மகான்களும் விஜயதசமியும்- 2

மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூட. அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.
ஸ்ரீ குழந்தையானந்தர்
ஸ்ரீ குழந்தையானந்தர்

மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற்கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது. ஆண்டுகள் பல கடந்தும் பலனில்லாததால் அவர்களுடைய மனக்கவலை அதிகரித்தது. அதனால் தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதை மீனாட்சிக்கே அர்ப்பணித்து விடுவதாக வேண்டிக் கொணடனர். அவர்கள் பிரார்த்தனை பலித்தது. திரிபுரசுந்தரி அம்மாள் கருத்தரித்தார். இரண்டு குழந்தைகளை ஈன்றார். ராமன், லட்சுமணன் என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டனர். அதில் மூத்த குழந்தை ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும், காலில் சங்கு, சக்கரத்துடனும் மிக அழகாக இருந்தது. ஆனால் அழவில்லை. தாய்ப்பால் குடிக்கவில்லை.

மாதங்கள் கடந்தன. ஆயினும் அக்குழந்தையின் நிலையில் மாற்றமில்லை. தெய்வக் குற்றமோ என பெற்றோர் அஞ்சினர். ஆலய அர்ச்சகரிடம் ஆலோசனை கேட்டனர். பின்னர் தான் இருவருக்கும் குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தையை அர்ப்பணிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சகருக்கு அருள் வந்து, காலில் சங்கு சக்கரம் உள்ள குழந்தையை விட்டுச் செல்லுமாறு ஆணை வந்தது. அதன்படி குழந்தை ’ராமன்’ ஆலயத்தில் தனித்து விடப்பட்டான். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.

ஜீவ சமாதி

ஜீவ சமாதி

ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன். புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.

பின் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. ‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படுவது.

புனித மரம்
புனித மரம்

ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார். 

சுவாமிகள் பிளாட்பாரத்தில் அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.

சமாதி ஆலயம்

சமாதி ஆலயம்

உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.

ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.

இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.

 

மகான்களும் விஜயதசமியும் -1

விஜயதசமி
அன்னை ஸ்ரீ துர்கா
அன்னை ஸ்ரீ துர்கா

தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ துர்கா தேவி
ஸ்ரீ துர்கா தேவி

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.

அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!

 இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந் நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்புப் பெற்றதாகிறது. ஆம், இந் நன்னாளில் தான் மகா அவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகா சமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி கொண்ட தினமும் இதுவே!

ஸ்ரீ ஷிர்டி பாபாவின் வரலாறு
ஸ்ரீ சாயிபாபா

ஸ்ரீ சாயிபாபா

எங்கு, எப்போது தோன்றினார் என்பதை வரையறுக்க இயலாமல் சுயம்பு மூர்த்தமாய் அவதாரம் செய்தவர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா. இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதார புருடர். பல்வேறு லீலைகள் செய்தவர். பல மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்தவர். இன்றும் ஷிர்டி தலத்திற்கு தம்மை நாடி வருவோரின் பிரச்சனைகளை சுட்சுமமாக இருந்து தீர்த்துக் கொண்டிருப்பவர்.

 இந்து-இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் ’உரூஸ்’ ஊர்வலத்தையும்  அவர் நடத்தி வந்தார். அவர் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ ‘அல்லா மாலிக்’ என்ற அல்லாஹின் திரு நாமத்தை. இந்துக்களும் அவரது பக்தர்களாக இருந்தார்கள். இஸ்லாமியர்களும் அவர் பக்தர்களாக இருந்தார்கள். அவர் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் அவர் ’பாபா’. பாபா என்ற சொல்லுக்கு தந்தை என்பது பொருள்.
பாபா சமாதி (ஷிர்டி)
பாபா சமாதி (ஷிர்டி)

ஷீர்டியில் சாயி பாபா முதன்முதலில் பதினாறு வயது இளைஞனாகக் காட்சி கொடுத்த இடம், புனிதமான ஒரு வேப்பமரத்தடி ஆகும். அதுதான் குருஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மரத்தடிக்கு அருகில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஓர் அறையில்தான், தன் குரு வாழ்ந்து வந்ததாக பாபா கூறியுள்ளார். அங்கு எப்போதும் அணையா விளக்கு எரிய வேண்டும் என்பது அவரது ஆக்ஞை.

தான் தங்கியிருந்த மசூதியிலிருந்து, தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வது அவரது வழக்கம். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீர்டி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா
ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா

துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.  அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.

எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.

என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.

எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.

எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.

கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.

இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்

இவை பகவான் பாபாவின் புனித வாக்குகளாகும்.

ஷிர்டி குருஸ்தான்
ஷிர்டி பாபா குருஸ்தான்

பாபா 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். வருடந்தோறும் அங்கு அப்புனித நன்னாளில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

பகவானின் ஆரத்தி உட்பட ஷிர்டி ஆலய வழிபாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் (live) காண…

http://www.shrisaibabasansthan.org/shirdilivedarshan1.htm

பகவானின் முழுமையான வரலாறைத் தமிழில் அறிந்து கொள்ள…

http://www.shrisaibabasansthan.org/allsaicharitra(digitalisation)/Main_Tamil/t/index.htm

பகவானின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.

(நாளை ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகளின் வரலாறும், அற்புதங்களும்)

 

பகுத்தறிவும் ஆன்மீகமும்

அன்பார்ந்த கோபி,

 நேற்றைய ஞான சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்  பதிவில் மறுமொழியாக வந்த உங்கள் கேள்வி இது….

அன்பார்ந்த ஐயா,

வணக்கம். அப்போ பூதம், தேவதைகள் எல்லாம் இருக்குன்னு நீங்க சொல்றீங்க இல்ல. சரி, மகான் கண்ணுக்குத் தெரியுற அவுங்க ஏன் சாதாரண மனுஷங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குறாங்க.. அப்படி என்ன அதுல பெரிய ரகசியம் இருக்கு. எனக்கு இதை நம்ப முடியலை.

இந்தப் பௌதிக உலகில் எந்த ஒன்றுமே ஏதேனும் ஒரு புலன்கள் வழியாக உணரப்பட்டே நம்மை அடைகின்றன. கண்,காது, வாய், மூக்கு, தோல் என்று இவற்றால் உணரவப்படுவது மட்டுமே நம்மால் அறிய முடிவது. இவற்றுக்கு அப்பாற்பட்டு ஏதாவது இருப்பதாகச் சொன்னால் அவற்றை மெய்ப்பிக்க விஞ்ஞான பூர்வ ஆதாரம் வேண்டும். இல்லாவிட்டால் அதனை உண்மை என்று ஏற்க முடியாது.

காற்றை நாம் கண்ணால் காண முடியாவிட்டாலும் இலைகள் அசைவின் மூலம் உணருகிறோம். மின்சாரத்தை நாம் நேரடியாகக் காண முடியாவிட்டாலும் விளக்கின் ஒளி, மின்விசிறி, கணிணி, குளிர்சாதனப் பெட்டி என்று பல விதங்களில் அதன் பயன்பாடுகளை உணருகிறோம்.

நீங்கள் குறிப்பிடும் பேய், பிசாசு, பூதங்கள், தேவதைகளை எப்படி உணர்வது?, அவை எங்கே இருக்கின்றன?, அவையும் நம்மைப் போலச் சாப்பிடுமா? தூங்குமா? குளிக்குமா? காதல், காமம் செய்யுமா? – அடப் போங்கண்ணே நிலவுல தண்ணீர் இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிச் சொல்லியிருக்காங்க.. நீங்க என்னடான்னா சந்திர லோகம், ஆவிகள் உலகம், பிதிரு உலகம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. நினைக்க நினைக்க எனக்கு ரொம்பச் சிரிப்புச் சிரிப்பா வருது. ஹி… ஹி…

என் பதில்….

பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலோருக்கு “தான்” என்கின்ற எண்ணமே முன் வந்து நிற்கிறது. “எதுவாக இருந்தாலும் நாங்கள் உணர்ந்தால் தான் நம்புவோம், நாங்கள் கண் கூடாகப் பார்த்தால் தான் நம்புவோம். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எதையுமே ஏற்க இயலாது” – இதுதான் பலரது உரத்த குரலாக இருக்கிறது.

சரி. எது பகுத்தறிவு? மனிதன் மட்டுமே பகுத்தறிவு படைத்தவன் என்று எந்த உறுதிப்பாட்டில் கூற முடியும்? மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியுமா?

ஒளி வட்டம்

ஒளி வட்டம்

மனிதன் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே ‘பகுத்தறிவு’ உள்ளது என்பதுதான் உண்மை. அந்தந்த உயிரினங்களின் பரிமாண வளர்ச்சிக்கு ஏற்றவாறு அந்த அறிவு அமைந்துள்ளது. ஒரு நாயைப் பார்த்து கல்லை விட்டு எறிந்தால் அது ஏன் ஓடுகிறது? நாம் அடிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்வதினால் தானே! அந்த உணர்வுக்குப் பெயர் என்ன? ‘அனிச்சைச் செயல்’ என்றா சொல்ல முடியும்? அதே போல் ஒரு காகத்தை விரட்டினாலும், குருவியை அதட்டினாலும் அவை பறந்து சென்று விடுகின்றனவே ஏன்? இவன் நம்மை விரட்டுகிறான், தாக்க வருகிறான் என்று அவற்றால் உணர முடிவதால் தானே, அந்த உணர்விற்குப் பெயர் என்ன? – பகுத்தறிவாகத் தானே இருக்க முடியும்? அவை வாழும் உணர்வு உலகத்திற்கேற்ப அந்தப் பகுத்தறிவானது செயல்படுகிறது. அவ்வளவுதான். அதே சமயம் அவற்றின் பகுத்தறிவை மனிதனின் பகுத்தறிவோடு ஒப்பிடுவது மதியீனம். ஏனென்றால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவன். அவன் அறிவை, அவனை விடக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட உயிரினங்களுடன் ஒப்பிட இயலாது. எப்படிக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட குழந்தையின் அறிவுடன், நன்கு வளர்ந்த இளைஞனின் அறிவை ஒப்பிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.

உண்மையைப் பார்க்கப் போனால் ஐம்புலன்களுக்குத் தான் ஐந்தறிவு. புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவான ஆறாம் அறிவைக் கொண்டவன்தான் மனிதன். ஆனால் அவற்றை உணராமல், அதைப் பயன்படுத்தத் தெரியாமல் ஐந்தறிவு படைத்த மிருகங்களைப் போலவே அவன் நடந்து கொள்கிறான். வாழ்கிறான்.

ஆவி

ஆவி

அறிய அறிய விரிவது தான் அறிவு. அறிந்து கொண்ட உண்மைகளை முன் தரவாக வைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் பற்றிப் பேசுவது தான் அறிவியல். அறியாத அல்லது அறிய இயலாத உண்மைகளைப் பற்றி அதனால் எப்போதும் முடிவு கூற இயலாது. அதனால் தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. ஆனால் ஒரு உண்மையை நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம். புத்தம் புதியதாக, இல்லாத ஒன்றை நாம் உருவாக்கி விடவில்லை. ஏற்கனவே வேறு ஒரு ரூபத்தில் இருந்ததை தற்போழுது வெளிக் கொணருகின்றோம், அவ்வளவுதான். We are not the Creators or Inventors. We are only the Discoverers.

“இயற்கைக்கு மாறாக எதுவுமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது  நிச்சயம் பொய். யாராவது நிரூபித்தால் நான் ஒரு இலட்சம் ரூபாய் தருகின்றேன்.” அறைகூவல் விடுத்தார் திரு. ஆபிரகாம். டி. கோவூர். ஆனால் அவரது அறைகூவலை யாரும் ஏற்கவில்லை. அவரும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பேய், பிசாசுகள் ஆவிகள் இல்லை, எல்லாம் மனநோயின் பல்வேறு வடிவங்களே என்று சிலவற்றை நிரூபிக்கவும் செய்தார். கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ஆத்மா என்ற ஒன்றெல்லாம் கிடையவே கிடையாது என்பது அவர் வாதம். ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்முடைய அளவிடும் திறன் என்ன? கடவுளைக் கண்ணால் காண முடியவில்லை. ‘ஆத்மா’ என்பதை உணர முடிவதில்லை. உடனே ‘எதுவுமே இல்லை’ என்று கூறிவிடுகின்றோம். நாம் பார்க்க முடியாததெல்லாம் உலகில் இல்லாத பொருள்களா என்ன?

மகான்கள் கண்ணுக்குத் தெரிகின்ற பூதம், பேய், தேவதைகள் எல்லாம் ஏன் ஒரு சாதாரண மானுடன் கண்ணிற்கு தெரிய மாட்டேன் என்கிறார்கள்.. அப்படி என்ன அதுல பெரிய ரகசியம் இருக்கு..? இது ஒருவரது கேள்வி.

சரி, ஒரு நாயின் கண்களுக்கு, ஒரு மாட்டின் கண்களுக்குத் தெரிவதை உங்களால் காண இயலுமா?( ஓ, மிருகங்களோடு ஒப்பிடக் கூடாது இல்லையா? மன்னியுங்கள். ஆனால் இங்கே வேறு வழியில்லை. அப்படிப் போய்த் தான் உண்மையை ஆராய வேண்டியுள்ளது.) சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமியின் போது பல இடங்களில் பறவைகளும், ஆடு, மாடுகளும் அதை முன்னரே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தம்மைக் காப்பாறிக் கொண்டன என்ற செய்தி நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. பறவைகளும், விலங்குகளும் அதை எப்படி முன்னரே உணர்ந்து கொண்டன? அந்த உணர்விற்குப் பெயர் என்ன? மிருகங்களை விட மிக உயர்ந்த “பகுத்தறிவு” படைத்த மனிதனால் ஏன் அதை முன்னரே உணர முடியவில்லை? உணர்ந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை?

சில சமயம் நாய் போன்றவைகள், காதினை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் குரைத்துக் கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படிச் செய்கின்றன, நமக்குத் தெரியாது. ஆனால் நம் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை. அது போன்றே மாடுகளும் சில சமயம் மிரளும். ஆனால் நம்மால் அதன் சரியான காரணத்தினை உணர இயலாது. அது ஏன்? இவ்வாறு சில மிருகங்களின் கண்ணுக்குத் தெரிவது, அவை கேட்பது, அவை உணருவது, மற்றும் சில பறவைகளின் கண்களுக்குத் தெரிவது, நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கேட்பதில்லை. நம்மால் உணர முடிவதில்லை. அது ஏன்? ஆராய்ச்சி செய்திருக்கிறோமா, இல்லை.

நாம் உயர்ந்த பகுத்தறிவு கொண்டவர்களாக இருந்தால் மிருகங்களை விட உயர்ந்த அறிவு நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மையானால் நம்மால் சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து ஏன் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது? மிருகங்களை விட நாம் மட்டமா? அல்லது நமது அறிவுத்திறனில் ஏதாவது குறைபாடு உள்ளதா?

ஆம். அதுதான் உண்மை. சில விஷயங்களில் நாம் ஐந்தறிவு உயிரினங்களை விட மிக மிக மேம்பட்ட நிலையில் இருந்தாலும், சில விஷயங்களில் அவற்றை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அதற்கு காரணமும் உள்ளது. முக்கிய காரணம் ஒருகாலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த நாம், காலச் சூழல் காரணமாக அதற்கு மாறான வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது தான்.

நம்முடைய கேட்கும் திறன் 20-20000 டெசிபல் தான். அதற்கு மேற்பட்ட ஒலியையோ, கீழான ஒலியையோ நம்மால் கேட்க இயலாது. [இப்போதுதான் EVP (Electronic Voice Phenomenon)  முறையில் இது போன்ற ஒலிகளைப் பதிவு செய்யும் முறையில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகிறார்கள்]. நுண்ணோக்கி இல்லாமல் சிலவற்றைப் பார்க்க முடியவில்லை. உடல் உறுப்புக்களைப் பார்க்க எக்ஸ்ரேயை, ஸ்கேனைப் பயன்படுத்துகின்றோம். இன்னும் தொலைநோக்கி, லேசர் என்று பல வகைகளைப் பயன்படுத்தித் தான் சிலவற்றைப் பார்த்து இன்னதென்று அடையாளம் கண்டுபிடிக்கின்றோம்.

இப்படி பார்வைத்திறனிலே குறைபாடு, கேட்கும் திறனிலே குறைபாடு என்று பலவற்றை நமக்குள் வைத்துக் கொண்டு, அமானுஷ்ய விஷயங்களை, கடவுள் போன்றவற்றை நாம் அளக்க முயன்றால் எப்படிச் சரியான விடை கிடைக்கும்? தவறான அளவு கோலால் அளக்கப்படுவது எதுவானாலும் தவறான முடிவினைத்தானே தரும்?.

ஒருகாலத்தில், இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்த காலத்தில் நமக்கு இத்தகைய திறமைகள் இயற்கையாகவே இருந்து, தற்போது பரிணாம வளர்ச்சியின் காரணமாக அவை நம்மை விட்டு நீங்கியிருந்தால்..?? இயற்கைக்கு மாறாக வாழ்ந்து நாம் அவற்றை இழந்திருந்தால்…. நம்மால் எதையும் சரிவர உணர முடியாது அல்லவா?

ஒரு வேளை கடவுள், ஆவிகள், தேவதைகள் போன்றவர்கள் காலம், இடம், பொருள் என்று எல்லாவற்றையும் கடந்த, வேறு பரிமாணத்தில் இருக்கின்றவர்களாக இருந்தால்! (அது தான் உண்மையும் கூட). நம் தவறான அளவுகோலால் எப்படிச் சரியான மதிப்பீடு பெற முடியும்? ஆகவே இதற்குத் தேவை நுண்ணிய ஆராய்ச்சி மட்டுமே. அதை விடுத்து அரை குறைக் கருவிகளை வைத்துக் கொண்டு அளப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

புருவ மத்தியில் மகான் கைவைத்தார். பக்தர் கண்களுக்கு பல உருவங்கள் தெரிந்தது. கையை எடுத்ததும் மறைந்து விட்டது. மகான் கண்களுக்கு மட்டும் சாதாரணமாகத் தெரியும் அவ்வுருவங்கள், பக்தருக்கு, அவரது புருவ மத்தியில் மகான் விரல் வைத்த பின் மட்டுமே ஏன் தெரிய வேண்டும். சாதாரணமாகவே பக்தரின் கண்களுக்கும் தெரிந்திருக்கலாமே, ஏன் தெரியவில்லை? – இது ஒரு சிந்தனையாளரின் கேள்வி.
நல்ல கேள்வி.

காட்சி நம் கண்ணால் காண முடியாத அளவிற்கு இருந்தால்…. அதாவது வேறு ஏதேனும் ஒரு கருவி      (தற்போது ஆவி உருவங்களைப் புகைப்படம் எடுக்கும் கேமராக்கள், வீடியோக்கள் வந்து விட்டன) மூலம் மட்டுமே காணக் கூடியதாய் இருந்தால்…..

உடலின் ஏழு சக்கரங்கள்

உடலின் ஏழு சக்கரங்கள்

மகான்கள் அந்தக் கருவிகள் ஏதும் இல்லாமலேயே பார்க்கும் அளவிற்கு பார்வைத் திறன் உடையவர்களாக இருந்தால்…..

இயற்கையோடு இயைந்த வாழ்வு, தியானம், யோகம், தவம் மூலம் அவர்கள அந்த ஆற்றலை (எல்லாவற்றையும் தெளிவாகக் காணும் பார்வைத் திறன் ஆற்றலை) வளர்த்துக் கொண்டிருந்தால்….

அவர்களால் அதை தெளிவாகக் காண இயலும் அல்லவா?

பரிணாம வளர்ச்சியின் காரணமாக, படிப்படியாக வால், உடலெங்கும் முடி, மிக நீண்ட கூரிய நகங்கள் போன்றவற்றை இழந்த நாம் இது போன்ற பல் வகை ஆற்றல்களையும் இழந்திருந்தால் நம்மால் எந்த விதக் கருவி, உபகரணம் ஏதும் இல்லாமல் எதையுமே தெளிவாகக் காண முடியாது அல்லவா?

சரி, மகான் புருவ மத்தியில் கை வைத்ததும் எப்படி அந்த உருவங்களைத் தெளிவாகக் காண முடிந்தது?

பொதுவாக நமது கண்களை ஊனக் கண் என்றும், மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண் திறப்பை ஞானக் கண் என்றும் யோகியர்கள் கூறுவர். புருவ மத்தியில் ’ஆக்ஞா சக்கரம்’ உள்ளது. குண்டலினி தவ யோகத்தின் மூலம் அதைத் தூண்ட முடியும். அல்லது ஆற்றல் பெற்ற மகான்கள், சித்தர்கள், யோகிகள் தம் தவ வலிமை மூலம் அவற்றைத் திறக்கவோ, மறைக்கவோ முடியும். அந்த ’ஆக்ஞா சக்கரம்’ திறக்கப்பட்டால் சாதாரண கண்களால் காண முடியாததைக் காணும் ஆற்றலும், சாதாரணமாகக் கேட்க முடியாததைக் கேட்கும் ஆற்றலும், பிறர் மனதில் நினைப்பதை அறியும் ஆற்றலும், தொலைவில் எங்கோ நிகழ்வதை அறியும் ஆற்றலும் – இது போன்று பல ஆற்றல்களும் – ஏற்படும்.

மகானும், பக்தரின் புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டி, தற்காலிமாக அதைச் செயல்பட வைத்து, இது போன்ற உருவங்களைக் காணும்படிச் செய்தார். இது ஒரு விதமான யோக சக்தி.

ஒருவன் இதைத் தானே உணர்ந்து தவ யோகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இவ்வகை ஆற்றலைப் பெற முடியும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை.

நிலவில் நீர் இருப்பதை இன்று தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய வானியல் சாத்திரத்தில் இதையெல்லாம் முன்பே சொல்ல்யிருக்கிறார்கள்.

ஆகவே, சாதாரண மானுடர்களால் ஒரு செயல் முடியாது என்றால் அது நிகழவே நிகழ முடியாது என்பது பொருளல்ல. நம் மூளையின் ஆற்றலை நாம் வெறும் 8% சதவிகிதம் கூட சரிவரப் பயன்படுத்துவதில்லை. மீதிப் பகுதியையும் நாம் உணர்ந்து, அறிந்து, தெளிந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நாம் கடவுளை அடையலாம். இல்லை… கடவுளாகவே ஆகி விடலாம்.

சர்வம் பிரம்ம மயம்.

அஹம் பிரம்மாஸ்மி.

 

 

ஞான சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

 

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.

வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த  பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.

மகானின் அற்புதம்
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.

ஞான சத்குரு

ஞான சத்குரு

ஒருமுறை மகான் மண்டப வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது பக்தர் ஒருவர், சுவாமிகளுக்கு உணவுப் பொட்டலம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து, உண்ணுமாறு வேண்டினார். சிறிது உண்ட சுவாமிகள் உணவை மேலும் கீழும் அள்ளி இறைத்தார்.

’உணவை உண்ணாமல் ஏன் இப்படி இறைக்கின்றீர்கள் சுவாமி’ என்று கேட்டார் பக்தர். 

’பூதங்கள் கேட்கின்றன, தேவதைகள் கேட்கின்றன’ என்று சொல்லிய சுவாமிகள், மேலும் மேலும் உணவை அள்ளிக் கீழே வீச ஆரம்பித்தார்.

தான் மெத்தப் படித்த மேதாவி என்ற எண்ணம் கொண்ட அந்த பக்தருக்கு சுவாமிகளின் செய்கை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதேசமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது.

’பூதமாவது, தேவதையாவது? என் கண்ணுக்கு எதுவும் தெரியலையே சாமி’ என்றார் கிண்டலாய்.

‘அப்படியா, சரி வா காட்டுகிறேன்’ என்ற சுவாமிகள், அந்த பக்தரின் புருவ மத்தியில் தனது கட்டை விரலை வைத்து அழுத்தினார். பின் ’இப்பொழுது பார்’ என்றார்.

அங்கே கோரைப் பல்லும், தொங்கிய நாக்கும், பரட்டைத் தலையுமாக மகாக் கோர உருவங்கள் பல நின்று கொண்டிருந்தன. அவை, சுவாமிகள் அள்ளி அள்ளி எறிந்த உணவை வேக வேகமாக உண்டு கொண்டிருந்தன. கிண்டலாகப் பேசிய பக்தரை அவை மிகவும் கோபத்துடன் பார்த்தன. அதைப் பார்த்த பக்தருக்கு மிகுந்த பயமாகி விட்டது. 

“அய்யோ சுவாமி, போதும், போதும். நான் தெரியாமல் கேட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறினார்.

சேஷாத்ரி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “இப்போ புரியுதா, இனிமே இப்படிச் சந்தேகப்பட மாட்டேல்ல…”என்று சொல்லிக் கையை எடுத்தார். உடனே அந்தக் கோர உருவங்கள் மறைந்து விட்டன. சுவாமிகளின் கால்களில் விழுந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டினார் அந்த பக்தர்.

அதற்கு சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு. போ போ. இந்த மலையை தினம் சுத்தி வா. உனக்கு நல்லது நடக்கும்.” என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.

மகா சமாதி

மகா சமாதி

இவ்வாறு தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்த இம் மகானின் குருபூஜை மார்கழி மாதத்து ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத ஹஸ்தத்தில் ஜெயந்தி விழா நடக்கிறது.

திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மகானின் சமாதிகளும் அமைந்துள்ளது.

மகான்களைத் தொழுவோம்; மனத் தெளிவு பெறுவோம்.

பிரும்மரிஷி மலை

மலை

மலை

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.

மலைப் பகுதி

மலைப் பகுதி

இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.

இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.

வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, ”ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!” என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர்  ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.

தலையாட்டிச் சித்தர்

தலையாட்டிச் சித்தர்

இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2010க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.

முன்பு பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த ராஜகுமார் என்பவர், தலையாட்டி சித்தரிடம் உபதேசம் பெற்று சீடராக மாறி, தற்போது மகா சித்தர்கள் டிரஸ்ட் என்ற அப்பீடத்தின் நிறுவனர், தலைவராக இருக்கிறார். ராஜ்குமார் சுவாமிகள் அன்னதானம், மருத்துவம், மருந்து, சூரணம், சித்த வைத்தியம் போன்ற ஆன்மீகப் பணிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்.

மேல் விவரங்களுக்கு — http://www.gatewaytopeace.org/

http://www.nandhi.com/

(தகவல் உதவி : சிவநெறிச் செல்வர் – சிங்கை கிருஷ்ணன்)

பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்

 
பர்வத மலை
பர்வத மலை
  திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
 
 அண்ணாமலையில் அழலாகத் தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு கதையும் நிலவுகிறது. அதற்கேற்றவாறு இங்கே மலை மீது ஒருபுறத்தில் அண்ணாமலையார் பாதமும் காணப்படுகிறது. ஏறுவதற்கு மிகவும் அரிய மலையான இது கடல் மட்டத்திலிருந்து 2500அடிக்கும் மேற்பட்ட உயரங்களை உடையது.
கடப்பாரைப் படி

கடப்பாரைப் படி

இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.

அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’ பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தண்டவாளப் படி

தண்டவாளப் படி

ஏறுவதற்கரிய இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும். திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.

இறங்கும் பக்தர்

இறங்கும் பக்தர்

இலக்கியங்களில் ‘நவிரமலை’ என இம்மலை குறிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை, சித்தர் மலை, திரிசூலமலை என்றும் இதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. செங்கம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் நன்னனின் கோட்டை இம்மலைமீது சிதிலமடைந்து காணப்படுகிறது.

 இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனர் என்றும் அன்னை பிரமராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். சித்தர்கள் அனுதினமும் வந்து பூஜிக்கும் மலை இது. போகருக்கு தனி சன்னதி உள்ளது. காரியுண்டிக் கடவுளும், மரகதவல்லி அம்மனும் மிகுந்த வரப்ரசாதிகள்.

