1854 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 அன்று கேரளாவில் தோன்றிய கேரளாவில் தோன்றியவர் ஸ்ரீ நாராயணகுரு. இவர் ஆன்மீகத்துறை மட்டுமல்லாது கல்வித்துறையிலும் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்தவர். உயர்சாதியினர்க்கு எதிராக கல்வி, பொருளாதாரம், ஆன்மீகம் என அனைத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் வலிமை பெற்று விட்டாலே போதும் சமச்சீர் சமுதாயம் உருவாகி விடும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காகவே உழைத்தவர்.
மகாத்மா காந்தி, நாராயண குருவை ஒரு அவதார புருஷர் என்று குறிப்பிடுகிறார். கவி தாகூரோ, “ பாரத தேசத்தில் தோன்றிய மாகரிஷிக்களில் ஸ்ரீ நாராயணகுருவும் ஒருவர். ஞானம் வாய்ந்த ஒரு பரமஹம்சர்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமையை தனது செயல்பாடுகள் மூலம் மாற்றிய நாராயண குரு, கேரளா மட்டுமல்லாது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல இடங்களிலும் அனைத்து சாதி மனிதர்களும் வந்து வழிபாடுமாறு புதிய ஆலயங்களை நிர்மாணித்தார். கேரளாவின் கோட்டாறு போன்ற சில இடங்களில் சிறு தெய்வ வழிபாடும், உயிர்ப்பலி கொடுப்பதும், மது வகைகளைப் படைத்து வணங்குவதும் அதிகம் புழக்கத்தில் இருந்தது. அதுகண்டு மிகவும் மனம் வருந்திய நாராயண குரு, அப்பகுதி மக்களைச் சந்தித்து இது போன்ற செயல்களின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்தார். உயிர்ப்பலியால் ஏற்படும் பாவங்களைப் பற்றியும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விரிவாக விளக்கிய அவர், அவர்களை மனமாற்றி, அந்தச் சிறு தெய்வங்களின் சிலைகளை அகற்றி விட்டு சிவன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு செய்தார்.
*****
ஒருமுறை நாராயணகுரு குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்தக் குளம் உயர் சாதியினருக்கானது. நாராயண குரு குளித்ததால் குளம் அசுத்தமாகி விட்டது எறு கருதிய அவர்களில் சிலர் நாராயண குருவைத் தாக்க ஓடி வந்தனர். அமைதியாக அவர்களை எதிர்கொண்ட குரு, “ இப்போது என்ன நடந்து விட்டது? குளம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கருதித்தானே என்னை அடிக்க வருகிறீர்கள். என்னைத் தொட்டு அடிப்பதால் உங்களுக்கும் தீட்டு ஏற்பட்டு விடாதா? “ என்று கேட்டார். பொருள் பொதிந்த அவர் கேள்விக்கு விளக்கம் கூற முடியாத அவர்கள் தலையைக் குனிந்தவாறு திரும்பச் சென்றனர்.
****
ஆல்வாய், வர்க்கலை உட்பட பல இடங்களில் ஆசிரமம் நிறுவி மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார் நாராயணகுரு. பக்தர்கள் பலரும் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நாடி வந்தனர். சிலர் சீடர்களாக ஆகினர்.
ஒருமுறை வர்க்கலை சிவகிரி ஆசிரமத்தில் நாராயண குரு தங்கியிருந்தார். அப்போது அங்கே பணியாற்றி வந்த ஒருவரை ஆசிரமப் பணத்தைக் கையாடல் செய்து விட்டார் என்று கூறி குருவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் பக்தர்கள். அந்த நபரோ தனது செயலுக்கு வெட்கி, மனம் வருந்தி, அவமானப்பட்டு, கண்ணீருடன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். அந்த நபருக்கு மிகக் கடுமையான தண்டனைகளை குரு வழங்குவார் என்றெண்ணிக் காத்திருந்தனர் பக்தர்கள்.
குரு அந்த மனிதனைப் பார்த்தார். இல்லாமையாலும், அதிக பொருட்தேவையாலும் தான் அவன் திருடியிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார். ’திருடுதல் தகாது. அது மகத்தான பாவச் செயல்’ என்று அவனுக்கு அறிவுரை கூறியவர் அன்று முதல் அவனை ஆசிரமத்தின் பொருள் காப்பாளராக நியமித்து விட்டார்.
திருடன் பொருளாளராக ஆனது மட்டுமல்ல; அன்று முதல் நேர்மையான மனிதனாகவும் வாழத் தொடங்கினார்.
*****
சாதி, மதம், இனம், மொழி என எல்லாவற்றையும் கடந்து, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்கள்பால் மனிதநேயம் மிக்கவர்களாக இருப்பதால் தான் இதுபோன்ற புனிதர்கள் மகான்கள் என்றழைக்கப்படுகின்றனர்.
*****




THIRUTHTHAM MATTUM POTHATHU,INDHU MATHAM THAN SATIYIN ANI VEAR ATHAI VERODU AHATRUM POTHU THAN NARAYANAGURUVIN PANI MULUMAYADAYUM
such a foolish thoughts.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நாராயணகுருவின் ஆலயத்திற்கு சென்றுவழிபட்டுள்ளேன். போக்குவரத்து மிக்க சாலையில் அமைந்திருந்தாலும் கோயிலின் உள்ளே அமைதி தவழ்கின்றது.
எனக்கு பிடித்தவர்களுள் நாராயணகுருவும் ஒருவர்.
ஆம். நாராயண குரு, வள்ளலார் போன்றோர் மனிதம் உயர்த்த வந்த மகான்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முருகையன்.