யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
- என கீதையில் மொழிகிறான் கண்ணன்.
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.
ஆம். அதற்காகவே இறைவனின் அவதாரங்கள் நிகழ்கின்றன. அவதாரம் என்றால் இறங்கி வருவது என்பது பொருள். தீயவர்களை ஒழித்து பக்தர்களைக் காப்பதற்காக பரம்பொருளான இறைவன் அவதாரமேற்று வருகிறான். அதற்காக ஏற்பட்டதுதான் தசாவதாரம் போன்றன. அந்த தசாவதாரத்திலும் மிக மிக உயர்வாகக் கருதப்படுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம். ஏன்?
மச்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி அவதாரங்களில் மிக உயர்வாகக் கருதப்படுவது ராம மற்றும் கிருஷ்ணாவதாரங்கள்தான். காரணம், மற்ற அவதாரங்களை விட ராமனும் கிருஷ்ணனும், தாம் ஒரு அவதார புருடன் என்பதை மறந்து மக்களுடன் மக்களாகக் கலந்து பழகி தங்கள் அவதார நோக்கத்தை நிறைவேற்றினர் என்பதால்தான். அதிலும் ராமர் தனது அவதாரச் சிறப்பு வெளிப்படும் காலத்தில், மக்களோடு மக்களாகக் கலந்து வாழ முடியாமல் வனவாசம் புக நேரிட்டு விட்டது. ஆனால் கிருஷ்ணாவதாரத்திலோ அவன் இடைச் சேரியில் பிறந்து ஆய்ப்பாடிச் சிறார்களுடன் ஆடிப் பாடி, விளையாடி, கோபிகைகளுடன் லீலைகள் செய்து மக்களோடு மக்களாக, தாமும் அவர்களுள் ஒருவனாகப் பழகி அவர்களை தம் அவதார மகிமைகளை, லீலா வினோதங்களை, அற்புதங்களை அனுபவிக்கச் செய்தது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.
தூயானை தூய மறையானை தென்னாலி
மேயானை மேவாளுயிருண்டு அமுதுண்ட
வாயானை….
- என பிரபந்தம் கண்ணனின் அவதாரப் பெருமையை சிறப்புறப் பேசும்.
இறைவனையே மகனாக, இறைவனையே தோழனாக, இறைவனையே காவலனாக, இறைவனையே சகோதரனாக அடைவது என்பது சாமான்யமானதா என்ன? இறைவனே மானுட உருவேற்று வந்து தங்களுடன் ஆடிப் பாடி, விளையாடி சண்டையிட்டு வெண்ணெய் திருடி உண்டு வாழ்ந்த அற்புதங்களைக் காண அந்த ஆயர்பாடி மக்கள்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். அதனால் தானே ”என்ன தவம் செய்தனை… யசோதா….” என்று பாடினார் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்!
அவதார மகிமை
இப்படிப்பட்ட இறைவனின் அவதாரம், துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்திற்காக ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. பகவானும் கீதையில் அதையே சொல்கிறான். ஆனாலும் அதற்காகத்தான் அவதாரங்கள் நிகழ்கின்றனவா? எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளான இறைவன் நினைத்த மாத்திரத்தில் அசுரர்கள் அழிந்து விட மாட்டார்களா? அதர்மம் ஒடுங்கி விடாதா? தர்ம ஸம்ஸ்தாபனம் உண்டாகி விடாதா? இதற்காக இறைவன் மானுட உரு எடுத்து, மனிதர்களைப் போலவே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மணம் செய்து, எதிரிகளுடன் சண்டையிட்டு, பூசல் செய்து, அவமானங்களைத் தாங்கி, அல்லலுற்று, துன்பமுற்று வாழத் தான் வேண்டுமா?
தாம் ஒன்றைச் சங்கல்பித்த மாத்திரத்திலேயே அதை நடத்தி முடிக்கும் ஆற்றல் பெற்ற இறைவன் ஏன் மானுட அவதாரம் எடுத்து வர வேண்டும், மானுடர்களுடன் மானுடனாகப் பழகி தானும் அந்த இன்ப, துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?
காரணம் இருக்கிறது. அது…
(தொடரும்)
இது ஒரு மீள் பதிவு



Reblogged this on யாவருங்கேளீர்.
Pingback: கிருஷ்ணா… கிருஷ்ணா… « யாவருங்கேளீர்
EXCELLENT PAGE SPEAKS TRUTH ABOUT LIFE & HUMANBEING.
thanks lakshmi narasimhan sir
wish a very happy diwali
thanks. wish you the same