மறுபிறவி என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? மகான்கள், சித்தர்கள், யோகிகள் போன்றவர்களுக்கு மறுபிறவிகள் உண்டா? இந்தச் சந்தேகம் நமக்கு எப்போதும் தோன்றக் கூடியதுதான். ஞானிகள், மகான்களின் மறுபிறவியை நிச்சயிப்பது இறைவன். சிலசமயம் மனித குலம் காக்க இம்மகான்களே வலிந்து உலகில் பிறந்து மக்கள் குறைகள் தீர்ப்பதுண்டு.
சுவாமி விவேகானந்தர் மிகப் பெரிய ரிஷி ஒருவரின் அவதாரம் என்றிருக்கிறார் பகவான் ராமகிருஷ்ணர். ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருப்பதாகவும் தன் சீடர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நான் பலகாலம் கழித்து மீண்டும் பிறப்பேன் என்றும் சீடர்களிடம் உறுதி கூறியிருக்கிறார்.
அகில உலகம் காக்கும் பராசக்தியே ஸ்ரீ அன்னை உருவில் தோன்றியுள்ளதாக சாதகர்களிடம் கூறியிருக்கிறார் யோகி அரவிந்தர். ஒவ்வொரு யுகத்திலும் ஸ்ரீ அரவிந்தர் பல்வேறு ரூபங்களில் தோன்றி இந்த உலகம் உய்ய உழைத்திருக்கிறார் என்று கூறுகிறார் ஸ்ரீ அன்னை.
நீங்கள் தாயுமானவரின் மறுபிறவியா என்ற கேள்விக்கு மறுப்பேதும் சொல்லாமல் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தவர் வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க அடிகள்.
இந்த மறுபிறவி விஷயங்கள் உண்மையில் மனித உணர்விற்கு எட்டாத ஒரு புதிர்தான் என்பதில் ஐயமில்லை.
ஷிர்டி பாபாவின் மறுபிறவி
தற்போது அவதார புருடராக வாழும் புட்டபர்த்தி சாயிபாபா அவர்கள் தன்னை ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் மறுபிறவி என்று கூறியதுடன், ஷிர்டி பாபாவின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை தெள்ளத் தெளிவாக நினைவு கூர்ந்து, பாபாவுடன் தொடர்பில் இருந்த சிலரையும் சந்தித்து தான் ஷிர்டி பாபாவின் மறுபிறவிதான் என்பதை நிரூபித்திருக்கிறார். தங்களது உடல்தான் வேறு வேறு என்றும் ஆன்மா ஒன்றுதான் என்றும் விளக்கியிருக்கிறார் பாபா.
மறுபிறவி பற்றி பாபாவிடம் ஒருவர் கேட்டதற்கு அவர், “இது போன்ற விஷயங்கள் விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்டது. சாதாரண புலன்களால் இதுபோன்ற விஷயங்களை ஆராய இயலாது” என்றும் குறிப்பிட்டார். எங்கே விஞ்ஞானம் முடிவுறுகிறதோ அங்கே மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது” என்றார்.
ஸ்ரீ பாபாவின் நாடி ஜோதிடக் குறிப்பு கீழ்கண்டவாறு அவர் அவதாரம் பற்றிச் சொல்கிறது.
………………………………………………………………
அழகுமகன் வழிவழியாய் யுகத்திலேதான்
சுந்திரமாய்க் கிருட்டிணனின் அவதாரத்தில்
சுழற்சிபல வித்தைகளும் விந்தை கூட
விந்தை பல புரிந்துபின் அவதாரம் தான்
கோதில்லா ராமனவன் கடவுளாக
பாடபல நிலைகளுடன் புண்ணியங்கள்
பல படைத்து சிர்டி சாயிபாபா
பாபாவின் அவதார புருடனாக
பக்குவமாய் அவதரித்தான் சாயிபாபா
—————————————–
—————————————-
என்றெல்லாம் வரும் பாடலில் பாபா பல்வேறு அற்புதங்கள் புரிந்து, மக்கள் குறை தீர்த்து மறுபிறவியில் பிரேம சாயியாக அவதரிப்பார் என்றும் குறிப்பிடுகிறது.
அருள்மகனே அழிவுநிலை ஏதுமில்லா
ஆயுளதை வளர்த்திடவும் வல்லவன்தான்
பொருள்முதலாம் அறநிலைகள் பலவும்காட்சி
புண்ணியமாய் வரும்பிறவி அடுத்த சென்மம்
பிறவியிலே பிரேமசாயி அவதாரமாக
பெருங்கடவுள் நிலைவாழ்வு லீலை பல்வார்
இறவாத வழிகாட்டி சத்திய செய்கை
ஏகாம்பர மாகவே வாழி முன்னே
என்று குறிப்பிடுகிறது.
இதன் மூலம் ராமனின் அவதாரமாகத் தோன்றிய ஷிர்டி பாபாவின் மறுபிறவியே புட்டபர்த்தி பாபா என்பதும், அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் சக்தியோடு இவ்வுலகில் அவதரித்துள்ளார் என்பதும் தெரிய வருவதுடன், மறுபிறவியில் அவர் பிரேமசாயி ஆக அவதரிப்பார் என்பதும் தெரிய வருகிறது.
முற்பிறவி, மறுபிறவி பற்றிய பல இரகசியங்கள் நமது சாதாரண மானுட அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே உள்ளன என்பதையும், ஓரளவிற்கு மேல், ஏன் இவை நிகழ்கின்றன போன்ற காரணங்களையும் விஞ்ஞானத்தால் முற்றிலுமாக அறிய இயலவில்லை என்பதையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

