All posts in the category

வீரத்துறவி விவேகானந்தர் சிந்தனைகள்

Published ஜனவரி12, 2013 by ramanans

அறிவின் ஊற்று


ஜனவரி 12. 1863-ம் ஆண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?

சுவாமி விவேகானந்தர்

 ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.

 கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.

  யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில்   உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

 உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.

 உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். ஆகவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.

 சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம்.  ஆகவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.  

 நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.

 இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு.  ஆனால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.

  துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.   

 எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது. 

 மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ஆண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.

சேவையின்  நாற்று

 

********

Follow

Get every new post delivered to your Inbox.

Join 410 other followers

%d bloggers like this: