நம்பலாமா, நாடி ஜோதிடத்தை…?

ஓலைச்சுவடி

ஊருக்கு ஊர் டீக்கடைகள் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு நாடி ஜோதிட நிலையம் இருக்கிறது. “முனிவர்கள் கணித்து வைத்துள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் எதிர்காலப் பலன்களை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அகத்தியர், சுகர், வசிஷ்டர், பிருகு, விசுவாமித்திரர் என்று பல முனிவர்களின் பெயரைத் தாங்கிய பெயர்ப் பலகைகளை நாம் எங்கும் பார்க்கலாம். உண்மையிலேயே இவையெல்லாம் இம்முனிவர்களால் உருவாக்கப்பட்டதுதானா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றப் போகும் ஒருவரது வாழ்க்கைக் குறிப்புகளை, அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இம்முனிவர்களால் கணித்து எழுத முடிந்தது என்று நாடி ஜோதிடர்களிடம் கேட்டால், “அவர்கள் ஞான திருஷ்டி மிக்கவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள். காலத்தைக் கடந்தவர்கள். அவர்களால் எதுவும் முடியும்” என்பது பதிலாக இருக்கிறது.

 ”பழங்கால முனிவர்களால் இயற்றப் பெற்ற இந்த ஓலைச்சுவடிகள் வழிவழியாக எங்கள் பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு தற்போது எங்கள் வசம் இருக்கிறது. நாங்கள், எங்களை நாடி வருபவர்களுக்குரிய ஓலையைத் தேடி எடுத்து, படித்து விளக்கம் கூறுகிறோம். அதனால் தான் இதற்கு நாடி ஜோதிடம்” என்று பெயர்” என்கிறார்கள் இவர்கள். பெருவிரல் ரேகையை மட்டும் கொண்டு எப்படி ஒருவருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டால், “ அதெல்லாம் தொழில் ரகசியம். விரல் ரேகைகளில் சங்கு, வட்டம், கோணம், சக்கரம், பூபந்தம், கொடி, மணி, சிகிரி, சுழி, கீற்று என்று பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு புள்ளி, இரு புள்ளி என்று பல உட்பிரிவுகள் உண்டு. முதலில் அவற்றைக் கண்டறிந்து அதன் மூலம் அந்த நபருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்கிறார்கள்.

இவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா, இவையெல்லாம் பழங்கால ஓலைச்சுவடிகள்தானா என சுவடியியல் அறிஞர்களிடம் கேட்டால் ”இருக்கவே இருக்காது. இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. முதலில் பனை ஓலைகளைக் கொண்டு, ஓலைகளைத் தயாரித்து, அவற்றை நெல் ஆவியில் காட்டி பழங்கால ஓலைச்சுவடிகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவற்றில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ்; எங்களால் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுகின்றனர். அவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை” என்கின்றனர்.

தமிழறிஞர்களோ, “நாடி ஜோதிடப் பாடல்கள் எல்லாம் வெண்பா யாப்பில் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. ஆனால் முழுக்க முழுக்கத் தப்பும் தவறுமாக உள்ளன. வரிதோறும் தளை தட்டுகிறது. முனிவர்களால், அதுவும் தொல்காப்பியருக்கே இலக்கணம் சொல்லிக் கொடுத்த அகத்தியர் போன்ற முனிவர்களால் எழுதப்பட்டிருந்தால் இதற்குச் சாத்தியமே இல்லை” என்கின்றனர். ஆனால் நாடி ஜோதிடர்களோ, “இவையெல்லாம் பழங்காலத் தமிழ் எழுத்துக்கள் தான். எங்களைப் போன்று அதைப் படிப்பதற்கென்றே,  தனியாக குரு மூலம் பயிற்சி பெற்றவர்களால் அன்றி மற்றவர்களால் அதைப் படித்து பொருள் காண முடியாது” என்கின்றனர். மேலும் ”ஒரு வித மூலிகையை உள்ளடக்கி, சில ரகசிய மந்திரங்களை உச்சாடனம் செய்து, தனிமையில் அமர்ந்து தவம் செய்தால், அந்த எழுத்துக்களைப் படிக்கும் ஆற்றலும், வாக்குப் பலிதமும் உண்டாகும்” என்று கூறுகிறார்கள்.

சரி, இவையெல்லாம் உண்மைதானா? இவற்றை நம்பலாமா?

கீழே உள்ள ஒளிப்படத்தை நன்றாகப் பாருங்கள்.

போலி ஓலைச்சுவடி

ஒரு சுவடிக் கட்டு; ஜாதகக் குறிப்பு; ஓலைச் சுவடியைப் பார்த்து பலன் எழுத முனையும் ஒருவரின் கை எல்லாம் தெரிகிறதா? இதைப் படித்துத்தான் நாடி ஜோதிடர்கள் பலன் கூறுகின்றனர். சரி, இதில் என்ன விசேஷம் என்று கூறுகிறீர்களா?

இருக்கிறது. அந்த ஒளிப்படத்தை நன்றாகப் பெரிதுப்படுத்தி பாருங்கள். அதில் இருக்கும் தமிழ் எழுத்துக்களை உங்களால் வாசிக்க முடிக்கிறதா? சற்று முயன்றால் வாசிக்கலாம். என்ன தெரிகிறது?

வேப்பம்பட்டை, சாது மிளகு, முடக்காத்தான், வால் மிளகு என்றெல்லாம் வார்த்தைகள் தெரிகிறதல்லவா?

இது ஜோதிட சுவடியே அல்ல; மருத்துவச் சுவடி. ஆனால் இதை வைத்துத் தான், இது பழங்கால முனிவர்களால் எழுதப் பட்ட நாடி ஜோதிடச் சுவடி என்றெல்லாம் கூறி, தம்மை நாடி வரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் போலி நாடி ஜோதிடர்கள்.

 எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…” என்றொரு பாடல் உண்டு. மக்கள் எதையும் ஆராயமல் கண்மூடித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும் வரை எம்மாற்றுபவர்கள் எல்லாத்துறையிலும் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். இதற்கு நாடி ஜோதிடமும் விதிவிலக்கில்லை

(தொடரும்)