முந்தைய பகுதிகள்
நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 3
நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 2
நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 1
என் நெருங்கிய நண்பர் அனுப்பிய நாடி ஜோதிடக் குறிப்பு இது.
அவரது தந்தையின் பெயர் சர்மா. 1900ஆம் வருடத்தில் பிறந்த அவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் தமது 32-ஆம் வயதில், 24/04/1932-ல், அன்றைய இராமநாதபுரம் (தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில்) உள்ள குன்றக்குடி என்ற ஊரில் நாடி ஜோதிடம் பார்த்தார்.
அந்த நாடி ஜோதிடக் குறிப்புப்படி தான் தன் தந்தையின் வாழ்க்கை முழுக்க முழுக்க இருந்ததாக அவரது மகன் தெரிவிக்கிறார்.
பாடல் கீழே…
முதல் பாடலில் இவரது ரேகையினைப் பற்றியும், குடும்ப விவரங்களையும் நந்திதேவர் தெரிவிக்கின்றார். ‘இவரது ரேகையின் பெயர் அறுகோணப் பூச்சக்கரக் கொடிவிசிறி பூபந்த ரேகை. அந்தணர் குலத்தில் பிறந்தவர். சர்மா என்ற பெயரால் அழைக்கப்படுவார். ஒல்லியானவர். சிவந்த நிறம். உயரமானவர். சிவனை வணங்குபவர்.’ என்ற குறிப்புகள் உள்ளன.
இரண்டாவது பாடல் மூலம், தந்தை சாஸ்திரியாகக் காலம் கழித்தவர். ஜாதகருக்கு குருத்தொழில் எனும் ஆசான் உத்தியோகம் அமையும். தனிகர்குள்ளும் அதாவது தன வணிகர் என அழைக்கப்படும் செட்டியார் இனத்தவரிடம் ஆசானாக வேலை பார்ப்பார். சொந்த நிலம் போன்றவற்றை இழந்த பின் ஊருக்கு ஊராய்ப் பயணம் செய்வார். தாய் உடல் நலத்துடன் இருப்பார். தந்தை ஜாதகரின் இருபத்தைந்தாவது வயதிற்குள் இறப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே அனைத்தும் தம் தந்தையின் வாழ்வில் நடந்ததாக நண்பர் தெரிவிக்கிறார்.
மூன்றாவது பாடலில் தாய் மரணம் பற்றி, மனைவியைப் பற்றி, குழந்தைகள் காலதாமதமாகப் பிறப்பது, அவற்றை நிலைக்கச் செய்ய, செய்ய வேண்டிய சில பரிகாரங்களைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. சர்மா அவர்கள் எந்தப் பரிகாரத்தையும் செய்யாமையால் நாடியில் வந்தபடி குழந்தைகள் தாமதமாகவே பிறந்தததாகவும், சில கருவிலேயே கலைந்து விட்டதாகவும், ஒருவர் மட்டும் தமது 32-ஆவது வயதில் மரணம் அடைந்ததாகவும் கூறுகிறார் நண்பர்.
நான்காவது பாடலில் அறுபத்தாறு வயதில் அவருக்குக் கண்டம் ஏற்படும் என்றும், கண்டத்திலிருந்து காத்துக் கொள்ளத் தகுந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழுடன் நீச பாசை என அழைக்கப்படும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வார். ‘குருபரன் பெயர் இவர் பெயராகும்’ – அதாவது குருபரன் என அழைக்கப்படும் முருகனின் பெயரான சுவாமிநாதன் இவர் பெயராகும் என்றும், தனது இருபத்தோரு வயதிற்குள் புலவராக விளங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது தந்தையின் பெயர் ”சுவாமிநாதன்” தான் என்கிறார் நண்பர்.
ஐந்தாவது பாடலில் ஜாதகரின் ஜாதக விபரங்களையும், உடன் பிறந்தவர்கள் வாழ்க்கை உட்பட அனைவரும் தனித்தனியாகப் பிரிந்து போவது பற்றியும் ஜாதகரின் வாழ்க்கை முடிவு பற்றியும் முனிவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடியில் வந்த படியே அனைத்தும் தனது தந்தையின் வாழ்க்கையில் நடந்ததாகவும், இந்த உண்மைக்கு அவர் மகனாகிய தாம் ஒரு சாட்சி என்றும், இது ஒரு நம்ப முடியாத ஆனால் ஆச்சரியமான உண்மை என்றும் கூறுகிறார் நண்பர்.
ஆக, மேற்கண்ட நாடி ஜோதிடக் குறிப்பிலிருந்து “நாடி ஜோதிடம்” உண்மையானது தான் என்பதை அறிய முடிகிறது.
ஆனால், தற்காலத்தில் நாடி ஜோதிடம் பலருக்கும் பலிப்பதில்லையே அது ஏன்?
நாடி ஜோதிடர்கள் பொய்யானவர்களா அல்லது நாடி ஜோதிடம் பார்த்து ஏமாற வேண்டும் என்பது சிலரது விதி அமைப்பாக இருக்கிறதா? அப்படியானால் சிலருக்கு மட்டும் நாடி ஜோதிடம் உண்மையாக, முழுமையாக பலித்திருப்பதாகக் கூறுகிறார்களே! அது எப்படி? ஒருவேளை அவர்கள் மட்டும் புண்ணியம் செய்தவர்களா?
ஆண்டவன் படைப்பில் இதிலும் கூட பாரபட்சம் இருக்கிறதா?
(தொடர்வோம்)


Pingback: நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 7 | உண்மையைத் தேடி…
Pingback: நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 6 | உண்மையைத் தேடி…
Pingback: நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 5 | உண்மையைத் தேடி…
தம்பி.. இந்த ஆராய்ச்சி எல்லாம் உனக்குத் தேவையாடா? வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாகப் போகும் மனிதனைப் பற்றி ஏன் உனக்கு இத்தனை அக்கறை? நாடியாம் ஜோதிடமாம். மண்ணாங்கட்டி.
எங்களது ஆற்றலை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லை. 2012ல் என்ன நடக்கப் போகிறது என்று பார். சித்தர்கள் ராஜ்ஜியம் தொடங்கி விட்டது.
நீ சித்த வழிக்கு வா. நீயும் சித்தனாகு. ஓம் சிவ சித்தாய நமஹ! ஓம்
அய்யா (அண்ணா..)
அழைப்பிற்கு மிக்க நன்றி!