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம்

வருடம் தோறும் மார்கழி மாதம் முதல் தேதி இம்மலையை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மொத்தம் 22 கி.மீக்கும் மேற்பட்டது இதன் கிரிவலப் பாதை. செல்லும் வழியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகுந்த சிறப்புப் பெற்ற ஒன்றாகும். அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மற்றும் சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மலைவலம் வருவதும் மலை ஏறுவதும் இங்கு மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

மனதுக்குச் சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் தரும் இம்மலைத் தலம் உண்மையில் ஒரு அற்புதமான திருத்தலம் என்றால் மிகையில்லை.

சித்தர்கள் யார்?

சித்தர்கள்

சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

அகத்தியர்

அகத்தியர்

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;

                              …………….

  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

munivarசித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். 

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

“ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “

- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

சூட்சும சக்திகள்

reincarnation‘நான்’ என்ற எண்ணமும், தன்முனைப்பான ஆர்வமுமே ஒரு மனிதனின் வாழ்வியல் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. சாதனை செய்யத் தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் ‘தான்’ என்ற தன் முனைப்புடன் தான் உலகில் செயல்படுகிறான். ‘தன்னுடையது,’ ‘தனக்கு’ என்பது அவன் பிறந்து வளர்ந்து இந்த உலகை உணரத் தொடங்கும் பொழுதே வளர ஆரம்பித்து விடுகிறது. இறக்கும் வரை தொடர்கின்றது. இரண்டு வயதுச் சிறு குழந்தையே ஆனாலும்,  ஒரு பொம்மையை அதனிடமிருந்து பிடுங்கினால், ‘என்து, வேணும், கொண்டா’ என்றெல்லாம் அழுகிறது.

இந்தத் ‘நான்’ என்ற தனிமனித எண்ணமே ‘அகங்காரம்’ என்றும் ‘ஆணவம்’ என்றும், அதுவே ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடை என்றும் பல சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. பிறந்த உடனேயே, மனிதனை ‘மாயை’ சூழ்ந்து கொள்வதால் தான், அவனால் அதனை மீறிச் செயல்படவும் முடிவதில்லை. அதிலிருந்து விடுபடவும் முடியவில்லை. அதற்கான சரியான வழிமுறையும் மனிதனுக்குத் தெரிவதில்லை. ஆக, இந்தத் தன்முனைப்பு என்பது  வாழ்வியலுக்கு ஆதரவாகவும், இறையை உணர்வதற்குத் தடையாக உள்ளதாகவும் கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம் இங்கு சிந்திக்கவேண்டியதாகிறது. ஒவ்வொரு செயலையும் மனிதன் தன் ஈடுபாட்டோடு தான் செய்கிறானா? இல்லை. ஏதேனும் சில சக்திகள் அவனை அவ்வாறு செய்யுமாறுத் தூண்டுகிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியதாகிறது.

உண்மையில் அனைத்துச் செயல்களையும் செய்வது யார்? நாம் தானா? அல்லது நம்மை ஆட்டி வைக்கும் ஏதேனும் சூட்சும சக்திகள் அவ்வாறு நம்மைத் தூண்டுகின்றனவா?. நாம் தான் என்றால் ஏன் இவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள், தவறுகள், வேதனைகள்? அல்லது அந்த சூட்சும சக்திகள் தான் என்றால் ஏன் பல தோல்விகள், துயரங்கள், சோதனைகள்?. அவற்றின் சக்திகள் தான் எவ்வளவு? இதெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவையாக உள்ளன.

உண்மையில் அந்தச் சூட்சும சக்திகள் என்பது எது? ஏன் அவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன? அவை நல்லவையா, கெட்டவையா?. அதற்கான விடைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஒருசிலருக்கு நன்மை தருபனவாகவும் மற்றவர்களுக்கு ஏன் தீமை செய்பவனவாகவும் அவை ஏன் நடந்து கொள்கின்றன?.  அதற்கு என்ன காரணம்?. நாம் செய்த, பாவ, புண்ணியங்களா?. இல்லை. வேறு ஏதெனும் நம்மால் அறிய இயலாத காரணங்கள் உள்ளனவா?. நமக்குத் தெரியாது. நம்மால் அவ்வளவு எளிதில் அவற்றை அறிந்து கொள்ளவும் இயலாது. ஏன் நன்மை செய்பவர்கள், நல்லது நினைப்பவர்கள் துன்பப்படுகின்றனர், தீயவர்கள் வசதியோடு, செழிப்பாக வாழுகின்றனர்?. அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா?  மனிதன் செய்த கர்மவினை தான் காரணமா?. அல்லது வேறு ஏதேனும் சூட்சுமமான செயல்பாடுகள் உள்ளனவா?. விடை அறிவது மிக மிகக் கடினம்.

MWS-50-Reincarnationஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்கிறது நமது சாத்திரம். அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன என்றும் அது கூறுகிறது. அப்படியென்றால், அந்த நவக்கிரகங்களை சாந்தி செய்து விட்டால், பரிகாரம் செய்து விட்டால் போதுமே, ஊழிலிருந்து தப்பித்து விடலாமே! இப்படி எண்ணத் தோன்றும். ஆனாலும் அவை சாத்தியமா?

ஏனெனில், நம்மை ஆட்டி வைப்பவை வெறும் நவக்கிரகங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலான, இறைவனின் ஏவலைச் செய்து முடிக்கக்கூடிய சில தேவதாம்சங்களும் உள்ளன என்பது தான் உண்மை. அவை தான் நம்மை வழிநடத்துகின்றன. நம்மை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்கின்றன. துன்பத்திலிருந்து காக்கின்றன. அதே சமயம் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதிப்பாடு இருக்குமானால், அவற்றை அவன் அனுபவிக்குமாறும் விட்டு விடுகின்றன. அவற்றின் மூலம் அவன் தான் செய்த தவறை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவற்றின் நோக்கம்.

