
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர் புதுச்சேரியில் தங்கியிருந்த சமயம். அடிக்கடி வ.ரா, பாரதியார், அரங்கசுவாமி அய்யங்கார் ஆகியோர் ஸ்ரீ அரவிந்தரை மாலையில் சந்தித்துப் பேசுவர். அப் பேச்சுக்கள் வெறும் அரசியல் மட்டும் இல்லாமல் ஆன்ம சாதனை, தெய்வ உபாசனை, வழிபாடு, தரிசனம், சூட்சும வாசிகளின் தன்மை எனப் பலதரப் பட்டதாய் இருக்கும். சில சமயம் ஆவிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் உலகம் பற்றியும் பேச்சு திரும்பும். அரவிந்தருக்கு அதில் பெரிதாய் ஆர்வம் இல்லாவிட்டாலும் நண்பர்களுக்காக அவ்வப்போது அவ்வாய்வில் ஈடுபடுவார்.
ஸ்ரீ அரவிந்தர் பரோடாவில் இருக்கும் பொழுதே ஆட்டோ மேட்டிக் ரைட்டிங் முறையில் ஆவிகளுடன் பேசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். ஒருமுறை சகோதரர் பரீன் உதவியுடன் அவ்வாய்வில் ஈடுபட்டபோது, ஸ்ரீ அரவிந்தரின் தந்தையின் ஆவி அங்கே தோன்றியது. தான் முன்பு பரீனுக்குக் கொடுத்திருந்த தங்கக் கைக் கடிகாரத்தை அடையாளம் காட்டியதுடன், சுவற்றில் சுண்ணாம்புப் பூச்சிற்குள் மறைந்திருந்த ஒருவரின் படத்தையும் அடையாளம் காட்டியது. அதன் மூலம் வந்திருப்பது தங்கள் தந்தையின் ஆவிதான் என்பதை அரவிந்தர் உணர்ந்து கொண்டார். மற்றுமொருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆவி வரவழைக்கப்பட்டது. அது கேள்விகளுக்கு பதில் எதுவும் கூறாமல் “கோவில் கட்டுங்கள்”, “கோவில் கட்டுங்கள்” என்று கூறி விட்டு மறைந்து விட்டது.
ஸ்ரீ அரவிந்தர், ஆவிகளின் வழிகாட்டுதல்மூலம் ‘ஆட்டோமேடிக்ரைட்டிங்’ முறையில் ‘யோக சாதனை’ என்ற நூலை எழுதினார். பின்னர் அந்த நூலை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். இது போன்ற ஆய்வுகள் மூலம் சாதகர்களுக்கு எந்தப் பயனும் விளையாது என்று கருதிய அவர், இவற்றை ஊக்குவிக்கவில்லை.
மேலும் ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூர் சதி வழக்கில் கைதாகிச் சிறையில் வசித்த போது அவர் முன் விவேகானந்தரின் ஆவி தோன்றி, அவரது பணி நாட்டு விடுதலையை விட ஆன்ம விடுதலையே என்று வலியுறுத்தியதாக அவரது வரலாறுகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
ஸ்ரீ அன்னையும் ஆவிகளும்

ஸ்ரீ அன்னை
பக்தர்களால் அன்புடன் ’மதர்’ என்றும் ‘அன்னை’ என்றும் அழைக்கப்படுபவர் ஸ்ரீ அன்னை. பிரான்ஸில் பிறந்த இவர், இந்தியாவையே தனது வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பக்தர்களின் ஆன்ம முன்னேற்றத்துக்க உழைத்தவர். அன்னை தனது இளவயதில் ஆவிகளுடன் பல அனுபவங்களைப் பெற்றுள்ளார்.
ஒரு முறை அன்னை ஜப்பானில் தங்கியிருந்த சமயம். திடீரென கொடிய நோயால் பாதிக்கப்பெற்றார் அவர். மிகக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது. மருத்துவர் வந்தார். பல மருந்து, மாத்திரைகளைத் தந்தார். பலனில்லை. நோய் குணமாகவில்லை. அன்று இரவு அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு கரிய உருவம் ஒன்று, தலையில்லாத முண்டமாய் அன்னை அருகே வந்தது. அவர் மேல் அமர்ந்து அவரை மூச்சு விட முடியாமல் அமுக்கியது. அன்னை கொஞ்சமும் அஞ்சாமல் தனது ஆன்ம சக்திகளை ஒன்று திரட்டினார். அந்த தீய சக்தியுடன் போராடி அதனை விரட்டி அடித்தார்.
மற்றொருமுறை அன்னை தனது இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது புகை மூட்டம் போன்ற உருவம் அவர் வீட்டை நோக்கி வந்தது. அது தன்னைத் தாக்கவும், தனது வீட்டைத் தீயிட்டு அழிக்கவுமே வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, தனது அதீத சக்தியைப் பயன்படுத்தி, அது தன்னைத் தாக்காமல் இருக்குமாறும், வீட்டைத் தீயிட்டு அழிக்காமல் இருக்குமாறும் செய்து தடுத்தார். அதனால் சீற்றம் கொண்ட அந்த ஆவி, சற்று தொலைவில் வசித்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அவர்கள் வீடுகளைத் தீப்பற்றச் செய்யவும் செய்து விட்டு மறைந்து விட்டது.
இதனால் அன்னை மிகவும் மனம் வருந்தினார். இது போன்ற துன்பங்கள் நிகழ்வதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதல் உலகப் போரினால், எதிர்பாராமல் மரணமடைந்தவர்கள், தலை முதலியன வெட்டப்பட்டு உயிரிழந்த பல அப்பாவி இளைஞர்களின் ஆவியே இவற்றிற்கெல்லாம் காரணம் என்றும், அமைதியடையாமல், தாங்கள் இறந்து விட்டோம் என்பது கூடத் தெரியாமல் அலைந்து திரிந்த அந்த ஆவிகளே பலரது உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தன என்பதையும் அன்னை கண்டறிந்தார். தனது ஆன்ம பலத்தின் மூலம் அன்னை அந்த ஆன்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்தினார். அதன் பின் அந்த நோய் வேறு யாரையும் தாக்கவில்லை. ஜப்பானை விட்டு மறைந்தது.
மற்றொரு முறை அன்னை கப்பலில் பிரான்ஸூக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது படு பயங்கரமான சூறைக்காற்று அன்னையின் கப்பலைத் தாக்கியது. பயணிகள் மிகவும் அச்சப்பட்டனர். கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமை ஏற்பட்டது. அன்னையின் ஆசானான தியோன் என்பவர் சூறைக்காற்றை அடக்கி, பயணிகளுக்கு உதவுமாறு அன்னையிடம் வேண்டிக் கொண்டார்.
உடனே அன்னை அன்னை தனது தூல உடலைக் கீழே கிடத்தி விட்டு, சூட்சும உடலில் வெளியே வந்தார். அங்கே சில உருவமற்ற ஆவிகள் அங்கும் இங்குமாய் கப்பலைச் சுற்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். அவை தாங்க இயலாத வெறியுடனும் மிகுந்த ஆக்ரோஷத்துடனும் எப்படியும் கப்பலைக் கவிழ்த்து விடுவது என்ற உறுதியில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அந்த உருவங்களுக்கு ஆதரவாய் மேலும் பல கரிய உருவ ஆவிகள் உதவிக்கு வந்த வண்ணம் இருந்தன. அன்னை மெல்ல அந்த அருவங்கள் அருகே சென்றார். “இதோ பாருங்கள்! இந்தப் பயணிகள் மிகவும் அப்பாவிகள். இவர்களை நீங்கள் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், இவர்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்?. இந்தக் கப்பலை அழித்தொழிக்க உங்களுக்கு அனுமதி அளித்தது யார்?, இந்தக் காரியத்திற்காக நீங்கள் இறைவனின் கருணைக்குப் பதிலாக சாபத்தைத் தான் பெறப் போகிறீர்கள். உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள், கப்பல் செல்ல வழி விடுங்கள். இல்லாவிட்டால்….” என்று சீறினார்.
அன்னையின் உறுதியான குரலைக் கண்டு அஞ்சிய அந்த ஆவிகள், உடனடியாக அவ்விடம் விட்டுச் சென்றன.
சுவாமி திரிகுணாதீதானந்தரின் ஆவி உலக அனுபவம்
சாரதா பிரசன்னர் என்ற இயற்பெயர் கொண்டவர் சுவாமி திரிகுணாதீதானந்தர். ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். நல்ல பல நூல்களையும், பகவான் ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகான்ந்தர் ஆகியோர் மீது பல துதிகளையும், நூல்களையும் எழுதியவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதிருந்தார். ஆகவே அதுபற்றிய ஆய்வுகளில் சில காலம் ஈடுபட்டார்.
பேய் ஒன்றிருக்குமானால் அதை நேரில் காணவேண்டும் என்ற உறுதியுடன், பேய் இருப்பதாகச் சொல்லப்பட்ட வீடுகளுக்கெல்லாம் சென்று தேடினார். இரவில் தங்கினார். இவரது கண்களுக்கு எந்தப் பேயும் தட்டுப்படவில்லை.
ஒருநாள் கல்கத்தாவில் உள்ள வராகநகர் மடத்துக்கு அருகில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் பேய் இருப்பதாகவும் இரவு அங்கே சென்று தங்கினால் பேயைக் காணலாம் என்றும் சிலர் கூறினர். சுவாமிகளும் மிகுந்த ஆர்வத்துடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவில் அந்த வீட்டிற்குச் சென்று தங்கினார். நள்ளிரவு நெருங்கியது. சுவாமி பேயை எதிர் நோக்கிக் காத்திருந்தார். சற்று நேரம் சென்றது. அப்போது அவர் அமர்ந்திருந்த அதே அறையின் மூலையில் மங்கலான வெளிச்சம் ஒன்று தோன்றியது. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசம் அடைந்தது. அந்த வெளிச்சத்தின் மத்தியில் கண்கள் இரண்டு தோன்றின. அது மிகுந்த கோபத்துடன் சுவாமிகளை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது.
சுவாமிகளின் இரத்தம் அச்சத்தால் உறைந்தது. உடல் வியர்த்து ஒழுக ஆரம்பித்தது. நாக்கு உலர்ந்தது. அச்சத்துடன் சுவாமிகள், தனது குருதேவரான ஸ்ரீ ராமகிருஷ்ண மரமஹம்சரை மனதார வேண்டிக் கொண்டார்.
உடனே குருதேவரின் உருவம் திரிகுணாதீதானந்தரின் முன் தோன்றியது. அவரது கரங்களைப் பாதுகாப்பாகப் பற்றிக்கொண்டு, ”மகனே! ஏன் இவ்வாறெல்லாம் உயிருக்கு ஆபத்தான விஷயங்களைத் தேடி ஓடுகிறாய்? எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. அதுபோதும்’ என்று கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டது. அந்த மாயக்கண்களும் உடனே மறைந்து விட்டன.
இவையெல்லாம் மகான்களின் வாழ்க்கை வரலாற்றில் உள்ள சம்பவங்கள். ஆகவே ஆவி, பேய் போன்ற விஷயங்களில் அவரவரது அனுபவம் தான் உண்மை.

johnkutty சொன்னது,
செப்டம்பர்21, 2009 இல் 1:49 மாலை
How can we believe all these? is there any scientific proof?
ramanans சொன்னது,
செப்டம்பர்21, 2009 இல் 3:51 மாலை
Life Histiroys of all those magans are available in Higginbothams, Aravindashram, Ramakirsihna mutt. Go through all. scientific proof? What is science?
ramanans சொன்னது,
செப்டம்பர்21, 2009 இல் 5:16 மாலை
Who told to beleive this? Dont beleive anything, do your work properly. That is Karma Yoga.. But there in no any scientific proof for karma and yoga. ok. thanks.
சர்மா சொன்னது,
செப்டம்பர்21, 2009 இல் 5:43 மாலை
இதுபற்றி நான் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன். ’அரவிந்த அமுதம்’ என்ற நூலில் படித்த ஞாபகம். அமுதன் என்பவர் எழுதிய நூல் என்று நினைக்கிறேன். இதற்கு போய் விஞ்ஞான விளக்கம் ஒருவர் கேட்பது சிரிப்பைத் தருகிறது.
நாம் அறிந்ததை வைத்து ஆராய்வதுதான் விஞ்ஞானம். இதெல்லாம் அதற்கு மேம்பட்ட, அதாவது நமது அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று. occult science என்று மேல்நாட்டு விஞ்ஞானிகள் இது போன்றவற்றைக் கூறுகின்றனர்.
நொண்டி நடந்தார், குருடருக்குப் பார்வை தெரிந்தது, தொழுநோயாளிக்கு நோய் கை தொட்ட மாத்திரத்தில் குணமானது என்றெல்லாம் கூறுகிறார்களே, இதெல்லாம் என்ன? இதற்கு ஏதாவது விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் உள்ளதா? நேரடியாகப் பார்த்த சாட்சி உள்ளதா?
நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் எல்லாவற்றையுமே கேள்விகள் கேட்டுப் புறந்தள்ளி விடலாம். ஆனால் பிற்காலத்தில் தான் உண்மை தெரியும். ஒவ்வொருவருக்கும் அனுபவமே சிறந்த உண்மையான ஆசான்.
அன்புடன்
சர்மா
ramanans சொன்னது,
செப்டம்பர்21, 2009 இல் 10:10 மாலை
அன்புள்ள சர்மா அவர்களே,
தங்கள் வருகைக்கும், மேலான கருத்துக்கும் என் நன்றிகள்.
shahul சொன்னது,
அக்டோபர்28, 2009 இல் 4:01 மாலை
நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் எல்லாவற்றையுமே கேள்விகள் கேட்டுப் புறந்தள்ளி விடலாம். ஆனால் பிற்காலத்தில் தான் உண்மை தெரியும். ஒவ்வொருவருக்கும் அனுபவமே சிறந்த உண்மையான ஆசான். சர்மா is true
ramanans சொன்னது,
அக்டோபர்28, 2009 இல் 4:59 மாலை
thanks for your comments