முந்தைய பகுதிகள்
நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 4
நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 3
நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 2
நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 1
நண்பர் இறை பக்தி மிகுந்தவர். சித்தர்களை உபாசிப்பவர். குறிப்பாக அகத்தியர் தான் அவருக்கு கண்கண்ட தெய்வம். அவருக்கு சிறுவயது முதலே நாடி ஜோதிடத்தின் மீது தீராத ஆர்வம். தமிழகம் எங்கும் சுற்றி கிட்டத்தட்ட 20, 25 நாடி ஜோதிடர்களுக்கு மேல் சந்தித்திருப்பார். பலன்கள் சிலர் சொன்னது சரியாக இருக்கிறது, சிலர் சொன்னது சரியாக இல்லை என்பார். நாடி பற்றிய சூட்சுமங்களை அறிந்தவர். போலி நாடிகளினூடே எப்படியாவது ஒரு நல்ல நாடி ஜோதிடர் கிடைத்து விட மாட்டாரா என்று அவருக்கு ஒரு ஆர்வம். ‘சித்த தரிசனம்’ குறிப்பாக “ஸ்ரீ அகத்தியர் தரிசனம்” பெற வேண்டும் என்பதுதான் அவரது முக்கிய தேடல். மறைந்த ஹனுமத்தாசனின் அன்பைப் பெற்றவரும் கூட.
ஒருமுறை நண்பர் தனது நண்பர் ஒருவருடன் நாடி ஜோதிடம் பார்க்கப் போனார். நாடி ஜோதிடர் சில கேள்விகளைக் கேட்டார். நண்பரும் ஏற்கனவே பெற்ற முன் அனுபவமாக, மிகக் கவனமாக ‘ஆம்’, ’இல்லை’ என்று மட்டுமே பதிலளித்தார். ஒரு வழியாக ஓலைச் சுவடி கிடைத்ததாகச் சொன்ன ஜோதிடர் பலன்களைப் படிக்க ஆரம்பித்தார். நண்பர் சொன்ன தகவல்கள் மட்டுமல்ல; சொல்லாத தகவல்களும் – குடும்பம் பற்றியது, சகோதரர் பற்றியது, சகோதரரின் தொழில், நண்பர் பார்க்கும் தொழில் உட்பட பல விவரங்கள் அதில் வந்திருந்தன. நண்பருக்கு ஆச்சரியம். எப்படி இது சாத்தியம்? தான் எதுவுமே இந்த விவரங்களைப் பற்றிச் சொல்லாத போது ஜோதிடரால் எப்படி இதனைச் சொல்ல முடிந்தது? தேவதை உபாசனையா? இல்லை, ஒரு வேளை இதுதான் தன்னுடைய உண்மையான ஓலைச்சுவடியாக இருக்குமோ? இதுவரை தேடி அலைந்தது வீண் என்றாலும், இப்போது கிடைத்ததே!” என்று நினைத்தார். ஜோதிடரும் “இதுதான் உங்கள் நாடிச் சுவடி. இதோ பாருங்கள்! உங்கள் பெயர் கூட இதில் வந்திருக்கிறது” என்று சொல்லி படித்துக் காட்டினார்.
நண்பரும் பார்த்தார். ஆச்சரியப்படும் விதத்தில் அதில் அவர் பெயர் மட்டுமல்ல. அவர் தாய், தந்தை பெயர்களும் இருந்தன. நண்பருக்கு ஒரே வியப்பு.
சில மணி நேரம் கழித்து வரச் சொன்ன ஜோதிடர் சுவடியில் உள்ளதை பாடலாக எழுதியும், கேசட்டில் பதிவு செய்தும் கொடுத்தார். நண்பருக்கு ஒரு ஆர்வம். ஜோதிடரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.
”இது என்னுடைய ஓலைச் சுவடி தானே.”
“ஆம். அதில் என்ன சந்தேகம்?”
“வேறு யாருக்கும் இதனால் பயன் உண்டா?”
”ஏன் கேட்கிறீர்கள்?”
”இல்லை. இது என் ஓலைச் சுவடி என்பது உண்மையானால் இதை என்னிடமே நீங்கள் தந்து விடலாமே!”
“இல்லை. அப்படித் தர முடியாது. அதற்கு சித்தர்களின் அனுமதி தேவை. கட்டிலிருந்து ஓலையைப் பிரிக்கக் கூடாது ”
“கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள். நான் இதற்கு ஏதாவது பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்”
”இல்லை. இல்லை. முடியாது”
“ இல்லை. இதற்கு எவ்வளவு தொகையோ அதை நான் தந்து விடுகிறேன். என் நண்பருக்கும் நாடி பாருங்கள். இருவரது ஓலைச்சுவடியையும் வாங்கிக் கொள்கிறேன்”
பணம் என்றால் பிணமே வாயைத் திறக்கும்போது, வயிற்றுப் பிழைப்பிற்காக நாடி ஜோதிடத்தைத் தொழிலாக மேற்கொண்டிருக்கும் அந்த ஜோதிடர் என்ன செய்வார்? சில நூறுகளை வாங்கிக் கொண்டு, கட்டிலிருந்து ஓலையைப் பிரித்தெடுத்துக் கொடுத்து விட்டார்.