இவ்வகை சூட்சுமசக்திகளே தேவதைகளாகப் போற்றப்படுகின்றன. இவை, மனிதனின், மூளையில் தங்களது எண்ண அலையைப் பிரயோகித்து, அவரவர் கர்மவினைக்கு ஏற்றவாறு, அவனை நல்ல வழியிலோ, அல்லது தீய வழியிலோ செயல்படத் தூண்டுகின்றன. பாவ, மத்திய, புண்ணிய ஆவியுலகங்களையும் கடந்த நிலையில் வாழும் இவ்வகைத் தேவதைகள், இறைவனின் ஏவலர்களாகப் பணிபுரிகின்றன. இவற்றில் நல்ல தேவதைகளும் உண்டு. தீய தேவதைகளும் உண்டு. பிரதமர், அமைச்சர் என படி நிலையில் அரசு செயல்படுவது போல, இவ்வகைத் தேவதைகளும், இறைவனின் தலைமையில் செயல்படுகின்றன.

இது போன்ற தேவதைகள் வழிபாடு, இந்து மதத்தில் மட்டுமல்லாது, முஸ்லிம், கிறித்துவ, சொராஸ்டிரிய மதங்களிலும் காணப்படுகின்றன. கிறித்துவ மதத்தில் இவை ‘ஏஞ்சல்’ என்றும், இசுலாமியர்களால், ‘ஜின்’ வானவர், தூதர் என்றும் இவை குறிப்பிடப்படுகின்றன. மேலும் தீயவற்றைச் செய்யும் சாத்தான்களும், மலக்குகளும் உண்டு.

தேவதூதர்கள் இயேசு பெருமானுக்குக் காட்சி அளித்ததாக பைபிள் கூறுகின்றது. நபி பெருமானும் தேவதூதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டே குரானை அருளினார். இந்து மதத்திலும் தேவதைகள் சிறப்பிடம் பெறுகின்றன. ஹோமங்கள், யாகங்கள் யாவற்றிலும் அவற்றிற்கு அவிர்ப்பாகம் அளிக்கப்படுகின்றன. மேலும், சில தீய தேவதைகளும் உண்டு. சில குறி சொல்பவர்கள், சோதிடநிபுணர்கள், யக்ஷணி போன்ற தேவதைகளை உபாசனை செய்து, தங்களை நாடி வந்திருப்பவரைப் பற்றிய உண்மையான நிலையை அறிந்து, அதை அவர்களிடம் எடுத்துக் கூறி பொருள் ஈட்டி வருகின்றனர். அவற்றிலும் பல வகைகள் உள்ளன. அவ்வவற்றின் தன்மைக்கேற்ப அவற்றை, குறி சொல்ல, அடுத்தவர் மனதில் இருப்பதைக் கண்டறிய, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் நகைகள் போன்றவற்றைக் கண்டறிய, களவு போன பொருட்கள், காணாமல் போன மனிதர்கள் பற்றி அறியப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் மிகக் கொடூரமானவைகளும் உண்டு. சற்று கொடூரம் குறைந்தவையும் உண்டு. தன்னை உபாசிப்பவர்களையே பழிவாங்கும் யக்ஷிணிகளும் உண்டு.

இவற்றில் தேவ யக்ஷணியும் உண்டு. அசுர யக்ஷனியும் உண்டு. அசுர யக்ஷணிகள் துர் தேவதைகளாகவும், நீச தேவதைகளாகவும் கருதப்படுகின்றன. யக்ஷனிகளில் கர்ண யக்ஷணி, தாம்பூல யக்ஷணி எனப் பலவகைகள் உள்ளன. மேலும் யோகினி, சாகினி, டாகினி, ஹாகினி, மோகினி எனப் பல தேவதாம்சங்களும் உண்டு.

சில மாந்த்ரீகர்கள், இது போன்றவற்றை உபாசித்து, தீய காரியங்கள் சிலவற்றிற்கு உபயோகப் படுத்துகின்றனர். இறுதியில் அவற்றாலேயே அழிந்தும் போகின்றனர்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை, தேவதைகள் அனைத்தும், சப்தமாதாக்களின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். ஸ்ரீ சக்ர மகாமேருவில் வீற்றிருந்து இவ்வுலகைப் பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக இந்த சப்தமாதாக்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதியின் எதிரே இவற்றிற்கு சன்னதிகள் இருக்கும். இம் மாதாக்களுக்குக் காவலாக ஸ்ரீ சாஸ்தா அல்லது அய்யனார் இருப்பார். சில சமயங்களில் சில முனிவர்களின் திரு உருவங்களும், விநாயகப் பெருமானின் சன்னதியும் கூட அடுத்து இருக்கும். இச் சப்த மாதாக்களில் வாராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். கேட்ட வரம் தருபவள். இவளை வழிபட்டுத் தான் சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்பது வரலாறு. தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டி ஸ்ரீ வாராஹிக்கு தனி ஆலயம் உள்ளது. தஞ்சை பிரகீதீஸ்வரர் ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது. இது போக சப்த மாதாக்களான பிராமி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி ஆகியோரை வழிபட நன்மைகள் பெருகும்.

எனவே, நம்மை நாமே அறியாமல் கட்டுப்படுத்தும் தேவதைகளின், சூட்சும சக்திகளின் பாதுகாப்பினைப் பெற சப்த மாதாக்களையும்,  ஸ்ரீ சக்ர மாதாவினையும் சரணடைவோம். வளம் பெறுவோம்.

 

டாக்டர் எடித் ஃபையரின் முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகள்

51F5JHT6EML__SL500_AA240_முற்பிறவி, மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் டாக்டர் எடித் ஃபையர். உளவியல் துறையில் ஆய்வு செய்து மியாமி பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு மனநல சிகிச்சையாளர் மட்டுமல்ல; ஹிப்னோஸிஸ் மூலம் பாதிக்கப்பட்டவரை உறக்கத்தில் ஆழ்த்தி அவர்தம் முற்பிறவி நினைவுகளைக் கண்டறிந்து கூறுவதில் வல்லவர். தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடாவில் வசித்து வரும் இவர் இத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.  அதிலிருந்து சில சம்பவங்கள்….

ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தண்ணீரைக் கண்டால் பயம். மழையில் வெளியே செல்ல மாட்டாள்நண்பர்களுடன் நீர்நிலைக்குச் செல்லக் கூட அஞ்சுவாள். இந்த நிலை சிறுவயது முதல் அவள் வயதான பின்பும் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. தன் நிலைக்கான காரணம் அறிய அவர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார். அவர் இரண்டிற்கு மேற்பட்ட தனது முற்பிறவிகளில் தண்ணீராலேயே மரணமடைந்தார் என்பதும், ஒரு பிறவியில் அவர் ஆணாகப் பிறந்திருந்த போது சிறுவயதில், தந்தையுடன் படகில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்து மரணமடைந்தார் என்பதும், மற்றொரு பிறவியில் மீனவராகப் பிறந்து கடலுக்குள் செல்லும் போது மரணமடைந்தார் என்பதும், இன்னொரு பிறவியில் அவர் மாலுமியாகப் பிறந்து கடலில் செல்லும் போது, அப்போது வீசிய பெரும் புயலில் சிக்கி மரணமடைந்தார் என்பதும் தெரிய வந்தது.

அந்த அச்ச உணர்வே அவரது ஆன்மாவில் படிந்து, அவர் மறுபிறவி எடுத்த போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ஃபையர் அவருக்கு தகுந்த மனோ சிகிச்சை அளித்து அவரது முற்பிறவித் தொடர்பான தண்ணீர் பயத்தைப் போக்கினார்.

**********

டாக்டர் எடித் ஃபையர்

டாக்டர் எடித் ஃபையர்

உயரமான இடங்களைக் கண்டால் பயம், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதென்றால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறி எடித் ஃபையரை அணுகினார் ஒரு தொழிலதிபர். அது ஒரு வகையான ஃபோபியா என்று மருத்துவர்களால் கூறப்பட்டு வந்தாலும், அதற்கும் முற்பிறவிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராய நினைத்தார் ஃபையர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரை ஹிப்னாடிச உறக்கத்திற்கு ஆழ்த்தினார். அப்போதுதான் அவருக்கு அந்த உண்மை தெரிய வந்தது.

இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அந்த மனிதர் முற்பிறவியில் ஒரு பணியாளாக இருந்திருக்கிறார். ஒருமுறை மாதா கோயிலின் ஓடுகளைச் செப்பனிட்டுப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஓடுகள் உடைந்து கீழே விழுந்து அவர் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து மறுபிறவியிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை அறிந்த டாக்டர் ஃபையர் அந்த மனிதருக்குத் தகுந்த மனோசிகிச்சை அளித்து அவரது எண்ணங்களில் பதிவாகி இருந்த தேவையற்ற பயத்தைப் போக்கினார்.

**********

பாம்புகள் தன்னைக் கடிக்க வருவது போன்றும், துரத்துவது போன்றும் கனவுகள் வருவதாகவும், எப்போதும் பாம்புகளைப் பற்றிய நினைவே தனக்கு அதிகம் இருப்பதாகவும், அந்த அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும் கூறி ஒரு பெண்மணி எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். எடித் ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார்.

முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக் காரியாக இருந்த விஷயமும், அப்போது ஒரு சமயம் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொண்டு ஆடும்போது அந்தப் பாம்பு கடித்து மரணமடைந்த விஷயமும் தெரிய வந்தது.

முற்பிறவியில் மூளையில் பதிந்த அந்த எண்ண அலைகளே மறுபிறவி எடுத்த போதும் விடாமல் தொடர்கிறது என்பதைம் அதனாலேயே இந்தப் பெண்ணிற்கு அது பற்றிய அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட ஃபையர் தகுந்த சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தினார்.

அடுத்து அமெரிக்காவின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர், புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்து கூறியுள்ள முற்பிறவி-மறுபிறவிச் சம்பவங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

பிரம்ம ஞானி ஞானானந்த கிரி

ஞானானந்தர்

ஞானானந்தர்

‘தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்’. ‘கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்’. ’கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி’ – இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகான் கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்கள புரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஸ்ரீ சுவாமிகள். இயற்பெயர் சுப்ரமண்யம். சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது.  அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தல யாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்திற்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.

ஒரு முறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி ஸ்ரீ சிவரத்தின கிரி சுவாமிகள் சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டவர் வேத, வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத் தந்தார். பின் தீக்ஷை அளித்து ’ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். அப்பீடத்தின் தலைவராக சிலகாலம் விலங்கிய ஞானானந்தர் குருவின் மறைவிற்குப் பின் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டி, மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டார்.

இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார். பின் மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டவர், இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் சேலம், கொல்லி மலை, போளூரில் உள்ள சம்பத் கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கி தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த தபோவனத்தை தமது வாழ்விடமாகக் கொண்டார்.

ஞான ஒளியுடன் ஞானானந்தர்

ஞான ஒளியுடன் ஞானானந்தர்

எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. சற்று பருத்த தேகம். கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் – என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.

கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும்,  தியானமும், தவமும் ஆகிறது என்பது சுவாமிகளின் அருள் வாக்காகும்.

சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும். ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார்.

சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.

இவ்வாறு பல்வேறு உண்மைகளை பக்தர்களுக்கு உபதேசித்து அவர்களை ஆன்ம வழிக்குத் திருப்பிய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாய் அது விளங்கி வருகிறது.

« பழைய வரவுகள்