இன்று பகவான் ஸ்ரீ ரமணரின் ஆராதனை விழா. இன்றோடு அவர் பூத உடல் உகுத்து 61 வருடங்கள் ஆகின்றன. அவர் மறைந்தாலும் அவரது உயிர் சக்தி இன்னமும் தங்களுடன் இருப்பதாகவும், வழிகாட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். ரமணரும் கூட தன் இறுதிக் காலங்களில், “ஏன் வருந்துகிறீர்கள்? நான் எங்கே போய் விடப் போகிறேன்? நீங்கள் எல்லோரும் நான் இறந்து போய் விடப் போகிறேன் என்று கூறுகிறீர்கள். ஆத்மாவுக்கு இறப்பு ஏது? முன்னை விட அதிகமாக என்னுடைய இயக்கம் இருக்கும்” என்று அடியார்களுக்கு ஆறுதல் கூறினார். இன்றும் அவரது ஆசிரமத்துக்கு உள்ளன்போடு செல்பவர்கள் அவரது உயிர்ப்பை உணர்கிறார்கள்.
இனி ரமணர் வாழ்வில் நடந்த சுவையான சில சம்பவங்களைப் பார்க்கலாம்.
அது ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம். ஒருநாள் பின் மாலை நேரம். மாத்ரூபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி அவர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
ஒரு பாடலைப் பாடிய அவர் விளக்கமாக, “கடவுளை நம் கண்களைக் கொண்டு காண முடியாது. நம் புலன்களைக் கொண்டும் உணர முடியாது. இதுவே – ‘கடவுளைப் பார்ப்பதென்பது, கடவுளாகவே ஆகி விடுதல்’ என்று கூறப்படுகிறது” என்றார்.
உடனே, தண்டபாணி ஸ்வாமி என்னும் அடியவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்.
இதைத் தான் வேதங்களும், உபநிஷதங்களும் “அதுவே நான்”, ”நானே அது” “அகம் பிரம்மாஸ்மி” என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. ஆனால் பலர் இன்னும் தன்னைப் பற்றியும் ஆராயாமல், கடவுள் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவுமில்லாமல் ஏதேதோ பிதற்றி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தன்னை ஒரு பெரிய அறிவாளியாகவும், ரமணரை வெறும் சோம்பேறியாகச் சும்மா உட்கார்ந்து பொழுது போக்குகிறவருமாக நினைத்த இளைஞன் ஒருவன் ஒருநாள் ரமணாச்ரமத்திற்கு வந்தான். அங்கே எல்லாரும் ரமணர் திருவுரு முன் அமர்ந்து அமைதியான தியானத்தில் ஆழ்ந்திருந்தனர்.
அந்த அமைதியைக் குலைத்து, தனது மேதாவிலாசத்தை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞன், சத்தமாக ரமணரை நோக்கி, ”’ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தரிடம் கடவுளைக் காண்பிக்க என்னால் முடியும்’ என்று சொன்னார். அது போல உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா?” என்று எகத்தாளமாகவும் கிண்டலாகவும் கேட்டான்.
அவனுக்கு ரமணரை எல்லோரது முன்னாலும் அவமானப்படுத்தி விட்டதாக ஒரு எண்ணம். கண்ணுக்கு முன்னால் கடவுள் என்ற மூலப் பிரகிருதியை நேருக்கு நேராகக் காண்பிக்க யாராலும் முடியாது என்ற எண்ணத்தால் மற்ற பக்தர்களும் பகவான் என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்று மிக்க ஆவலுடனும், பதற்றத்துடனும் காத்திருந்தனர்.
பகவான் மெல்ல, “கடவுளைக் காண்பிக்க வேண்டுமா? ஓ, தாராளமாகக் காண்பிக்கலாம். அது சரி கேட்பது யார் விவேகானந்தரா?” என்றார்.
அவ்வளவுதான். முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தான் அந்த இளைஞன். பகவானை அவமானப்படுத்த நினைத்த அவன், அவமானப்பட்டுப் போனான்.