அந்த ஓலைச்சுவடியில் ஒன்று கீழே…
இதனை கவனமாகப் பாருங்கள்… பெரிது படுத்தியும் பாருங்கள்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
நண்பரின் பெயரை உங்களால் படிக்க முடிகிறதா?
ஓ… நிறைய பெயர்கள் இருக்கின்றன அல்லவா? சரி. சுவடியின் கடைசி வரியில் நண்பரின் பெயரைப் பற்றிய குறிப்பு, தாய், தந்தையர் மற்றும் குடும்ப விவரங்கள் உள்ளதாக நண்பர் சொல்கிறார். அவரால் அதைப் படிக்கவும் முடிந்தது என்கிறார்.
சரி, உங்களால் படிக்க முடிகிறதா?
இந்தச் சுவடியைப் பார்த்ததும் வேறு ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?
இது உண்மையான ஓலைச் சுவடியாக இருக்குமா?
முடிந்தால் பின்னூட்டத்தில் பதில் சொல்லுங்கள்.
வேறு சில விளக்கங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
**************************


nigal eraivanai oru nalaiku ethanai murai naipikal? nigal eraivan erukira endra nambigai uladha erudhal ungalku palan unmaiyaga erukum
Pingback: நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 7 | உண்மையைத் தேடி…
Pingback: நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 6 | உண்மையைத் தேடி…
சார் நான் கண்டு பிடித்து விட்டேன். சரியா என்று சொல்லுங்கள்.
மணிகண்டன்..
சரியா?
இல்லை சுரேஷ்
ஆனால் புள்ளியை நெருங்கி விட்டீர்கள். முயற்சியுங்கள்.
ரொம்ப நாட்களாக எனக்கு இந்த சந்தேகம் உண்டு. மிக மிக உபயோகமான பதிவு. உண்மையான நாடி ஜோதிடர்களை அறிமுகப்படுத்துங்களேன். எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
நன்றி. கருத்துக்கு.
அறிமுகப்படுத்தலாம். ஆனால் ஐந்து நபர்களில் மூன்று நபர்களுக்கு பலன்கள் சரியாக இருக்கிறது.இரண்டு பேர் சென்று விட்டு வந்து பலன்கள் ஏதும் சரியாக இல்லை என்கிறார்கள். இதில் குறை நாடி ஜோதிடரிடமா? பலன்கள் பார்க்கச் சென்றவரிடமா என்பது சரியாகத் தெரியாத போது எப்படி ரெகமண்ட் செய்வது?
ஒரே நபர் ஒருவருக்கு நல்ல நாடி ஜோதிடராகவும் மற்றவருக்கு போலியாகவும் தெரியும் போது எந்த விகிதத்தில் அவரை ரெகமண்ட் செய்வது?
ஐந்து பேர் நாடி பார்க்கச் சென்று ஐந்து பேருக்குமே பலன்கள் மிகச் சரியாக வந்தால் அவரை நல்ல நாடி ஜோதிடர் என்று அறிமுகப்படுத்தலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களைக் கண்டு பிடிப்பது அரிதினும் அரிதாக இருக்கிறதே!
அதனால்தான் 50க்கும் மேற்பட்ட நாடி ஜோதிடர்களைச் சந்தித்திருந்தும் இவரைப் பாருங்கள் சரியாக இருக்கும் என்று ரெகமண்ட் செய்ய முடியவில்லை. எனக்கு மிகச் சரியாகப் பலன்கள் சொன்னவருக்கு என் சகோதரருக்கு, நண்பருக்கு சரியாகச் சொல்ல இயலவில்லை. அப்படி இருக்கையில் ”இவர் சரியான நபர். இவரைப் பாருங்கள்” என்று ஒருவரை எப்படி நான் அறிமுகப்படுத்தி உத்தரவாதம் அளிக்க முடியும்?
விஷயம் இப்படி இருக்கையில், இதற்காக சொந்தக் காசை ஆயிரக்கணக்கில் செலவழித்து ஆய்வு செய்திருக்கும் நிலையில் ஒருவர் “ I urge the writer of this article to conduct detailed research on that before publishing any half info article” என்கிறார்.
இந்தப் பதிவுகளில் (குறிப்பாக ஜோதிடம், நாடி ஜோதிடம் பகுதியில்) உள்ள கட்டுரைகளை படித்துப் பாருங்கள். இது அரைகுறையாக, ஆராய்ச்சி செய்யப்படாமல் எழுதப்பட்டதா என்ன? அரைகுறையாக இருந்தால் இப்படி எழுத முடியுமா?
இந்த விஷயத்தில் நான் எழுதியதைவிட எழுதாததே அதிகம். பிறருடைய தொழில் என்னால் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டுமே சொல்லி இக்கட்டுரைகளை எழுதி வருகிறேன்.
அடிப்படை அறியாதவர்கள் அரைகுறையாகப் புரிந்து அரைகுறையாக விமர்சனம் செய்கின்றனர் என்பதே உண்மை.
நன்றி!