தாம் ஒன்றைச் சங்கல்பித்த மாத்திரத்திலேயே அதை நடத்தி முடிக்கும் ஆற்றல் பெற்ற இறைவன் ஏன் மானுட அவதாரம் எடுத்து வர வேண்டும், மானுடர்களுடன் மானுடனாகப் பழகி தானும் அந்த இன்ப, துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?
காரணம் இருக்கிறது.
அதுதான் அன்பு. அதுதான் பிரேமை. அதுதான் கருணை. அதுதான் இரக்கம்.
ஆம். தனது பக்தர்களின் மீது கொண்ட பெருங்கருணை காரணமாகவே, தனது அடியவர்கள் மீது கொண்ட பேரன்பின் காரணமாகவே ஆண்டவன் மானுட அவதாரம் எடுத்து வருகிறான். அவர்களது அபிலாஷைகளைப் போக்கவே அவன் அவர்களுள் தானும் ஒருவனாக இருந்து, சகஜ பாவனையில் அவனது அடியவர்கள் செய்யும் குற்றங் குறைகளையும் பொறுத்து, இரக்கம் காட்டி உய்விக்கிறான். ராம, மற்றும் கிருஷ்ண அவதாரங்களின் நோக்கம் இதுதான். குன்றணைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் கருணை மிக்கவன் தான் என்பதை அவ்வவதாரங்களில் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறான் எம்பெருமான். அவதாரம் என்பது உண்மையில் பக்த பரிபாலனத்திற்காகத்தான். சாது ரக்ஷணைக்காகத்தான்.
அவதாரப் பெருமை
ராஜ நீதியை உலகுக்கு உபதேசிக்கத்தான் இராமாவதாரம் என்பது சிலரது கருத்து. இராவண வதத்திற்குத்தான் என்பதும் ஒரு கருத்து. ஆனால் ஏழு மரங்களைத் துளைத்து மீண்டு வரும் ஆற்றல் மிக்க இராமனின் அம்பு, சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனின் ரதத்தை, அவனையும் சேர்த்துத் துளைத்துத் தவிடுபொடியாக்கி மீண்டிருக்காதா? பின் ஏன் இராமன் அப்படிச் செய்யவில்லை? காரணம் என்ன?
தாடகை வதம், கரன் வதம், ஸூபாஹூ வதம், வாலி வதம் போன்றவையும் இராமரால் நிகழ்த்தப்பெற்றவைதான். ஆனால் இவ்வாறு வதம் செய்வதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் தானா இராமர் அவதரித்தார்? அல்லவே அல்ல. உண்மையில் ராமாவதாரத்தின் நோக்கம், ஒரு நீண்ட நெடும் பயணத்தை உடையது. விஸ்வாமித்திரருக்கு அனுக்ரஹிப்பதில் ஆரம்பித்து, முனிவர்களுக்கு தரிசனம், அகலிகை சாப விமோசனம், ஜடாயு மோட்சம், குகனுக்கு அருள், சபரிக்கு அன்பு, வாலிக்கு முக்தி என பல அருள் நோக்கங்களை உடையது அது. அவதாரங்களின் நோக்கம் அழிப்பது அல்ல. அன்பை நிலைநாட்டுவதே! கிருஷ்ணாவதாரமும் அப்படியே!
கிருஷ்ணாவதாரச் சிறப்பு
கம்சனை அழிப்பதற்கும், பாண்டவர்களைக் காப்பதற்கு மட்டுமே கிருஷ்ணன் அவதரிக்கவில்லை. கோபிகா ஸ்தீரீகள் ஆன்ம நல்ல உய்ய, நந்தகோபன் குலம் உயர்வடைய என்பதில் ஆரம்பித்து தன்னுள் பல்வேறு அருள் நோக்கங்களை உடையது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்..
”மற்ற அவதார புருஷர்கள் பகவானுடைய சில அம்சங்களின் தோற்றங்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர், சாட்சாத் பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனே அவதாரமாகி வந்தவர்” என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
அடியவர்க்கு எளிமை கிருஷ்ணாவதாரத்தில் வெளிப்படுவது போல் வேறு எந்த அவதாரத்திலும் வெளிப்படுவதில்லை. கழுத்தில் ஓலையைக் கட்டிக் கொண்டு, பாண்டவர்களுக்காகத் தூதுபோன கண்ணனின் எளிமை ஓர் உதாரணம். அது போல கௌரவர்கள் தம்மைத் தூற்றிய போதும் சிசுபாலன் பல முறை அவமதித்த போதும் கண்ணன் காட்டிய பொறுமை அவனது பெருமைக்குச் சான்றாகிறது. தானே எல்லாமாக இருந்தபோதிலும் கூட விதுரருக்குக் காட்டிய அன்பு, பீஷ்மரிடத்துக் காட்டிய மரியாதை, பெரியோரிடத்துக் காட்டிய பணிவு என தனது மாசற்ற குணங்களால், தனது பெருமையை உய்த்துணர வைக்கிறான் அவன்.
ஸ்ரீ கிருஷ்ணோபநிஷத், பகவான் கிருஷ்ணனின் பெருமையை மேலும் சிறப்பாக விளக்குகிறது. கண்ணன் மானுட அவதாரமாகத் தோன்றப் போகிறான் என்றதும் ஸ்ரீ முக்தி தேவியே யசோதையாகப் பிறக்கிறாள் என்கிறது அது. பிரம்ம வித்ய மாயை தேவகியாகவும், வேதம் வசுதேவனாகவும் பிறக்கின்றனர். ஸ்ரீ ருத்திரரே கண்ணனது புல்லாங்குழலாகத் தோன்றுகிறார். கோகுலத்திலுள்ள மரங்கள், கண்ணன் இருக்கும் இடத்திலே தவம் புரிந்து பேறு பெற வந்த தவ யோகிகள். வைகுந்தவாசிகளே ஆய்ப்பாடி மக்களானார்கள். ஆதிசேஷன் பலராமனாக வந்தான். பூமாதேவியே சத்யபாமாவாகத் தோன்றினாள். வேதங்களின் ரிக்குகளே ருக்குமணி, ராதை முதலான தேவிமாராகத் தோன்றினர் என்கிறது அது. அப்படியானால் அசுரர்கள் யார், கம்சன் ஏன் என்று தோன்றுகிறதல்லவா? கலி புருஷனின் ஒரு அம்சமே கம்சன். (துரியோதனனும் அப்படியே) காமம், கோபம், குரோதம், லோபம், பேராசை போன்ற துர்குணங்களே அசுர உருவங்களாகின.
(தொடரும்)
இது ஒரு மீள் பதிவு


excellent explaination also in detail . in a simple understanding language.
Thanks Lakshmi Sir
Very useful