ஆம். யாரும், யாரையும் விமர்சிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். ராமகிருஷ்ணரிடம் அதுவரை யாரும் கேட்காத – கடவுளைக் காண்பிக்க இயலுமா? – என்ற கேள்வியை சுவாமி விவேகானந்தர் கேட்டார். அவருக்கு அதற்கான தகுதியும், இறைவனைப் பற்றிய உண்மையான தேடலும், விழைவும் இருந்தது.
ஆனால், ரமணரிடம் கேள்வி கேட்ட அந்த இளைஞனுக்கு அது இல்லை. ரமண மஹரிஷியை கேள்வி கேட்டு மடக்க வேண்டும் என்பதுதான் அவன் குறிக்கோள். ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவன் தான் அந்த இடத்தை விட்டு எழுந்து போனான்.
அந்த அரைகுறை அறிவு மேதாவி இளைஞனைப் போலத் தான் பலர் இறைவனைப் பற்றிய தேடலும், தன்னைப் பற்றிய உண்மையான அறிவும், அவ்வாறு அறிவதற்கான விழைவும் இல்லாமல், தன் தகுதிக்கு மீறி, தன்னால் எட்ட முடியாத நிலையில் உள்ள மகான்களை, ஞானியர்களை விமர்சித்தும், குறை கூறியும் வருகின்றனர்.
உண்மையிலேயே நமக்கு அந்தத் தகுதி உண்டா?
”’தான்’ என்ற அகந்தை இருக்கும் வரை ஒருவரால் ஒருக்காலும் ஆண்டவனைப் பற்றி அறிய முடியாது” என்றார் ரமணர். முதலின் தான், தான் என்று தோன்றும் அந்த எண்ணத்தின் பிறப்பிடம் எது என்பதை அறிவாய். அதை அறிந்து கொண்டு விட்டால் பின்னர் எல்லாமே தாமே விளங்கும் என்றும் அவர் சொன்னார்.
”பந்தத்தில் இருக்கும் நீ யார்?” என்ற கேள்வி கேட்டு, அதற்கான விடையை நீ அறிந்து கொண்டால், பின்னர் வேறு கேள்விகளே தோன்றாது. உனக்கு அந்நியமாய் ஏதும் இல்லை என்பதை நீயே உணர்வாய் என்றார்.
இந்த நன்னாளில் அதற்கான முயற்சிகள் மேன்மையுறட்டும்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
ஸ்ரீ ரமணரின் சமாதி ஆலயத்தை முழுமையாகக் காண இங்கே சுட்டவும்.
ஸ்ரீ ரமணரைத் துதிக்கும், உள்ளத்தை உருக்கும் ரமண ஸ்துதி பஞ்சகப் பாடல்களை இங்கே கேட்கலாம்/பதிவிறக்கலாம்
பகவான் ரமணர் தனது பெரும் பகுதி வாழ்நாட்களைக் கழித்த ஸ்காந்தச்ரமத்தை இங்கே பார்க்கலாம்.
ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கச் சுட்ட வேண்டியது இங்கே
ஸர்வம் ஸ்ரீ ரமணார்ப்பனமஸ்து!!






GIRIVALAM NADANDAPADAM THUNBAM THEERKUM PAADAM THUTHIDUVOR AGAM PUGUNTHITTA PAADAM SHREE RAMANA AAA SATHGURURAMANA AAA NIN PAADAME THUNAI
thanks.Om Namo Bagavathe Sri Ramanaya!
நல்ல தொகுப்பு மட்டுமன்றி நல்ல பதிலும் கூட. இரண்டு விஷயங்கள்:
ஒன்று:ஸ்வாமி விவேகானந்தர் கூட ஒருமுறை கப்பல் பயணத்தின்போது ஒருமுறை இந்து மதத்தை சாடிக்கொண்டும், தனது மாற்று மதத்தை பரப்பிக்கொண்டும் இருந்த சகபயணியிடம் எச்சரித்தும் கேளாததால் பெரும் கோபம் கொண்டு தாக்கச் சென்றதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.மேலும் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் கூட “மத மாற்றம் ஒரு வன்முறை” என்று மிகத்தெளிவான காரணங்களுடன் எழுதியுள்ளார்!
