தர்கள் இரும்பைப் பொன்னாக்கும் வித்தையை அறிந்தவர்கள். அதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தவர்கள். அதில் வெற்றியும் பெற்றவர்கள். ஆனால் அந்த ரகசியங்களை அறிந்து சாதாரண மனிதர்களும் அது போல் செயல்பாடுகளி; இறங்கினால் அது விபரீத விளைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர்கள், அவற்றை பரிபாஷையாக, சங்கேதக் குறிப்புகளாகப் பாடல் வடிவில் ஓலைச்சுவடிகள் எழுதி வைத்தனர்.

 

அதில் இருந்து சில பாடல்களை இங்கே பார்ப்போம்.

 ”கேட்கவே மதியில் அப்பா

கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று

மீட்கவே உருக்கிப் பார்க்க

மிக்கது ஓர் மாற்றாகும்

வீட்கமாய்த் தகடு அடித்து

விருப்புடன் காவி தன்னில்

ஆட்கவே புடமும் இட்டால்

அப்பனே தங்கம் ஆமே…”                    

 

என்றும்

 

பாரப்பா செந்தூரம் வேதை கேளு

பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி

தீரப்பா பரியோன்று கூடச் சேரு

திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய

நேரப்பா கண்விட்டு ஆடும் போது

நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு

ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது

அப்பனே பசுமை என்ற தங்கம்தானே”         

 

என்றும்

 

எண்ணான வேதைகோடி

உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்

உண்மையாம் சான்றோர்க்கும்

தயை குணம் உள்ளோருக்கும்

தன்மையாம் மொழிகள் கூறி

உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்

வண்மையாம் மனமுள்ளோர்க்கும்

மேன்மையாம் பலிக்கும் தானே…

என்றும் கூறி எச்சரித்திருப்பதன் மூலம் ரசவாதம் என்பது ஆசையற்றவர்களுக்கே சாத்தியம் என்றாகிறது.

வள்ளலாரும் ரசவாதமும்

வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள் இந்த ரசவாத வித்தையில் தேர்ந்தவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

வேம்பையர் என்பவர் எப்பொழுதும் வள்ளலாரின் கூடவே இருப்பார். அதனால் அவரால் வள்ளலாரின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்க முடிந்தது. வள்ளலார் ‘இரும்பைப் பொன்னாக மாற்றுதல், மூலிகைகளைக் கொண்டு அரிய செயல்கள் செய்தல்’ போன்றவற்றைச் செய்யும் பொழுது உடன் இருந்து வந்ததால், இவருக்கு ரச வாதத்தின் மீது ஆசை ஏற்பட்டது. ஒரு நாள் யாருமறியாமல் வள்ளலார் செய்வதைப் போன்ற செயல்களில் இரகசியமாக இவர் ஈடுபட்டார். விளைவு. கண் பார்வை பறி போனது. இறுதியில் வள்ளலாரைச் சந்தித்து, தனது தவற்றை மன்னிக்குமாறு வேண்டினார்  அண்ணலின் அருளால் பார்வை திரும்பப் பெற்றறார். அதுபோல தேவ நாயகம் பிள்ளை என்பவரும் ரச வாதத்தின் மீது பித்துக் கொண்டு அலைந்து பொருள் எல்லாம் இழந்தார். பின்னர் வள்ளலார் இவருக்கு புத்திமதி கூறி தடுத்தாட் கொண்டார்.

ஒருமுறை பக்தர் ஒருவர் வள்ளலாரிடம் “நீங்கள் இரும்பைப் பொன்னாக்கும் வித்தை அறிந்தவராமே அதை எங்களுக்குச் செய்து காட்டுங்களேன்” என்றார். உடனே அவர் கையில் இருந்த சொம்பை வாங்கி வள்ளலார், அதைச் சிறிது நேரம் தம் கையில் வைத்திருந்து பின்னர் மீண்டும் அந்த அன்பரிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சொம்பு தங்கமாக மாறியிருந்தது. அது கண்டு அந்த அன்பர் ஆச்சரியமுற்றபோது, அந்தச் சொம்பை வாங்கிய வள்ளலார், “இந்தக் கலை ஆசைப்படாதவர்களுக்கே, இச்சையுடையோர்களுக்கு உதவாது” என்று கூறி அருகில் உள்ள கிணற்றில் எறிந்து விட்டார்.

(தொடரும்)

***