இரண்டு: ரமணர் பற்றி ஒருமுறை ஆனந்த விகடன் ஒரு இணைப்பு வெளியிட்டுருந்தனர். அந்த சிறிய ஏடு யாரேனும் நகல் அல்லது ஸ்கேன் செய்து அனுப்பினால் நன்றி உடையவன் ஆவேன்!!
roamingraman@gmail.com
ஆம். உண்மைதான். நல்ல கருத்து சார். என்னிடம் விகடன் இணைப்பு ஏதும் இல்லை. ஆனால் ரமணர் எழுதிய ’நான் யார்?’ உட்பட பல நூல்கள் ரமணாச்ரம இணைய தளத்தில் இலவசமாகவே பதிவிறக்கக் கிடைக்கின்றன. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. பிற கட்டுரைகளைப் பற்றிய உங்கள் கருத்தையும் அறிய விழைகிறேன்.
யோவ் மூஞ்சி இது கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுய்யா. நாங்க யார வேணா, எவன வேணா விமர்சனம் பண்ணுவோம். கேள்வி கேட்ப்போம். அதைக் கேக்க நீ யாருய்யா? வந்துட்டாரு பெரிசா அதாரிடி அப் இந்துமதம்னு. போய்யா வெளக்கெண்ணெய், வெங்காயம். போய் வேற வேல வெட்டியப் பாரு…
ஓ. அப்படியா? அரசியல்வியாதிகளைக் கண்டால் மட்டும் உங்களது விமர்சன ஆற்றல்கள் எங்கே போகிறது? பம்மிப் பதுங்குவது ஏன்? உயிர், உடைமைப் பயம் தானே? ஆன்மீகவாதி, மகான்கள், ஞானிகள் என்றால் கேள்வி கேட்பவர் யாரும் கிடையாது. என்னவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். நன்றாக இருக்கிறதய்யா உங்கள் நியாயம்!
எந்தத் தகுதியும் இல்லாமல் யாரைப் பற்றி வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசி விடலாம், அப்படித்தானே! “இலக்கியவாதிகள்” என்று தன்னை நம்பைக் கொண்டிருக்கும் சிலரை விமர்சனம் செய்தால் கூட இங்கே சட்டை கிழிகிறது. அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை. ஆனால் ஆன்மீகவாதிகளைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம், இல்லையா?
யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லைதான். ஆனால் ஒருவரை விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
ஸ்ரீ அன்னையிடம் ஒருவர் பாபா தனது சித்தாற்றலால் வரவழைத்துக் கொடுத்த சங்கிலியைக் கொடுத்தார். அதைக் கையில் வைத்துக் கொண்ட அன்னை, “ இது மறை பொருள் வித்தையால் வரவழைக்கப்பட்டது” என்றார். ”இது சாயிபாபா கொடுத்தது” என்று கூறிய பக்தர், ”அவர் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்றார்.
அதற்கு ஸ்ரீ அன்னை சிரித்துக் கொண்டே, “ ஒரு குரு மற்றொரு குருவை விமர்சிப்பதில்லை” என்றார்.
குரு பீடத்தில் இருப்பவர்களே அன்றைக்கு அப்படி இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு சாதாரணர்கள் எல்லாம் தங்களைப் பெரிய மேதாவிகளாக, அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொண்டு ‘பம்மாத்து’ வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? எல்லாம் காலத்தின் கோலம்.
தங்கள் வருகைக்கும், மேலான, அருமையான மொழியில் அமைந்த கருத்திற்கும் நன்றி ராமசாமி.